Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

தமிழ்ச் செல்வம்
(இலக்கியக் கட்டுரைகள்)
ஒளவை சு. துரைசாமி

tamizc celvam (literary essays)
by auvai turaicAmi piLLai
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our thanks also go to the Tamil Virtual Academy for providing a scanned PDF copy of this work.
    This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2019.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

தமிழ்ச் செல்வம் (இலக்கியக் கட்டுரைகள்)
ஒளவை சு. துரைசாமி

    Source (நூல் விவரக் குறிப்பு):
    தமிழ்ச் செல்வம் (இலக்கியக் கட்டுரைகள்)
    ஒளவை சு. துரைசாமி
    முதற் பதிப்பு : 2003
    நூலின் உரிமை ஆசிரியருக்கு
    352 பக்கங்கள்
    பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 21.
    ஒளி அச்சு :எல். கே. எம். கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ், சென்னை -17.
    விலை ரூ.110-00
    பதிப்பாளர் : வள்ளுவர் பண்ணை
    -------------------

    முகப்புரை
    பேராசிரியர் டாக்டர் இரா. குமரவேலன்

    > செந்தமிழ்ச் செம்மல், சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர் பேராசிரியர் ஒளவை துரைசாமி அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அரும் பணிகள் ஈடிணையற்றவை. தம் கலை ஞானத்தால் தமிழ் உலகிற்குச் சிவஞானச் செம்பொருளின் உண்மை நிலையை உணர வைத்தவர்; தம் மொழி ஞானத்தால் பழந்தமிழ்க் கருவூலங்களின் நுட்பங்களைத் தெளிய வைத்தவர்.

    இருபதாம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் தழைக்க உழைத்த பெருமக்களுள் தமிழ் உரை நடைக்குப் பெருமை சேர்த்தவர்கள் அருளாளர் ஞானியாரடிகளார், தனித்தமிழ்த் தந்தை மறை மலையடிகளார், உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோர் ஆவர். இவர்தம் உரைநடைத் தமிழை கற்கண்டுத் தமிழ், கரும்புத் தமிழ், தேன்தமிழ் என்று மூவகையாகப் பாராட்டிக் கூறலாம். மற்ற இரண்டையும் விட மூன்றாவது தமிழே படித்தவர்க்கும் பாமரர்க்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

    ஒளவை தந்த அருந்தமிழை அனை வரும் அறிந்து போற்றுவதற்கும், படித்து மகிழ்வதற்கும் ஏற்ற ஒரு களஞ்சியமாகத் 'தமிழ்ச் செல்வம்' என்னும் இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு இதழ்களிலும் மலர்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்லாண்டுகளுக்கு முன்னர் உரைவேந்தர் எழுதி வெளியிட்ட பதினாறு கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. என் அருமைத் துணைவியார் தமிழரசி குமரவேலன் அவர்கள் தம் அண்ணன் அறிஞர் ஔவை நடராசன் அவர்களைக் கண்டு பெற்றிருந்த கருவூலத்தை என்பால் காட்டினார். சிறந்த முறையில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தி வைத்திருந்த அத்தொகுப்பில் சில கட்டுரைகளைத் தெரிவு செய்து தந்தேன். கட்டுரைகளை அழகுற வெளியிட்டிருக்கும் 'வள்ளுவர் பண்ணை'ப் பதிப்பகத்தையும் உரிமையாளர் உயர்திரு. பழநியப்பன் அவர்களையும் தமிழுலகம் என்றும் பாராட்டி மகிழும். உரைவேந்தர் அவர்களோடு திரு. பழநியப்பன் பழகிச் சில நூல்களை வெளியிட்ட தகுதியும் பூண்டவர். திரு. பழநியப்பன் அவர்கள் பதிப்பகம் உரிமையாளர் என்பதோடு உரைவேந்தர் ஒளவை, நாவலர், பாரதியார், பேரவைத் தலைவர் புலவர் கா. கோவிந்தன் ஆகிய பெருமக்களோடு இலக்கிய உணர்வோடு நண்பராகப் பேசிய நயனுடையவர். ஒரு காலத்தே நற்றிணை உரையை வெளியிடச் செய்த பரிவுடையவர். உரைவேந்தர் நூற்றாண்டு விழா நிகழும் இந்நாளைத் தொடர்ந்து சில நூல்களையும் வெளியிட முன்வந்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

    'பழந்தமிழர் சமயம்' என்னும் முதற் கட்டுரையில் ஆசிரியர் இறை, உலகு, உயிர் பற்றிய சங்ககாலக் கொள்கைகளை எளிய முறையில் தெளிவுறுத்துகிறார். காலப்போக்கில் தமிழர் விழாக்கள் மாறியது குறித்து உரைவேந்தர், "மொழி வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று; தைந்நீராடல் தலை தடுமாறிற்று; வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று" (25) என்று வருந்துகிறார். சிவலிங்க வடிவம் பற்றிய மடவோர் கருத்தினையும் (27), வடமொழி வழிபாடு என்ற பெயரில் நிகழும் தெய்வ நிந்தனையையும் (29) இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

    "சைவ சித்தாந்தம்” பற்றிய தெளிவு இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. "சைவத்தின் இற்றைநிலை" என்னும் கட்டுரை சமய அவலங்கள் சிலவற்றை வருத்தத்தோடு சுட்டுகிறது. நான்கு முதல் பத்து வரை உள்ள கட்டுரைகள் தேவார மூவர்தம் பதிகச் சிறப்புகளை நயமுடன் வகைப்படுத்திக் காட்டுகின்றன. பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், சேரமான் பெருமாள், கோச்செங்கட் சோழன், குமரகுருபரர், உமாபதி தேவர் ஆகியோரின் திருமுறைத் தொண்டுகளையும், சமயச் செந்நெறிகளையும் இறுதி ஆறு கட்டுரைகள் முறையே விளக்கிக் கற்பார் நெஞ்சைக் கவர்கின்றன. இவற்றின் சீர்மைகளை எடுத்துரைக்க ஈண்டு இடமில்லை.

    "பெருநீர்க்குக் கரைந்து கெடாத காழ் உடைமை பற்றிக் காழி" (60) என்னும் பெயர் பெற்றது எனச் சீர்காழி ஊர்ப் பெயர் குறித்தும், ''பைஞ்சாய்க் கோரை காடு போல் வளருமிடம் சாய்க்காடு” (67) என்று அவ்வூர்ப் பெயர் குறித்தும் ஆசிரியர் தெளிவுறுத்துகிறார். மேலும், "இதன் கருத்தறியாமல் கைதை சோறாயினும் கைந்நிறைய வேண்டும் என்ற பேராசைப் பேய் போல எதுவாயினும் வட மொழியில் மாறவேண்டும் என்ற கூட்டம் இதனைச் சாயாவனம் என்று மாற்றிவிட்டது. சாய்கிற பக்கமே சாயும் தன்மையால் தமிழர்களும் அதனைச் சாயாவனம் என்றே சொல்லி வாழ்கின்றார்கள்'' (67) என்று வடமொழி வெறியரைக் கடிந்துரைக்கிறார் உரைவேந்தர்.

    சிந்தையுள் சிவனைக் கண்ட அப்பரடிகள் அந்த அருட்காட்சியை விளக்குமாற்றைக் கண்டவர், விண்டது' என்னும் கட்டுரையால் அறியலாம். 'அரியானை' முதலான திருப்பதிகங்களுக்கு விளக்கம் தருவது 'தில்லையில் நாவரசர்' என்னும் கட்டுரை. தில்லையில் சுந்தரர்' என்னும் கட்டுரையில் உரைவேந்தர் சேக்கிழாரின் "ஐந்து பேரறிவும் '' என்னும் அரிய பாடலுக்குச் சிறந்த விளக்கவுரை தந்துள்ளார்.

    'கயிலையும் அரசும்' கட்டுரையில் திருக்கயிலாயத் திருத்தாண்டகம் விளக்கமும், 'நம்பி யாண்டார் நம்பி' கட்டுரையில் திருச்செங்காட்டாங் குடித் திருப்பதிக விளக்கமும், 'வினையுணர்வும் கட்டுரையில் 'மடையில் வாளை பாய' என்னும் பதிகத்தின் விளக்கமும் இடம்பெற்றுள்ளன; அனைத்தும் கருத்துக்கு விருந்தளிப்பனவாம். திருஞான சம்பந்தர் பாடியுள்ள 4200 திருப்பாட்டுகளுள் 3600 திருப்பாடல்களில் வினையுணர்வு பயின்று வருவதாக உரைவேந்தர் குறிப்பிடுவது அவர்தம் நுட்ப ஆய்வறிவினைச் சுட்டுகிறது.

    'வாழ்க அந்தணர்' என்னும் ஞானசம்பந்தப் பெருமான் பாடலுக்குச் சேக்கிழாரடிகள் ஐந்து பாடல்களில் பேருரை வழங்கியுள்ளார். அதன் அரிய விளக்கமாக அமைந்தது பன்னிரண்டாம் கட்டுரை. 'எல்லாம்' என்பதற்குச் சேக்கிழார் 'வேறெல்லாம் ' என்று உரை வரைய, நம் உரைவேந்தர் வேறு' என்னும் சொல்லைச் சேர்த்ததற்கான காரணத்தை விளக்குகிறார். அப்பூதியடிகளார் புராணத்தில் சேக்கிழார் 'வேறொரு பேர்' என்பதற்குத் தந்த விளக்கத்தை எடுத்துக்காட்டுவது ஒளவை அவர்களின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சிறந்த சான் றாகும்.

    நூற் கட்டுரைகள் அனைத்தும் தமிழன்பர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் தேன் துளிகள் ஆகும்; படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை; நினைக்க நினைக்க மகிழ்ச்சி தருபவை.

    ஒரு நூற்றாண்டு கண்ட ஒளவையின் உள்ளத்தைப் படம் பிடித்துக்காட்டும் ஓர் அரிய கருவூலம் 'தமிழ்ச் செல்வம்' என்னும் இந்நூல். வாழ்க ஒளவையின் புகழ் !

          இரா. குமரவேலன்
    ----------------

    பொருளடக்கம்
    1. பழந்தமிழர் சமயம் 9. நம்பியாண்டார் நம்பியும் ஞானசம்பந்தரும்.
    2. சைவ சித்தாந்தம் 10. வினையுணர்வும் ஞானசம்பந்தரும்
    3. சைவத்தின் இற்றை நிலை11. பட்டினத்துப் பிள்ளையார்
    4. ஞானசம்பந்தரின் ஞானக்காட்சி
    - நெய்தல்
    12. திருப்பாசுரப் பேருரை விளக்கம்
    5. கண்டவர் விண்டது 13. சேரமான் பெருமான் பிரபந்தங்கள்
    6. தில்லையில் நாவுக்கரசர் 14. திருவானைக்காவில் சோழர் திருப்பணிகள்
    7. தில்லையில் சுந்தரர் 15. குமரகுருபரர் நல்கும் சமய வாழ்வு
    8. கயிலையும் அரகம் 16. உமாபதி தேவரான ஞானசிவ தேவர்
    --------------------

    1. பழந்தமிழர் சமயம்

    பழந்தமிழர் என்ற சொற்றொடர் நம் கண்ணிலும் காதிலும் பட்டவுடனே நமது நினைவு தொல் காப்பியம் சங்க இலக்கியங்கள் ஆகிய நூல்கள் எழுந்த காலத்துக்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது. அக்கால மக்களின் வாழ்க்கைக் கூறுகள் நம் மனக் கண்ணில் தோன்றுகின்றன. அவர்களின் சமய உணர்வு ஒழுக்கங்களை உணர்தற்கெனச் சில சொற்களும் சொற்றொடர்களும் சிறந்த சான்றுகளாக அக்கால நூல்களில் நின்று நம் அறிவைப் பணி கொள்கின்றன. அந்நாளைய கல்வெட்டுக்களோ ஓவச் செய்திகளோ பிறவோ கிடைக்க வில்லை. நல்லிசைப் புலமைச் சான்றோர் சிலர் அவ்வக்காலத்தில் பாடிய பாட்டுக்கள் சிலவற்றைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பண்டையோர் வகுத்துள்ளனர். அவை பலவும் தேர்ந்து கொள்ளப்பட்ட சில சான்றோர்களின் சிலவும் பலவுமாகிய பாட்டுக்களாதலால் அவற்றைக் கொண்டு வரலாற்று முறையில் வைத்துச் சமய வுண்மைகளைக் காண்பது அரிதாகவுளது.

    தொல்காப்பிய முதலிய இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் அக்காலத்தே நிலவிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை வழக்குகளையும் முதலாகக் கொண்டு எழுந்தவை. "தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்றே தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் குறிக்கின்றார். இவ் விருவகை வழக்குகளில் நிலவிய சமயக் கொள்கைகளைக் காண்பதே நமது முன்னிற்கும் பயனாகிறது.

    சமய வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை கடவுட் கொள்கையாகும். கடவுள் ஒருவர் உண்டு என்ற உணர்வும், அவரை வாழ்த்தி வழிபட்டு இயலுவது சமய வாழ்வு என்ற கருத்தும் சமயத்தின் உட்கிடை. இவற்றை மேற்கொண்டு ஒழுகுவது சமய வாழ்வாகும் என்பது நாடறிந்த கொள்கை. சமயத்தின் தோற்றம் மிகமிகத் தொன்மை-யானது; மக்கள் இயற்கையில் கண்ட பெரு நிகழ்ச்சிகளால் உள்ளத்தே கொண்ட அச்சமும் அவலமும் காரணமாகக் கொண்டது என்பர் வரலாற்றறிஞர். அச்சத்திற் கருவுற்றெழுந்த சமயம், இயற்கையின் கூறுகளான நிலம், நீர், தீ, காற்று, வான் என்ற ஐந்துக்கும் அப்பாலாய் அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டிவைக்கும் முதல் பொருள் ஒன்று உண்டு என வுணர்ந்து அதற்கும் உலக வாழ்க்கைக்கும் தொடர்பு அமைத்து, அதனை உணர்ந்து இனிது ஒழுகச் செய்யும் முறையில் நல்ல தொண்டாற்றியிருக்கிறது. அந்த முதற் பொருளைப் பழந்தமிழர் கடவுள் என்றும் இயவுள் என்றும் வரும் இரண்டு சொற்களால் குறித்துள்ளனர். "கடவுள் வாழ்த்து'', "பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்'' என்ற தொடர் மொழிகள் யாவரும் நன்கு அறிந்தன. கடவுள், இயவுள் என்ற சொற்கள் கடத்தல், இயக்குதல் என்ற பொருட்குரியன. அக்குள், விக்குள் என்றாற்போல இவையும் கடவுள் இயவுள் என்று இயலுவதால் உள்ளும் புறமும் கடந்து நிற்பது, இயக்கி நிற்பது என்று பொருள் பட்டுக் கடவுள் எனப்படும் முதற்-பொருள் என்பது எல்லாப் பொருட்கும் உள்ளும் புறமும் கலந்து நின்று இயக்குவதும் அவற்றைக் கடந்து நின்று அவற்றின் செயல்முறை கட்கு ஆணை செலுத்துவதும் செய்தொழுகுவது என்ற கருத்தை உணர்த்துகின்றன.

    இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களம் உயிரும் உலகமும் ஆகும். உலகமாவது "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்பது தொல்காப்பியம். சமயச் சூழ்நிலையில், ''காலம் உலகம் உயிரே உடம்பே, பால் வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயிரைந்தும்" சிறந்த பொருள்களாக நிற்கின்றன. உயிர்கள் புல் பூடுகளாகிய ஓரறிவுயிர் முதல் மக்கள் ஈறாக ஆறு வகையாகப் பிரிகின்றன. இவ்வுயிர்கள் யாவும் “மன்னுயிர்" என்றும், "தொல்லுயிர்" என்றும் சிறப்பிக்கப்படுவதால் அவை கடவுளாகிய முதற் பொருளால் படைக்கப்படாமல் அப்பொருளே போல என்றும் நிலைபேறுடைய உள்பொருளாகும். ஏனை உலகமும் உலகிலுள்ள பொருள்களும் அம்முதற் பொருளால் படைக்கப் படுவனவாம். கடவுளை முதற்பொருள் என்று குறிப்பதோடு "உலகு இயற்றியான்'' எனவும், "உலகு படைத்தோன்'' (நற். 240) எனவும் குறித்திருப்பது இக்கருத்துப் பற்றியே யாம்.

    உயிர்கள் இன்ன உரு இன்ன நிறம் என்று சொல்ல வொண்ணாத உருவுடையன; ஆயினும் அவை உலகியற் பொருள்களான உடம்பையும் ஏனைப் பொருள்களையும் இயக்குவதும் அவற்றோடு கூடி இயங்குவதும் செய்வன; அவ்வியக்கத்தால் அவற்றிடையே வினைகள் தோன்றி நிலவுகின்றன ''வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்" என்று நூலோர் கூறுகின்றனர். செய்யும் தொழிலுக்கேற்ப ஊதியமும் உறையுளும் அமைவது போலச் செய்யும் வினைக்கேற்ப உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன. உடம்பையும் நுகர் பொருளையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய கடவுள் மேன்மையுற்று விளங்குகிறார். இதனால் கடவுட்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு படைப்பு போனுக்கும் படைக்கப்படு பொருட்கும் உள்ள தொடர்பாய்க் கடவுளை உலகைத் தனக்குரியதாகக் கொண்ட உடையவனாகவும், உலகம் அவனது உடைமையாகவும் நிறுத்துகிறது. உயிர்கள் உலகிடைத் தோன்றும் உடம்பை இடமாகக் கொண்டு வினை (தொழில்) செய்து பயன் பெறுவதால் இவ்வுலகம் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டு அவற்றிற்கு உதவப்பட்டிருப்பது என்பது பழந்தமிழர் சமயக் கொள்கை. இதனால் கடவுட் பொருட்கும் உயிர் கட்கும் உள்ள தொடர்பு உதவி செய்வோனுக்கும் உதவி செய்யப்பட்டோர்க்கும் உள்ள தொடர்பாய், உதவி பெற்றோன் உதவி செய்தோனுக்குக் கடமைப் பட்டு அவன் நன்றியினை நினைந்தொழுகுவது போல் உயிர்கள் கடவுளது அருளை நினைந்து வழிபட் டொழுகுவது கடனாகும் என்பதை வற்புறுத்துகிறது. இதனால்தான் தொல்காப்பியனார் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்துக் காட்டியுள்ளார்.

    உயிர் வகையுள் மக்களைத் தனிப்பட்ட நிறுத்தி உயர் திணை உயிர் என்றும், ஏனை உயிர் வகையை அஃறிணையுயிர் எனவும் பழந்தமிழர் கொண்டனர். "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே'' என்பது தொல்காப்பியம். மக்களினத்துள் அடங்காமல், கடவுளாகிய முதற் பொருளுமாகாமல் இரண்டற்கும் இடைப் பட்ட நிலையில் தெய்வங்கள் காணப்படுகின்றன. இவை மக்களுயிர் போல மனவுணர்வும் வினை செய்தலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் உடையவாய்ப் பிறத்தலும் இறத்தலும் செய்வன. இவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்களுயிரின் மேனிலையில் உள்ளன. "தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி” மக்கள் இனத்தன அல்ல வாகலின் 'இவ்வென அறியும் அந்தம் தமக்கு இல்" என்றும், சொல்லுலகில் "உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்" என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் வகுத்துரைக் கின்றார்.

    பழந்தமிழர் சொல்லுலகை உயர்திணை அஃறிணை எனக் கொண்டாற் போலப் பொருளுலகைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டனர். இப்பகுதியுள் வாழ்ந்த மக்கள் முறையே குன்றவர், ஆயர், வேளாளர், பரதவர், எயினர் எனக் குறிக்கப் பெற்றனர். அவர்களைத் திணை நிலை மக்கள் என்பது வழக்கம். அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு தொழில் முதலியன தனித்தனியே உள்ளன. அவற்றோடு சமய வொழுக்கத்தைக் கூட்ட மேலே குறித்த தெய்வங்களையும் ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை செய்துள்ளனர். குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயவனும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வமாவர். இவர்கட்கு நாட்பூசனையும் விழாவும் வழிபாடும் செய்வது சமய வொழுக்கமாகிறது. கடவுள் என்பது இத்தெய்வ வகைகட்கு மேற்பட்டு நின்று எல்லாம் வல்ல முழு முதற் பொருளாக நிலவுகிறது. எல்லா நிலப் பகுதிகட்கும் நீர் தீ வளி விசும்பு ஆகிய அனைத்திற்கும் மேலாய் எல்லாம் தன் ஆணை வழி நிற்கப் பண்ணுவது பற்றிக் கடவுட் பொருட்கெனத் தனியே நிலம் கிடையாது; எல்லா நிலங்களிலும் இக்கடவுட் குறிப்புப் பொதுவாகக் காணப்படுவதொன்றே இதற்குப் போதிய சான்று.

    குறிஞ்சி நிலத்து முருகன் முதலாய் தெய்வ வகை எல்லாவற்றிற்கும் தோற்றம் நிலை வேறு கூறப்படுவது போலக் கடவுளாகிய முதற் பொருளுக்குத் தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. இப்பொருளைக் குறிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியங்கள் பிறை முடியும், முக்கண்ணும், கறைமிடறும் உடையனாகக் குறிக்கின்றன. இதனால் இன்று சிவம் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது கொண்டு, சிவ பரம்பொருளே பழந்தமிழர் சமயத் துறையில் நிலவிய கடவுள் என்பது , தெளிவாகத் தோன்றுகிறது. தெய்வங்கட்குத் தோற்றமும் கடவுட்கு அது கூறப்படாமையும் நோக்கின், பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது கடவுள் என்றும், பிறந்து நிலை வேறு கொண்டு இயலுவன தெய்வங்கள் என்றும் பழந்தமிழர் கருதிய கொள்கைகளாகின்றன.

    மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறு பிறப்பும் வீடு பேற்றின்பமும் நிரயத் துன்பமும் சொல்வழக்கில் நிலவுகின்றன. மக்களுடைய மனம் மொழி உடம்பு மூன்றின் அசைவு அசைவின்மைகளால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை . நல்வினை செய்தோர் இன்பத்துக்கும் தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியராவர். வினை உயிரோ உணர்வோ இல்லாத தாகலின், அது தானே சென்று வினை செய்தவனுக்கு உரிய பயனை நல்குவதில்லை. வினை செய்தோனுக்கு வினைப் பயன் அவனையே அடைதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அதுபற்றியே அவற்றைப் "பால் வரை தெய்வம்" என்று சான்றோர் குறிக்கின்றனர். செய்யப்படும் வினைப்பயன்களுக்கேற்ப உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு என மூவகையுலகுகள் காட்டப்படுகின்றன. வினை செய்தற்குரிய உலகம் நாம் வாழும் மண்ணுலகம். நல்வினைப் பயனை நுகர்தற்குரிய மறுமையுலகம் நிரயம் என்றும், வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க்குரியது வீடுபேறு என்றும் பழந்தமிழர் கருதினர்.

    வினை தோன்றும்போதே அதன் பயனும் உடன் தோன்றுகிறது. வினை முடிவில் அதன் முழுத்த பயன் உருவாகி வினை செய்த ஒருவனை அடையும் நிலையை எய்துகிறது. அவன் அப்பயனை நுகரும்வரை அவனுக்கு அஃது ஊழ்கனிபோல் நின்று நுகர்ச்சிக்குரிய காலம் வந்ததும் தெய்வத்தின் ஆணையால் அவனை எவ்வகை-யாலேனும் அடைந்துவடுகிறது. அதனால் அதனை ஊழ்வினை என்று அறிஞர் அறிவிக்கின்றனர். ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி கடவுட் பொருளின் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயலாதலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி கால வகையில் வேறுபடும் என்ற கருத்துப் பண்டையோர் கொண்டிருந்தனர். குன்றவர் முருகனுக்கு வழி பாடாற்றி வேட்டம் செல்வதும், ஆயர் மாயோனுக்குக் குரவையாடி வழிபாடியற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் - புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இது பற்றியேயாகும்.

    உலக வாழ்வில் காணப்படும் உயிர்கள் அனைத்துக்கும் இன்பம் பெறுவது ஒன்றே குறிக்கோளாகும். "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்பது தொல்காப்பியம், இந்த இன்பப் பயன் பெறுவது குறித்தே உலக வாழ்வு நடைபெறுகிறது; உயிர்களால் செய்யப்படும் வினைகள் யாவும் இக்குறிக்கோளையே நாடி நிற்கின்றன. இந்த இன்பப் பயன் பெறுவது பற்றித் தோன்றும் வினை இடையீடு படுமிடத்தும் இடையூறு எய்துமிடத்தும் அவற்றை நீக்கும் செயல் வகைகளில் மக்களின் அறிவும் முயற்சியும் பெரிதும் ஈடுபடுகின்றன. இடையீடும் இடையூறும் அவ் விரண்டின் எல்லையைக் கடந்து போகிறபோது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மை, கடுங்காற்று, கொடு விலங்கு, பெரும்பகை முதலியவற்றால் இடையூறு உண்டாகுமாயின் மக்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து நிற்கின்றனர். பெருமழைக்கு வருந்திய மலையுறை குறவர்,

      "மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
      மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
      கடவுட் பேணிய குறவர் மாக்கள்
      பெயல்கண் மாறிய உவகையர்” (புறம். 143)

    எனச் சான்றோர் குறிப்பது காண்க. செய்யும் வினை காரணமாகத் தோன்றும் சமய வழிபாடு, வினையின் தொடக்கத்தில் இடையூறு வாராமை கருதியும், இடையில் வந்த இடையூறு நீங்குவது கருதியும், முடிவில் வினைப்பயன் நல்கும் இன்பம் குறித்தும் நடைபெறுகிறது.

    மக்களுடைய வாழ்வை அகம் புறம் என இரண்டாக வகுத்து முறை செய்து கொண்டவர் பழந்தமிழர். அகம் என்பது தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் உடல் வளர்ச்சியும் ஒருங்கு பெற்ற ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் தனித்துக் கொண்டு காதலுறவு கொண்டு உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்து கொண்டு மனையறம் புரியும் ஒழுகலாறாகும். அக்காலத்துத் தோன்றும் காதலுறவு இடையீடும் இடையூறும் எய்துமிடத்து, காதலர் மேனிக்கண் தோன்றும் வாட்டமும் மெலிவும் குறித்துத் தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. குன்றவரிடையே நடக்கும் வெறி யாட்டு இதற்குச் சீர்த்த சான்றாகும். புற வாழ்வு என்பது மனையறம் புரிந்தொழுகும் மக்களிடையே பொருளும் புகழும் போர் வென்றியும் பிறவும் பற்றி நிகழும் ஒழுகலாறாகும்.

    புறவாழ்வின்கண், அகத்துறை இன்பம் நுகர்ந்தும் புறத்துறைப் புகழும் வென்றியும் எய்தியும் உவர்ப்புற்ற சான்றோர் "சிறந்தது பயிற்றல்" என்னும் துறவு வாழ்க்கை மேற்கொள்வது பண்டைத் தமிழர் சமயக் கொள்கையாகும். ''காமம் சான்ற கடைக் கோட் காலை ஏமம் சான்ற மக்களோடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்பது தொல் காப்பியம். இங்கு இறத்தல் என்றது வயது முதிர்தல். பொருள் இன்பங்களின் சுவை காணாத ஒருவன் துறவு மேற்கோடல் என்பது தமிழர் சமயக் கொள்கைக்குப் புறம்பானது. இச்சான்றோர் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினையும் ஒரு சேரவுவர்த்து வினையின் நீங்கி விளங்குபவராதலின், இவர்கட்குத் தெய்வ வழிபாடு கிடையாது. இவர்களால் வழிபடப்படுவது கடவுள் எனப்படும் முழுமுதற் பெரும் பொருளேயாகும். அதனால் இத்துறவிகளையும் கடவுளர் என்பது பழந்தமிழ் மரபாயிற்று. சடை முடித்துப் பலகாலும் நீராடித் தோலுடுத்துக் காய்கனி கிழங்கு இலைகளை உண்டு காடும் குன்றுமாகிய இடங்களில் வாழ்வது துறவோர் நிலைமையாகும். இவர்கள் ஏனையோர் போல நல்வினை செய்து துறக்க வின்பம் பெற விழையாது, உற்ற நோய் பொறுத்தலும் உயிர்கட்கு ஊறு செய்யாமையுமாகிய தவம் மேற்கொண்டு மெய் யுணர்ந்து அவாவறுத்து ஒழுகுவர். இப் பெருமக்களது வாழ்வு முழுதுமே சமய நெறியில் இயங்குதலால், இவர்கட் கெனத் தனி நிலையில் சமய வாழ்வும் வழிபாடும் இல்லை. இவர்கள் சொல்லுவனவும் நினைப்பனவும் யாவுமே கடவுட் பெரும் பொரு ளோடு கலந்து பிரிப்பின்றிப் பிறங்கும். இவர்கள் நெஞ்சின்கண் நின்று நிலவும் கடவுள், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற்றும்'' பெரும் பெயர்க் கடவுள். முற்றுந் துறந்த முனிவரரும் முடியுடைய மூவேந்தரும் தலை சாய்த்து வணங்கியது இக்கடவுளையேயாகும். "பணீஇயர் அத்தை நின்குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே" என்று சான்றோர் தெருட்டுதல் காண்க.

    முழுமுதல் கடவுட்கும் மண்ணுலக வுயிர்கட்கும் இடையே நிலவும் தெய்வங்கள் மக்களுடைய வழிபாட்டையேற்று அவர்கள் நலம் பெறத் துணை புரியும் என்ற கருத்தால் பகைப் பொருளை வெல்வதற்கும் துன்பத்தினின்றும் உயிர்களைக் காத்தற்கும் அத்தெய்வங்களின் தொடர்பு சமய வாழ்வில் சிறந்து நின்றது. மக்களுயிர்களுள்ளும் அல்லன கடிந்து நல்லனவே புரிந்தவை மறுமையில் தெய்வங்களா யினவும் உண்டு இவ்வாற்றால் தெய்வங்களைப் பற்றிப் பல வேறு வரலாறுகள் சமயத்துறையில் காணப்பட்டன. அவற்றை இந்நாளில் புராண வரலாறுகள் என்பது வழக்கம். மக்கள் வாழ்க் கையைப் பொருளாகக் கொண்டெழுந்த பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வங்கள் சார்பான புராண வரலாறுகள் பல உள்வாயின.

    குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனைப் பற்றிய வரலாறுகளில், அம்முருகன் தாமரைப்பூவில் பிறந்தான் என்பதை "நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்'' என்று பரிபாடல் முதலிய நூல்கள் குறிக்கின்றன. கடலிடத்தே இருந்து குறும்பு செய்து உயிர்களை வருத்தித் சூரபன்மாவின் காவல் மரமான மாமரத்தைத் தடிந்து அவனையும் கொன்று முருகன் மேன்மையுற்றான் என்பதை,

      "நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
      அணங்குடை யவுணர் ஏமம் புணர்க்கும்
      சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
      கடுஞ்சின் விறல்வேள் "

    என்று பதிற்றுப்பத்தும்.

      "அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
      மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
      எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்"

    என்று முருகாற்றுப் படையும் பிறவும் குறிக்கின்றன . "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகையமர்ந்த" முருகனைச் சிறப்பிக்கும் சான்றோர், வள்ளியை, 'முருகுவுணர்ந்தி யன்ற வள்ளி' என்றும், அவளுடைய பெற்றோரைக் "குறிஞ்சிக்குன்றவர் மறங்கெழு வள்ளி தமர்' என்றும் எடுத்துரைக்கின்றனர்.

    முல்லை நிலத் தெய்வமான மாயோன், கண்ணனால் முல்லை நிலத்து ஆயரிடையே யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு,

      "வடாஅது,
      வண்டின் தொழுகை வார்மண லகன்றுறை
      அண்டர் மகளிர் தண்டழை யுட் இயர்
      மரஞ்செல மிதித்த மாஅல்"

    என்றும், கஞ்சன் விடுப்பக் குதிரை வடிவில் வந்த அசுரனை வென்ற செய்தியை,

      "காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகைகண்டை
      மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
      வாய்பகுத்திட்டுப் புடைத்த ஞான்று இன்னன்கொல்
      மாயோன் என்று உட் கிற்று என் நெஞ்சு"

    என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இவ்வாறே மருதத்துக்குரிய தெய்வமான இந்திரன் முருகன் முதலிய தெய்வங்கட்குப் படையுதவிய பண்பும், அகலிகை பொருட்டு மேனி முழுதும் கண் பெற்ற கதையும் பழந்தமிழரிடையே நிலவின. பாலைக்குரிய தெய்வமான கொற்றவையை முருகனுக்குத் தாய் என்றும், அவளே எல்லாத் தெய்வங்கட்கும் பழையவள் என்றும் கூறுகின்றனர். தாருகன் உரம் கிழித்த தறுகண்மையும், எருமை வடிவில் வந்த அவுணனை வென்று சிறந்த வீறுடைமையும் அவள் செய்தியில் விளக்கம் - பெறுகின்றன. வருணனாகிய நெய்தல் நிலத் தெய்வத்தைப் பற்றி ஒரு செய்தியும் பழந்தமிழ் நூல்களில் எவராலும் எவ்விடத்தும் கூறப்பட வல்லை. இச்செய்திகளை விழாக்காலங்களில் மக்கட்குக் காவியங் கூறியும் ஓவியம் காட்டியும் உரைப்போர் இருந்திருக்கின்றனர். இதனை,

      "இந்திரன் பூசை இவள் அக லிகை இவன்,
      சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு
      ஒன்றியபடி இது என்று உரைசெய் வோரும்"

    உளர் எனப் பரிபாடல் பகர்வது காண்க.

    இத்தெய்வங்கட்கெல்லாம் மேலாய் உலகு உயிர்களின் வேறாய் ஒன்றாய் உடனாய் நிலவும் கடவுள் நிலையில் சிவ பரம்பொருளை வைத்து அவன் வடிவத்தை,

      "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
      நீலமணி மிடற்று ஒருவன்"

    என்றும்,

      ''பேரிசை நவிரம் மேஎய் உறையும்
      காரியுண்டிக் கடவுள் "

    என்றும் கூறுவர். அவன் முப்புரம் எரித்த வரலாற்றை ,

      "ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
      ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
      பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
      கறைமிடற் றண்ணல்"
    என்றும்,

      "தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
      அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்
      மடங்கல்போற் சினைஇ மாயம் செய் அவுணரைக்
      கடந்தடு முன்பொடு முக்கண்ணால் மூவெயிலும்
      உடன்றான்"
    என்றும்,

      "உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்,
      மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்"

    என்றும் பழந்தமிழர் தம்முட் பாராட்டிப் பரவி வந்துள்ளனர்.

    பழந்தமிழர் சமய வாழ்வில் கார்த்திகை விளக்கீடும், மார்கழித்தைந் நீராட்டும், பங்குனி உள்ளி விழாவும், சித்திரை இந்திர விழாவும், வேனில் விழாவும் பிறவும் சிறந்து விளங்கின. கார்த்திகை விளக்கீட்டு விழா இன்றைய தீபாவளிப் பொங்கற் புதுநாள் விழாவும் ஆகிய இரண்டன் சிறப்புக்களை ஒருங்கே தன்கண் கொண்டிருந்தது. இதனை,

      “மழைகால் நீங்கிய மாக விசும்பில்
      குறுமுயல் மறுநிறம்: கிளர மதிநிறைந்து
      அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
      மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
      பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
      விழவுடன் அயா வருகதில் அம்ம”

    என்றும், இக்காலத்தே புது மணமகளிர் புது நெல் கொண்டு அவலிடித்துப் பாற் பொங்கல் இட்டு மகிழும் திறத்தை, இதே பாட்டில்,

      "புதுமண மகடூஉ வயினிய கடிநகர்ப்
      பல்கோட் டடுப்பிற் பால்உலை இரீஇக்
      கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
      பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
      பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை"

    என்றும் நக்கீரனார் நவில்வதனால் நன்கு அறியலாம். மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கித் தைப்பூசம் வரையில் நடைபெறும் தைந்நீராட்டு, பரிபாடலில் பாரித்துக் கூறப்படுகின்றது. விசயநகர வேந்தர் காலத்துத் தோன்றிய மொழி நிலை உணர்வு வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று; தை நீராடல் தலை தடுமாறிற்று; வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று. இக் காலத்தில்தான் தெய்வ நிலையங்களில் வழிபாட்டில் வடமொழி இடம்பெற்றது. ஊர்ப் பெயர்களும் தெய்வங்களின் பெயர்களும் வடமொழியில் மாறின : பின்னர் மக்கட் பெயரும் வடமொழிப் பெயர்களாயின.

    பழந்தமிழரிடையே சமய வழிபாட்டில் அவரது தமிழ் மொழியே நிலைபெற்றிருந்தது. தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. அவற்றை நகர் என்றும் தேவகுலம் என்றும் வழங்கினர். மலை முடியும் கடற்கரையும் தெய்வங்களுறையும் கோயில் எடுக்கும் சிறப்புடைய இடங்களாயின. தவிர மலையின் முடியில் முக்கட் செல்வனுக்கு இருந்த கோயில் மலைபடுகடாம் என்ற சங்க இலக்கியம் குறிக்கின்றது. இக்கோயில்கள் பலவும் மரத்தாலும் மண்ணாலும் பண்டை நாளில் கட்டப்பெற்றன. பல்லவர் காலத்தில்தான் கோயில்களைக் கருங்கற்களால் அமைக்கும் முறை உருக்கொண்டு சிறப்ப தாயிற்று. சிவபரம் பொருள் எல்லாத் தெய்வங் கட்கும் மேலாம் நிலையில் எல்லா நிலங்கட்கும் பொதுவாய் இலங்குவது பற்றிச் சிவத்துக்கு எடுக்கும் கோயில்களில் சிவனை நடுவில் வைத்துக் குறிஞ்சிக் குரிய முருகனையும், முல்லைக்குரிய மாயோனையும், பாலைக்குரிய கொற்றவையையும் பிறவற்றையும் "பரிவார தேவதைகள்" என்ற பெயரால் சூழவைத்துச் சமய ஒருமை கண்டவர் பழந்தமிழர்.

    இவையேயன்றி, ஊர்தோறும் அன்பர்கள் கூடிப் பரவுமிடந்தோறும் தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன இவற்றின் வேறாக,

      காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
      யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
      சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
      மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

    தெய்வ வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றன. கந்துடை நிலை என்றது பிற்காலத்தே சிவலிங்கம் என மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சிவவடிவம் கந்தும், அதன் பீடம் நிலையுமாகும். இவ்வுண்மையறியாத மடவோர் கந்தினை ஆண்குறி என்றும், நிலை யினைப் பெண்குறி என்றும் பிதற்றினர். சிலர் இப்பேதைமையை அறிவுடைமையாக எண்ணிப் பொய்க் கதை புனைந்து மனத்தே மானவுணர்வின்றி எழுத்தால் வரைந்து விட்டனர். தெய்வ வழிபாட்டில் உயிர்ப் பலியும் குருதி கலந்த சோறும் படைக்கப் படுவதுண்டு. எங்கும் விளக்குகளை ஏற்றித் தெய்வங்கட்கு நீராட்டிப் பூச்சூடி மணி இயக்கி நறும் புகை எடுப்பர்; அக்காலை பலவேறு வாச்சியங்களும் முழங்கும். பின்னர்ப் பலவேறு நிறமுடைய பூக்களைத் தூவி வழிபாட்டுக்குரிய தெய்வங்களைப் பரவுவர். முருகனை வழிபடுவோர், கையால் தொழுது காலுற வணங்கி,

      நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை
      ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
      அறுவர் பயந்தே ஆறமர் செல்வ,
      ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை
      மலைகள் மகனே, மாற்றோர் கூற்றே,
      வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ,
      இழையணி சிறப்பின் பழையோள் குழவி,
      வானோர் வணங்குவில் தானைத் தலைவர்
      மாலை மார்ப நூலறி புலவர்
      செருவில் ஒரு பொருவிறல் மள்ள
      அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை
      மங்கையர் கணவ மைந்தர் ஏறே
      வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
      குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
      விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
      பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
      அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக
      நசையுநர்க் கார்த்தும் இசைபேராள்
      அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்
      மண்டமர் கடந்தநின் வென்றா காலத்துப்
      பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்
      பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
      சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
      போர்மிகு பொருந் குரிசில்,

    எனச் சொல்லி முடிவில்,

      "நின் அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
      நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு
      புரையுநர் இல்லாப் புலமை யோய்"

    என்று கூறி வணங்குவர். வேறு சிலர்,

      "யாஅம் இரப்பவை,
      பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
      அருளும் அன்பும் அறனும் மூன்றும்
      உருவிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே”

    என்றும், வேறு சிலர்,

      யாமும் எம்சுற்றமும் பரவுதும்
      ஏம வைகல் பெறுக யாம்எனவே

    என்றும் வழிபடுகின்றனர். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என்பது தமிழர் வழிபாட்டு முறை. இன்றைய தமிழர், தெய்வ வழிபாட்டில் தாம் அறியாத மொழியில் "முறம் போன்ற காதுகளையுடையவனே'', "குடம் போன்ற வயிற்றை யுடையவனே", "பெண்ணின்பத்தைப் பெரிதும் விரும்புபவனே" என்று ஆண் தெய்வங்களையும், ''மலை போன்ற கொங்கைகளையுடைய வளே'', "கடல் போன்ற நிதம்பத்தை யுடையவளே'', "இடையறாத போகத்தை விரும்புபவளே" என்று பெண் தெய்வங்களையும் வழிபாடு என்ற பெயரால் வசைபாடுகின்றனர். இன்றைய வழிபாட்டு அருச்சனைகளில் தெய்வ தூஷணமும், வஞ்சனையும் பெருகியிருக்கிறதே-யன்றிப் பூசனையும் வணக்கமும் இல்லை என்றால் அது மிகையாகாது. வடமொழித் தொடர்களைக் கேட்கும் வடமொழி அறிஞர் மனத்தே வெறுப்பும், முகத்தை சுளிப்பும் கொண்டு வருந்துகின்றனர். அரசியல், கல்வி, வாணிபம் முதலிய எல்லாத் துறைகளும் மக்கள் வழங்குகின்ற மொழியிலேயே இயங்க வேண்டும் என்ற வேட்கை மீதூர்ந்திருக்கும் இந்நாளில் தமிழருள் சிலர் மொழி வெறி கொண்டு தாம் சமய வழிபாட்டில் செய்து வரும் பெரும் பிழையைத் திருத்திக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருப்பது சமய வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாகத் தோன்றவில்லை. வட மொழி-யறிஞர்க்கும் வெறுப்பைத் தந்து நாட்டு மக்களுக்கு இருளை விளைவித்துச் சமய உணர்வொழுக்கங்களில் மக்கள் உள்ளத்தில் புறக்கணிப்பை நல்கும் இப்பிழைபட்ட வழிபாட்டு முறையைச் சமய நிலையங்கள் இனியும் நீடிக்க விடுவது அறமாகாது. மேலும் வடமொழி ஆகமங்களோ தமிழ்ச் சமய இலக்கியங்களோ யாதும் எக்காலத்தும் எவ்விடத்தும் வடமொழியில்தான் வழிபாடு நடைபெற வேண்டுமென்ற விதியை வகுத்ததே கிடையாது. வாழ்க்கைத் துறையில் தான் போலிச் செயல் பெருகிற்றென்றால் வழிபாட்டிலும் போலியுரை வளருமானால் தெய்வங்களின் அருள் தான் கைவருமோ என்று உள்ளம் அஞ்சுகின்றது. தெய்வந்தான் துணை செய்ய வேண்டும்.

    ---- 'தமிழர் வாழ்வு' (கட்டுரைத் தொகுப்பு)
    மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, (மே, 1967)
    ------------

    2. சைவ சித்தாந்தம்

    (சிவ வழிபாடு பண்டைநாளில் உலகில் பல இடங்களிலும் காணப்பட்டதாக ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர். அச்சிவ வழிபாடு இந்நாளில் சுருங்கித் தமிழ்நாட்டெல்லை யளவாக நிற்கிறது. அச்சிவத்தொடு தொடரப்பட்ட சமய உண்மையே சைவ சித்தாந்தமாகும். இச்சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கும் முதல் நூலாக இப்போதுள்ளது சிவஞானபோதமாகும். அச் சிவஞான போதப் பெருங்கடலின் நிலை கண்டுணர்ந்து, அதற்குப் பேருரைகண்டு, சைவ சித்தாந்தப் பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் சிவஞான முனிவர் ஆவர். முப்பொருள் உண்மை கூறும் சைவ சித்தாந்தக் கருத்துள் இறைவன் உயிர் இயல்புகளை விளக்கிக் காட்டும் சிவஞான முனிவரின் தெளிவுரைகள் கட்டுரையகத்தே அழகு செய்து நிற்கின்றன.)

    சைவ சித்தாந்தம் என்பது சைவருடைய சமய முடிவு என்று பொருள் தரும் சொற்றொடர். சைவர் யார் என்றால், சைவ சமயத்தை மேற்கொண் டொழுகுபவர். சைவக் கொள்கையுடைய அனை வரும் சைவரே யாவர். சைவரென்னும் சொல் சாதி குலம் வேறுபாடின்றி யாவர் யாவர் சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுகின்றார்களோ அவரவர்களுக்கு உரியதாகும். சைவப் பெரியோர்கள் ''ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால் மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க" என்றே வற்புறுத்தி யுள்ளார்கள். ஆகவே, சைவருடைய சித்தாந்தம் என்றவுடனே, சைவரென்று கூறிக்கொள்ளும் ஒரு சாதியாருடைய கொள்கையென்று எண்ணுவது குற்றமாகும். இவ்வாறு எண்ணும்படியான நிலைமை யுண்டானதற்குக் காலந்தான் காரணமாகும், காலத்தை நொந்து கொள்வதைத் தவிர அவ்வாறு கூறிக் கொள்பவர்களையோ மற்றவர்களையோ நோவது தவறாகும். அவர்களுக்கு உண்மையை யுள்ளபடி அறிவிப்பது சைவருடைய கடமை. காலமும் கல்வியறிவில்லாமையும் புகுந்து செய்த அட்டூழியத்தால், சைவரிடையே சாதிச் சைவர் களெனவும் உண்மைச் சைவர்களெனவும் பிரிவு உண்டாயிற்று. இப்பிரிவால் உண்டான கேடுகள் பல, சமுதாயத் துறையில் ஒற்றுமைக் குறைவும் அரசியலில் செல்வாக்குக் குறைவும் ஒருபக்கம் தோன்றி வருத்த, பொருளாதாரத் துறையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடி ரூபாய் கெடுகிறது. இதனைப் பின்னர் விளக்குவோம்.

    சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுபவர் சைவரானால், சைவம் என்பது யாது: "சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது'', என்றார் திருமூலர். சிவம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குத் தென்னாட்டுத் தமிழர் இட்டு வழங்கிய பெயர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' என்ற இத் தொடர்கள் மேற்கூறிய பொருளை வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். சிவத்துக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு சைவம்; உயிர்களுக்கும் உலகத் துக்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் உண்டாக்கப்படுவது; அதனால் அத் தொடர்பும் சைவமே, இம்மூவகைத் தொடர்புகளையும் எடுத்தோதி மக்களை வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ வாழ்வு பெறுவிப்பது சைவ சித்தாந்தம் என்பது முதலில் நினைவிற் கொள்ள வேண்டிய தொன்று.

    சிவமென்னும் செம்பொருள் உருவமுடைய பொருளன்று; அருவமும் அன்று; அருவுருவமும் அன்று. அதற்கென ஒரு பெயரும் இல்லை ; குணமும் இல்லை. அதற்குத் தோற்றமும் இல்லை; கேடும் இல்லை. கட்டுறுவதும் பின்பு கட்டிலிருந்து நீங்குவ தாகிய வீடுபேறும் அச்சிவத்துக்கு இல்லை. சிவத்தை விடப் பெருமை மிக்க பொருளும், நுண்மையான பொருளும் இல்லை; பெருமைக்கும் நுண்மைக்கும் சிவமே எல்லை. பேரறிவு வடிவே சிவம் என்னலாம். சிவம் இன்பமேயானது. எங்கும் எப்பொருட்கும் சிவமே முதன்மையும் தலைமையும் உடையது. ஒளிமயமான அருளாற்றலை யுடையது இச்சிவ முதற் பொருள். அவ்வாற்றல் அழிவில்லாதது; ஓங்கியுயர்ந்து எங்கும் நிறைந்திருப்பது; சிவமும் அந்த அருளாற்ற லோடு நீங்காமல் கூடியிருப்பதாகும். சிவமாகிய முதற்பொருள் மற்ற உயிர்ப்பொருளையும் உலகப் பொருளையும் நோக்க வேறாக இருப்பினும், அவை களோடு ஒன்றாயும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் உடனாயும் விரவி இருப்பது. உயிரும் உலகும் தத்தமக்குரிய தொழிலை ஒழுங்கு வழுவாமல் செய்வதற்குச் சிவ முதற் பொருளே காரணமாகும். உயிர்கள் தத்தம் தொழி லாகிய வினைகளைச் செய்து பயன்களை நுகர்ந்து கொண்டே வந்து பக்குவப்படும்போது, சிவமாகிய செம்பொருள் உண்மையறிவு விளங்கச் செய்து வீடுபேற்றினை எய்துவிக்கும். இக்கருத்தையே,

      "அருவுருவம் குறிகுணங்கள் முதல்ஈறு
            கட்டுவீடு அனைத்தும் இன்றி
      பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய்
            ஆனந்தப் பிழம்பாய் எங்கும்
      ஒருமுதலாய் அழிவின்றி ஒங்கொளியாய்
            நிறைந்துளதாய் உயிர்கள் தோறும்
      விரவிஉடன் தொழிற்படுத்துப் புலம் கொளுத்தி
            வீடுய்க்கும் பதியாம் எம்மை."

    என்று சிவஞான முனிவர் கூறுகின்றார்.

    இனி, உயிர்கள் எண்ணில்லாதனவாகும். இவற்றை ஒருமலம் உடையவை, இருமலம் உடை யவை, மும்மலம் உடையவையென மூவகையாகக் கூறுபடுத்திச் சித்தாந்த நூல்கள் உரைக்கின்றன. பளிங்குக்கல் எந்தப் பொருளைச் சார்கிறதோ அந்தப் பொருளின் வண்ணத்தை யடைவது போல், உயிர்களும் சார்ந்த பொருளின் தன்மையைத் தாமும் பெறும் இயல்புடையவை. உயிர்ப் பொருளுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை; என்றும் உள்ள பொருளேயாம். சத்து இது அசத்து இது எனப் பகுத்தறிய வல்லது சத்தாகிய உயிர். நம் கண்ணொளி யானது; இருளோடு சேர்ந்த போது இருளாயும் ஒளியோடு சேர்ந்த போது ஒளியாயும் நிற்கும். அப்படி நின்றாலும் கண்ணொளி இருளும் ஒளியுமாகாது வேறே. அது போல, உயிர்ப்பொருள் சத்தொடு கூடிச் சத்தாகியும், அசத்தொடுகூடி அசத்தாகியும் சதசத்து என வேறாகவே நிற்பது. உயிர் எவ்வெவ் வுடம்பிற் சென்று தங்குகிறதோ அவ்வவ் வுடம்பளவும் நிறைந்து நிற்கும்; சிவ முதற் பொருளின் அருளால் கட்டு நீங்கி வீடுபேறடையும் தன்மையுடையது. உயிர் உணரும் தன்மை யுடையதேயாயினும் தானே எதனையும் உணராது; பிற அறிவுடைப் பொருள் உணர்த்த உணரும் சிறுமையுடையதாகும். உயிரது அறிவு, உணர்த்த உணரும் சிறுமையும், உலகுயிர்களை ஒன்றொன்றாய்ப் பார்த்தறியும் சிறுமையும் உடையது. இதனை,

      "எண்ணிலவாய் வகை மூன்றாய் வெண்சிலைபோல்
            பற்றியவை தாமாய் என்றும்
      உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்
            சத்தாய் இருளும் ஒளியு மல்லாக்
      கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாய்
            எம்மருளால் கட்டறுத்த வீடு
      நண்ணுபவாய் உணர்த்த உணர் சிற்றறிவிற்
            பலவாம்நற் பசுக்கள் தன்மை ”

    என்று வரும் செய்யுளில் காணலாம்.

    உயிர்களுக்கும் உலகுக்கும் தொடர்புண்டாவ தற்குக் காரணமாகிய கட்டு (பாசம்) மூவகைப்படும், அவை மலம், மாயை, கன்மம் என்பனவாகும். மலம் என்பது ஒன்றாய் அழிவில்லாத அளவிறந்த உயிர் களையும் அனாதியே பற்றி அவற்றின் அறிவை மறைக்கும் பல்வேறு ஆற்றல்களை யுடையதாய் இருப்பது. மேலும் இம்மலத்துக்கும் உயிர்கட்கு முண்டான தொடர்பு செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்புபோல, ' என்று உயிருண்டு அன்றே மலமும் உடனுண்டு' என்னும் பழமைத் தொடர் பாகும். இவ்வாறு தொன்மைத் தொடர்புடைய தாயினும் உயிரறிவை மறைத்து இருளாய்த் தோன்றும் இம்மலம். சிவமுதற் பொருளின் அருளொளியால் மறைப்பு நீங்கும் தன்மையுடையது.

    இவ்வாறு மலத்தால் தோன்றும் அகவிருளை நீக்குதற்கு முதல்வன் திருவருள் துணையாவது போல, அத்திருவருளாற்றலால் தோற்றுவிக்கப்படும் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிகளாகிய மாயையும் துணை யாகும். இம்மாயையின் காரியமாகிய உடல் முதலியன மலவிருள்களைச் சிறிது நீக்கி உயிரறிவு தொழிற்படுதற்குரிய விளக்கத்தைத் தருகின்றன. இந்த மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இருவகைப் படும். இனி, இந்த உயிர்கள் நல்வினை தீவினை யென்ற இரண்டினையும் செய்தற்கு ஏதுவாக இருப்பது கன்மம். இந்த மலமாயை கன்மங்களோடு கூடி நின்று இவற்றைத் தொழிற்படுத்தி உயிர்கள் கட்டினின்றும் நீங்குதற்கேற்ற செவ்வி பெறுவிக்கும் அருளாற்றலும் உண்டு. அது திரோதானம் என்று வழங்கும், திரோதானம் மறைப்பது. மல முதலிய வற்றோடு கலந்து நின்று மறைத்தலைச் செய்விப்பது பற்றி இப்பெயர் உண்டாயிற்று. இவ்வாற்றல் மலம், சுத்தமாயை, அசுத்தமாயை, கன்மம், திரோதம் எனக் கட்டு ஐந்தாதலைக் காணலாம்.

    இந்த ஐந்தையும், சிவஞான முனிவர்,

      "ஒன்றாகி அழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச்
            செம்புறுமா சென்னத்
      தொன்றாகி அருள்விளைவில் நீங்கும் இருள் .
            மலத்துடன் அத்தொடக்குநீப்ப
      மின்தாவும் உடலாதி நல்கும் இருமாயை
            இருவினைகட்கேது
      என்றோது கருமம் இவை நிகழ்த்துதிரோ
            தமும் என்னும் ஐவகைப்பாசத்தை

    என்று உரைத்தருளுகின்றார்.

    இதுகாறும் கூறிய சிவம், உயிர், கட்டு எனப் படும் மூன்றினையும் சிறப்புற அறியும் அறிவு மெய்ஞ்ஞானம் எனப்படும். இம்மூன்றின் இலக்கணத் தையும் பொதுவிலக்கணம் சிறப்பிலக்கணம் என இரண்டாகக் கூறுவர். சிவமுதற் பொருளில் பொது விலக்கணம், சிறப்பிலக்கணம் என்றும், உயிர்ப் பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும், பாசப்பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும் இலக்கணம் காணப்படும். இவற்றுட் பொது விலக்கணத்தால் அறிவதை விடுத்துச் சிறப்பிலக்கணத்தால் அறிவதைத்தான் மெய்ஞ்ஞானம், உண்மைஞானம், என்று கூறுவர். இந்த ஞானம் பெறற்கரிய பெருஞானமாகும். இந்த ஞானம் வாய்க்கப்பெற்றவர்கள் மலக்கட்டினின்றும் நீங்கிச் சிவானந்தப் பேரின்பத்தை நுகர்வார்கள். அவர்களை இந்நிலையில் விட்டு நீங்கும் மலத்தின் ஆற்றல் அழிவது கிடையாது; இறைவன் அருளாற்ற லில் அழுந்திவிடுமாதலால் மீளவும் வந்து உயிர்களைப் பற்றுவதும் கிடையாது.

    இதுவே,

      "திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல்பால்
            உணர்ந்தெண்ணித் தெளிந்து தேறும்
      அரிய பெறல். சன்மார்க்க ஞானநிலை
            இது கிடைத்த அறிவால் மிக்கோர்
      பெரியமலப் பிணியவிழ்த்துச் சிவானந்தப்
            பெரும்பேறு மருவிப் பாசம்
      இரிவதூஉம் புகுவதூஉம் இன்றியொரு
            நிலையாம் அவ் வியல்பு தன்னில்

    என வருகிறது

    இவ்வாறு உண்மைஞான வொழுக்கத்தால் கட்டற்ற உயிர் அறிவு வடிவாய்ச் சிவமுதற் பொருளைச் சேர்ந்து நிற்குங்கால், அறிவானும் அறியப்படு பொருளும் அறியும் அறிவுமாகிய மூன்றாகப் பகுத்தறிய வாராமல், அறியப்படும் பொருளேயாய் அதனுள் அழுந்தி நிற்கும். நிற்குங்கால் அதன் நிலை கண்ணொளியும் ஞாயிற்றொளியும் போலவும், நீரும் அதன் நிழலும் போலவும், நெருப்பும் அதனொடு கலந்து வெந்து சிவந்து நிற்கும் இரும்பும் போலவும், நீரும் உப்பும் போலவும், ஞாயிற்றொளியும் விண்மீனொளியும் போலவும் ஒன்றாதலும் வேறாதலும் இன்றி ஒன்றி உடனாய் நிற்கும் நிலையாகும். இதனையே அத்துவித நிலை யென்று நம் சைவ சித்தாந்தம் கூறுகிறது. இந்த நிலையினைப் பெற முயலும் அன்பர்கள் உள்ளத்தில் இறைவன் திருக்கோயில் கொள்வான்.

    இதனைக் குறிக்கவந்த சிவஞான முனிவர்,

      "உணர்பொருளும் உணர்வானும் உணர்வும் எனும்
            பகுப்பொழியா தொழிந்து பானும்
      புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும்.
            புனலுவரும் பரிதி மீனும்
      துணையவிரண் டறுகலப்பின் எம்முடனாய்ப்
            பேரின்பந் துய்த்து வாழ்வார்
      இணர்விரைத்த மலர்க்கோதாய் அவர்வடிவே
            எமக்கினிய கோயி லாமால்"

    என்று இயம்புகின்றார்.

    --- 'செந்தமிழ்ச் செல்வி' (1947-48)
    ----------------

    3. சைவத்தின் இற்றைநிலை

    நம் தமிழ் நாட்டிலும் இதனைச் சூழவுள்ள பிற நாடுகளிலும் இப்போது பல வேறு துறையில் மாறு தல்கள் வேண்டி மக்களிடையே கிளர்ச்சிகள் தோன்றி நிலவுகின்றன. சிறப்பாக, தமிழ் மக்க ளிடையே அரசியல், வாணிபம், பொருளாதாரம், சமுதாயம் முதலிய பலவகைகளிலும் கிளர்ச்சிகள் உண்டாகியிருக்கின்றன. அரசியல் கிளர்ச்சி யாவரும் நன்கறிந்தது. வாணிபத் துறையில் வடநாட்டு முதலாளிகளும் பிற நாட்டவரும் புகுந்து தமிழ் மக்களைச் சுரண்டிச் செல்வது கூடாது; விற்பனை வகைகளில் மிகுதியான கட்டுத் திட்டம் கூடாது; அது தனித்து வளர வேண்டுமெனக் கிளர்ச்சி யெழுகிறது; பொருளாதாரத் துறையில், நாட்டில் வாழும் மக்களது வருவாய் குறைந்திருப்பதால், வாழ்க்கை முறை தாழ்ந்த நிலையில் உளது; வாழ்க்கை நிலையை யுயர்த்தல் வேண்டும்; அதற் கேற்பப் பொருள் வகைகள் உயர்ந்தோர்க்குப் போல எளியவரும் பெறத்தக்க வசதி யுண்டாதல் வேண்டும்; கைத்தொழிற் சாலைகளும் பிறரும் பொதுவுடைமை யாதல் வேண்டுமெனும் கிளர்ச்சி தோன்றியுளது. சமுதாயத்தில் சாதி வேற்றுமையும் மக்களிடையே படிப்பின்மையும் இருத்தலாகாது; வாழ்க்கைக்கு இன்றியமையாத துறைகளில் எல்லாம் சாதி சமுதாய வேற்றுமைகளைப் புகுத்துதல் சமுதாய வளர்ச்சியைக் கெடுத்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கிறது; இவற்றைத் தொலைக்க வேண்டும்; ஒரு சாதி பிற சாதிகளை யடக்கி மேனிற்பதும் ஒதுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் எந்நாளும் முறையே ஒதுக்கப் படுவதும் தாழ்த்தப்படுவதும் ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் சமயத் துறையால் மாறுதல்களும் கிளர்ச்சிகளும் உண்டாகாமல் இல்லை. சமயங்களின் குறிகளாக விளங்கும் கோயில்கள் தூய்மையாலும் நற் செயல்களாலும் தெய்வ மணங்கமழ்வனவாதல் வேண்டும். தீயொழுக்கம், தீச்செயல், தீநினைவு தோன்றுமிடங்கலாக நிற்பது தீதாகும். கோயிலுக் குரிய மிக்க செல்வங்கள் செவ்விய முறையில் பயன்படுதல் நன்று; கோயிற் பாதுகாப்புப் பணி வாணிபமாக நடத்தல் அறமாகாது; கோயில்கள் சாதிகுல வேற்றுமைகட்கு இடமாய், அவற்றை வளர்த்து மக்களொருமைக்குக் கேடு விளைவிக்கும் தீய நிலையமாய் இருப்பது ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுந்துள்ளன.

    இவையொருபுறம் நிற்க, சிறுவர் கல்வி பயிலும் கல்வித் துறையிலும் பல மாறுதல்களுக்குரிய கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இளைஞரது கல்வி முறை பல நூல்களையும் படித்து நெட்டுருச் செய்யும் தொழிலாதல் கூடாது; கற்கும் கல்வி ஒருவனைப் பிறர்க்குச் சுமையா யிராது தனித்து வாழும் தகுதி பயப்பதாக இருத்தல் வேண்டும். கற்கும் சிறுவர், வாழ்க்கைக்குரிய பொருள்களைத் தாமே தமித் தெண்ணித் துணியும் மனத்திண்மையுடையவராக, மனப்பயிற்சி பெறுதல் வேண்டும். நலந் தீங்குகளைப் பகுத்தறிந்து செயல் முறையில் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்குரிய வினைத் திட்பம் மன வளர்ச்சியின் பயனாக வுண்டாவது; அதற்கேற்பக் கல்விமுறையமைய வேண்டும் என்பன போலும் உணர்வு காரணமாகக் கிளர்ச்சிகள் எழுந்துள்ளன.

    இங்ஙனம், எல்லாத் துறைகளிலும் மாறுதல் வேண்டிய கிளர்ச்சிகள் மிக்கிருக்க, நம் சமயத் துறையில் ஒரு முயற்சியும் இல்லை யென் றெண்ணு தற்கு இடமில்லை. சென்னையில் உள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சமாசம் சமய நூல்கள் பலவற்றையும் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு அடக்க விலைக்கு விற்குமாற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் சமய வுணர்வினராமாறு பெருந் தொண்டு செய்துள்ளது. இந்து அற நிலையப் பாது காப்புச் சட்டத்தின் விளைவாகத் தோன்றிய இந்து அற நிலையப் பாதுகாப்புக் கழகம், சமாசத்தின் துணை கொண்டு பல கோயில்களிலும் விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் சமய வுணர்வு கொளுத்தும் சொற்பொழிவு நிகழ்த்தியும் சொற் பொழிவாளர்களை நிறுவியும் சமய வுணர்வு மக்களிடையே நிலவுமாறு செய்துள்ளது.

    ஈண்டுக் கூறிய இந் நிகழ்ச்சிகளிடையே, நாட்டில் பரவிய மேனாட்டுக் கல்வி, அரசிய லுணர்வு, விஞ்ஞான ஆராய்ச்சி, உலகியலறிவு முதலியவற்றின் பெருக்கத்தால், சில இயக்கங்கள் தோன்றி மக்களிடையே அரசியல், சமயம், சமுதாயம் முதலியவற்றின் பெயரால் நிகழ்ந்த தீய கொள்கை, செயல் ஆகிய இத்தீமைகளை எடுத்தோதி மக்களைத் தெருட்ட முற்பட்டன. உயிரொடு அனாதியே கிடக்கும் மலத்தின் கேடு குறித்து, அதன் மறைக்குந் திறங்களை அருட்சத்தி தோய்ந்து வெளிப்படுவது போல, சமய வொழுக்கத்தோடு மணந்து கிடந்த மடமையின் தீச் செயல்களை இக்கிளர்ச்சி வேகம் தோய்ந்து வெளிப்படுத்திவிட்டது.

    இந்நிலையில் சைவர்களாகிய நாம் நம் சைவத்தின் வளர்ச்சி வரலாற்றை யாராய்ந்து, இதன் பயன் மக்கட்கு எய்தா வகையில் தடுத்து நிற்கும் இடையீடுகளையும் இடையூறுகளையும் விலக்கும் கடமையுடையராகின்றோம். தொன்மையவா மெனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய எனுமெவையும் தீதாகா' என உமாபதி சிவனார் கூறிய உயரிய கருத்தையுட்கொண்டு இக் காலத்துக்கும் நிலைக்கும் உரியவற்றைச் செய்ய முற்பட்ட வேண்டும். 'தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும், ஊழ்' என்று அருணந்தி சிவனார் கூறியது நல்லறிவைப் பொருளற்ற மடமைக்கு அடிமையாக்கும் தன்மையன் றென்பது சைவரறியாத தன்று.

    சைவம் என்பது சிவத்தோடு தொடர்பு கூட்டும் சமயமாகும். சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்று திருமூலரும் கூறினர். ஆகவே, சிவத்தை வழிபடும் சமயம் சைவமென்பது விளங்கும். இச்சிவ வழிபாடு எக்காலத்திற் றோன்றியதென்று அறுதி யிட்டுக் கூற முடியவில்லை. மோகெஞ்சதாரோ, அரப்பா முதலிய இடங்களிலும் சிவ வழிபாடு காணப்படுதலால், இப்போதைக்கு ஐயாயிர மாண்டுகட்கு முன்னும் சிவ வழிபாடு இருந்ததென்று அறிகின்றோம்.

    இனி, நம் தமிழகத்தில் சிவ வழிபாடே மிக்கிருக் கிறது. செல்வத்தாலும் சிறப்பாலும் மேன்மையுற்றுத் திகழ்வன சிவன் கோயில்களே. இதனால் தமிழுலகம் சைவ வுலகம் என்றும், சைவ வுலகம் தமிழுலகம் என்றும் ஒற்றுமை நயம்படக் கூறும் மரபும் உண்டாகியிருக்கிறது. சைவமும் தமிழும் வாழ்க என்று மக்கள் கூறுவதும் இக் கருத்தை அடிப்படை யாகக் கொண்டிருப்பதை யறியலாம்.

    தமிழகத்தின் தொன்மை நிலையைக் காண் டற்கு இப்போது துணை செய்யும் தமிழ் நூல்கள் தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் பிறவுமாம். தொன்மைக் காலத்தில் தமிழ் இயல், இசை, கூத்து என்று முப்பிரிவில் வைத்த ஆராயப்பெற்றது. இயற் பகுதிக்கு வேண்டும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் பொருளாகக் கொண்டு தொல்காப்பியம் உண்டாயிற்று. இதற்குச் சிறப்புப் பாயிரம் கூறிய பனம்பாரனார் என்பவரும், 'தமிழ் கூறும் நல்லுல கத்து, வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்' என்றே குறிக்கின்றார். ஏனை இசை, நாடகம் என்ற இரண்டன் இயல்புகளையும் தொல்காப்பியம் கூறுகின்றிலது. இதனால், தமிழின் தொன்மை நலம் காட்டற்குத் தொல்காப்பிய மொன்றே போது மென்பது நிரம்பாதென்று விளங்கும்.

    இனிச் சங்க விலக்கியங்களும் சங்க காலத்து நிலவிய நூல்கள் அனைத்தையும் கொண்டுள்ளன வல்ல. எத்துணையோ நூல்கள் இறந்து போயின. கிடைத்தவை இப்போதுள்ளனவே. இவற்றால் அறியப்படும் தமிழ் நாகரிகம் முழுதும் அறியப்பட்ட தொன்றன்று. இவை, பொருளிலக்கணத் துறைக்கு அமைதியுடையவாய், பண்டைத் தமிழர் நாகரிகத்தை யுணர்தற்கு ஓரளவு கருவியாவனவாய், பண்டைத் தமிழரின் உலகியல் வாழ்விற்கமைந்த பண்பாட்டை யெடுத்தோதும் பெரு விளக்கங்களாய் நிலவுகின்றன. உலகியலோடு கலந்தும் கலவாமலும் செல்லும் சமய வுணர்வு கொளுத்தும் நூல்கள் தொல்காப்பியத்துக்கு முன்பேயிருந்தன என்றற்குச் சான்று இல்லாமல் இல்லை . 'அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே' என்று தொல் காப்பியம் கூறுகிறது. இறந்தது, வயது முதிர்ந்தது. சிறந்தது, சமயம் கூறும் உணர்வொழுக்கம், சிறந்தது பயிற்றல் கூறுவதால், பயிற்றுதற்குரிய நூல்களும் நெறிகளும் இருந்திருக்கும் என்பது நன்கு விளங்கும். சங்கவிலக்கியங்களும் தவமும் துறவும் கடவுள் வழிபாடும் பிறவும் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இத்தவ முதலியனவே பொருளாக எழுந்த நூல்களாத லால், இவற்றை ஆங்காங்குக் குறித்துக் காட்டுவதே இயல்பாக அமைந்திருக்கிறது. மேலும் காண்போ மாயின், வேள்வி வேட்டலும் சங்க விலக்கியங்களில் அருகிக் காணப்படுகிறது. தொல்காப்பியம் வேள்வி வேட்டலைத் தமிழர் வாழ்க்கையில் காணாமை யால், அதனை அவர் தம் இல்வாழ்க்கைக் குறிப்பில் குறிக்கவில்லை.

    இது நிற்க, சங்க விலக்கியங்களிலும் தொல் காப்பியத்திலும் தமிழர்களால் வழிபடப்பட்ட கடவுளர் பெயர்கள் காணப்படுகின்றன. இந்திரன், பிரமன், திருமால், முருகன், சிவன் ஆகிய கடவுளர் செய்திகளும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றன. இவர்களைப் பற்றிச் சங்க நூல்கள் குறிக்கும் வரலாறுகள் பின் வந்த திருமுறைகளிலும் புராணங் களிலும் காணப்படுகின்றன. சங்க காலத்துக்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் சங்க நூல்களிற் காணப் பட்ட குறிப்புக்கள் உள்ளன. சங்கவிலக்கியத்துட் காணப்படும் இசைப் பாட்டுக்களும், சிலப்பதி காரத்துட் காணப்படும் இசைப் பாட்டுக்கள் பலவும் கடவுள் வழிபாடே பொருளாகக் கொண்டுள்ளன. பின் வந்த சைவத் திருமுறைகளும் இசைப் பாட்டுக் களாகவே யுள்ளன. இவற்றை நோக்குமிடத்துப் பண்டை நாளில் நிலவிய இசைத் தமிழ்ப்பகுதி கடவுட் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருக்கு மென்பது புலப்படும். அப்பகுதி கிடைக்காமையால், அக்காலத் தமிழர் சமயம் இன்னதெனத் தெளிய அறிய இயலாதாகின்றது.

    சங்க விலக்கியங்களிற் காணப்படாத சமண சமயம் சிலப்பதிகாரத்தும், பௌத்தம், சைவம், வைணவம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், மீமாமிசம் முதலியன மணிமேகலையிலும் காணப் படுகின்றன. மணிமேகலை காலத்துச் சைவ வாதம்,

      [#]”இருசுடரோ டியமான னைம் பூதமென்று
      எட்டு வகையும் உயிரும் யாக்கையும்
      கட்டிநிற் போனும் கலை யுருவினோனும்
      படைத்து விளையாடும் பண்பினோனும்
      துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
      தன்னில் வேறு தானொன் றில்லோனும்
      அன்னோ னிறைவனாகும்."

    என்று கூறுகிறது.
    --------
    [#]இக்கருத்துச் சைவத் திருமுறைகளிலே யன்றி, ஆதி சங்கரரெழுதிய தக்கிணாமூர்த்தி துதியிலும் (9) காணப்படுகிறது.

    இதனால், சிவனே இறைவன்; உயர்வற உயர்ந்த ஒருவன்; நிலம், நீர், காற்று, தீ, விண், ஞாயிறு, திங்கள், உயிர் என்ற எண்வகையும் அமைத்திருப்பவன்; உயிரையும் உடம்பையும் கட்டி நிறுத்துபவன்; பல்வகைக் கலைகளும் தன் வடிவாக வுடையவன்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழிலும் உடையவன்; இத் தொழில்களை விளையாட்டாகச் செய்வது அவற்குப் பண்பு என்பது விளங்கும். மணிமேகலையில், அளவை வாதத்துக்குப் பின் இது கூறப்படுதலால், அவ்வளவைகளும், அவற்றால் அளந்து காணப்படும் தத்துவங்களும் இச் சைவத்துக்கும் உரியவாம் என்பதும் விளங்கும்.

    இவ்வாறு மணிமேகலை காலத்தில் சைவ முதலாகப் பல்வகைச் சமயங்களும் நிலவுதற் கிடமாகிய இத் தமிழகத்தில், கி.பி. ஏழாம் நூற் றாண்டின் தொடக்கத்திற்குள், சைவ முதலிய சமயங்கள் ஒளி மழுங்க, சமணமும் பௌத்தமும் மேம்பாடெய்தின. காபாலம், பாசுபதம் முதலிய சமயங்களும் தோன்றியிருந்தவையாயினும், சமண பெளத்தங்களின் முன்னே செல்வாக்கிழந்திருந்தன. விரைவில் சமணமும் பௌத்தத்தை யொடுக்கி நிமிர்ந்து நிற்பதாயிற்று. பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சமண் சமயமே அரசியல் செல்வாக்கால் சிறப்பு மிகுவதாயிற்று. தொண்டை நாட்டில் மகேந்திரவர்ம பல்லவனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமண்சமய வேந்தர்களாகத் திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டில் நாவரசர், ஞானசம்பந்தர் என்ற இருவரும் தோன்றி, பண்டைச் சைவ சமயத்தைத் தமிழக முழுவதும் சென்று திரிந்து பரப்பி நிலைநாட்டுவாராயினர். நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை என்ற சமயங்களின் நற் கொள்கைகளும் பல் சைவத்தில் கலந்து கொண்டன. அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டு களுக்குள் தமிழகம் எங்கும் சைவமே மேலிடம் பெறுவதாயிற்று. பண்டைத் திருமால் வழிபாடும் ஓரளவு ஓங்குவதாயிற்று. மீமாஞ்சை சமயக் கலப்பால் நாட்டில் வேள்வி செய்தலும் மிகுவ தாயிற்று. நாவரசர் முதல் சேக்கிழார் ஈறாகவுள்ள சைவச் சான்றோர் நூல்கள் வேள்வி கேட்கும் செயல்கள் ஆங்காங்கு நிகழ்வதைக் குறிக்கின்றன. பெளத்தமும் சமணமும் ஒளி மறைந்ததற்குக் காரணம், அவற்றால் கண்டிக்கப்பட்ட கொலை வேள்விகள் ஒழியத் தலைப்பட்டது மொன்றாகும்.

    இந்நிலையில் பத்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் வந்த தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் கோயில்களைப் பெருஞ்செல்வ நிலையங்களாக்கத் தலைப்பட்டனர். ஒரு பால் கோயில்கள் கல்வி நிலையங்களாகவும் கலைக் கோயில்களாகவும் திகழ வேண்டுமென்ற கொள்கை தோன்றி உருப்படுவதாயிற்று. வடமொழிப் புலவர் பலர் பல்லவ வேந்தராலும் தமிழ் வேந்தர்களாலும் தமிழகத்திற் குடியேறினர். சைவநூற் கொள்கைகளும் கருத்துக்களும் வடமொழியில் இடம்பெற்றன. அந்த வடமொழி யாகமங்கள் சைவக் கோயில்கள் தோறும் சட்டங்களாக அமைந்தன.

    இவ்வாறு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் தமிழகத்தில் நிலவி மறைந்த பல்வகைச் சமய நற் கருத்துக்களோடியைந்து, சிவபரம் பொருளை முதற்பொருளாகக் கோயில்கட்குச் சென்று வழிபட்டொழுகும் உண்மைச் சைவநெறி உருப்பட்டு வருவதாயிற்று. ஆயினும் கற்றோ ரிடையே, தத்துவங்கள் ஆராய்தலும் அவற்றின் வாயிலாக இறைவனை யடைதற்குரிய நெறி காண்டலும் பற்றி பேராராய்ச்சி நிலவத் தொடங் கிற்று. சாங்கியம் யோகம் என்ற சமயக்கலப்பால் யோக முறையும் சைவத்திற் கலந்து மேம்பட்டது. இந்நிலையில் உய்யவந்த தேவநாயனார் முதலிய சான்றோர் தோன்றி, தத்துவ ஆராய்ச்சியும் யோகப் பயிற்சியும் சிவ வழிபாடும் வேண்டுவன என வற்புறுத்தினர். தத்துவ ஆராய்ச்சியும், யோக நூலாராய்ச்சியும், பண்டைய வழிபாட்டுச் சிவ நெறியும் கற்றோரிடையே பெருங்கலக்கத்தைச் செய்தன. உய்யவந்த தேவ நாயனார், "எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர் கோட்பாடுடைய , அத்தனை யும் சென்றங்களவாதே" என்பன போன்ற உரை களால், வழிபாட்டு முறையை நிலைநாட்டினர்.

    இவ்வாறிருக்கையில் மெய்கண்ட தேவர் தோன்றித் தத்துவாராய்ச்சியும் சிவவழிபாடும் சிவனடியார்களைப் பேணலுமாகிய மெய்கண்ட சைவநெறியைத் தாம் பாடிய சிவஞான போதத்தால் வெளியிடலானார். இதன்கண் சங்ககாலம் தொட்டு வந்த சிவவழிபாடும், நாவரசர் முதலியோரால் அருளிச் செய்யப்பட்ட வழிபாட்டு நெறிகளும், சேக்கிழார் முதலியோரால் வற்புறுக்கப்பட்ட சிவனடியார்ப் பேணலும் அமையக்கண்ட - தமிழ் நன்மக்கள் அதனைப் பெரிதும் மேற்கொள்வா ராயினர். அக்காலத்தே சகலாகம பண்டிதராக விளங்கிய அருணந்தி சிவனார் தாமும் அதனை மேற்கொண்டு, இதற்குள் வடமொழியில் தோன்றி யுருவாய் விளங்கிய ஆகமக் கருத்துக்களை இயைத்துச் சிவஞான போதத்துக்குச் சிவஞான சித்தியென்னும் பெயரால் உரையெழுதினார்.

    இக்காலத்தே சங்கரரால் நிறுவப்பட்ட வேதாந்த மெனப்படும் சமயமும் இராமானுசர் நிறுவிய வைணவ சமயமும் நாட்டில் தக்க இடம் பெறலாயின. சைவநெறிக்குள்ளே கொள்கை வேறு பாட்டால் பல அகச் சமயங்கள் தோன்றின. இதனால், சமய நூல்கள் பலவும் புறமத மறுப்பும் தன்மத நிறுப்புமாகிய நெறிகளில் எழுதப்படுவன வாயின. பண்டு தொட்டே நிலவிச் சிறந்து வந்த சைவநூல்கள் பல, வடமொழியில் புகுந்துவிடவே தமிழரிடையே நிலவுந்திறம் இழந்தன. இக்காலத்தே ஆங்கில மொழியின் ஏற்றத்தால் நாட்டு மொழி நூல்கள் பல பேணுவாரின்றி யொழிந்தது போல, அக்காலத்தே வடமொழி யேற்றம் பெற்றதனால், சைவத் தமிழ் நூல்கள் பல மறைந்தன. தமிழில் எழுந்த சிவஞானபோதம் வடமொழி ரெளரவாகம மாகியதும் இக்காலத்தேயாம்.

    பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தே கொற்றவன்குடி உமாபதிசிவனார் முதலிய சான் றோர் தோன்றிச் சிவப்பிரகாசம் முதலிய நூல்களால், சிவஞானபோதம், சிவஞான சித்தியென்ற தமிழ் நூல்களை முதலாகக் கொண்டும் சைவாகமங்களைத் துணையாகக் கொண்டும் இன்றைய சைவ சித்தாந்த சமயத்தை உருப்படுத்தித் தருவாராயினர். இவ்வாறே வடமொழியிலுள்ள ஆகமங்களுட் சிலவற்றிற்கு வடமொழியில் உரைகள் காணப்பட்டன. வடமொழி யாளர்க்குள்ளேயும் சங்கர வேதாந்தத்தைப் பின் பற்றினோர் தொகை மிகுவதாயிற்று. அவர்கள் வேதாந்தமெனப்படும் உபநிடதங்களையும் வியாசர் பாரதத்துட் கூறிய பகவத் கீதையையும் துணையாகக் கொண்டு சிவாகமங்கள் பிரமாணமாகா என வாதம் புரியவே, சைவ சித்தாந்த நெறி நிற்போர், சிவாக மங்களும் பிரமாணமே என நிலைநாட்டும் கடமை யுடையராயினர். "வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம் பரமம் சுபம்" என மகுடாகம் முதலாயின கூறலாயின. இவ்வகையில் சைவ சித்தாந்த நெறி பழமையும் புதுமையும் கலந்து செவ்விய வகையில் தமிழகத்தில் நிலை பெறுவதாயிற்று.

    இந்நிலையில் அரசியலில் பெருங்குழப்பங்கள் உண்டாயின். வடுக வேந்தரும், முகமதிய மன்னரும் ஆங்கிலம் முதலிய மேனாட்டவரும் தம்முள் போராடி நிற்க, பெருஞ்செல்வ நிலையங்களாக இருந்த கோயில்கள் செல்வாக்குடையார் அவர் வழி நிற்கும் பண்டிதர் ஆகிய இவர்தம் கைவசமாயின. பொது மக்கட்கும் கோயில்களுக்கும் தொடர்பு. நெருக்கமாக உண்டாகாவண்ணம், கோயில் நிகழ்ச்சிகள் முழுதும் வடமொழியில் உண்டாயின். திருமுறையோதுவோர். திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வோர் முதலியோர் விலக்கப்பட்டனர் சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழ்நாட்டுத் தமிழர் கோயிலுள் தமிழ்மொழி விலக்கப்பட்டது. கோயிலில் உள்ள கடவுட்கும், கோயில்களுள்ள வூர்கட்கும் வட மொழிப் பெயர்கள் உண்டாய் விட்டன. வடமொழி பறியாத தமிழருள் மக்கட் டொகை மிகுதியும் செல்வாக்கும் இல்லாதார் தாழ்த்தப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோருமாய் விலக்குண்டொழிய, கோயில்கள் தீய தொழில்கட்கும் செல்வக் களியாட்டுகளுக்கும் இடங்களாயின.

    தமிழருள் கோயில்கட்குச் சென்று வழிபடும் தகுதி பெற்றோர்க்கு ஆகமங்களிற் கூறப்படும் தத்துவங்களும் சிவபேத சத்திபேதங்களும் மந்திர வகைகளும் புவன வகைகளும் நடைமுறையில் பயிலப்பட வேண்டும் என்ற கருத்தால், தீக்கைகளும் சந்திமந்திரங்களும் சிவ பூசைகளும் வடமொழியில் கற்பிக்கப்பட்டன. பொருளறியாத வடமொழியில் கற்பிக்கப்பட்ட தமிழர், இவற்றைச் செய்வதேயமை யும்; கோயில் வழிபாடு இன்றியமையாத தொன் றன்று என்றெண்ணி, கோயில்கட்குச் செல்வதை விடுத்தனர். இவற்றைக் கற்பிப்பாரும் கற்போரும் குருடும் குருடும் கூடிக் குருட்டாட்டமாடுவது போலப் பொருளறியாத வடமொழியில் தீக்கையும் சிவபூசையும் பெறுவித்தும் பெற்றும் ஆண்டவனும் அடிமையும் போல ஒழுகலாயினர். இவற்றைக் காண்போருள் அறிவுடையோர், அருவருப்புற்றும், பொருளில்லார் அச்சமுற்றும் நீங்கினர். கோயிற்குச் செல்லும் தகுதியுள்ளோருட் பலர் ஆங்குக் காணப் படும் உயர்வு தாழ்வு , சாதிகுல வேற்றுமை, தீச்செயல் முதலியவற்றால் கோயில் வழிபாட்டையும் கை விடுவாராயினர்.

    சுருங்கச் சொல்லுமிடத்து, சங்ககாலத்துச் சமயநூல்கள் காணப்படாமையால் நமக்குத் தெளிய விளங்காதிருந்த சிவவழிபாடாகிய சைவம், மூவர் முதலிகள் காலத்தில் நன்கு நிறுவப்பட்டு அவர் கட்குப் பிற்காலத்தே திருந்திய கோயில்களை இடமாகக் கொண்டு, மன்னர் செல்வர் முதலியோ ரால் பேணப்பெற்று, மெய்கண்ட தேவர் முதலிய சான்றோர்களால் செவ்விய ஒழுக்கம் வகுக்கப் பெற்றுச் சிறப்புற்ற சைவம், இன்று சாதிகுல வேற்றுமையிலும் தனித்துண்ணும் சோற்றிலுந்தான் நிற்கிறது. மூவர் முதலிகள் வழிபட்டுப் பரவிக் காட்டிய சைவநெறியில்லை; மெய்கண்டார் சாதனமும் பயனுமாக வகுத்தோதிய சமயவுணர்வு இல்லை . கோயில்களிலும் மூவர் முதலிகள் அருளிய திருப்பாடல்கள் பூசை செய்வோரால் ஓதப்படுவ தில்லை. பொதுமக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க மொழியில் பூசனைகளும் நடைபெறுவதில்லை; பொதுமக்கள் பலரும் சென்று அங்குள்ள இறை வனை வழிபடுதற்கு இடமும் தரப்படுவதில்லை . சமய நூல்களைப் படிக்குமிடத்துக் காணப்படும் பொருட்குக் கோயில்களில் சான்றுகளும் இல்லை. சமய வுணர்வு வேறாகவும் கோயிலில் நிகழ்வன வேறாகவும் உள்ளன ; சமய நிலையங்களாய கோயில்கட்கும் சமய ஞானம் நல்கும் நூல்கட்கும் தொடர்பில்லாத வகையில் சைவம் நிற்கிறது.

    சைவநெறி நிற்பார் மேற் கொண்டொழுகத் தக்க நெறியை மெய்கண்டார் ஒரு வரியில் சிறு சொற்றொடரால் கூறியுள்ளார். அது "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்' என்பது. தம்மையுணர்ந்து தம்மை அடிமையாகவுடைய சிவபரம்பொருளை யுணர்தற்கு வேண்டும் அறிவு நிகழ்ச்சிகள் கோயில்களில் காணப்படுவதில்லை. தலைவனாகிய இறைவனை யுணர்ந்தோர், எல்லா மக்களையும் தம்மைப் போலப் பேணி மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். முதல்வன் திருமுன்னாகிலும் யாவரும் ஒரு தன்மையராகப் பேணப்படுவது சைவர்களுக்குத் தலையாய அறமாகும். அவ்வறத்தைக் கொன்று, தாம் வாழ ஏனோர் தமக்கு அடிமையும் கீழோருமாகக் கோயில்களில் மதிக்கப்பட வேண்டுமென்போர் கையில் சைவமும் சைவக் கோயில்களும் தங்கிக் கீழ்மையுறுவது சைவத்தின் இற்றை நிலையாக வுளது.

    காணார்க்கும் கேளார்க்கும் மெய்யால் உழைக்கும் திறமிழந்தார்க்கும் சமய வுணர்வு கொளுத்தலும் உணவும் உடையும் மருந்தும் கொடுத்துதவு முகத்தால், உடம்பு தாங்கி, பதி புண்ணியம் புரிந்து உய்தி பெறச் செய்தற்கென விரிவாக அமைக்கப்பெற்ற கோயில்கள் அத் துறையில் பயன்படா தொழிவது சைவத்தின் இற்றை நிலையாகவுள்ளது.

    இவ்வாறே, சமய நூல்களும் கூறும் வகையில் உண்மைச் சைவராயினார் செய்தற்குரிய நற் செயல்கள் பலவும் சைவர்கள் கோயிலில் நடைபெற வேண்டியிருக்க, அவை நடைபெறாதிருப்பது இற்றை நிலையாக வுளது.

      "ஞாலம் நின் புகழே மிக வேண்டுந்தென்
      னாலவாயி லுறையு மெம்மாதியே."

      -- அனைத்திந்திய வரலாற்றுக் காங்கிரசில் நிகழ்த்திய
      ஆங்கிலச் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு (1943)
    ----------

    4. ஞானசம்பந்தரின் ஞானக் காட்சி - நெய்தல்

    நெய்தல் என்பது கடற்காட்சியும் கடற்கான காட்சியும் தன் கண் கொண்டது. ஞானசம்பந்தர் நெய்தல் நிலத்தில் தோன்றி அது நல்கும் இயற்கைக் காட்சிகளில் தோய்ந்த உள்ளம் படைத்தவர். கடற் பரப்பும் அதன் கரை சேர்ந்த நாட்டின் நல்ல எழிலும் அங்கு நிலவும் உயிர் வாழ்வின் ஏற்றமும் அவரது ஞானக் கண்ணுக்கு இனிய விருந்து செய்துள்ளன. அவரது ஞானவுள்ளம் உலகியல் வாழ்வில் அவ்வப் போது தோன்றும் தூசும் துரிசும் கலந்து மாசுபடாத மாண்புடையது. பொறி வாயிலாக அறிவுப்பயிர் முளையும் இளமைக் காலத்தேயே சிவஞானப்பால் பாய்ந்து சிறப்புச் செய்தமையின் அதன்கண் சிவப் பயிர் முளைத்துச் செந்தமிழ்க் கவிமணிகளை Fஈன்று சிவஞானச் செழும்பயனே விளைவித்தது.

    திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்து ஞானப் பேறு பெற்றது இச்சீர்காழி ; இது நெய்தல் நிலத்தின் நீர்மை நிறைந்த பழம்பதியாகும். தென் தமிழ் நாட்டின் தென்பகுதியும் தென்கீழ்ப் பகுதியும் கடற்கு இரையான போது பேரலைப் பெருக்கால் (Tidal wave) இப்பகுதி முற்றும் கடல் நீர் புகுந்து பரவிற்று. அந்நாளில் இக்காழி நகர் ஒன்று தவிரப் பிற ஊர்கள் பலவும் நீருள் மூழ்கின. இதனை அப்பெருமான்,

      "கருமை யற்ற கடல் கொள்ள
      மிதந்ததோர் காலம் இது என்ன
      பெருமை பெற்ற பிரமாபுரம்

    என்று மொழிகின்றார். கடலாற் கவரப்படாத பெருமை பற்றி இதனைப் பிரமபுரம் என்றனர். பிரமம் என்ற சொல்லெ பெருமை என்னும் பொருள் தருவது. அந்த உண்மை புலப்படவே பெருமை பெற்ற பிரமாபுரம் என்று இவ்வாறு கூறுகின்றார். இனி, இதற்குப் பொதுவாக வழங்கும் காழி என்ற பெயர், கடற்பெருக்கால் கரைக்க மாட்டாத காழ் பொருந்திய இடம் என்று பொருள்படுவதாகும். தொண்டை நாட்டுத் திருவோத்தூருக்குக் கிழக்கில் உள்ள ஊர், ஒரு கால் சேயாறு பெருகி இடையில் லுள்ள ஏரியின் கரையைச் சிதைத்தேகியபோது, சிதைவுறாமல் நின்ற ஊர் என்று பொருள் படக் காழியூர் எனப்பட்டது. அதன் அழியாப் பெருமை கண்ட சான்றோர், தொண்டை நாட்டுக் கோட்டங் களில் ஒன்றிற்கு அதனைத் தலைமையூராக்கிக் காழியூர்க் கோட்டம் என்றனர். "ஒள்வாழைக் கனி தேன் சொரி ஓத்தூர்'', "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என ஞானசம்பந்தர் பாராட்டும் திருவோத்தூரைப் பல்லவர் கல்வெட்டுக்கள், "தொண்டை நாட்டுக் காழியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டுத் திருவோத்தூர்" என்று கூறுகின்றன. காழிநாடு என்றால் சீர்காழியைச் சேர்ந்த நாடென்று பொருள்படும். அதனை எண்ணியே தொண்டை நாட்டப் பண்டைச் சான்றோர், அதனைக் காழி நாடு என்னாமல் காழியூர் நாடு என்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது. பிற்காலத்தே சீர்காழி சிய்யாழி, ஷியாஷி என ஆனது போலக் காழியூரும் காளியூர் என்றும் காலியூர் என்றும் மாறியதைக் கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், பெருநீர்க்குக் கரைந்து கெடாத காழ் உடைமை பற்றிக் காழி என்றும் காழியூர் என்றும் தமிழ் மக்கள் பெயரிட்டிருக்கும் சிறப்பை நன்கு தெளியலாம்.

    திருஞானசம்பந்தர் நம் தமிழகத்தில் நெய் தலைச் சார்ந்த ஊர்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனையும் இயற்கையையும் கண்டு இன்புற்றப் பாடியுள்ளார். அவையெல்லா-வற்றையும் கண்டுரைப் பதாயின் காலம் நீட்டிக்கும்; ஆதலால், இக்காழி நாட்டிலுள்ள சிலவூர்களில் ஞானசம்பந்தர் கண்ட நெய்தற் காட்சிகளைக் கூறவிரும்புகிறேன்.

    1. தில்லைப் பெரும்பதிக்குக் கிழக்கில் இருப்பது திருவேட்களம் ; முந்நூறு ஆண்டுகட்கு முன் அச்சுதப்ப நாயக்கர் ஆட்சியில் வேட்களம் என்ற பெயரை திருவேழ்க்களம், திருவேள்விக்களம் என மாற்றும் முயற்சியொன்று தோன்றிற்று; ஊரவர் அதனை எதிர்த்து ஞானசம்பந்தர் அருளிய வேட்கள் நன்னகர் என்ற தொடரைக் காட்டி முறியடித்தனர். (கி.பி. 1666).

    இவ்வேட்களத்தின் கிழக்கில் கொள்ளிடம் கடலொடு கலப்பதும் அங்குள்ள கானற் சோலை களில் பல்வகைப் புள்ளினங்கள் தங்கி ஒலிப்பதும் ஒருபாலாக, ஒருபால் வேதமுழக்கமும் வேள்வியார வாரமும் ஞானசம்பந்தரை மகிழ்விக்கின்றன. இதனை,

      ஒதமும் கானலும் சூழ்தருவேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
      வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள் நன்னகராரே,

    என்று பாடுகின்றார்.

    ஒருசார் திரையெழுந்தலைக்கும் கடலும், தண்ணிய கழிகளின் நீர்ப்பெருக்கும், கரையில் நிற்கும் கானற் சோலையில் வண்டினம் பண்பாட எங்கும் மலர்மணம் கமழ்கிறது; இதனை

      திரைபுல்குதெண்கடல் தண்கழி ஒதம்
      தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
      விரைபுல்குனபம் பொழில் சூழ்ந்த
      வேட்களநன்னகராரே.

    என்று பாடுகின்றார்.

    2. இந்நகர்க்குத் தெற்கில் திருக்கழிப்பாலை என்ற திருவுடைய ஐவர் தோன்றுகிறது. அதன் அருகே கடல் தரும் காட்சி இறைவன் பெருமையை நினை வுறுத்துகிறது.

      நடம் நண்ணியோர் நாகம் அசைத்தவனே
      விடம் நண்ணிய தூமியறா விகிர்தா
      கடல் நண்ணு கழிப்பதி காவலனே
      உடல் நண்ணி வணங்குவன் உன்னபடியே

    கடல்துறையில் கலங்கள் வந்து தங்கி வாணிகம் புரிகின்றன. அக்காட்சி காண்பார் மனக்கவலையை மாற்றி இன்பம் கிளர்விக்கிறது. அதனை நினைந் தருளும் ஞானசம்பந்தர்,

      "கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை
      வலங்கொள்வார் வினையாயினமாயுமே"

    என்று இசைக்கின்றார்.

    3. கொள்ளிடத்தின் தென்கரையில் கடல் அலைகள் கொணர்ந்த நுண்ணிய வெண்மணலைக் கடற்காற்று நன்கு பரப்பி அழகு செய்திருக்கும் காட்சி ஞானசம்பந்தரின் கருத்தைக் கவர்கிறது. முத்துக்கள் மணலிடத்தே ஒதுங்கிக் கிடக்கின்றன. நிழல் தழுவிய மணற்பரப்பில் விளையாட்டயரும் இளம் பெண்கள் தங்கள் பாவைக்குத் திருமணம் செய்து மகிழ்கின்றார்கள். அது காணும் ஞானசம்பந்தர் இது நல்லூர்ப் பெருமணம்; இங்கே எங்கள் பெருமான் பெண்ணொடு பாகனாய் வீற்றிருக்கின்றான். அதனால் இவ்வூர்க்கண் திருமணக்காட்சி சிறந்து தோன்றுகிறது போலும் என்ற பொருள் விளங்க,

      தருமணல் ஒதம் சேர் தண்கடல் நித்திலம்
      பருமணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
      வருமணம் கூட்டி மணம் செய்யும் நல்லூர்ப்
      பெருமணத்தான் பெண்ணோர் பாகம் கொண்டானே

    என்று பாடியருளுகின்றார்.

    இங்ஙனம் இல்லிருந்து நல்லறம் புரிதற்கு ஒத்த நிகழ்ச்சி மல்கிய இப்பகுதி, ஒழுக்கத்து நீத்த உரவோர்க்கும் உரிய இடம் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறார்.

      மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்று உமை
      பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
      நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
      போகத்தன் யோகத்தையே புரிந்தானே

    என்று பாடுகிறார்.

    4. சிறிது தொலைவில் வடகிழக்கில் கடற்கரை யில், மேகம் தவழும் கோபுரமும் வனப்பு விளங்கும் மாளிகையும் கொண்ட மயேந்திரப் பள்ளி தோன்று கிறது. கடற்கரைக் கானற்சோலயில் கண்டலும் கைதையும் கமலமலரும் பொருந்தி வாவியும் காணப்படுகின்றன. நேரிற் கண்டு இன்புறும் ஞானச் செல்வர்,

      ''கொண்டல் சேர் கோபுரம் கோலமார் மாளிகை
      கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
      வண்டுலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளியிற்
      செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே

    என்று இனிமை கெழும் இசைக்கின்றார்.

    ஊர்க்குள் கடல் தரு பவளமும் முத்தும் மலைதந்த வயிரமணிகளும் அகிலும் பண்டமாற்று கின்றன. செல்வ வாணிகம் திகழ்வது காண்பவர்,

      "திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
      கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
      வரைவிலால் எயில் எய்த மயேந்திரப் பள்ளியுள்
      அரவரை அழகனை அடியிணை பணிமினே

    என்று பாடிப் பரவுகின்றார்.

    அங்குள்ளவர் ஞானசம்பந்தர்க்குச் சந்திரன் சூரியன் பிரமன் இந்திரன் முதலியோர் வழிபட்டது இத்திருப்பதி என்று கூறக்கேட்டு மகிழ்கின்றார். இப்போது அது கோயிலடிப்பாளையமாக இருக் கின்றது. கடற்கானற்சொன நல்லூர்ப் பொருமல்லாம் எழுப்பிய யோகவுணர்வை மயேந்திரப் பள்ளியும் வற்புறுத்துவதை ஞானசம்பந்தர் நோக்குகின்றார்.

      "மாகணைந்து அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
      யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே "

    என்று இயம்புகின்றார்.

    இனி அடுத்தபடியாக நம் சீர்காழி பின் கிறுக்கி லுள்ள தென் திருமுல்லைவாயில் ஞானசம்பந்தரை அழைக்கிறது.

    5. திருமுல்லை வாயிலே அடைகின்ற ஞான சம்பந்தர் தெருவெல்லாம் முத்துக்கள் சிதறிக் கிடக்கும் அதன் நெய்தல் வளத்தை நேரிற் கண்டு வியக்கின்றார். கடலிலும் கடற்கரையிலும் இருக்கும் அவை தெருவுக்கு வருவானேன் என்று நினைத்து, கடல் அலைகள் எழுப்பும் ஓசை கேட்டு அஞ்சி இவ்வாறு தெருவில் தெரிகின்றன என்று காண்கின்றார்.

      "உருவத்தில் மிக்க ஒளிர்சங்கோடிப்பி
      அவை ஓதம் ஒதவெருவித்
      தெருவத்தில் வந்து செழுமுத்தலைக்கொள்
      திருமுல்லை வாயிலதுவே"

    என்று உரைக்கின்றார்.

    ஒருபால் காவிரி கொணர்ந்த சந்தனமும் அகிலும் சிறக்க, கடல் அலை போந்து மனையவர் சிந்தும் தேறலை உண்டு தேக்கெறிகிறது. இதனை,

      வரைவந்த சந்தோட கிலுந்திவந்து
      மிளிர்கின்ற பொன்னிவடபால்
      திரைவந்து வந்து செறிதேறலாடு
      திருமுல்லைவாயிலிதுவே

    என்று தேன் சொட்டப் பாடுகின்றார்.

    6. இவ்வூர்க்கருகே கலிக்காமூர் காட்சி தருகிறது. (அன்னப்பன் பேட்டை) நெய்தற்கரிய சங்கு இப்பி ஆகியவற்றுடன்

      "துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலிதென்றல்
      கறைவளரும் கடலோதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்"

    என்ற திருப்பாட்டால் கலிக்காமூர் என்ற பெயர்க்குக் காரணம் காட்டுகின்றார்.

    7. காவிரியாறு கடலொடு கலக்கும் துறையில் இருப்பது சாய்க்காடு; பைஞ்சாய்க் கோரை காடு போல் வளருமிடம்; இதன் கருத்தறியாமல் கைதை சோறாயினும் கைந்நிறைய வேண்டும் என்ற பேராசைப் பேய் போல எதுவாயினும் வட மொழியில் மாற்றவேண்டும் என்ற கூட்டம் இதனைச் சாயாவனம் என்று மாற்றி விட்டது. சாய்கிற பக்கமே சாயும் தன்மையால் தமிழர்களும் அதனைச் சாயாவனம் என்றே சொல்லி வாழ்கின்றார்கள்.

    இச்சாய்க்காடு காவிரிப்பூம்பட்டினத்தின் ஒருபகுதி; அதற்குப் பூம்புகார் என்றும் பெயருண்டு. இவ்விரண்டையும் ஞானசம்பந்தர் மிக்க ஆர்வமும் ''காவிரிப்பூம்-பட்டினத்துச் சாய்க்காட்டு எம்பர மேட்டி" என்றும், "தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன்" என்றும் எடுத்துரைக்கின்றார்.

    காவிரியும் கடலும் கூடும் காட்சியை,

      "மத்தயானையின் கோடும் வண்பீலியும் வாரித்
      தத்துநீர்ப் பொன்னி சாகரம் மேவும் சாய்க்காடே"

    என்பர்.

    சாய்க்காட்டுக் கானற் பொழிலைக் காண்கின்ற சம்பந்தப் பெருமான் பூக்கள் நல்கும் தேனுண்டு மகிழும் வண்டுகளின் விளையாட்டை நோக்குகிறார். தன் காதல் வண்டு புன்னையங் கானலுக்குச் சென்று மலர்த் தேனுண்டு தாது அளைந்து வருகிறது. அதன் பெடை வண்டு அது பொறுக்காமல் பொழிலகம் புகுந்து மறைகின்றது. காதல்வண்டு அதைத் தேடி அடைகிறது. பெடை வண்டு நடிப்பிணங்குகிறது. இதனை,

      "மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னைத்
      தாதுகண்டு பொழில் மறைந்து ஊடுசாய்க் காடே."

    எனப் புகல்கின்றார்.

    ஒரு பக்கம் செருந்தியும் கோங்கும் மலர்ந்த கழிக்கரையில் தாழையரும்பி மலர்கிறது. செருந்தியும் கோங்கும் பொன்தட்டுப் போல் விரிந்து நிற்க அதன்கண் தாழம்பூவின் தாது உதிர்ந்து திருநீறு பரந்த பொற்றட்டுப் போலத் தோன்றுகிறது; அதனைக்

      கட்டலாத்த மலர்தூவிக் கைதொழுமின்; பொன்னியன்ற
      தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமரும் தாழ்பொழில்வாய்
      மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
      பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே

    என்று பாடுகின்றார்.

    ஞானசம்பந்தர் காலத்திற் காவிரிப் பூம் பட்டினம் தன் செல்வநிலை பெரிதும் குன்றவில்லை.

    கடல் கோட் காலத்தில் பவுத்தர்கள் அஞ்சி நீங்கினரேயன்றிப் "பதியெழுவறியா" நன்மக்களாத லால் பலர் அங்கே வாழ்ந்தமையின், நகர் வளத்தை ,

      ''விண் புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித்
      தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன்தாள் சார்ந்தாரே''

    என வுரைக்கின்றார்.

    8. அங்குள்ள பல்லவனீச்சுரத்தைச் சம்பந்தர் தமது ஞானக் கண்ணால் நோக்குகின்றார். அது நெடு நாட்களுக்கு முன்பே பல்லவனால் கட்டப் பட்டது.

    புகார் நகரம் கடற்கு இரையாகிய குறிப்பும் அவர்க்குத் தெரிகிறது.

      "கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெல்லாம் உணரப்
      பார் அரக்கம் பயில் புகாரிற் பல்லவனீச்சரமே"

    இது நல்ல மதில் சூழ்ந்த நகரம் என்பார்,

      ''கடையார் மாடம் நீட்டி எங்கும் கங்குற்புறம் தடவப்
      படையார் புரிசைப்பட்டினம்சேர் பல்லவனீச்சரமே"

    என்று பாடுகிறார்.

    பழங்குடி மக்கள் இருந்து வாழும் இயல்பைக் காண்பவர்,

    "மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன் அருந்திப்
    பண்ணார் செய்யும் பட்டினத்தப் பல்லவனீச்சரமே.

    9. அதற்கு மேற்பால் உள்ளது வெண்காடு. வெள்ளையானை வழிபட்டதனால் இவ்வூர் வெண் நாடு என ஊரவர் உரைக்கின்றார்கள். இளங்கோ கூறும் சோம் சூரிய குண்டங்கள் இங்கே முக்குளமாய் விளங்குகின்றன.

      "அயிராவதம் பணிய
      மிக்கதனுக்கருள் சுரக்கும்
      வெண்காடும் வினைதுரக்கும்
      முக்குளம் நன்குடையானும்
      முக்கணுடை இறையவனே"

    இங்குள்ள கழிகளும் பொழில்களும் ஞானம் பெற்ற பெருமானுக்கு நல்ல காட்சி தந்து இன்புறுத்துகின்றன:

    கழிநீரில் தோன்றிய தாழைப்பூவின் நிழலை நீர்க்குருகென்று கெண்டை மீன் கண்டுமருண்டு தாமரைப் பூவின் அடியில் மறைகிறது; அதனை அங்கே கிடைக்கும் ஒள்ளிய முத்துக்கள் அதனைக் காட்டி மகிழ்வதுபோல் ஒளி செய்கின்றன.
    அதனை,

      "விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டில் தண்புறவின்
      மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
      தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக் '
      கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே.

    ஒரு பொழிலில் மயில் ஆடுவதும், கடல் முழங்கு வதும், வண்டு பாடுவதும் ஓர் இசையரங்கு போல் இன்பம் செய்கின்றன. இதனை,

      கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
      விண்மொய்த்த பொழிவரிவண் டிசைமுரலும் வெண்காடே

    என்று பாடிக்காட்டுகின்றார்.

    10. இறுதியாக, நெய்தற் காட்சியை சீர்காழிப் பதியோடு முடிக்கின்றேன். (1) வாழை வளமாகக் கனிந்திருப்பது கண்ட மந்தி உண்ணவிரும்பி நின்று நோக்க, அதன் கனம் தாங்காமல் இலை மட்டை கீழிறங்கவே மாட்டாமல் குரங்கு தவிக்கிறது.

      "தேனார்ந் தெழு கதலிக்கனி உண்பான் திகழ்மந்தி
      மேனோக்கி நின்று இறங்கும் பொழில் வேணுபுரம் இதுவே''

    (2) தாமரைப்பூவில் வீழவே அது சாயக் கண்ட இளவாளை மேனோக்கித் துள்ள, கிறது. இதனை,

      "தண்ணார் நறுங்கமல மலர்சாயவ் விளவாளை
      விண்ணார் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே",

    என வுரைக்கின்றார்.

    இன்பச் சுவைக்கு நான்கு அடிப்படை வகுத்த தொல்காப்பியர் அவற்றைச் "செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே" என்றார். இவற்றுள் புலன் என்பது பொறி புலன்களாற் கண்டவற்றை மனத்தில் வைத்து எண்ணியின் புறுதல்.

    ஞானசம்பந்தர் முதலிய சான்றோர் வெறும் புலனுகர்ச்சியளவில் நிற்பவரன்று; அது "பசுபாச வேதனை'' என அவரே தமது திருமுறையில் உய்த்துணரவுரைக்கின்றார். மேனாட்டவர் புலனுகர் வின்பமே இலக்கியப் பயன் என்று கருதினர்; அவர் நூல்களைப் பயின்ற நம் நாட்டவர் அதுவே மக்களுலகிற்கே பொதுவறம் என்று கொண்டு திறனாய்வு என்றும், விமரிசனம் என்றும் மேற்கொண்ட, சான்றோர்களில் உள்ளுறை காணும் கூர்த்த மதி நுட்பம் இன்றிச் சவலைகளாய்ச் சமழ்கின்றார்கள். பரந்துபட்டுப் பலவாய்த் தோன்றும் இயற்கை நிகழ்ச்சிகளில் சிலவரைந்து கொண்டு கூறுவதன் குறிப்பு யாது என்று நோக்குவது புலமை நோக்கு விஞ்ஞான நெறி (Scientific method) என்பது. பொறி புலன்களாற் கண்டதைச் சொல்லுருக் கொடுத்துரைப்பது உண்மைப் புலமை கலந்த பாவன்மையாகாது, சொல்லார வாரமாய்ப் பயனில மொழிதலாகும்.

    நுண்ணறிவு கொண்டு நோக்குவோர்க்கு இனிய தொருபயன் தந்து மகிழ்விக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்றோர் கொள்கை. இம்மரபு பற்றியே வைணவப் பிரபந்தங்களுக்கு உரை கண்ட சான்றோர் உள்ளுறை என்ற சுவோபதேசம் கண்டு உரைத்துள்ளனர்.

    அந்த நெறியில் நின்று ஆயுமிடத்துச் சீர்காழி யில் காட்டிய காட்சிகள் ஞானப் பொருளை உள்ளீடாகக் கொண்டிருப்பதை உணரலாம்.

    வாழைத் தோட்டத்திற்குட் புகுந்து மந்தி உயரத்தில் வாழைப்பழம் கனிந்து விளங்குதல் கண்டு தானொரு வாழை மடல் மேல் இருந்து தாவிப்பற்ற நினைந்து இருகாலில் நின்றது; அதன் கனம் பொருமடல் கீழ்நோக்கித் தாழவே மாட்டாமல் கனி பெறற்கின்றி நீங்குகிறது.

    இதனையே,

      "நானாவித உருவால் நமையாள்வான் நணுகாதார்
      வானார் திரிபுர மூன்றெரி உண்ணச்சிலை தொட்டான்
      தேனார்ந்தெழுகதலிக்கனி உண்பான் திகழ்மந்தி
      மேனோக்கி நின்று இறங்கும் பொழில் வேணுபுரம் இதுவே.

    என்று பாடியருள்கின்றார்.

    சிவபெருமானை நண்ணாது மாறுபட்ட திரிபுரத்தசுரர், தமது வலிமைச் செருக்காலாகிய முப்புரத்தே நின்று ஐ.யர்வு பெற்று இன்புற எண்ணினர்; திரிபுரம் அவர் சொற்கொடுமை பொறாது சிவனது நகைப்பிற் பிறந்த தீக்கிரையாகி வெந்து வீழ்ந்தது; அவர் செயலின் புலமையை மந்தியின் செயல் குறிப்பாய்ப் புலப்படுத்துவது பற்றி, கதலிக் கனியுண்பான் மந்தி தான் இருந்த மடலின் மென்மை நினையாது நிற்கவும், வாழைமடல் கீழ்நோக்கித் தாழ்வதுதானும் கீழே தரையில் வீழ்ந்து நீங்கும் காட்சியை உரைக்கின்றார்.

    கடல் தான் கொள்ளக் கருதிச் சூழ்ந்தபோது, காழிநாகர் மேல் மேல் உயர்ந்த திறத்தை, இத்தின் செயல் இடத்து நிகழ் பொருட்கும் உண்டென்னும் இயைபு தோன்றத் தான் தங்கிய தாமரை மலர் நீர்ப் பெருக்கில் சாய்ந்து மூழ்குவதறிந்த இளம்வாளை மேனோக்கித் துள்ளுவதாயிற்று என்ற பொருள்பட,

      "தண்ணார் நறுங்கமலம்மலர் சாயவ்விளைவாளை
      விண்ணார் குதி கொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே"

    என்று பாடியருள்கின்றார்.

    இவ்வாற்றால் ஞானசம்பந்தர் காட்டும் இயற்கைக் காட்சிகள் இனிய சொல்லோவியமாக வொழியாது ஞான நிலையமாகவும் அமைந்திருப்பது
    அறிந்து இன்புறற் பாலது.
    ------------

    5. கண்டவர் விண்டது

    ”கண்டாரும் விண்ட்தில்லை; விண்ணாரும் கண்டதில்லை” என்பது நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் காணப்படுவது. இதன்கண் முன்னடியினும் பின்னடியைத் திருவாசகத்தில் "கீதங்கள் பாடுதல் ஆடுதல்லால் கேட்டறியோம். உனைக் கண்டறிவாரை'' எனவரும் தொடர் உறுதிப் படுத்துகிறது. கண்டவர் விண்டிலர் என்ற கருத்து ஒரு கால் என் மனத்தை இயக்கிற்று. சமய குரவர் பலரும் இறைவனைக் கண்டவர்களாயிற்றே என்ற எண்ணம் எழுந்தது. "கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறி யாதன கண்டேன்'' எனத் திருநாவுக்கரசர் அருளிய திருமொழி நினைவுக்கு வரவும், அவர் கண்ட திறம் காண முயன்றேன். அம் முயற்சியின் விளைவு இக்கட்டுரை.

    நாவுக்கரசர் வரலாறு நாடு நன்கறிந்தது. நாவுக்கரசர் என்ற பெயர், அவரது இயற் பெயரன்று, அவருக்குப் .டர் மருள் நீக்கியென்று சேக்கிழார் கூறுகின்றார், ''உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிரே போல், மலருமருள்நீக்கியார் வந்தவதாரம் செய்தார்'' என்பது அவரது கூற்று. உலகில் வருகின்ற இருளை நீக்கி ஒளி விளங்கத் தோன்றும் ஞாயிறு போல, நாட்டில் விரிந்த மருட்சி நீக்கித் தெருட்சி விளங்கத் திருநாவுக்கரசர் தோன்றினார் என்பது இதன் கருத்து. மருள் என்பது, பொருளல்லவற்றைப் பொருள் என்றுணர்வது என்பர் திருவள்ளுவர். பரம் பொருளாகிய சிவத்தையல்லது பிறவற்றைப் பரம் எனக் கருதும் மருள் அந்நாளில் பரவியதனால், அம்மருளை நீக்கிச் சிவமே பரம் எனக் காட்டுவர் என்று உணருமாறு அத்தொடர் நிற்பது காணலாம். எனவே சிவத்தைத் தெளியக் கண்டுணர்த்தும் திறம் திருநாவுக்கரசர் பால் அவர் தோன்றும் போதே உடன் தோன்றியது என்று காட்டுவது போல மருணீக்கியார் என்று திருப்பெயர் வலியுறுத்துகிற தன்றோ ?

    இனி, பொருளல்லவற்றைப் பொருளென உணரும் மருள் எப்போது தோன்றுகிறது? பொரு ளல்லவற்றுள் மூழ்கித் திளைக்கிறபோது, அவை பொருளெனத் தோன்றுகின்றன; அறிவும் மருளு கிறது. அம்மருட்சி தெளியும்போது தான் பொருளென மயங்கியவை பொருளல்ல என்பது விளங்குகிறது. அதற்கொப்பவே, மருள் நீக்கியார் தம்மைப் பெற்ற தந்தை தாயரை இழந்து பெருமருட்சியுற்றுத் தம் தமக்கையின் துணையால் ஒருவாறு தெளிவு பெறுகிறார். “பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்'' என்பது போலக் கலிப்பகையார் ''போர்க்களத்து ! யிர் கொடுத்து" மறைந்தது திலகவதியாரின் வாழ் வொளியை மறைத்தது; மருள் நீக்கியார்க்கு உண்டாகிய மருள் பெரிதாயிற்று. "தம்பியார் உளராக வேண்டுமென'' திலகவதியார் மனத்துள் வைத்துயா" அவரை உயிர் வாழச் செய்தது; இல்லை யாயின் மருள் நீக்கியார் தாமும் அது நீங்காது சைவவுலகிலும் அதனை நீக்காது போயிருப்பர்.

    இதனால் அவர் மருள் நீங்கினார் என்று கூறிவிடலாகாது, தமக்கையார் அவர்க்குத் தாயினும் பாரிந்து சான்றோனாக்கும் பகyரியில் தந்தையினும் சிறந்து விளங்கினாராகவும், சமய நூற்பயிற்சியில் தலைப்பட்ட மருள் நீங்காது வேற்றுச் சமய மருட்சியில் மூழ்கினார். சேக்கிழாரும், "சமயங்களான வற்றின் நல்லாறு தெரிந்துணர்ந்தும்" மருள் நீங்கும் "திறமிலரானார் என்றும், அதற்குக் காரணம் நம்பாது அருளில்லாமை என்பது விளங்க 'நம்பர் அருளாமையினால்" வேற்றுச் சமயம் குறுகினார் என்றும் கூறுகின்றார்.

    மருளுடையார் பொருளல்லவற்றுள் மூழ்கித் திளைக்குங்கால் அது பொருளெனக் கருதித் தம் கண்ணையும் கருத்தையும் செலுத்துவது போல, மருணீக்கியாரும் சமண சமயத்தைச் சார்ந்து அதுவே பரமெனக் கருதிப் புலமை மிகுந்து, அவர் சமண் தருமம் பரப்பும் தானைக்குத் தலைவராகித் தருமசேனர் ஆனார். சேக்கிழார் "அந்நெறியில், புலன் சிறப்ப" என்று குறிக்கின்றார்.

    பின்பு அவர், தம்மைத் தாக்கி வருத்திய சூலைநோய் செய்த துன்பத்தால் மருட்சி நீங்கினார்; திருவதிகைப் பெருமானை மருணீங்கிய தெருட்சி விளக்கும் பாக்களைப் பாடி நாவுக்கரசர் என்ற திருப்பெயரை எய்தினார்.

    இத்திருப்பெயரையும் அரசரோ, சான்றோரோ, பொது மக்களோ இடவில்லை; வானொலியொன்று தெரிவித்தது, "நாவுக்கரசு என்று உலகேழினும் நின் நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சுறை வானிடையே ஒரு வாய்மை எழுந்ததுவே" என்று வரலாறு கூறுகிறது. திருவதிகை யில் திலகவதியாரால் சைவராகிச் சிவபிரானைச் செந்தமிழாற் பாடவும் இது நிகழக் கண்ட மக்கள் பலரும் அவ்வானொலி கேட்டு வியப்பும் உவப்பும் மீதூர்ந்தனர் என்பது "யாவர்க்கும் வியப்பு உற மஞ்சுறை வான் இடையே ஒரு வாய்மை எழுந்தது'' என்பதனால் தெளிவாகிறது.

    இனி, நாவுக்கரசரை அப்பர் என்பது பெரு வழக்கு. நாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென் றிருக்கையில், "ஞானசம்பந்தர் பாண்டி நாட்டி னின்றும் அங்கு வந்தார். அவர் முத்துச் சிவிகை வருவது மரபு. பூந்துருத்தியெல்லையில் அவரை வரவேற்ற கூட்டத்துள் ஒருவராய் நாவுக்கரசரும் சென்று, சிவிகை சுமப்பாருடன் கலந்து அதனைத் தமது முதிய தோளில் தாங்கி வந்தார். அதனை யறியாத ஞானசம்பந்தர், நாவுக்கரசரைக் காண விழைந்து "அப்பர் எங்குற்றார்" எனக் கூட்டத்து மேலோரை வினவினார். அது கேட்டதும் நாவுக்கரசர் நம்மைத்தான் கேட்கின்றார் சம்பந்தர் எனவுணர்ந்து, "இங்கு உற்றேன்'' என்பவர், அன்பால் மனம் உருகி, "உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்தெய்தப் பெற்று இங்கு உற்றேன்'' என்றார். இங்ஙனம் ஞானசம்பந்தரால் அப்பர் என்ற இன்சொல் பொதுவாகத் தந்தைக்குரிய முறைப் பெயராயினும், தந்தை நிலையில் வைத்துப் போற்றற்குரியவரை, அப்பர் என்றும் அப்பா என்று வழங்கும் இயல்பினால், இங்கே நாவுக்கரசர் "அப்பர்" எனப்படுகின்றார்.

    இந்நிலையில் சிவபரம் பொருளையும் தந்தை, எந்தை என்பது போல அப்பன், என்ற உரைப்ப துண்டு. திருநாவுக்கரசரும் சிவனை, "ஆதிரை நாளா அமர்ந்தார் போலும் ஆக் கூரில் தான் தோன்றி அப்பனாரே" எனவும், "அப்பனீ அம்மை நீ ஐயனும் நீ" எனவும் "அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்" ''அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை '' எனவும் பல பாட்டுக்களில் பாராட்டுவர். அது கண்டவர் சிலர், சிவபெருமானை அப்பர் என்று பாடியதனால் நாவுக்கரசர்க்கு அப்பர் என்பது பெயராயிற்றெனச் சொல்லு-கின்றனர். நாவுக்கரசரே யன்றி, ஞானசம்பந்தரும் நம்பியாரூரரும் மணிவாசகரும் பிறரும் சிவனை அப்பன் என்றும் அப்பா என்றும் வழங்குவராதலால் அது பொருந்தாது.

    சிவபெருமானையும் நாவுக்கரசரையும் அப்பன் என்று கொள்வோமாயினும், சிவனை அப்பன் என்ற ஒருமைச் சொல்லும் நாவுக்கரசரை அப்பர் என உயர் சொற்கிளவியால் உரைப்பதும் மரபு.

    சிவபரம்பொருள் கண்டற்கரியது. அதன் அருமையை, "ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருவுடைய சோதி" (23.2) என்றும்,

      "அண்டமார் இருளூடு கடந்து உம்பர்
      உண்டு போலும் ஓர் ஒண்சுடர் அச்சுடர்
      கண்டு இங்கு ஆர் அறிவார்'' (211.2)

    என்றும்

      என்னிறம் என்று அமரர் பெரியார்
      இன்னம்தாம் அறியார்" (88.8)

    என்றும் நம் அப்பர் அறிவிக்கின்றார். இங்கே ஒருத்தரால் என்ற விடத்துத் தொக்கி நிற்கும் உம்மையை விரித்து ஒருத்தராலும் எனக் கொள்ள வேண்டும். எத்துணையுயர்ந் தோராயினும் சிவன் காண்பதற்கு அரியவன் என்பது கருத்து. ஒருத்த ராலும் அறியவொண்ணானாயின், அவனை நினைத்தாலும் அடைதற்கு முயலலும் வீண் அன்றோ எனின், காணாவாறு இருளில் மறைந்து கிடந்து ஒழியாது யாவரும் கண்டறிவதற்காகவே பேரொளி யாய்ப் பிறங்குகிறான் என்றதற்கே "திருவுருவுடைய சோதி", "உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர்" என்று இயம்புகின்றார். அப்பேரொளி-தான் எங்கே உளது என்பார்க்கு, அண்டத்து அப்பால் உளது. என்பாராய், "இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அப்பால் நின்ற பேரொளி'' (2150) என்று உரைக்கின்றார். அப்பேரொளியின் உண்மை யுணர்ந்த விண்ணவரும் மண்ணகத்துப் பெரிய யோரும், அதன் நிறம் இன்னது என்று அவர்களால் அறிய முடியவில்லை ; அதனால் "என்னினும் என்று இன்னம் தாம் அறியார்" என்று இயம்புகின்றார்.

    பெரியோருள், அண்டம் கடந்து அதனைச் சூழ நிறைந்த இருள் கடந்து அதற்கு அப்பால் உள்ளது ஒரு பேரொளி என அறிந்தோர் உண்டு என்பது இனிது புலப்படவே, "அண்டமார் இருளுடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர்" என்றார் போலும். உரையசை அங்ஙனம் ஒளியைக் கண்டும் அதன் நிறம் உரு முதலிய கூறுகளை அறிய இயலாமைப் பற்றிக் "கண்டு இங்கு யார் அறிவார்”, ஒருத்தரும் இல்லை என்பதாம்.

    எல்லாம் வல்ல இறைவன் "காட்சிக்கு எளிய " னாதல் அவற்கு மாட்சியாக இருப்ப, ஒருத்தராலும் அறியவொண்ணாதவனாக காண் டற்கு அரியனாக இருப்பது எவ்வாறு பொருந்தும்? எனின், காண்டற்கு உரிய நெறியுளது; அந்நெறியே நோக்கினால், மிக்க எளியனாய்த் தோன்றி இன்புறுத்துவன்.

    விஞ்ஞான நெறியில் நுண்பொருள் காண விழைவார்க்கு அந்நெறிக்குரிய அறிவு வேண்டும்; மருத்துவ நெறியின் முயல்வார்க்கு மருத்துவ வறிவு முற்பட வேண்டும். பொறியில் அறிவுடையார்க்கே பொறியியல் துறையின் நுண்மை தேர்ந்து புதுமை காண முடியும். அவ்வாறே, சிவத்தைக் காண்டதற்குச் சிவஞானம் வேண்டப்படுகிறது. சிவஞானமுடை யார்க்குச் சிவம் பெறுதல் கூடும்.

    இது பற்றி ஆராய்ந்து சிவஞானம் கைவரப் பெற்ற மெய்கண்டதேவர், சிவபரம்பொருள் நமது இயற்கையால் அறியப்படுவதன்று; அறியப்படாமை யால் இப்பொருள் என்று சொல்ல முடியாது; சிவஞானத்தால் உணர்வார்க்குத் தெற்றென விளங்கும் செம்பொருள், சிவசத்தாம் என்பது விளங்க, "உணர் உரு அசத்து எனின், உணராது இன்மையின், இருதிறனல்லது சிவ சித்தாம்" என்று கூறுகின்றார்.

    சிவஞானம் பெறுவது எங்ஙனம் எனின், சிவநெறிக்கண் முயல்வது. அறிவுத் துறையில் முயலும் மாணவர்க்கு அந்நெறியில் மயக்கமுண்டாகுங்கால் ஆசிரியன் வந்து அதனை நீக்கி உரிய நெறியை அறிவுறுத்துவதை நாம் காண்கின்றோம். அவ்வாறே சிவநெறிக்கண் முயலுங்கால் தோன்றும் அறியா மையைப் போக்கிச் சிவஞானத்தை அருளுவன். சிவநெறிக்கண் முயலும் நெறியும் அதன்கண் சிவபரம் பொருள் அருளும் திறமும் நமக்குச் சமய குரவ ரென்ற முறைமை தோன்ற;

      ''பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை
      நெறிப்படுத்து நினைப்பவர் சிந்தையுள்
      அறிப்புறும் ஆமதாயவன் ஏகம்பம்
      குறிப்பினாற் சென்று கூடித் தொழுதுமே" (162.4)

    என்று நாவரசரே நவில்கின்றார்.

    இங்ஙனம் பொதுப்படக் கூறிய அப்பர் பெருமான், தனக்கு இறைவன் சிவநெறி அருளிய திறத்தை "நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்" என்று உரைக்கின்றார். நன்னெறி காட்டிய வகையையும் நாவுக்கரசர் தெரிவிக்காமல் விடுகின்றாரில்லை . நமது உயிர் இருள் செய்யும் மலம் கலந்து, அதன் வழித்தோன்றும் வினை செய்து இடர்ப்பட்டுத் தெளிவு பெறாது தடுமாறித் தியங்குவது இயல்பு; அதனைக் கெடுத்துச் சிவஞானத்தைச் சிவபெருமான் அருளுகின்றான்
    என்று உரைக்கலுற்று.

    "இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்தெரு ளாய் சிந்தைகளைத் தெருட்டித் தன் போல், சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை" (268.4) என்று பாடுகின்றார். சிந்தையைத் தெருட்டியது எவ்வாறு? என இங்கே ஒருவாறு விளக்கப்படுகிறது. அதனைத் திருவெறும்பியூர்த் தாண்டகத்தில் தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தம் திறமும் அறிவித்து நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய், அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாகக் கொண்ட தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் யானே'' (305.1) என்று விளக்குகின்றார்.

    இவ்வண்ணம் தன்னையும் தன் திறத்தையும் அறிவித்து, அதற்குரிய நெறியையும் காட்டிய பொழுது அந்நெறியைக் கடைப்பிடித்துச் செல்லும் தமக்கு இறைவன் காட்சியருளிய திறத்தை நாவுக் கரசர் நமக்கு அறிவிக்கின்றார். நூல்கள் "அந்நிய மின்மையின் அரன் கழல் செலும்" என்றம், "அயரா அன்பின் அரன் கழல் செலும்” என்றும் கூறுகின்றன; ஆயினும் உலகில் வேந்தன் அருளினாலன்றி அவன் திருமுன் செல்ல ஏனோர்க்கு முடியாது; உலகியல் தலைவரும் அப்பெற்றியரே. அவ்வாறே இறைவனைக் காண்டற்கும் அவன் திருவருள் வேண்டும். அது பற்றியே நாவுக்கரசர், "அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாது" என்று கூறுகின்றார்.

    இயல்பிலே காணலாகாத நுண்ணிய பொருள் களைக் காண்டற்கெனக் கருவிகள் அமைதல் போல இறைவனைக் காண்டற்கு அவன் திருவருள் கருவியாகும். ஆனால் அக்கருவிகட்கு அடிப்படை அறிவு ஆவது போலத் திருவருளும் அறிவு வடிவாய்க் காண்பார். அறிவிற் கலந்து அவனைக் காணச் செய்வதுதான் இங்கே திருவருளே கண்ணாகக் காண்பது என்று கூறப்படுகிறது.

    வேந்தனருளோ, தலைவனதருளோ அவனைச் சூழவுள்ளோரது துணையால் பெறப்படுகிறது; இறைவன் திருவருள் எவ்வாறு எய்தும்; அவன் உலகியல் தலைவர் போல அன்றி, "இருநிலனாய்த் தியாகி நீருமாகி, இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாய் இருத்தலின் "அவனது அருள் பெறுமாறு யாங்ஙனம் எனின், அவன் இருநிலனு மாவன்; அல்லனுமாவன் ; உயிர்கட்கு அருளல் வேண்டியே இவ்வாறு நிலமுதலியனவாகவும் அல்லனாகவும் உள்ளான். உமை கேள்வனான திருவுருவும் நமக்கு அருள்வது குறித்ததே என்பார். "விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணும் நிலனும் திரிதருவாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீருமல்லர் தெரியில் அரிதரு கண்ணி யானை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்" (8.2) என்று அறிவிக்கின்றார்.

    இவ்வாறு அருளுதல் காரணமாக எழுந்தருளும் இறைவன், நமக்கு அருளும் செயல் மிக்க வியப்பாக உளது. உயிரறிவு அது நின்ற உடம்பின் அமைப்புக்கு ஏற்ப விளக்கமுறுகிறது; அது பற்றியே திருமூலர், "உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்று கூறு கின்றார். இதனால், திருவருள் ஞானம் பெறுதற்கு உடம்பு பெருங் கருவியாவது தெற்றென விளங்கும்.

    உடம்பு, ஊன், உயிர், உணர்வு என்ற மூன்றுக்கும் உறைவிடம் அருள் ஒளி பெறுதற்குரியது உயிருணர்வாயினும், அதற்கு ஊனுடம்பு கொள்கல் மாதலின், அதுவும் அருள் ஒளி நிறைதல் வேண்டும். ஊனும் உயிரும் உணர்வும் அருளில் தோய்ந்து ஒன்றாயினன்றி உண்மை ஞானம் கைவர முடியாது. இதனை நாவரசர், "ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிற அனைத்தும் நீயே யாகி, நான் ஏதும் அறியாதே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்'' என்று உரைக்கின்றார். உயிர் உணரும் தன்மைத்தாயினும் உணர்வு இருக்குமிடம் உயிரே என்பது தோன்ற "உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி" என்று சுட்டிக் காட்டுகின்றார்.

    இங்ஙனம் ஊனும் உயிரும் உணர்வுமாயினும் திருவருள் அவ்வாறு ஆவது உயிருணர்வால் அறியப் படுவதில்லை ; உடம்பிற்குள் உடன் உறையினும், அதன் கண் உருவாகும் நோய், உயிருக்குத் தெரிவதில்லை ; அது போலத் திருவருளின் தோய்வும் உயிருக்குத் தெரியாது போகிறது. அது விளங்குதற்கே "நான் ஏதும் அறியாமை என்னுள் வந்து' என்றும், உடலினுள் தோன்றிய நோய் விளைவிக்கும் துன்பத்தால் அதன் உண்மை வெளிப்படுவது போல, அதற்கு மறுதலையான திருவருள் உயிருணர்விற் கலந்து நல்லன தீயன காட்டும் போது அதன் உண்மை உணரப்படும். அதற்காகவே, "என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்'' என்றும், அடியேற்குக் காணாகாட்டும் கண்ணாம் கருகாவூர் என்றும் நம் நாவேந்தர் நவிற்றுகின்றார்.

    நல்லறிவால் நோயுண்மை உணர்ந்தவன், மருத்துவ வறிவு சிறந்தவராயின் நோய் முதல் நாடுவர். அதுபோல, நன்ஞானிகள் முன்பு தெரியா திருந்த நல்லனவும் தீயனவும் பின்பு தெரிகின்றபோது அதற்குக் காரணம் திருவருளின் காட்டும் உதவி எனத் தெரிகின்றனர். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காணுங்கால் இன்பம் பெருகுவது இயல்பாக அறிந்தது. அந்த இன்பமும் திருவருளின் பயன் என்பதை சிவஞானிகள் தெளிந்து, திருவருட்கு முதலாகிய சிவத்தைக் காண்பதற்கு விருப்ப மிகுவர்.

    இவ்விருப்ப மிகுதியால் திருநாவுக்கரசர் சிவத்தைக் காண முயல்கின்றார். காணும் திறம் யாது? காணப்படும் உருவும் அருவமுமாகிய உலகியற் பொருள்களையும் அவற்றின் செயல்களை யும் அறிவதும், அறிந்தவற்றை மனத்தால் எண்ணு வதும், பின்பும் மனத்தின் கண் உள்ள எண்ணங்களை உள்ளத்தின்கண் கொணர்ந்து உணர்வதும் என வரும். இவற்றை நால்வகைப் படுத்து முறையே வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி யோகக் காட்சி என்றும் கூறுவர். மானதக் காட்சி மானதம் என்றும் கனவு என்றும் இரு வகைப்படும். இவற்றை முறையே பொறி புலன்களால் புறத்தே உலகப் பொருள்களை அறிவது வாயிற்காட்சி; பொறிகளை விடுத்து அளவு காட்டியவற்றை மனத்தால் காண்பது கனவுக் காட்சி; மனத்தின் நடுக்கூறாகிய சித்தத்துள் சிந்தித்துணர்வது மானதக் காட்சி. இவை நிகழும் போது உயிருணர்வு முறையே புருவ நடுவிலும், கழுத்திலும் மார்பிலும் இவற்றின் மனத்தால் எண்ணியவற்றையே கனவின் கண் கண்டு உண்மை மெய்ப்படுமிடத்தும் கனவு ; பொறிகளாற் கண்டனவும் மனத்தால் எண்ணினவும் தன் முன் மயங்கி வேறு வேறு தோற்றங்களாய்ப் பொய்ப் படுமிடத்தும் கனவேயாகும்.

    இவற்றின் வேறாகத் தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என இரண்டு கூறுவர். அக்காட்சிகள் தவறான மனவெல்லைக்கு அப்பாற்படுதலால் அவை சொல்லுக்கு அகப்படுவதில்லை; இன்பம் துன்பம் என்பன உண்மையுணர்வேயாயினும் அவை உணர்வாய் ஒழிகின்றனவேயன்றி உரைப்பதற்கு அகப்படுவதில்லையன்றோ !

    அதனால், கண் முதலிய பொறிகளாற் காணும் வாயிற் காட்சி, கனவுக் காட்சி, சிந்தைக் கண் வைத்துக் காணும் மானதக் காட்சி என்ற மூன்றாலும் சிவ பரம்பொருளைத் தாம் கண்ட இயல்பை நாவுக்கரசர் "பாவுற்றசிலர் செந்தமிழ் இன் சொல்'' வளப்பதிகங்களில் பகர்கின்றார்.

    கண்ணாகிய பொறி வாயிலாகச் சிவபரம் பொருளைத் திருப்பாசூரில் “வேலை சூழ்ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்புமாகி ஏபலகம் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக் காதலித்தங் கடியார்கள் காண நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே" எனவும், திருநாரையூரில் "அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை நாவினில் நல்லுரைய னானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே', எனவும் உரைக்கின்றார்.

    திருவாய்மூரில், ''பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன். பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன். விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன், மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே" எனக் கண்ட காட்சியை விரித்துக் கூறுகின்றார். அவர் திருப்பூந் துருத்தியில் "நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை கல்லாதன வெல்லாம் கற்பித்தானைக் காணாதன வெல்லாம் சொல்லி யென்னைத் தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக் கொண்டு பொல்லாவென் நோய் தீர்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே" எனவும் இசைக்கின்றார்.

    இவ்வாறு பலவகையிலும் பரமனைக் கண்டு மகிழ்ந்த நாவரசர்க்கு ஆராமை மீதூர்கிறது. வேறு சில திருப்பதிகட்குச் சென்று வழிபடுகையின் அவ்வாராமை தீரக் காண்கின்றார்.

    கஞ்சனூர் சென்று கண்ணுதற் கடவுளைக் கண்டு பரவுகின்றார். அக்காட்சியால் அவரது ஆர்வம் நிறைகிறது. அதனால், "உருத்திரனை உமாபதியை உலகானானை உத்தமனை நித்திலத்தை ஒருவர் தன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப் பசும் இரவாய் நீர் வெளியாய்ப் பரந்து நின்ற , நெருப்புதனை நித்திலத்தின் தொத் தொப்பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைச் , கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உயர்ந்தேனே'' என்று பாடி மகிழ்கின்றார்.

    கழுக்குன்றத்தில் பெற்ற சிவக் காட்சியை ''மூவிலைவேற்கையானை மூர்த்தி தன்னை முது பிணக்காடு உடையானை முதலானானை ஆவினில் ஐந்து கந்தானை அமரர் கோனை ஆலாலமும் உண்டுகந்த ஐயன் தன்னைப், பூவினில் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே'' என்றும், கற்குடியில் பெற்ற காட்சியை,

    ''பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வானில் விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை வேதியனை வேதத்தின் கீழ்பாடும் பண்ணவனைப் பண்ணில் வரு பயனானைப் புராவனைப் பாரில் வாழ் உயிர்கட்கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்றும் படிப்பவரும் பக்கக் கேட்பவரும் மனமுருகுமாறு இயம்புகின்றார்.

    சிவபரம் பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்ற திறம் கற்பகம் போலா நாவரையார்க்கு இன்பப் பயன் தந்துள்ளது. அதனை வியந்தே, தாண்டகந்தோறும் கற்பகம் என்று கனிந்து மொழிகின்றார்.

    மேலும் அக்காட்சி அவர்க்கு மிக்கதோர் இன்பத்தைச் செய்துளது. அதனால், காளத்தியில் வழிபட்டுப் பாடிய திருத்தாண்டகத்தில்,

      "அண்ணாமலையான் காண் அடியாட்டம்
      அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண்,
      கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண்
      காளத்தியான் அவன் என் கண்ணுளானே"

    என்று இசைக்கின்றார்.

    இங்ஙனம் நனவிற் கண்டு பாடிய நாவரசர், இறைவனைக் கனவிலும் கண்டு இன்புறுகின்றார். திருவொற்றியூரில் வழிபட்டவர், ஒற்றிப் பெரு மானைக் கனவில் கண்டு தாம் பெற்ற பயனை, "வண்டோங்கு செங்கமலம் கழுநீர்மல்கும் மதமத்தம் சேர் சடைமேல் மதியம் சூடி திண்டோர்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடமாடிச் சிவலோகனார் உண்டார் நஞ்சு உலகுக்கோர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்றான் கடும் பிணியும் நடுதொழிலும் கைவிட்டவே'' என்று உரைக்கின்றார்.

    ஒரு கால் அவர் ஆலவாய்ப் பெருமானைக் கனவில் கண்டார்; அக்காட்சி கனவுபோல இன்புறுத் தினமையின், அதனை

      " பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்
      பார்திகழப் பலிதிரிந்து போதக்கண்டேன்
      கொட்டி நின்று இலயங்கள் ஆடக்கண்டேன்
      குழைகாதில் பிறை சென்னி இலங்கக் கண்டேன்
      கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக்கண்டேன்
      கனமழுவாள் வலம் கையில் இலங்கக் கண்டேன்
      சிட்டனைத் திருஆலை வாயில் கண்டேன்
      தேவனைக் கனவில் நான் கண்டவாறே"

    என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறே, திரு நல்லூரில் கண்ட கனவை,

      "செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ்முத்தனைய
      நஞ்சணிகண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒருகால்
      துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன்தான்
      நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனவே"

    என்று உரைத்து, கனவிடைப் போந்த இறைவன் தமது நெஞ்சின் கண்ணே நிலை பெற்று விட்டான்; மறையவில்லை என்று தெரிவிக்கின்றார்.

    இவ்வண்ணம் நனவிலும் கனவிலும் இறை வனைக் கண்டு இன்பம் எய்திய நாவுக்கரசர், பொறிவாயிற் காட்சியைப் போக்கறுத்துச் சிந்தைக் குள் நோக்கும் மானதக் காட்சியில் சிவனைக் காண்கின்றார். அந்நிலையிற் கண்டதனை,

      பொன்னொத்த மேனி மேற்பொடியும் கண்டேன்
            புலித்தோல் உடைகண்டேன் புணரத்தன்மேல்
      மின்னொத்த நுண்ணிடையாள் பாகம் கண்டேன்
            மிளிர்வ தொருபாம்பும் அரைமேற்கண்டேன்
      அன்னந்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை
            அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்
      சின்ன மலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்
            சிவனை நான் சிந்தையுட் கண்டவாறே

    என்று உரைக்கின்றார்.

    சிவபெருமான் சிந்தைக்குள் தோன்றுவது எங்ஙனம்? சிந்திப்பவர் சிந்தையும் அதன் கண் பிறக்கும் தெளிவும் அவன் திருவருளால் அமைவன வாய் அவனேயாதலால் அவன் அங்கே தோன்று வதில் ஐயமில்லை. இக்கருத்தைத் திருவாப்பாடி நேரிசையில், "சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி வந்தனன் பயனுமாகி'' என்று அறிவிக் கின்றார். இதனால் தெளிந்த சிந்தையில் சிவம் தோன்றி இன்பம் செய்யும் என்பது இனிது விளங்குவது காணலாம்.

      "முன்நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
      தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
      வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே
      என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே "

    என்று தெரிவிப்பது காண்க.

    மேலும், இதன்கண், தன் நெஞ்சு தனக்கேயாக, தன் வழி நிற்பதாக நிறத்திக் கொண்டவழி மூர்க்கத் தன்மை கெடும்; அது போதாது; அதன் கண் சிவனைக் காணவேண்டும்; அக்காட்சியால் நெஞ்சம் வன்மை நீங்கி மென்மையும் கசிவும் பெறும்; அது பற்றியே "வன்னெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே" என்று இசைக்கின்றார். மென்மையால் நன்மை யெய்திய நெஞ்சில் இறைவன் எழுந்தருளுகிறான் என்பதற்குச் சான்று வேறு வேண்டாம் என்பார், "என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே" என்று எடுத்துரைக்கின்றார்.

    உடம்பு முழுதும் கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் நிறைந்ததாயினும், இதனுள் இருக்கும் மனத் தாமரையில் சிவபரம் பொருள் இருப்பான்; அவனை அதன் கண் வீற்றிருக்கக் காணலாம்; அவனை வானவர் முதலிய பலர்க்கும் காண்பரியன் என்பர்; மற்றுயானோ, என் நெஞ்சத் தாமரையில் நன்கு கண்டேன் என்பாராய்,

      அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்
      பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்திருந்த
      வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற
      துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே"

    என்று உரைக்கின்றார்.

    இங்ஙனம் சிந்தையிற் சிவனைக் காண்டற்கு வழியாது? நம் சமய குரவரான நாவுக்கரசர், அதனைக் கூறாமல் இல்லை. 'கொள்வோன் கொள்கைவகையறிந்து " நல்லறிவு கொளுத்தும் ஞானாசிரியராதலால், சிவபரம்பொருளைச் சிந்தை யிற் காண்டற்கெனத் திருக்கன்றாப்பூர்த்தாண்டகத்தில்

      விடிவதுமே வெண்ணீற்றை நிறையப் பூசி
            வெளுத்தமைத்த கீளொடு கோவணமும் தற்று
      செடியுடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும்
            செங்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும்
      துடியனைய இடைமடவாள் பங்கா என்றும்
            சுடலைதனில் நடமாடும் சோதி என்றும்
      கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சினுள்ளே
            கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே,

    என்று அறிவுறுத்துகின்றார்.

      --- அப்பரடிகள்', தமிழ்நாடு தெய்விகப் பேரவை, சென்னை, 1973,
      பக்: 9 முதல் 16 வரை.
------------

6. தில்லையில் நாவுக்கரசர்

ஞான சம்பந்தர் காலத்தில் உடனிருந்தவர் திருநாவுக்கரசர். அவர் சமண சமயத்தினின்றும் நீங்கித் திருவதிகையில் சைவராகித் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார் என்பது வரலாறு. அவர் திருப்பாதிரிப் புலியூர் முதலிய பதிகளை வணங்கி வழிபட்டுப் பதிகங்கள் பாடிக் கொண்டு திருவெண் ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவனூர் முதலிய திருப்பதிகளில் வழிபாடாற்றித் திருத் தூங்கானை மாடத்தில் சிவக்குறி பெற்று முதுகுன்றப் பெருமானை முழுதும் பரவித் தில்லைப் பதி நோக்கினார். அதனையுரைக்கவந்த சேக்கிழார்,

    "ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி
    ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொளநினைந்து
    தேனாரும் மலர்ச்சோலைத் திருத்தில்லை மருங்கணைந்தார்”

என்று இசைக்கின்றார். தில்லையம்பலத்தே ஆடு கின்ற பெருமானை வணங்குவது, ஊனும் உயிரும் பெற்ற பயன் என்பது இதனால் விளங்குவது காண லாம். ஊன் உடம்பின் மேலும் உயிர் உணர்வின் மேலும் நிற்கின்றன. உடம்பில் வழி உணர்வு வடிவிற்றாய உயிர் ஞானமும், உயிரில் வழி உடம்பு ஞானத்தின் பயனாகிய இன்பப் பெறும் எய்துமா றில்லை. ஆகவே, இரண்டும் ஒன்றாய் இயைந்தே இறைவனை நினைந்து பாடிப் பணிந்து பயன்பெறல் வேண்டும் என்ற கருத்தால் "ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள் நினைந்து" என்றும், ஞான நிலையம் திருவம்பலமும், ஞானப் பேரின்பம் திருக் கூத்தும் ஆதல் "மெய்ஞ்ஞானமேயான அம்பலமும் உண்ணிறை ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும்" என்பதால் அறியப்படும். அம்பலம் அணைந்து கண்ணாரக் கண்டு கும்பிடுதல் ஊனால் கொள்ளும் பயன்; ஆங்கெய்தும் இன்பக் களிப்பு உயிராற் கொள்ள வரும் பயன்.

திருநாவுக்கரசர் தில்லைப் பெரும் பதியின் எல்லையை அடைகின்றார். அவரது பொன்னிறம் கொண்ட மேனியில் தூய வெண்ணீறு திகழ்கிறது; மார்பில் அக்குமணி வடம் கிடந்து அழகு செய்கிறது; கை உழவாரப்படை தாங்கக் கண்கள் நீர் பொழிய, வாய் சிந்தை சிவன் திருவடிவத்தாய்த் தாங்குகிறது.

இத்திருவுருவத்தை மனக் கண்ணிற் கண்ட தெய்வப் புலமைச் சேக்கிழார்,

    "தூய வெண்ணீறு துதைத்த பொன் மேனியும் தாழ்வடமும்
    நாயகன் சேவடிதைவரு சிந்தையும் நைந்துருகிப்
    பாய்வதுபோல் அன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்
    மேய செவ்வாயும் உடையார்"

என நம்மனத்தே தோன்ற உரைக்கின்றார்.

இப் பெற்றியரான நாவுக்கரசர், மருதவளம் சிறந்த தில்லையெல்லை பூம்பொழிலும் புனற் பொற்கையும் புள்ளுறையும் சோலைகளும் சூழ்ந்து பொற்புற்று விளங்குகிறது. கானில் களிமயில்கள் ஒன்றுக்கொன்று எதிர் நின்றாட வாவிகளில் மலர்ந்து மணம் கமழும் தாமரைகள் மக்களின் முகம் போல் நின்று அவரை வரவேற்கின்றன.
ஒருபால் வளமிக்க வயல்கள் பரந்து தோன்று கின்றன. அவற்றிடையே மலர்ந்து தேன் சொரிய நிற்கும் தாமரை முதலிய பூக்களில் புதியவற்றைத் தேர்ந்து எருமைகள் மேய்கின்றன. அருகில் மூங்கிற் புதர்கள் நின்று விளங்க, அவற்றோடு ஒப்ப வயல்களில் கரும்பு பெருகிக் காடு போல் செழித்துக் கணுக்களில் முதிரும் முத்துக்களைச் சொரிகின்றன. அது, நாவரசராகிய பெரியவர் திருவடியைக் கண்டு நெஞ்சுருகிக் கண்ணால் நிர்துளிப்பது போல் நின்றது என்பாராய், "இங்குப் பெருகிப் புடை முதிர்தரவம் சொரிவன பெரியோரவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறுபுனல் கண்பொழிவன என முன் புள்ள வயல் எங்கும்” என்று சேக்கிழார் இன்புற்று இயம்புகின்றார்.

மருதவயல். வழிவரும் வாகீசப் பெருந்தகை. நெல் வயல்களைக் கடந்ததும் நந்தவனம் எதிர் நிற்கக் காண்கின்றார். அதனுட் புகுந்ததும், "அறிவிற் பெரியார் அயல் நெல் பனை வயவனை பிற்படும் வகை" அணைகின்றமை கண்ட குயிலினங்கள் இனிது கூவத் தலைப்படுகின்றன. அவற்றின் இன் பொலி,

    "பிறவிப்பவ நெறிவிடுவீர்
    இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம்
    பறிவுற்றிட அணையுமின்”

என்று உரைப்பது போன்றுளது. கிளிகளும் பூவை களும் "அரகர” என இசைக்கின்றன. அதனோடு, அவற்றின் ஒலி,

    தவம் முன்புரிதலில் வருதொண்டு எனும் நிலைதலை நின்று உயர்
    தமிழ் இறையோராம் இவர்தம் திருவடிவதுகண்டு அதிசயம்”

என்று பொருளைத் தருகிறது. முன்னைத் தவத்தால் இப்பிறப்பில் சிவத் தொண்டு புரியும் நிலைமை எய்திற்றென்றும் அதன்கண் நின்று உயர்ந்தனர் நாவுக்கரசர் என்பதும் அதன் கருத்து.

இங்ஙனம் கிளியும் பூவையும் பாடும் நந்தவனம் புகுந்து போந்த வானளாவியுயர்ந்த மதில் சூழ்ந்த தில்லை நகரின் குடதிசை வாயிற்புறம் வந்துற்றார். வருகையறிந்த தில்லையுறையும் தவமுதல்வர்களான அடியார்கள் அவரை எதிர் கொள்ள வாயில் கடந்து வயல் பக்கம் சென்ற வழியூடு சென்று நாவரசை எதிர் தொழுது அணைந்தனர். குடதிசைக் கோயில் வாயிற் புறத்து உள்ளது சிவமே நிலவிய வீதி; அங்கே கல்வித்துறை வல்ல பலரும் மறை முதல் கரை கண்டவரும் வாழும் செல்வக் குடிகள் நிறைந்தது. சிற்றம்பலம் மேய செல்வன் கழல் தொழும் செல்வம் மிக்கன அக்குடிகள் என்பாராய்க் "கழல் பேணும் செல்வக் குடி நிறை நல்வைப்பு' என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார்.

மணிமாலைகளும் மலர்மாலைகளும் நிறைந்த அவ்வீதியில் பல்வேறு புவனங்கட்கு முதல்வரான இமையவர் முடிகள் தாக்குண்டு உதிரும் மணித்துகள் பரவுகிறது; அதனைக் காற்றுக் கடவுள் துடைக்க வருணன் நீர் தெளித்துப் பணிமாற அதனால் தூய்மை போதாமை கண்டு அடியார்கள் அலசி விடுவதும் புனல்விடுவதும் செய்கிறார்.

திருக்கோயிலை அடுத்துள்ள வீதிகளில் வான வெல்லையிற் பறக்கும் கொடிகளால் ஞாயிற்றின் வெயிற் கதிர் நுழைவது அரிது; அந்த அழகுமிக்க திருவீதியை நாவுக்கரசர் முறைப்படி வணங்கி, மறையொலியும் முனிவரின் ஏத்தொலியும் பெருகி நிற்கும் எழுநிலைக் கோபுரம் கண்டு வணங்கி உள்ளே புகுந்தனர்.

கோபுர வாயிலைக் கடந்ததும் உள்ளே கிடப்பது திருமாளிகை வீதி அதனை வலம் வரும் நாவுக்கரசர் உள்ளத்தே அம்பலக் கூத்தன்பால் உண்டாகிய ஆர்வம் அளவிற் பெருக அலமரல் எய்துகிறது. அன்பு கடல் போற் சிறந்து தோன்ற உடலெங்கும் புலம் உண்டாகிறது. அந்நிலையில் பொற்கோபுர வாயிலை அடையும் நாவரசர், சிவபெருமான் நடம்புரியும் பொன்மன்ற எதிர் தோன்றக் காண்கின்றார்.

திருமிக்க அம்மன்றின்கண் ஒலிபெருகி நிறைந்து நினைவு செல்லுகிறது. அதனைச் சென்று கூடற்கு அன்புமிக்கு எழவும், கூடற் கண் தோன்றும் இன்ப நுகர்ச்சிக்கு ஒத்த சத்துவகுணம் மேம்படுகிறது; அவரும் திருநடம் கண்டு ஆராப்பேருவகையுற்றுத் தொழுவாராயினர். இதனைச் சேக்கிழார் பெருமான், ''நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளிநிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரும் நிலை கூட. ஆடுங்கழல் புரி அமுதத்திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார்'' என்று கூறுகின்றார். இதன்கண் திரு என்பது பேராசிரியர் கூறுவது போலக் கண்டார். விரும்பும் - தன்மை . இத்திருவுடன் ஒளியும் பெருகுவது பற்றி நீடும் திருவின் பயன், கண்ட நாவரசின் உள்ளத்தே அன்பு பெருகச் செய்தலால் அங்கே நிறையும் பெருகொளி துக்க மோகங்களைப் பயக்கும் இராசத் தமோகுண இருளைப் போக்கிச் சத்துவகுணத்தை விளங்கச் செய்வது தோன்ற "இன்புறுகுணம் முன்பெறவரும் நிலைகூட'' என்று இயம்புகிறார். இசையும் தாளமும் மெய்ப்பாடும் ஒன்ற நிகழும் ஆடல் பொதுவாக இன்பம் தருவதாகலின், ஆடலரசாகிய சிவபரம் பொருள் அடி எடுத்தாடும் திருக்கூத்து அமுதம் பொழிதலால், "ஆடும் கழல்புரி அமுதத் திருநடம்” என அறிவுறுத்தப்படுகிறது.

ஆதிபந்தமில்லாத அருள் நடனமாதலின் அதன் இன்பத்தை இடையறவின்றிக் கண்டும் நாவுக்கரசர் ஆர்வம் தணியாமை புலப்பட "ஆராவகை தொழுது " ஆர்கின்றார் என்ற பாடுகின்றார்.

இங்ஙனம் பாடி மகிழும் சேக்கிழார் நாவரசர் கூத்தப்பெருமானைக் கண்டு ஆர்வம் பெருக இன்புற்றதை நுணுகி நோக்கி அவருடைய அகமும் புறமுமாகிய கருவி கரணங்களின் செயல்வகை களைத் தனித்தனியாக எடுத்துரைப்பது நாமும் , கண்டு இன்புறத் தக்கதாகும்.

    “கையும் தலைமிசை புனையஞ்சலியன
          கண்ணும் பொழிமழை ஒழியாதே
    பெய்யும் தகையன கரணங்களும் உடன்
          உருகும் பரிவின் பேறெய்தும்
    மெய்யும் தரைமிசைவிழும் முன்பெழுதரும்
          மின்தாழ்சடையொடு நின்றாடும்
    ஐயன் திருநடம் எதிர்கும்பிடும் அவர்
          ஆர்வம் பெருகுதல் அளவின்றால்”

கைகள் தலைமேற் குவிந்துள்ள ; கண்ணில் மழை போல் நீர் ஒழுகுகிறது; இவைகள் புறக்கருவிகள். அகக் கருவிகளான மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்ற கரணங்களும் அன்பால் உருகுகின்றன; இவ்விரு கருவிகட்கும் இடமாகிய நாவுக்கரசரின் மெய்விழுவதும் எழுவதுமாகவுளது. மனமுதலிய கரணங்கள் அன்பால் உருகினாலன்றிக் கைகள் தலைமேலேறி அஞ்சலி கூப்புதலும், கண்ணில் நீர்பொழிவதும் நிகழாவாதலால், கையும் கண்ணும் கூறியவுடன் கரணங்களைக் கூறுகின்றார். கரணம் நான் காதலால், அவை உருகிய வழிப்பெருக்கம் - மிகுதலால், "பெய்யும் தகையன கரணங்களும்” என்று உரைக்கின்றார். உருகுதற்கேது அன்பு என்பார், "உருகும் பரிவின'' என்கின்றார். அகமும் புறமும் ஒன்றப் பெறுவதுடன், ஆடும்பரமன் திருக்கூத்துக் காணும் பேறும் அது வாயிலாக அவன் ஆடும் அம்பலத்தை மெய்யால் அடைந்து. ஆராவகையால் தொழுது வணங்கும் பேறும் ஒழுங்கு எய்துவது பற்றி, "பேறு எய்தும் மெய்'' என்று விளம்புகின்றார். கரணங்கள் உருகும் பரிவின ஆயினமையின், விசைக் கயிறற்ற பாவைபோல அவரது மெய்தானாகவே விழுவதும் எழுவதுமாயிற்று என்பார், "மெய்யும் தரைமிசை. விழுமுன்பு எழுதரும்” என்கின்றார்.

இனி, அம்பலத்தின்கண் ஆடும் பெருமான் திருநடத்தை, "மின் தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம்" என்று இசைக்கின்றார். இருந்தும் கிடந்தும் ஆடல்வகையுண்டு எனினும், அவை பலரும் கண்டு இன்புறற்கு ஆகாமையின், கூத்த பிரான் நின்றாடுகின்றான் என்றும் ஆடுங்கால் அவன் திருமுடியிலுள்ள செஞ்சடை உலகெங்கும் உயிர் தோறும் ஒளிசெய்யுமாற்றால், ஒலியாலும் நிறத் தாலும் ஒரு புடையொக்கும் விண்ணிற்றோன்றும் மின்னலைத் தாழச் செய்தலின், “மின் தாழ் சடை" என்றும் குறிக்கின்றார்.

தாழநின்று ஆடும் ஐயன் திருநடம் பன்முறை வணங்கியெழும் நாவுக்கரசர்க்கு உள்ளத்தே ஆர்வம் பெருகுகிறது; பெருமானுடைய திருமுகக் குறிப்பு | என்று வந்தாய் என்பது போலவும் உளது; இதனால் அவர் மனத்தெழும் ஆர்வம் அளவிறந்து விடுகிறது. அதனால் "அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர் சேக்கிழார். இறைவனது திருமுகத் தருட்குறிப்பு அவரது அருள் நலத்தைக் காட்ட, அதனால் கழிபேரின்பம் எய்தும் வாகீசப் பெருந்தகை,

    "பாளையுடைக் கமுகோங்கிப் பன்மாடம் நெருங்கியெங்கும்
    வாளையுடைப் புனல்வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்
    ஆளவுடைக்கழல் சிற்றம் பலத்தான் ஆடல் கண்டால்
    பீளையுடைக் கண்களால் பிள்ளைப் பேய்த் தொண்டர் காண்பதென்னே”

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும்,

    "கருநட்டகண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
    செருநட்டமும்மதில் எய்ய வல்லானைச் செந்தீமுழங்கத்
    திருநட்டமாடியைத் தில்லைக் கிறையைச் சிற்றம்பலத்துப்
    பெருநட்டமா டியை வானவர்கோன் என்று வாழ்த்துவனே”

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும் பாடுகின்றார்.

இவ்வாறு மனமகிழ்வால் மைந்துற்றுப் பாடிய திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலத்துக்குத் தாம் வந்த காரணத்தை

    ''பத்தனாய்ப் பாடமாட்டேன். பரமனே பரமயோகி
    எத்தினாற்பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
    முத்தனே முதல்வாதில்லை அம்பலத்து ஆடுகின்ற
    அத்தா உன் ஆடல் காண்பான் வந்தவாறே

என்று தொடங்கும் திருநேரிசையைப் பாடலுற்றார். விருத்தத் திருமொழிகள் தமது பத்தி நலத்தைப் பெருகக் காட்டாது சொல் நலத்தையே காட்டு கின்றன என்ற கருத்தாலோ, ஆராமையாலோ, எடுத்த எடுப்பில் "பத்தனாய்ப் பாடமாட்டேன்" என்று ஓதிக் கூத்தப் பெருமானை , நீ எனது பத்தி எல்லைக்கு அப்பால் மேம்பட்டுள்ளாய் என்பார். பரமனே என்றும், யோகியராவார் கருவிகரணங் களின் நீங்கி அறிவை மறைக்கும் மலத்தை வாட்டி அகக் காட்சியில் இன்புறுவாராக, போகங்களில் கலந்து ஒன்றாய் நின்றும் போகக் காட்சியொழியாத யோகம் புரிகின்றவனை என்பார்" பரமயோகி'' என்றும் எடுத்துரைக்கின்றார். ஞானசம்பந்தரும் இதனை வியந்து, "நல்லூர்ப் பெருமணத்தான் நல்லபோகத்தன் யோகத்தையே புரிந்தானே" என்று இயம்புகின்றார்.

பரம் யோகியாகிய உன்பால் பத்தி கொள்வ தாயின், அவ்யோக நெறியே பொருத்தமாயிருக்க, யான் அது செய்யாது திருக்கோயில் திருவலகிடல் மெழுகல் உழவராம் செய்தல் முதலிய எளிய செயல்களையே செய்கின்றேன் யோக ஞான நெறிகளை மேற்கொள்வேனல்லேன் என்றற்கு "எத்தினால் பத்தி செய்தேன்" என்றும், இதுபற்றி என்னை இகழ்ந்து அருளாமை கூடாது என்பார், "என்னை நீ இகழவேண்டா '' என்றும் கூறுகின்றார். முத்திச் செல்வனும் அதற்கு முதல்வனும் அவனாதல் அவற்றையே தமக்கு நல்க வேண்டும் என்பதற்கு முத்தனே முதல்வர் என்றும் இதற்கு அம்பலத்தே ஆடும் ஆடல் காட்சி வாயிலென்பது தோன்ற "தில்லை அம்பலத்து உன் ஆடல் காண்பான் அடிய னேன் வந்தவாறே" என்றும் உரைக்கின்றார்.

இங்ஙனம் பத்தனாய்ப் பாடமாட்டேன் என்றனர். அடுத்த பாட்டில், பத்தி பண்ணற்குரிய கருத்துடைமை தோன்றவும் நான் பாட இயலாதவன் என்பார், "கருத்தனாய்ப் பாடமாட்டேன்" என்றும், அதற்குக் காரணம் நீ ஒருத்தராலும் கருவிகரணங் களைக் கொண்டு அழியும் அறிவுக்கு எட்டாதவன் என்பார் "ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடைய சோதி" என்றும், ஆயினும், நீ எம்போல்வார் அறிதல் வேண்டும் என்ற பேரருளால் தில்லை யம்பலத்துக் கூத்தாடும் பெருமானாக உருவு கொண்டு அருள்புரிகின்றாய் என்பார். "தில்லை தன்னுள்.. சிற்றம்பலத்தே திருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறு” என்றும், அதற்குத் தில்லைப் பதியைத் தேர்ந்து கொண்டதற்குக் காரணம் அதன் திருத்தமுடைமை என்றற்குத் "திருத்தமாம் தில்லை" என்னும் கூறுகின்றார்; வைதிகமும் சைவமும் கை கலந்து களிநடம்புரியும் எல்லையாதல் தோன்றத் திருத்தமாம் தில்லை எனப்பட்டது. எதுகை நோக்கி பெருமானது கூத்து திருத்தம் எனப்பட்டது. காணும் அவாமிகுதியால் நேர்பட வந்தவாறு என்றார்.

யான் வந்த காரணத்தைக் கேட்குமுறையில் என்னை நின்வாய் திறந்து கேட்பாயாகில் என்பார் . "கேட்குமா கேட்டியாகில்" என்றார். என்று வந்தாய் என்று கேட்பது போலப் பெருமானது திருக்குறிப்பு இருந்தமையின், இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. அதற்கு விடை கூறும் நாவுக்கரசர், நினது உமையாள் காண ஆடும் நலமும் அதனிடைச் சுரக்கும் இன்பத்தையும் நான் ஒருவரும் கூறக் கேட்டதில்லை ; ஏனெனில், யான் என் கிளைகளாக இருந்த சமன் சான்றோர் குழலினின்றும் பிரிந்த தில்லை என்பார், "கேட்டிலேன் கிளைபிரிவேன்" என்றும், பின்னர் நின் திருவருள் வாய்த்தமையின், நின் திருவடியை நெஞ்சில் நிலைபெறக் கொண்டேனாக திருக்கூத்துக் காணும் வேட்கை எழுதலால் நான் வந்தேன் என்றற்கு, "நாட்டினேன்... நெஞ்சினுள்ளே. ஆடுமாறு" என்றார்.

ஒன்றைச் செய்யுமிடத்துச் சிறிது நேரம் அதன்கண் ஒன்றி நிற்பதும் இடையீடுபட்ட வழித் திகைத்துப் பிறிதொன்றைப் பற்றிச் செல்வதும் மனத்துக்கு இயல்பு. அவ்வாறின்றி மேற்கொண்ட நின் திருவடிக்குரிய பணியை என் சிந்தை கலக்கறாது செறிவுடன் செய்தற்கு நீ அருகுதுல் வேண்டும் என்று அடுத்த பாட்டில் வேண்டுகின்றனர். செய்தற்குரிய பணிவகை யறியாமல் மயங்குகின்றார். அதனால் "யாது நான் செய்வது என்றும், அதனை அறியத் தமது நிலைமைக்கு இரங்கி என்னே என்றும், நடம்புரியும் இறைவன் திருவடியைக் காண்கின்றார். சிறிது நிற்பினும் கால்வலி காணும் தம்மைப் போல இறைவன் திருவடி இரவும் பகலும் இடையறாது ஆடல்புரிவதால் வருத்துமே என ஐயுற்று, "தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியினை அலசுங் கொல்லோ " என வருந்துகிறார்.

இறைவன் ஆடும் சிற்றம்பலத்தை அடைந்தவர், "இறைவ, உலகவர் ஏத்த நீ ஆடுமாற்றைக் கண்ட வாறே திரிந்து நாளும் நின் திருப்பாதம் கருத்திற் கொண்டிருந்து நின் அருட்குறிப்பின் வழி நின்று ஆடிப்பாடிக் கூடுவேன் என்று கண்டவா. ஆடுமாறே" என்று பாடுகின்றார். எண்டிசையோரும் கண்டு ஒத்த ஆடும் முறையைக் கண்டதனால், அங்ஙனமே அதனை எங்கும் காணத்திரியுமாறு தோன்றக் "கண்டவாதிரிந்து' என்றும், ஆடும் நிறம் கண்ட வாறே கண்ட அப்பொழுதே கரணம் திரிந்து கருத்திடை நின்னைக் கொள்வேனாயினேன் என்றும் குறித்தவாறு.

பார்த்திருந்து வந்தவாறே.

இதன்கண், சிற்றம் பலத்துக் கூத்தா நான் கூட வந்தவாறு உன் கூத்துக் காண்பான் வந்தேன்; அதனால், நான் பார்த்திருந்து பரவுவன்; பாடியும் ஆடியும் உன்னை மூர்த்தியே என்பன்; மூவரில் முதல்வன் என்பன்; நீயும் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்; இனி ஒரு குறையும் இல்லை என்றும் இயம்புகிறார்.

பொய்யினை... வந்தவாறே

பரம, அம்பலத்தே நின் ஆடல் காண்பான் நான் வந்தவாறு இது; வந்து காண்டலால், யான் பொய்தவிர்த்து அகத்தடிமை செய்ய நீ அருளல் வேண்டும்; ஆதிமுதலும், ஆதிமூர்த்தியும் நீயாதலால் உனக்கு இது அருமையன்று; பொய் தவிர்த்தலான்றி மெய்யடிமை யாதல் நில்லாமை பற்றிப் பொய் யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய அருளிச் செய் என்றார். புறமலா அடிமை, அகத் தடிமை; மெய்யடிமை.

மனத்தினால் …. வந்தவாறே

மனத்தே திகைப்புண்டு நாடோறும் மாண்பலா நெறியிற் சென்று மக்கள் இடர்ப்பட்டு ஓலமிடு கின்றனர்; அதுகண்டு கலங்குகின்ற நான் வேறு செயல்வகை அறியேன்; அதனால் நின் இலயம் காண்பான் வந்தேன் என்று இப்பாட்டிற் கூறு கின்றார்.

நெஞ்சினை.. ஆடுமாறே.

என் நெஞ்சைத் தூயதாக்கி நன்னினைவுகளை நினைப்பிக்காமல், வேற்று நினைவுகளால் வேதனையை நான் எய்தச் செய்கின்றாயாதலால், அதனின் நீங்கற்கு அஞ்சொலாள் காண அம்பலத்தே நீ ஆடும் ஆடல் காண்பான் வந்தேன். நினது அருட்கூத்து என் நெஞ்சினை நேர்ப்படுத்தும் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

மண்ணுண்ட... ஆடுமாறே

மண்ணுண்டமாலும் மலர் இருந்த அயனும் விண்ணுண்ட திருவே விரும்பி முயன்றமையின் நின் உருவம் காணமாட்டாராயினர்; திருமிக்க அம்பலத் தின் பண்ணுண்ட்பாடலோடு நீ ஆடும் திறம் காணின் அவர் விரும்பிய அடிமுடியும் காணலாம் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

இவ்வண்ணம் பாடிப் பரவிய நாவுக்கரசர். திருவம்பலத்தின் முற்றத்திலும் பக்கங்களிலும் உழவாரப்பணி செய்து பின் திருவீதியிலும் அதனைச் செய்து மகிழ்வாராயினர். இத் திருப்பணியால் தமக்குத் திருவருளின்பம் எய்துதலால் பெருமகிழ்ச்சி கொள்வது நாவரசரின் நல்லுள்ளம்.

இந்நிலையில் சிற்றம்பலம் அடியார்க்கு வேண்டும் உணவும் உடையும் உறையுளும் தந்து வாழ்விக்கும் சிறப்புடைமை கண்டு வியக்கின்றார். உழவாரப் பணி மேன்மேலும் உலகையே மிகுவிக் கின்றது; கண்ணிர் வெண்ணீற்றைக் கரைத்துக் கொண்டு ஒழுகுகிறது. "பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட'' மகிழ்கின்றார் எனச் சேக்கிழார் உரைக்கின்றார்.

இவ்வாறு பன்னாள் கழிகின்றது. இந்நாளில் ''அன்னம் பாலிக்கும்'' என்று திருக்குறுந் தொகையைப் பாடினார்.

1. அன்னம். பிறவியே
இப்பாட்டில் சிற்றம்பலம் அன்னமும் பொன் னும் பூமிசை பெருக நல்கும்; இதன் காட்சி அன்பு பெருகுவித்தலால், இடையறாது கண்ட இன்புறுதற்கு இப்பிறவி இன்னமும் கிடைக்குமோ.

தில்லை அன்னமும் சிற்றம்பலம் பொன்னும் பாலிக்கும்; அம்பலக் காட்சி அன்பு பெருகுவிக்கும்; இவற்றைப் பெற்று இன்புறும் பிறவி இன்னும் கிடைக்குமா? என்று கூறுகின்றார்.

2. அரும்பற்றப்பட... எம்பிரானையே
இப்பாட்டில், அரும்புகள் விலக்கப்பட நின்ற மலர்கள் கொண்டு, சுரும்பு தாதுண்ட பூக்களை விலக்கிக் காமனைக் காய்ந்தவனான எம்பிரானைத் தூவி வழிபடுவீராக என்று நமக்கு அறிவுறுத்து கின்றார்.

அம்பலம் இருக்கும் கோயில் திருமூலட்டானம் பெரும் பற்றப் புலியூர், அது புலியூர் என்றும் வழங்கும்.

3. அரிச்சுற்ற... உய்ம்மிளே .
இதன் கண் வினையால் அரிப்புண்டு வருந்தும் நீர் எரியிடைப் படுமாறு இறந்துவிட்டனரென்று பலரும் சிரித்து ஒழிக்கா முன் திருச்சிற்றம்பலம் சென்றடைக என்று இயம்புகின்றார்.

4. அல்லல் பூண்டேனுக்கே
சிற்றம்பலர்க்கு எல்லையில்லா அடிமை பூண்டேனாதலால் அல்லலோ அருவினையோ, தொல்லை வினைத்தொத்தமோ ஒன்றும் ஒரு தீங்கும் செய்யாது என்று தெளிவுற்றுக் கூறுகின்றார்.

5. ஊனிலாவி... வைப்பரே
இதன்கண், சிற்றம்பலவனாகிய என் நாதனை என் உடம்பில் உயிர் இருக்குங்காறும் நான் பரவிப் பணிந்து கொண்டிருப்பேன்; அவர் என்னை வானுலகத்தே வாழவும் செய்விப்பர் என்கிறார்.

6. சிட்டர்... காலனே
இப்பாட்டில் சிட்டரும் வானவரும் தொழும் சிற்றம்பலவன் சேவடி கைதொழச் செல்லும்
அச்சிட்டர் பால் காலன் அணுகான் என்கிறார்.

7. ஒருத்தனார் ... அறிவரே
இப்பாட்டின்கண், சிற்றம்பலவனார் உலகுக்கு ஒரு சுடராயினும் ஒருத்தனார், திருத்தனார்; விருத்தனார்; இளையார்; விடமுண்ட அருத்தனார்; அவர் அடியாரை அறிந்த அருள் புரிவதில் தவறார் என்று கூறுகின்றார்.

8. விண்ணில் நீத்தோர்...ஒருவனே
இதன்கண், வெள்ளழலின் உருவாகி இருவர்க்கு அறிவொணாது, அம்பலத்துள் நிறைந்து நின்றாடுவன் ஒருவன் என்று உரைக்கின்றார்.

9. வில்லை. உண்மையே
இதன்கண் வில்லை வட்டமுறை வளைத்து அவுணரது வட்டமான மதில் மூன்றையும் மாய்த்த வனது தில்லை வட்டத்தைத் தொழுவார் வினை அவர் வட்டம் கடந்து ஓடுமென்பது உண்மை என்பர்.

10. நாடி... இருக்கவே.
தில்யம்பலத்தாடி பாதம் என் நெஞ்சுள் இருக்கையில் நாரணனும் நான் முகனும் தேடித் திரிந்து காண வல்லரோ என்று இயம்புகிறார்.

11. மதுரவாய்... உய்ம்மினே
இதன்கண், மங்கை பங்கின்னும் சதுரனுமான அம்பலவன் மலையை ஆர்த்தெடுத்த இராவணன் முடி பத்தும் இறுமாறு மிதித்த சேவடியைச் சென்றடையின் என நம்மைத் தெருட்டுகின்றார்.

இன்னோரன்ன குறுந்தொகைகள் பாடி இன்புற்ற நாவுக்கரசர், தில்லையின் நீங்கி வேட்களம் பணிந்து கழிப்பாலைக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓரிரு நாட்களில் அவர்க்குத் தில்லைப்பதியின் நினைவு வந்துவிட்டது.

தில்லைப்பெருமானே நினைவுக் கெட்டாத நிலையினனாதலால், நினைத்தற்கரியன்; அவனது நினைவு எழுந்ததும் அவரால் கழிப்பாலையில் இருக்க முடியவில்லை. கடலில் வாழினும் கரையை நினைந்து போந்து வளைகள் முத்தின் கொழுந்து களை மனப்படப்பையில் சொரியும் காட்சி கழிப் பாலையில் அவனது அருட்கடலில் திளைக்கினும், அவருள்ளம் தில்லையம்பலத்தை நோக்கிச் சென்று அவனைப்பாடவே விரும்பி அவரை உந்திற்று. இதனைச் சேக்கிழார் "மனைப்படப்பில் கடற் கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை” என்று குறிக்கின்றார்.

கழிப்பாலை ஞாழல் மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்தது; அதனூடு அவர் நுழைந்து வருகையில், எப்பொழுது சென்ற தில்லை காண்பது என்ற வேட்கை மிகுந்து அவரை மருகவே, நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பல வாணனை நினைந்து பனைக்கை மும்மத வேழம் உரித்தனன் என்று தொடங்கும் குறுந்தொகையைப் பாடலா னார். அதனைச் சேக்கிழார், "கழிப்பாலை மருங்கு நீங்கி ,

    நனைச்சினை மென்குளிர் ஞாழல்
          பொழிலூடு வழிக்கொண்டு
          நன்ணும் போதில்
    நினைப்பவர் தம் மனம் கோயில்
          கொண்டருளும் அம்பலத்து
          நிருத்தனாரைத்
    தினைத்தனையாம் பொழுதும் மறந்து
          உய்வனோ எனப்பாடித்
          தில்லை சார்ந்தார்."

என்று உரைக்கின்றார்.

1. பனைக்கை... உய்வனோ
இப்பாட்டில், வேழம் உரித்தவனும், நினைப் பவர் மனத்தில் கோயில் கொள்பவனும், அனைத்துப் பொருளையும் தனக்கு மேனியாகக் கொள்பவனும் ஆகிய அம்பலக் கூத்தனைத் தினையளவு காலமும் மறந்து உயிர் வாழேன் என்கிறார். நினைப்பவர் நெஞ்சில் நினைந்த அப்பொழுதே நேர்படத் தோன்றி நிற்கும் நீர்மையன் என்றற்கு நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்றும், விரைவு பற்றிக் கொள்பவன் என்னாது கொண்டவன் என்றும் கூறுகின்றார். உருவும் அருவுமாகிய எப்பொருளிலும் அப்பெருமான் வீற்றிருப்பது பற்றி அனைத்தும் வேடமாம் என்றும், அப் பெற்றியோன் தமக்குள்ளே இருப்பவும் அவனை நினையாதிருத்தல் உய்தியில் குற்றமாதலால் தினைப் பொழுதும் மறந்து உய்வானோ என்றும் கூறுகின்றார்.

2. தீர்த்தனை உய்வனோ
இதன்கண், கூத்தப்பெருமானைச் சிவன், சிவலோகன், தீர்த்தன், மூர்த்தி, முதலாய் ஒருவன் என்றும், பார்த்தனுக்கருளிய பரமன் என்றும் கூறி அவனைக் கொடியனாய் மறந்து உய்யேன் என்கிறார்.

தீர்த்தன், உயர்ந்தவன்; கங்கையாய தீர்த்தம் உடையவன் என்றுமாம். மூர்த்தங்களுக்-கெல்லாம் முதல்வனாய் ஒருவனாய் நிற்றல் பற்றி முதலாய ஒருவன் என்றும், அடிசேர்வார் உறையும் உலகத்தை யுடையவனாதலால் சிவலோகன் என்றும் செப்பு கின்றார்.

3. கட்டும்... உய்வனோ
இதன்கண், யாரும் விரும்பாத இடுகாட்டில் விரும்பிக் கையில் எரியேந்தி ஆடும் பரமன், சிட்டர் விரும்பும் சிற்றம்பலத்தும் கூத்தாடுவன் என்கிறார். எட்டனைப் பொழுது, எள்ளத்தனைச் சிறுபோது.

4. மாணி... உய்வனோ
இதன்கண், பால் கறந்து ஆட்டிய மாணியாகிய சண்டேசுரர்க்கு உலகமெல்லாம் ஆளும் திருவை நல்கியது குறிக்கின்றார். நீருலகம், நீணுலகம். ஆணி ''உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்றாற் போல.

5. பித்தனை... உய்வனோ
இதன்கண் பெருங்காடு அரங்காக உடையனா யினும் யாவர்க்கும் முத்தியளிக்கும் முதல்வன் என்றற்கு முத்தனை என்றும், யாவர், சித்தத்துள்ளும் சிறக்க இருத்தலால் சித்தன் என்றும், அவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகற்கும் உள்ளதாம் என்றற்கு அத்தன் என்றும் கூறுகிறார்.

6. நீதியை உய்வனோ
இதன்கண் எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமாறு விளங்க நிறைவை என்றும், இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாமை பற்றி ஒருவர்க்கும் அறிவொண் ணான் என்றும், அவன் அருளால் அறியலுறுவார்க்கு அருட்பேர் ஒளியாய்த் தோன்றலின் சோதியை என்றும் கூறுகின்றேர். பொன்னில் வேய்ந்த அம்பல மாதலின் செம்பொன்னின் அம்பலம் என்று குறிக்கப் படுகிறது.

7. மைகொள் .... உய்வனோ
மை, கருமை. பை, படம். செம்பொன் நிறைந்த திருத்தலின் திருமகட்கு இடமாதல் தோன்றச் செய்ய மாதுறை சிற்றம்பலம் என்றும், தலைமை பற்றி ஐயன் என்றும் குறிக்கின்றார்.

8. முழுதும் உய்வனோ
இதன்கண், முன்பெல்லாம் செம்பொன் எனப் பொதுப்படக் கூறினாராகலின், அதன் தனிச் சிறப்புணர்த்த ஈண்டுத் தூய செம்பொன் என்றும், முன்னரே எழுதித் திட்டமிட்டு மேய்ந்தது என்றற்கு எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்றும் கூறுகின்றார்.

9. காருலாம் உய்வனோ
கொன்றை கார்காலத்து மலர்வது பற்றிக் காருலாம் மலர்க் கொன்றை என்கிறார். தேரோடும் திருவீதியையுடைய தில்லையைத் தேருலாவிய தில்லை என்கிறார். வாயால் உண்ணப்படாது உணர்வால் சுவைக்கப்படுதலின் ஆர்கிலா அமுது என்றார்.

10. ஓங்கும்... உய்வனோ
இங்கே, தொண்டல்லது வேறு துணை யில்லாமை பற்றிப் பாங்கிலாத் தொண்டனேன் என்றார்.

இவ்வாறு பாடிக் கொண்டே நடந்து தில்லையை அடைந்த நாவுக்கரசர், சிற்றம்பலத்தை நெருங்கியதும், அரியானை என்று தொடங்கும் தாண்டகத்தைப் பாடலுற்றார். தாண்டகப் பாவினும் சிறியவும் பெரியவும் என இருவகையுண்டு. அவற்றைப் பிறரெல்லாம் குறுந்தாண்டகம் நெடுந் தாண்டகம் என்பர். நாவரசர் பாடியவை நெடுந் தாண்டகமாகவும், சேக்கிழார் பெரிய திருத் தாண்டகம் என்று குறித்து, அதனை அடியார்கள் எப்போதும் ஓதியோதிச் சிந்தைக்கண் நீங்காதவாறு பாடுவர் என்ற கருத்துப் புலப்பட "அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்" என்று குறிக்கின்றார். செந்தமிழ் என்றதனால், இத் தாண்டகம் அரிய செஞ்சொற்களே கொண்ட மைந்தது என்பது பெற்றாம்.

    அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை
          யருமறையி னகத்தானை யணுவை யார்க்குத்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
          திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
          கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப்புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண், அரியவற்றுள் எல்லாம் அரிய பொருளாதலின் பரம்பொருளை அரியானை என்றும், அந்தணர் சிந்தையுள் அகலாமை பற்றி ''அந்தணர்தம் சிந்தை யானை'' என்றும், அவர்தம் அகத்துறையும் மறைநூற்பொருளில் உள்ளீடாக இருத்தலால் அருமறையின் அகத்தானை என்றும், அகத்தேயும் அணுவுக்கணுவாய் எழுந்தருளுதலால் அணுவை என்றும் கூறுகின்றார். தத்துவப் புலவர் பலரும் சிவதத்துவத்துக்கு அப்பாற் சென்றில் ராகலின், அதற்கப்பாலாய் உள்ள பரசிவ நிலையை எண்ணி "யார்க்கும் தெரியாத தத்துவளை'' என்றார். தத்துவம் கடந்து நோக்கும் யோகக் காட்சியில் காண்பார்க்குத் தேனும் பாலுமாய் இனிமை செய்தலின் தேனைப் பாலை என்றும், அவ்விடத்தும் ஒளி வடிவிற்றோன்றுதலின் திகழ் ஒளியை என்றும் ஓதுகின்றார்.

இதுகாறும் அகக்காட்சி கூறிய நாவுக்கரசர், புறக்காட்சிக்கு ஐம்பெரும் பூதமாயும் அவற்றை இயக்கும் திருமால் முதலிய தேவர்களாயும் அவர் கட்குப் பெரிய தலைவனாயும் இருத்தலால் பெரிய யானை என்றும், இப் பெற்றியுடைய பெருமானைப் பிறந்த நாள் முற்றும் பேசிப் பேசிக் கழிக்க வேண்டியிருத்தலால் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்றும் பேசுகின்றார்.

    2. கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
          காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கு மலந்தார்க்கு அருள்செய் வானை
          யாரூரும் புகுவானை யறிந்தோ மன்றே
    மற்றாருந்தன்னொப்பா ரில்லா தானை
          வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் கற்றோர்க்கு வரம்பாய் அறிவின்பம் நல்கிக் கல்லார் நெஞ்சில் நில்லாமையின், சிவனைக் கற்றானை என்றார். பேரருளாளனாதலின் அற்றார்க் கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை என்றும், தனிமுதலாதல் விளங்க மற்றோரும் தன்னொப்பார் இல்லாதானை என்றும், செய்வினையின்றி வினைப் போகமே நுகரும் இயல்பால் வானவர் மறுத்தற்குரிய ராயினும், அவர் தாமும் மறவாது தாமும் வணங்கி வழிபடப் பெறுதலின் வானவர்கள் எப்பொழுதம் வணங்கியேத்தப் பெற்றானை என்றும் கூறினார்.

    கருமானி னுரியதளே யுடையா வீக்கிக்
          கனைகழல்கள் கலந்தொலிப்ப வனல்கை யேந்தி
    வருமானத் திரடோள்கண் மட்டித் தாட
          வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண் முகத்தா ளமர்ந்து காண
          வமரர்கணம் முடிவணங்க வாடுஇன்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் மான் தோல் உடையாக , காலில் கனைகழல் ஒலிப்ப, உமையவள் அமர்ந்து காண அமரர் வணங்க இறைவன் அம்பலத்தே ஆடும் நலம் சிறப்பிக்கப்படுகிறது. மட்டித்தல், மடங்குதல்.

    அருந்தவர்க டொழுதேத்து மப்பன் றன்னை
          யமரர்கடம் பெருமானை யானை மூவா
    மருந்தமரர் கருள்புரிந்த மைந்தன் றன்னை
          மறிகடலுங் குவரையும் மண்ணும் விண்ணுந்
    திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுத்
          திரிசுடர்க ளோரிரண்டும் பிறவு மாய
    பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்ல பாம் பிறவா நாளே

இதன்கண், உமைபொடு கூடியிருந்தே யோக மூர்த்தியாய் விளங்குதலின் அருந்தவர்கள் தொழு தேத்தும் அப்பன் தன்னை என்றார். கருவி கரணங் களின் யோகமின்றித் தவமின்மையின் யோகியரை அருந்தவர் என்றார். அருந்தவரை நெறிகாட்டி யோகக் சால்புடைய ராக்குதலால் அப்பன் என்றார். அப்பன், தந்தை சான்றோனாக்குவன் தந்தை

பூதங்கள் தோறும் நிற்றல் அவர்க்கும் பெருந் தகைமையாதலால் பிறவுமாய பெருந்தகை என்றார்.

    அருந்துணையை யடியார்த மல்லல் தீர்க்கு
          மருமருந்தை யகன்ஞானத் தகத்துட் டோன்றி
    வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
          வான்புலன்க ளகத்தடக்கி மடவா ரோடும்
    பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
          பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
    பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

அடியார்தம் அருந்துணை; என முன்னும் கூட்டுக. அடியார்க்கு அறிவருளி நெறிகாட்டி உய்க்கும் செயலால் சிவனை அருந்துணையென்றார். அல்லல் பிறவி நோயுமாம்.

ஞானமாய மருந்தருளிப் பிறவி நோயை நீக்குதலால் அருமருந்தென்றார். சுற்றத் தொடர் பறுத்து இருவகைப் பற்றம் அற்று, புலன்களை அடக்கி, பெண் போகத்தை மாற்றிப் பொது நீக்கிடும் இறைவனது நிலை எல்லோர்க்கும் பெருந்துணை புரிவது இதன்கண் கூறப்படுகிறது.

    கரும்பமரு மொழிமடவாள் பங்கன் றன்னைக்
          கனவயிரக் குன்றனைய காட்சி யானை
    அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
          யருமறையோ டாறங்க மாயி னானைச்
    சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
          சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
    பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் வானம் மண் முதலிய துளங்கினும் துளங்காவியல்பினதாதலின் துளக்கில்லா விளக் கென்றார்.

    வரும்பயனை யெழுநரம்பி னோசை யானை
          வரைசிலையா வானவர்கண் முயன்ற வாளி
    அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
          வம்மானை யலைகடனஞ் சயின்றான் றன்னைச்
    கரும்பமருங் குழல்மடவார் கடைக்க ணோக்கிற்
          றுளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
    பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன் கண் துறந்தோர் இயல்பு கூறி அவர் கட்குப் பெரும்பயன் நல்கும் திறம் கூறப்படுகிறது.

    காரானை யீருரிவைப் போர்வை யானைக்
          காமரு பூங் கச்சியே கம்பன்றன்னை
    ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
          யமரர்களுக் கறிவரிய வளவிலானைப்
    பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
          பயில்கின்ற பரஞ்சுடரைப் பானை யெண்ணில்
    பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் அடியவர் எத்திறத்தாராயினும் அவர்க்கு அணியனாய் அருளுவதும், அமுதுண்டு செய்வினையின்றி வாழும் தேவர் அறிவுக்கு அளக்க வொண்ணாமையும், பாரும் விண்ணும் பரவ நட்டம் புரிவதும் கூறப்படுகின்றன. இறைவனுடைய குணஞ் செயல்கள் எண்ணிறந்தன வாகலின் அவன் எண்ணில் பேரான் எனப்படுகின்றான்.

    முற்றாத பால்மதியஞ் சூடி னானை
          மூவுலகுத் தானாய முதல்வன் றன்னைச்
    செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
          திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
    குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
          கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நானே.

இதன்கண், மூவுலகும் அவனே என்றும், அவ்வாறு தன்னைப் பிறர் ஆக்காது தானே ஆயதன்மை விளங்க மூவுலகம் தானாய் முதல்வன் என்றும் கூறுகின்றார். முருகனிடம் ஞானம் பெற்ற குறிப்புத் தோன்ற ஞானம் பெற்றானை என்கிறார் போலும்.

    காரொனிய திருமேனிச் செங்கண் மாலுங்
          கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணஞ்
    சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
          திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
    ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு
          மேழுலுகுங் கடந்தண்டத் தப்பா னின்ற
    பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
          பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

நிறம் கார்முகில்போற் கரிதாயினும் ஒளி யுடைமை பற்றிக் காரொளிய திருமேனிச் செங்கண் மால் என்றார். செங்கண், இயல்பாகவே சிவந் திருப்பது என்பர் பரிமேலழகர். சிந்திப்பவர்க்குச் சிந்தனைக்கண் தோன்றும் மயக்கங்களை ஞானத் தால் தெளிவித்து ஒளிபெறுவிப்பது பற்றிச் சிவனைச் சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றார். 'அண்டமார் இருளுடுகடந்து உம்பர் உண்டு போலும்" ஒண்சுடராகலின், அப்பால் நின்ற பேரொளியை என்றார்.

தாண்டகம் பாடித் தமிழால் வழிபட்டு வரும் நாளில், செஞ்சடைக்கற்றை எனத் தொடங்கும் திருநேரிசையைப் பாடி அப்பதிகத்தில் சிற்றம் பலத்தே அருள் திகழத் துளங்கெரியாடுதலால், நஞ்சுடைக் கண்டனாரைக் கண்ணாரக் காணலாம் என்று கூறுகின்றார்.

அப்பதிகத்துள் , தில்லையை , மஞ்சடை சோலைத் தில்லை (1) ; நாறு பூஞ்சோலைத் தில்லை (அ); கடிகொள் பூந்தில்லை (3); செய்யெரிதில்லை (4); காரிடம் தில்லை (6); மதர்த்து வண்டறையும் சோலைமல்குதில்லை (7); சிறைகொள் நீர்த்தில்லை (8); நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந் தோய்த்தில்லை (11) என்று சிறப்பிக்கின்றார்.

இவ்வாறு கூத்தப் பெருமானை இடையறவின்றி வாய் மலர்ந்து பாட நெஞ்சு அன்பு சூழ்ந்து உருக, கண்ணிலே நீர் நிறைந்து சொரிய திருக்கை உழவாரப்பணி செய்யத் திருநாவுக்கரசர் தில்லையில் பன்னாள் தங்கிச் சீர்காழியில் சம்பந்தர் தோன்றி ஞானசம்பந்தரானது கேள்வியுற்று அவரைக் காணச் சென்றார். சென்றவர் வேறுபல பதிகட்குச் சென்று முடிவில் திருப்புகலூரில் சிவன் சேவடி அடைந்தார். மீட்டும் அவர் தில்லைக்கு வந்த குறிப்பு வரலாற்றில் இல்லை.
-------------

7. தில்லையில் சுந்தரர்


திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பின் நம்பி ஆரூரர் சுற்றத் தொடர்பு அகன்று, திருத்துறையூர் திருவதிகை முதலிய பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைப்பதியின் எல்லையை அணுகி னார். அப்பொழுது அவர் செவியில் தில்லை நகரில் எழும் பல்வேறு ஒலிகள் கேட்டன. அவற்றை யாழொலி, முழவொலி, வேதவொலி, கீதவொலி எனப் பிரித்துணர்ந்து உரைக்கும் சேக்கிழார், ''நரம்புடையா ழொலிமுழவின் நாதவொலி வேத வொலி, அரம்பையர்தம் கீத ஒலி அறாத்தில்லை" என்று தெரிவிக்கின்றார். தில்லைப்பதியின் எல்லையை "மல்லலம் பதியின் எல்லை" என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார். மல்லல், வளமை.

தில்லை மருத நிலத்தூராதலின், சுற்றிலுமுள்ள வயல்கள் நீர் நிறைந்துள்ளன ; அதன்கண் கயல் மீன்கள் வாழ்கின்றன; அவற்றைப் புள்ளினங்கள் மேய்வான் இருப்பனவற்றால் நீர் அலம்பித் திரையெழுப்புகிறது. அதனிடையே வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்றன; மலங்குகள் வேறு மல்கி யுள்ளன.

மலங்குகளை நினைவார்க்கு உயிர்களைப் பற்றி வருத்தும் மலங்கள் நினைவிலெழுதலின், அவற்றை அறக்கெடுக்கும் நலம் தில்லையம்பதிக்கு உண்டு என்று தெளிவுறுத்தற்குத் 'தொழுவார்கள் தம் மும்மை மாமலங்கள் அறவீடருள் தில்லை" என்று கூறுகின்றார்.

நிற்க, தில்லை எல்லைக்குட் புக்க ஆரூரர், எதிரே தோன்று நந்தன வனங்களைக் காணுகின்றார். கருத்தில் மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வனத்தில் வன்னி, கொன்றை, வாழை, சண்பகம் ஆரம் (சந்தனம்) பலாசம், செருந்தி, மந்தாரம், கன்னி காரம் (கோங்கு) புன்னை முதலிய மரங்கள் நின்று மலர்ந்து அழகு செய்கின்றன. அவை தில்லைப் பெருமானுக்கு மலர் வழங்கி மாண்புறுத்தலால் அவற்றையும் ஆரூரர் பணிந்து செல்கிறார். மணம் கமழும் மலர்மாலை பால் மாவிருப்புடையாரதலால், கற்பு, முல்லை, கூவிளம், வில்வம், மாலதி, மல்லிகை, கரவீரம், அலரி முதலிய அம்பலர்க்கு மணமலர் வழங்கும் மரங்கட்கு வணக்கம் செய்கின்றார் என்பது தோன்ற மணம் கமழ்தாரான் என்று ஆரூரரைக் குறிக்கின்றார்.

நந்தவனத்தை அடுத்து நகரைச் சூழ்ந்து கிடக்கும் அகழி காட்சி தருகிறது. அது பெருங்கடல் போந்து வலங் கொள்வது போலவுளது. கடல் வளம் கொளற்குக் காரணம் யாது? உலகுக்கெல்லாம் தனிநாயகியான உமையம்மை கண்டு மகிழவும், புவனங்களெல்லாம் உய்தி பெறவும், பெருமான் ஆடல் புரிகின்றான்; நான்மறைகளும் ஆடும் சேவடியலப்பும் சிலம்பின் ஒலியைப் பேணிப் பரவு கின்றன; ஆகவே, நாமும் வலம் வந்து வணங்குவோம் என்று கருத்தால் வலம் கொள்கிறது என்பாராய், "இடமருங்குதனிநாயகி.. புடை சூழும்” என்று உரைக் கின்றார்.

கிடங்கில் கரையெடுத்து வானளாவி உயர்ந்த மதில் நிற்கிறது. உயர்ச்சி பற்றி முகிலினம் அதன் உச்சியிற் படிந்து தவழ்கிறது.

மதிலும் கிடங்கும் தரும் இனிய காட்சி ஆரூரரின் தமிழ் உள்ளத்தில் அளவிறந்த அன்பு பெருகு விக்கிறது. மகிழ்ச்சி மிகுகின்றார்.

அகழியின்கண் தாமரைகள் மலர்ந்து விளங்கு கின்றன; அவற்றின் தாது படிந்துண்ட வண்டினம் கரையில் நின்று மலரும் கைதையிற் படிந்து மேனி வெளிதாகிப் பூத்தோறும் சென்று சென்று பாடு கின்றன. வண்டின் காட்சி சிவனடியார்களின் செயலை உள்ளுறுத்து நிற்பது சேக்கிழார்க்குத் தெரிகிறது. தாமரை மலர் செல்வமனையாகவும், அதன்கண் உறைந்த வண்டினம் செல்வத் தொண்டர் களாகவும் கைதைப் பொடி கலந்து வெண்ணிறம் பெற்றது வெண்ணீற்றில் மூழ்கிய திறமும் பூத்தொறும் வண்டு சென்று முரல்வது அத்தொண்டர் பரவும் தூய செயலாகவும் தோன்றி நம் அறிவைப் பணி கொள்கிறது.

நகர்ப்புறத்தே தோன்றும் காட்சிகள் பல இருக்க, கமல வண்டு தாதும் காட்சி எடுத்தோதப் பட்டதற்குக் காரணம், அம்பலத்தாடும் இறையருள் தேனாகவும் அதனையுண்டு பாடும் நான்மறையாளர் வண்டாகவும் தோன்றுவதே என்பார், "மன்றுளாடுமது... மருங்கே" என்றார்.

புறக் காட்சி அகத்தே நிகழும் அருணிலையை நினைப்பித்தலால், ஆரூரர் சிந்தையில் அன்பு பெருகிக் குழைந்து வடக்கு வாயிலை அடைகின்றார். வாயில்கள் நான்கும் நாற்றிசையை விளக்க , கொடிகளிற் கட்டிய மணி நாவொலி மறைமுழக்கம் போன்று ஒலிக்க நான் முகந்தோறும் மறையோதும் நான்முகன் போல்வது கண்டு அயன் பொன்.
வாயில்கள்" என்று உரைக்கின்றார்.

வடதிருவாயிலை எய்தியதும் அவரைத் தில்லை வாழ் அடியார்கள் வணங்கி எதிர் கொண்டனர்; சுந்தரரும் அவர்களை வணங்கி மகிழ்ந்தார். இவ்விரு திறத்தாருள் தொண்டர் முன் வணங்கினரா? ஆரூரர் வணங்கினரா? என்றோர் ஐயம் இங்கே எழும்; அதனை நீக்கக் கருதிய சேக்கிழார், ''அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியாமுறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்தனர்" என்று உரைக்கின்றார்.

பின்பு நம்பி ஆரூரர் வாயிலின் அகத்தே அகன்று கிடக்கும் திருவீதி (பிராகாரம்) புகுந்தார். அங்கே எம்மருங்கும் முழக்கமே பெருத்திருந்தது; அவை மறையொளியும், வானதுந்துபி முதலிய முழக்கொலியும், பூமாலைகளில் மொய்க்கும் வண்டொலியும், தொண்டர் போற்றிசைக்கும் ஒலியும் எனப் பலவாம். வானத்து இந்திரன் உறையும் பொன்கோயில் போலும் மாளிகைகள் வானளாவி நிற்க, அவற்றின் உச்சியில் கட்டப்பட்ட கொடிகள் ஒலிக்கின்றன. யோக சிந்தையரான வேதியர்கள் வளர்க்கும் ஓமப்புகை சென்று வானத்தில் படிந்த கருமுகில் போல் பரவுகின்றன; அவற்றிடையே தோன்றும் மாளிகைக் கொடிகள் மின்னல் அடங்குவன போல் விளங்குகின்றன. ''மாளிகைக் கொடிகள் ...... விளங்கும்'' என்று சேக்கிழார் கூறுகின்றார்.

மாளிகையின் மேலிடத்தேயுள்ள நாசிகளில் தோகை மயில்கள் நிற்கின்றன; ஆகுதி செய்யும் வேள்விச் சாலைகளில் அரசிக்கட்டையின் தீச்சுடர் எழுகிறது; வாயில்கள் தோறும் மணித்தாமங்கள் தொங்ககின்றன; மேடைகளில் எல்லாம் கலசங்கள் இருந்து காட்சிதருகின்றன; நேர் வரிசைகளில் செவ்விய ஒளி தோன்றுகிறது; சாலைகள் தோறும் செந்நெல்குவை மலைபோல் நிற்கின்றன; பந்தர் தோறும் தண்ணிய புனல் தரப்படுகிறது; நெடிய இடைவெளிகளில் தேவர்களும் சிறந்து திகழ்கின்றனர்.

உலகில் அழகுடையவென எத்தனையோ பொருள்களும் இடங்களும் கூறப்படுகின்றன. உலகு களும் எத்தனையோ பல உள்ளன. அவ்வழகுகள் அனைத்தும் ஒருங்கே திரண்டு மண்ணில் தில்லைப் பதியகத்தை வந்தடைந்தது போலும் அழகு மலிந் துளது. அவற்றிடையே தூய அன்பர்கள் போற்றிப் பரவும் பொன்னம்பலம் நடுவில் இருக்கிறது; அதனைச் சுற்றி ஓர் அழகிய வீதியுண்டு. நம்பி ஆரூரர் அதனை அடைந்ததும் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்கினார். பின்பு அதனை வலம் வந்து திருவாயிலை அடைந்தார்.

எதிரே சிற்றம்பலம் தெரியக்கண்டதும், அதன் கண் கூத்தப்பிரானது ஆடற்கோலம் கட்புலனாக, அவருடைய கைகள் தாமே குவிந்தன. திருக்கூத்தால்
வயகம் வாழ்கிறது ; மறைகளில் ஞானவொலியை எழுப்பும் சிலம்பு ஒலிக்க அறிவு வெளியில் ஆடும் பெருமானை அறிவால் காண்கின்றார். ஆன்மவறிவு வழி நிற்கும் கண்கள் ஆடும் பெருமான் திருவடியில் திளைக்கின்றன; மனமுதலிய அந்தக் கரணங்கள் அக்காட்சியில் கலந்துவிடுகின்றன. ஆன்மவட்டத்தில் ஊறிப் பெருகும் மெய்யன்பு மிக்கெழுந்து உந்துதலால், அம்பலத்தை அடைதற்குரிய களிற்றின் முகவடிவில் அமைந்த படியே அடைந்து நம்பி யாரூரர் வணங்கி எழுகின்றார்.

அந்நிலையில் அவருடைய உடலும் கருவி கரணங்களும் தம்மில் ஒடுங்கி ஒன்றுகின்றன. உடற்கண் கண் அமைந்த கண் காது முதலிய பொறிவழியியங்கும் அறிவு ஏனையவற்றை விடுத்து நீங்கிக் கண் ஒன்றே இடமாக நிற்கிறது; அதற்கு உடலாக இருக்கும் அந்தக் கரணங்களில் மனம் அலங்காரம் புத்தி முதலியன தம்மில் கரைந்து சித்தம் ஒன்றேயாய்க் கண்வழி இயங்கும் ஆன்ம அறிவாற் காணப்பட்ட கூத்தப்பிரான் திருவுருவைச் சித்தம் சிந்திப்பதில் தோய்ந்து நிற்கிறது. கரணங்களின் இயக்கம் சத்துவம் முதலிய குணநிலைக்கேற்பத் தெளிவும் கலக்கமும் மயக்கமும் பெறுதலால், சிந்தனையில் தெளிவு நிலவுமாறு, தாமசம் இராசதம் என்ற இரண்டின் இயக்கத்தை ஒடுக்கிச் சத்துவ மொன்றே நிலைபெறுகிறது. ஆகவே, சத்துவ விளக்கத்தில் தெளிந்த சிந்தனை வழியாக ஆன்ம அறிவு கண் வழிப்புறத்தே சென்று அம்பலத்தாடியின் அருமைத் திருவுருவைப் பற்றியதும், பேரின்பம் அவ்வறிவின் கண் ஊறிப் பெருகுகிறது ; இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கின்றார் ஆரூரர், இதனைச் சேக்கிழாரடிகள், "ஐந்து பேரறிவும் மலர்ந்தார்" என்று எடுத்துரைக்கின்றார்.

கண் காது முதலிய அறிகருவிகள் ஐந்தாகலின் அவற்றின் வழியாக அருவமும் உருவமுமாகிய உலகம் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியப் படுதலால் "ஐந்து பேரறிவு' என்றும், அப்பேரறிவு கண்ணிடமே ஒன்றி நிற்குமாறு விளக்க, கண்களே கொள்ள என்றும் கூறுகின்றார்.

பொறிவழியாகப் பரந்து இயங்கும் அறிவை ஒருமுகப்படுத்துவதும், ஒருமுகமாக நிற்பதைப் பலதலையாகப் பிரிப்பதும் அந்தக் காரணமாகலின், அதனைப் பின்னர்க் கூறுகின்றார். அவை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என நான்கு நிலைத்தாய்ப் படி முறையில் அமைந்தன. மனத்தை அடுத்துச் சித்தமும் அதனையடுத்து அகங்காரமும் அதன் மேல் புத்தியும் நிற்கும். மனம் பற்றிய பொருளைச் சிந்திப்பது சித்தம்; சிந்தித்தவற்றைக் கொள்வது அகங்காரம் ; உறுதி செய்வது புத்தி. மனம் ஒரு பொருளைப் பற்றச் சித்தம் சிந்தித்தலைச் செய்யப் புத்தி தெளிந்து நிச்சயிக்கும். இவை நான்கும் தமக்குரிய செயற்பாடின்றிக் கூத்தப் பெருமானது கூத்தினைக் கண்டு சிந்தையே யாய் நால்வகையாய் விரிந்து கழியும் மனோசாத்தி அவ்வாறாகாது சிந்தையிலே தேக்கிச் செயல்படுவது காட்ட, சிந்தையேயாக என்று கூறுகிறார்.

இங்கே கூறிய வாயிற் காட்சி, மானதக் காட்சி என்ற இரண்டையும் தொழிற்படச் செய்வது குணதத்துவம். சத்துவம் தாமதம் இராசதம் என்று மூன்றாகி முறையே தெளிவு கலக்கம் மயக்கம் என்று மூன்று நிலையைக் கருவிகட்கு உண்டாக்கும். குணப்பகுதி மூன்றாகிக் கணந்தோறும் மாறும் செயலாதாகலின் அச்செயலெல்லாம் ஒடுங்கித் தெளிவு நிலை ஒன்றையே நிலவுவித்து மனமும் பொறியும் திருக்கூத்தில் தோய்விக்குமாறு விளங்க, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக என்றார்.

கலக்கமோ மயக்கமோ இன்றி உள்ளதன் உண்மையை உள்ளவாறு கண்டு சிந்தித்துத் தெளிவு பெறுவிக்கும் கருவியாதல் பற்றித் திருந்து சாத்துவிகம் என்றார்.
இங்ஙனம் குணமும் கரணமும் பொறியும் ஆகிய மூன்றும் ஒன்றி ஒருமுகப்பட்டு நோக்குமிடத்து கூத்தப் பெருமானது அருட் கூத்து நோக்கும் அறிவின்கண் இன்பம் சுரத்தலால் ஆனந்தக் கூத்து என்றும், அவ்வாடலும் முடிவின்றியும் வேறு ஒப்புக் காண்டற்கின்றியும் பெருமையுற்றுப் பிறங்கிடுவது பற்றி எல்லையில் தனிப் பெருங்கூத்து என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கரணமும் கருவியும் ஒன்றிக் காணக்காணச் சிவானந்தம் உவட்டெடுத்துப் பெருக அதன்கண் திளைத்து மகிழ்ந்து உளம் உருகி உடல் பூரித்த ஆரூரை, "மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்" என்றார். உலகியல் மகிழ்ச்சியில் மலர்ந்தார்க்கு மறுகணத்தே நெகிழ்ச்சியும் சோர்வு முண்டாதலால் சிவபோகமகிழ்ச்சி மாறிலா மகிழ்ச்சி எனப்பட்டது.

இவ்வண்ணம் மகிழ்ச்சியால் மலர்ந்த ஆரூரர், சிவபரம் பொருளின் அருட்கூத்துக் காணும் பேரின்பத்தில் திளைத்த தமது மெய்யறிவு கைவரப் பெற்றுத் தாம் கண்டு துய்த்து மகிழ்ந்த திருக்கூத்தின் சிவபோகத்தின் நலம் பாராட்டலுற்று, "தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று கண்களில் நீர் சொரியக் கைகள் தலைமேற்குவிய, வாய் இனிய பண் கலந்து பாடப் பரவினர்; பின்பு மெய்யாற் பணிந்தார். திருநடம் கும்பிடும் பேறு எய்தியதால் மண்ணில் கிடைத்த பிறவி தனக்குத் தூயதும் இன்பமுமாம் என்கிறார். மண்ணில் பிறவி தூயதன்று என்னும் கொள்கை பற்றி.

பணிந்து எழுந்தக்கால், "ஆரூரில் நம் பால்வருக" என்றொரு சொல் வானில் பிறந்தது. கேட்டதும் ஆரூரர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு இறைவனைத் தொழுது அம்பலத்தை வலங்கொண்டு வெளிப் போந்து எழுநிலை கோபுரம் கடந்தார். அக்கோபுரம், வானுலகம் பணிய உயர்ந்த பொன்மலை போலக் காட்சியளித்தது. மேனி நிலத்திற் படிய விழுந்து வணங்கினவர் திருவீதியைப் பணிந்து தெற்குத் திருவாயில் வழியாகச் சென்று தில்லையின் எல்லையை இறைஞ்சிக் கொள்ளிட நதிக்கரை அடைந்தார்.

நாடெங்குமுள்ள சிவன் கோயில்கட்குச் சென்று வழிபாடாற்றிவரும் நம்பியாரூரர், திருமுது குன்றத்தே இறைவன் தந்து பொன் பெற்று அத் திருவாரூர்க் குளத்திற் பெறுவேன் என முதுகுன்றத் தருகிலோடும் மணிமுத்தாற்றிற் பெய்துவிட்டுத் தில்லை நோக்கி வருவாராயினர். வழியில் கடம்பூர் பரவிக் கொண்டு தில்லையை அடைந்த ஆரூரர், திரு வீதியைத் தாழ்ந்து வணங்கிப் "புள்ளிய வினைவாய் ஓங்கும்" திருவாயிலை நண்ணி அதன் முன்னர்த் தமது திருமார்பு பொருந்த மண்மேல் வீழ்ந்து வணங்கினார். வணங்கி எழுந்தவர், திருமாளிகைப் பத்தியைச் சுற்றி வந்து, கையாற் தொழுது கும்பிட்டு, சிற்றம்பலத்தின் முன்னிற்கும் கோபுரத்தின் ஊடே சென்று பொன்னம்பலத்தை அடைந்தார். உள்ளத்தே ஊறிய இன்பம் பெருக்கெடுத் தொளிர, கண்களில் நீர் சொரிய நின்றார்.

அன்பு மேலும் மேலும் பெருகுதலால் வாய் குளறி நிலத்தில் படிய வீழ்ந்து பணிந்து, இறைவன் திருக்கூத்தின் கண் உள்ள விருப்பத்தால் திண்மை யெய்தவே வஞ்சமிலாரைக் கண்டவிடத்து எய்துவது போலும் மனநிறைவு கொண்டார். அன்பால் பரவும் உள்ளத்துக்கு உரம் மிகுவிப்பது பற்றி இறைவன் திருக்கூத்தை, "வேட்கை உரனுறுதி திருக்கூத்து" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இங்ஙனம் மனநிறைவெய்தியதும் நம்பி ஆரூர் அம்பலத்தானைப் பாடத் தொடங்கியதும். பேரூரில் அவனைக் கண்ட நிலை நினைவெய்தவும் அந்நினை வோடே பாடுவாராயினர்.

1. புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றமாகலின், தருமன் தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்.

மடித்தாடும் அடிமைக்கண் அன்றி - மேன் மேலும் ஆசைகளில் வீழ்ந்து ஐம்புலங்கட்கு அடிமை யாய் வருந்துவதின்றி வாழ்நாள் முழுதும் தருமனார் தமர் கைப்பட்டுத் துன்புறாமல் தடுத்தாட் கொள்வான்.

2. காமத்தில் பேராது சென்றாற் போலன்றி - விரும்பிய போகப் பொருளில் மீளாது சென்று வீழ்ந்தாற் போலன்றி - போலாது)

இடையறா நினைவால் அன்பராய்ச் சென்று அடிவீழும் திருவினாரை நமன்தமர் ஓராது செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்.

3. நரியார்தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து - நரியின் கள்ளத்தால் ஒன்றியிருந்த எருதுகள் பிரிந்து தனித்து மடியுந்தன்மை நீங்கி, திரியாத அன்பராய்ச் சென்று அடி வீழும். சிந்தையான நமன்தமர் வருத்தும் போது தடுத்தாட் கொள்வான்.

4. நமன்தமர் நம்மைக் கட்டியகட்டு அறுப்பிப் பான் ; அருமையான தனது சிவலோகத்தைத் தருவான்; ஆதலால் சிற்றம்பலத்துப் பெருமானை நமக்கு உரியனாகப் பெற்றாம்.

பல்லவர்க்குத் திறைகொடாமன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் வாழும் புலியூர்ச் சிற்றம்பலம் என்க.

5. கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் தருவான்; நமன்தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்; ஆகையால் பெருமானைப் பெற்றாம்.

6. உள்ளமே, என்னை உய்த்து ஆடித் திரியாதே; ஊன் கண்ணோட்டம் ஒழி.
ஊனுடம்பின் நிலையாமை கண்டு இரங்கி அதனை நிலையுமாறு பண்ணும் நினைவு செயல் களில் ஈடுபடுதலை யொழிக.

7. மூவாயிரவர்க்கு மூர்த்தி யென்னப்பட்ட வனும் பத்திபாவிப்பார் பாவமும் வினையும் கெடுத்த வனும் இராவணனை அடர்த்தவனுமாகிய புலியூர்ப் பெருமானைத் தலைவனாகப் பெற்றாம்.

8. கல்குழையுமாறன்றி மெல்லக் கருதக்கூடிய வர்க்கு எற்றாலும் குறைவில்லை-யென்பர்; புலியூர்ப் பெருமாளைத் தலைவனாகப் பெற்றமையால் அவன் நம்மைத் தடுத்தாட் கொள்வான்.

கல்கனியக் குழைதல் மிக்க அன்புடையார்க்கே அமையும்; நமக்கு ஆகாதுதான்; ஆயினும் நாம் கருது மளவில் கருதினால் அதுவே போதும்; எத்துணைச் சிறிதாயினும் குறைவில்லை என்று சிவஞானச் செல்வர் கூறுவர்; அது பற்றிக் கவலற்க.

9. இறைவன் நாடுடைய நாதன்; அவன்பால், மனமே, நீ நன்று என்றும் செய்வாயாக; தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். பெரு மானைப் பெற்றாமாதலால்.

தாடுடைய தருமன், தாவடியிட்டுச் செல்லு தலையுடைய நமன். ஒரு தாவடிதாட்டு எனப்படும். தாட்டு தாடு என வந்தது. தாடு, வலிமையுமாம்.

10. பெருமானைச் சிற்றம்பலத்தே காணப் பெற்றாமாகலின் தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான்.

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் - ஆரூரருக்குத் தலைவனாகிய திருவாரூர் இறைவன்.
# # #

காஞ்சிவாய்ப் போரூரில் நம்பியாரூர் கண்ட காட்சியின் இயல்பைச் சேக்கிழார் இனிது எடுத்து உரைக்கின்றார்.

ஆருரர் திருப்பாண்டிக் கொடுமுடி வணங்கி நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிப் பரவிக் கொண்டு காஞ்சிவாய்ப் பேரூரை அடைகின்றார்.

அவர் வரவு அறிந்த பேரூர் வாழும் மெய்த்தவர் பலரும் சூழ்வரத் திருக்கோயிலுட்புகுந்த நம்பிகள், தில்லைமன்றுள் சிவபரம்பொருள் நின்றாடும் நீடிய கோலம் கண்டார். கைகள் தலையில் குவிந்தன; கண்கள் உவகைக் கண்ணீரைச் சொரிந்தன.

கைதொழுத ஆரூரர் தரைமிசை வீழ்ந்து எழுந்திருக்கவும், உள்ளத்தே கரைகடந்து பெருகிய அன்பு அவரது என்பினையுருக்கிற்று; அவரது மெய்யுணர்வின் ஒரு வகை உயரிய இன்பம் பொங்கி எழுந்தது.

உணர்வின்கண் எழும் இன்பம் யாவும் ஐம்புலன்களால் அறியப் பிறக்கம் இயன்பின; ஆனால், மெய்யுணர்வில் ஊறும் மேதக்க இன்பம் அவ்வாறு பொறிபுலன்களால் அளந்தறியப்படாமை பற்றி, "பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம்" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இந்த இன்பப் பெருக்கம், கூத்தப் பெருமான் புரியும் ஆனந்தக் கூத்திடைத் தோன்றுதலால், அதனைக் காணும் பேறு ஆரூரர்க்கு அரிதிற் கிடைத் தமை விளங்க "தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தலின்" என்றார்.

அக்காலையில் ஆரூரர் சிவனடியார்க்குரிய கோலமே பூண்டிருந்தாராகலின் அவரைச் "சைவ ஆண்டகை" என்றார்.

இங்ஙனம், இறைவனது அருட்கூத்தைக் கண்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கிய ஆரூரர் எய்திய உவகைகையைத் தமது புலமையாற் காணலுற்ற சேக்கிழார் அது மனமொழிகளின் எல்லை கடந்து நிற்கும் பெருமையை வியந்து, "அந்நிலைமை விளைவையார் அளவற்றிதுரைப்பார்" என்று ஆர்வம் பெருகியுரைக்கின்றார். அந்நிலையில் ஆரூரர், வாய்மலர்ந்து.
-------------------

8. கயிலையும் அரசும்

வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் வடக்கில் இமயத்திற்கும் தொடர்புண்டு. இமயத் தாபதர் தென்குமரி போந்து நீராடுவதும், தென்னகத் துறவியரும் வேந்தரும் வடவிமயம் சென்று கங்கை நீராடுவதும் மரபாக இருந்து வந்துள்ளன. தென் தமிழ் வேந்தர் வடவிமயத்தில் தங்கள் புலி வில் கெண்டை முத்திரைகளைப் பொறிப்பது சிறப்புடைச் செயலாக மேற்கொண்டு வந்தனர்.

பின்பு சமய வாழ்வு உலகியல் வாழ்விற் சிறப்பிடம் பெற்றது. அரசியல் பொருளியல் முதலிய வாழ்வியல்களைக் கைதுறந்து சமயம் கூறம் புராண வரலாறுகட்குத் தலைமையிடம் தந்து பயில்வது முறையாகக் கொண்டனர். சமயஞானிகள் வடவிமயத்தினின்றும் தென் குமரி நோக்கிப் படர்ந்து தமது சமயவுண்மைகளையும் வரலாறுகளையும் மக்களிடையே பரப்பினர். அவ்வாறே தென்னாட்டுச் சமய வாழ்வினர் வடபுலநோக்கிச் சென்று ஆங்கு வழங்கிய சமய தத்துவ சாத்திரங்களைப் பயின்றனர். வைதிக சமயங்களாகிய சைவ வைணவங்களே யன்றிச் சயின் புத்த சமயங்களும் தழைத்து ஓங்கிய போது, வடபுலம் தென்புலம் என்ற வேற்றுமை யின்றிச் சமயவுண்மைகள் நமது பாரத நாடு முழுதும் பரவி நின்றன. எண்ணிறந்த சமய நோக்குடைய புராணங்கள் பெருகின. விண்ணுலகும் மண்ணுலகும் புராண வுலகில் சமவாழ்வு நடத்தின. விண்ணவர் மண்ணவரோடும் மண்ணவர் விண்ணவரோடும் தம்மிற் கலந்து உறவாடினர். முனிவர்களும் தேவர் களும் விஞ்சையர்களும் எனப் பல்வேறு இனத்தவர் பாரத நாட்டுப் பண்பமைந்த மக்களாகக் கலந்து வாழ்ந்தனர். புராணங்கள் நாட்டிய பெளராணிக சமயவாழ்வில், சிவன் திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், தேவ லோகத்தவராயினும் நமது பாரத நாட்டில் ஆங்காங்கு இடம் கொண்டு வாழ்ந்தனர். சிவன்கயிலையிலும், திருமால் கடலிலும் பிரமன் தாமரைப் பூவிலும், இந்திரன் கிழக்கிலும் இருந்தனர். சிறப்புடைய நகரங்களில் சிவன் முதலிய கடவுளரைத் திருமால் முதலிய தேவர்கள் தவம் கிடந்து வழிபட்டு வரம் பெற்ற வரலாறுகளைத் தலபுராணங்கள் விரிவாகப் பேசுகின்றன. அயைாவும் வடமொழிப் புராணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வேண்டுவோர் அவற்றைத் தங்கள் தங்கள் மொழியில் பெயர்த்து எழுதிக் கொண்டனர். பெருங்காடு களிலும் மலைகளிலும் பெரிய பெரிய ஆற்றல் வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்தனர். அவர்களும் தேவர்களைப் போலச் சிவன் முதலிய தேவதேவர்கள் வாழிடங்களுக்கு வந்து அவர்களை வழிபட்டுச் செல்வர். நாடாளும் வேந்தர்களும் தேவதேவர்களோடு முனிவர்களையும் இருடிகளையும் முறை யாக வழிபட்டு வரம் பெற்றுச் சென்றனர்.

இங்ஙனம் தேவ தேவர்களையும் முனிவர் களையும் பிறஞானச் செல்வர்களையும் அவர்கள் உறையும் இடங்கட்குச் சென்று வழிபட்டு வருவ தென்பது உயரிய கடமையாக உருவாயிற்று. சமய வொழுக்கம் உரைக்கும் நூல்கள், இதனைச் ''சரியாசாரம்" என்று வகுத்து உரைப்பனவாயின. வைதிக சமயத்தவர்க்கே யன்றிப் பவுத்த சயின் சமயத்தவரும் இந்தச் சரியாசாரத்தை மேற் கொண்டனர். அவர்களிடையே போதிசத்துவர் இருந்த கயையும், வர்த்தமான வீரருக்குரிய பாடலியும் மேன்மையுற்றன. இவ்வாறே சைவரும் வைணவரும் சிறப்புடையதலங்கள் பலவற்றிற்குச் சென்று தேவதேவனாகிய சிவனையும் திருமாலையும் வழிபடும் சமயவொழுக்கத்தைக் கைக்கொண்டனர்.

இதனை இவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொண்டனர் என்பதற்கில்லை. ஒருவர்க் கொருவர் முன் பின் என்று சொல்ல முடியாதவாறு சமய புராண வரலாறுகள் பின்னிப் பிணங்கிக் கிடக்கின்றன. அகத்தியர் தென்னாடு வந்ததும் தருமபாலன் நாலந்தா சென்றதும், குமரிலபட்டர் வடநாடு புகுந்ததும், திருமூலர் தென் தமிழ்நாடு
வந்ததும், காரைக்காலம்மையார் வடகயிலை நோக்கிச் சென்றதும் பௌராணிகவுலகில் காலத் தொடு படாது கலந்து வந்த வழக்காறுகளாகும்.

அவ்வகையில் 1300 ஆண்டுகட்கு முன் பல்லவராட்சி புகழ் பரந்து பொலிந்து விளங்கிய காலத்தில் திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் சிவ பெருமான் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடிச் செந்தமிழ்ச் சைவத் தொண்டு ஆற்றிவந்தார். அக்காலத்தே சீர்காழியில் தோன்றிச் சிவனருளால் உமையம்மை தந்த சிவஞானப்பாலையுண்டு திருஞானசம்பந்தர் நாவுக்கரசர் போலவே திருக்கோயில் சென்று திருப்பதியம் ஓதும் திருப்பணி செய்தார். இருவரும் செந்தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்து இனிய சைவப்பணி புரிந்து வருகையில் திருநாவுக்கரசர்க்கு வடவியமத்தில் சிவனுறையும் திருக்கயிலை சென்று காண வேண்டுமென்ற வேட்கையுண்டாயிற்று. காரைக்காலம்மையார் கயிலை சென்ற வரலாறு அவர் கருத்தை உருக்கிற்றுப் போலும். காளத்தி சென்று கண்ணுதற் பெருமானை வழிபட்ட நாவுக்கரசர் கயிலை நோக்கிச் செல்வாராயினர். சிவபெருமான் "பேணுதிருக்கயிலை-மலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார், கலைவாய் மைக்காவலனார்'' என்று சேக்கிழார் தெரிவித் திருக்கின்றார்.

கயிலைகாணச் செல்வார்க்கு இக்காலத்துள்ள வாய்ப்புக்களும் உடை உணவு வகைகளும் 1300 ஆண்டுகட்கு முன் இல்லை . ஆயினும் நாவுக்கரசர், கயிலை காணும் காதலே ஊக்கமும் உறுதியும் வாய்ப்புமாகக் கொண்டு கயிலை நோக்கிச் செல்லலானார். காதலும் ஊக்கமும் பிறவும் கருத் தளவில் துணை செய்தன; அவற்றை உள்ளே தாங்கிச் செல்லும் நாவரசரின் முதுமை சான்ற நல்லுடல் செலவு ஆற்றும் வலியுடையதாக இல்லை . அதுவும் தேய்ந்து கெட்டது.

    "மார்பமும் தசை நைந்து ந்தி
          வரிந்த என்பு முரிந்திட
    நேர்வரும் குறிநின்ற சிந்தையின்
          நேசம் ஈனைநேடும் நீடு
    ஆர்வம் அங்கு உயிர்கொண்டு உகைக்கும்
          உடம்பு அடங்கவும் ஊன் கெடச்
    சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு
          சென்றனர் செம்மையோர்"

என்று சேக்கிழார் நமக்கு அறிவிக்கின்றார்.

இங்கே தருமயாதீனத் தலைவர் கயிலைக்கு முனிவர்கள் திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமி களுடன் கயிலைக்குச் சென்று அதனடியில் நின்று எழுந்த நிழற்படம் மனக்கண்ணில் காட்சி தருகிறது. எங்கும் பனிபரந்து தண்ணென் காற்று வீச, அச்சூழ்நிலைக்கமைந்த உடையுடுத்து அவர்கள் கயிலையைக் காண்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. அன்று திருநாவுக்கரசர், இன்று தவம் பெருகு கயிலைக்குருமணியும் தம்பிரான் சுவாமிகளும் சென்று காண்பது போலக் காணும் திறம் இல்லாமை நினைக்கும் போது நெஞ்சு வருந்துகிறது. இன்றைய பெருமக்கட்கு முன்னோடியாய்க் கயிலை நோக்கிச் சென்ற நாவுக்கரசரைச் சேக்கிழார் பெருமான் "கலை வாய்மைக் காவலனார்'' என்று பாராட்டி யுரைக்கின்றார்.

உடல் தேய்ந்து புரண்டு செல்வதன்றி வேறு போக்கிலா நிலையில் நாவுக்கரசர் வருந்துங்கால் வேதியர் ஒருவர் தோன்றி,

    "கயிலைமால் வரையாது காசினி மருங்கு
    பயிலும் மானுடைப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ
    அயில் கொள் வேற்படை அமரரும் அணுகுதற்கரிதால்”

என்று சொல்லி, “மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன்'' என வற்புறுத்தினார். உடல் உறுப்புக்கள் தேய்ந்து குறையினும் உள்ளமும் ஊக்கமும் ஒரு சிறிதும் குறையாத நாவுக்கரசர்,

    "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
    மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்”

எனத் தமது மனக்கோளைத் திண்மையுடன் எடுத்தியம்பினார். சிறிது போதில் விண்ணில் ஒரு குரல் எழுந்து, "ஓங்கு நாவினுக்கு அரசனே, எழுந்திரு” எனப் பணித்தது. நாவரசரும் மறாது பணிந்த வுள்ளத்தராய்,

    "விண்ணிலே மறைந்து அருள்புரிவேதநாயகனே
    கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம்
    நண்ணி நான் தொழ நயந்தருள்புரிக"

என வேண்டினார். "கயிலையில் இருந்த அம் முறைமை, பழுதில் சீர்த் திருவையாற்றிற் காண்க என இறைவன் ஆணையிட்டருளினார். அங்கே தடம்புனல் ஒன்று நாவரசர் கண்முன் தோன்றிற்று. அதன்கண் மூழ்கிய அவர் திருவையாற்றில் ஒருமலர்ப் பொய்கையிற் கரையேறினார்.

கரைக்கண் திருவையாற்றில் அவர் காண்பன் அனைத்தும் தத்தம் துணையுடன் காட்சி தருவது கண்டார். அதனைச் சேக்கிழார், "அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன, புடையமர்ந்ததும் துணையொடும் பொலிவன கண்டார்" எனப் புகழ்கின்றார். காண்பன பலவும் துணையொடும் பொலிதற்குக் காரணம் யாதென நினைக்கும் உள்ளத்துக்கு,

    "பொன்மலைக் கொடியுடன் அமர் வெள்ளியம்பொருப்பின்
    தன்மையாம்படி. சத்தியும் சிவமும் ஆம் சரிமைப்
    பன்மையோனிகள் யாவையும் பயில்வன்"

எனவுரைத்து ஆசிரியர் பெருமான் ஐயம் அறுக்கின்றார்.

திருவையாற்றுத் திருக்கோயில் நாவுக்கரசர்க்குத் திருக்கயிலையாய்த் தோற்றமளித்தது. தேவரும் மாதவரும் கயிலையிலுள்ளவாறே காட்சி தந்து இன்புறுத்தினர். உமாதேவி-யுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் காண்கின்றார். இதனை,

    "வெள்ளிவெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
    தெள்ளுபேரொளிப் பவள் வெற்பென் இடப்பாகம்
    கொள்ளும் மாமலையாளுடன் கூடவீற்றிருந்த
    வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்”

என வரலாறு கூறுகிறது.


கண்ட நாவரசர் அன்புருவாகிச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் திருப்பாதங்களும் தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன பலவும் சிவமும் சத்தியமாய்க் காட்சி தருவதை வியந்தவர்,

    "மாதர் பிறைக் கண்ணியானை
    மலையான் மகளொடும்பாடிப்
    போதொடு நீர் சுமந்து ஏத்திப்
    புகுவார் அவர்பின் புகுவேன்"

என்று கயிலையாய்க் காட்சிதரும் திருக்கோயிலுள் புகுகின்றதைப் பாடுகின்றார். அவர் புகும் போது அவர்க்கு முன்னே பலரும் பூவும் நீரும் சுமந்து சிவனை உமா தேவியொடும் பிணைத்துப் பேரன் புடன் பாடிக் கொண்டே செல்கிறார்கள். பிறைக் கண்ணி சூடிய பெருமானை உமாதேவியுடன் சேர்த்துப் பலரும் பாடிச் செல்கின்றார்கள். அவர் பின்பு யான் கோயிற்குள் புகுகின்றேன் என்பது நாவரசரின் உள்ளத்து நிறைந்து வழியும் சிவப் பேரின்பத்தையே இனிது தெரிவிக்கின்றது ஒருபால் "மலையடியில் களிறுகள் பிடியொடு வருது தெரிகிறது. ' இவ்வாறே கோழிபெடை-யொடு கூடிக் குளிர்ந்து வருவதும், வரிக்குயில்கள் பெடையொடு ஆடி வைகி வருவதும், பேடைகள் மயிற் சேவலொடும் கூடி வருவதும் பிறவும் காணக் காண நாவரசர்க்கு இன்பம் மிக்குப் பொலிகின்றது. அன்பு அளவு கடந்து பெருகுகிறது. அதனை உணர்ந்து

    "அளவுபடாததோர் அன்போடு
    ஐயாறடைகின்றபோது
    இளமணநாகு தழுவி ஏறுவருவன கண்டேன்
    கண்டேன் அவர் திருப்பாதம்
    கண்டறியாதன கண்டேன்”

என்று பாடுகின்றார்.

பாட்டுத் தோறும் உயிர்கள் பலவும் ஆணும் பெண்ணுமாய்க் கூடி மகிழ்ந்து வரக் கண்ட நாவுக்கரசர், அதுவே இறைவன் திருவடிக்காட்சி என்பாராய், "கண்டேன் அவர் திருப்பாதம்” என வுரைக்கின்றார். உலகுயிர்கள் ஆணும் பெண்ணுமாய் அன்பும் இன்பமும் உற்றுக் கூடிக் குலவித் தோன்றும் காட்சி சிவமும் சத்தியும் கலந்த சிவயோகக் காட்சி என்ற உண்மையைப் புலப்படுத்துவது காண்கின்றார்.

அக்காட்சியில் உளதாகும் பயன், காணப்படும் உலகினும் கண்டறிந்தோர் உரைத்த நூல்களினும் காணப்படாத நள்ளரிய சிவானந்த ஞான மாதல் புலப்பட, "கண்டறியாதன கண்டேன்'' எனக் கனிந்துரைக்கின்றார். காணாதன காட்டலும், கேளா தன கேட்பித்தலும் திருவடிக்காட்சியின் விளைவு என்பதைச் சான்றோர்களின் திருப்பாடல்கள் தெளிவாக வுரைத்தலின், நாவரசர் கயிலைக் காட்சியில் வைத்துக்

    "கண்டேன் அவர் திருப்பாதம்;
    கண்டறியாதன கண்டேன் "

எனக் கட்டுரைக்கின்றார்.

கயிலையை நினைந்து பாடும் திருநேரிகையில், அப்ப மூர்த்திகள், இராவணனது அறியாமையையும் அவனைச் சிவபெருமான் திருத்திய அருளுடைமை யையும் நினைந்து பரவுகின்றார். ஒருபால் இராவணன் கண் சிவந்து கயிலையை எடுப்பதும் உமைதேவி அஞ்சுவதும் நாவரசர் நினைக்கின்றார்.

    "கருத்தனாய்க் கண் சிவந்து
    கயிலைநன் மலையைக் கையால்
    எருத்தனாய் எடுத்தவாறே
    ஏந்திழை அஞ்ச"

என்று பாடுகின்றார். உடனே, அத்துணை ஆற்றலும் ஆர்வமும் உடையனாதலால் அரக்கனாயினும் திருந்துதற்குரியன் எனச் சிவன் திருவுள்ளம் கொண்டு நின்றான்; அதனை நாவுக்கரசர், நன்குணர்ந்து, "திருத்தனாய் நின்ற தேவன்" என்றும், திருத்தி உய்வித்த சிறப்புத் தோன்றச் சிவன் "திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்" என்றும் உரைக்கின்றார். திருவருள் நலத்தை "வருத்துவான் ஊன்றினானேல் மறித்து நோக்கு இல்லையன்றே” என்று சிறப்பிக்கின்றார்.

இவ்வாறே திருக்கயிலாயத் திருத்தாண்டகம் அடிதோறும் சிவஞானக் கருவூலமாகத் திகழ்கிறது.

    "சில்லுருவாய்ச் சென்று திண்டாய் போற்றி
          தேவர் அறியாத தேவே போற்றி
    புல்லுயிர்க்கும் பூட்சியுணர்த்தாய் போற்றி
          போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
    பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
          பற்றி உலகை விடாதாய் போற்றி
    கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
          கயிலைமலை யானே போற்றி போற்றி"

என்ற திருத்தாண்டகம் எத்துணை ஆழமிக்க அரிய ஞானக் கருவறையாய் விளங்குகிறது காண்மின்.
------------------

9. நம்பியாண்டார் நம்பியும், ஞானசம்பந்தரும்

இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னே நம் தமிழ் நாட்டில் தோன்றித் தமிழும் சைவமும் உய்யத் திருநெறித் தமிழோதி நம்மை உய்வித்த பெருமக்களான சமய குரவர் நால்வர் பாலும் பேரன்பும் அதனால் அவர்பால் பேரீடுபாடு முற்று அவர்களை வியந்து பல தமிழ் நூல்கள் எழுதிய சான்றோர் பலராவர். அவருள் நம்பியாண் டார் நம்பிகள் தொன்மையும் முதன்மையு முடைய வராவர். இவர் தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ஞான சம்பந்தரையும் நாவரசரையும் நம்பியா-ரூரரையும் வியந்து பாடியுள்ளார். இன்னும், பதினோராந் திருமுறையில் ஞானசம்பந்தரையும் நாவரசரையும் இவர் புகழ்ந்து பாடிய நூல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளே திருவந்தாதி நீங்கலாக ஏனையவை ஞான சம்பந்தருக்கும் நாவரசுக்கும் உரியனவாய் இருத்தலை நோக்கின் . இவ்விரு பெருமக்கள் பாலும் நம்பிகட்குப் பெரு மதிப்பும் பேரீடுபாடும் உண்டென்பது புலப்படுகிறது.

நம்பியாண்டார் நம்பிகள் இற்றைக்குத் தொள்ளாயிரமாண்டுகட்கு முன்பே. சோழநாட்டுத் திருநாரையிலே ஆதிசைவர் குடியிலே பிறந்தவர். இதனை "நாரையூரினில் ஆதிசைவமறையோன்பால், வையமெலா மீடேறச் சைவம் வாழ மாமணிபோல்” பிறந்தருளினாரெனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த இராசராச சோழன் காலத்தே இருந்தவர். அவன் மூவர் முதலிகள் வழங்கியருளிய சைவத் திருமுறைகளைப் பெறுதற்குத் துணை செய்தவர். முதலேழு திருமுறைக்கும் நம்பியாண்டார் நம்பிகளே திருவருள் துணையாகக் கொண்டு இசை வகுத்தா ரென்றும் கூறுவர்.

நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் முதலியன விளங்கத் தெரிந்தில். இவர் இளமையில் லேயே திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றுப் பொல்லாப்பிள்ளையார் மேல் பாடிய திருவிரட்டை மணிமாலையும் தொகுக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன் திருமுன்பே திருமுறை தொகுக்கப்பெற்றதென்பது. "நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்ந்திறைஞ்சச் சித்தி தரும் இறை மொழிந்த திருமுகப்பாசுரமுதலா, உய்த்த பதிகங்களையுமொரு முறையாச் செய்க எனப் பத்திதருந் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்'' என்ற திருமுறை கண்டபுராணத் திருவிருத்தத்தால் அறிகின்றோம்.

நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்று அவர்பால் கலைத்துறை பலவும் கற்றுப் புகழ் நிறுவிய பின்பு இராசராசன் வேண்டுகோட்கிசைந்து பிள்ளையார் அருளால் திருமுறை கண்டனர். அதன் பயனாக அவர் நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளாக, உணர்ந்தவற்றைத் திருத் தொண்டர் திருவந்தாதியாகத் தொடுத்துப் பாடி யருளினார்.

நம்பியாண்டார் நம்பிகள் இராசராசன் பொருட்டுத் திருமுறை கண்டதும் பண் வகுத்தது மாகிய செயல்கள் செய்ததோடு திருச்சிற்றம்பல முடையான் பேரில் திருவிருத்தமும், ஞானசம்பந்தர் நாவரசர் என்ற இருவர் பேரிலும் பல நூல்களும் செய்துள்ளார். இது முன்பும் கூறப்பட்டது. இவர் இயற்றியனவாகப் பதினோராந் திருமுறையில், பத்து நூல்கள் காணப்படுகின்றன. அவற்றுள், பொல்லாப் பிள்ளையாரைத் திருவிரட்டைமணி மாலையாலும், திருச்சிற்றம்பலமுடையானைக் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தாலும், திருத்தொண்டர்களைத் திருவந்தாதியாலும், திருநாவுக்கரசரைத் திருவேகாதச மாலையாலும் அவர் பாராட்டிப் பரவியிருக் கின்றார். எஞ்சி நிற்கும் ஆறு நூல்களும் ஞானசம்பந் தரைப் பாராட்டிப் பரவுவனவேயாகும். திருவந்தாதியிற் காணப்படாத திருவாதவூரை, கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்.

    "வருவா சகத்தினில் முற்றுணர்ந்தோன் வண்டில்லை மன்னாத்
    திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
    பொருளார் தரு திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத்
    தெருளாத வுள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பரே”

என்று பாராட்டியுள்ளார்.

இவ்வாற்றால் நோக்கின், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரர் ஆகிய நால்வரையும் நம்பியாண்டார் நம்பி பாராட்டி யிருப்பது தெளிவாகும். ஆயினும், ஞானசம்பந்தரை மட்டில் ஆறு தமிழ் நூல்களாற் சிறப்பித்துப் பரவி யிருப்பது, அவர்பால் இந்நம்பிகட்கு இருந்த தனி மதிப்புப் பெரிதென்பது துணியப் படும்.

இவையாறும் ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத் தொகை யென்பனவாகும். இவையாவும் ஞான சம்பந்தர் வரலாறு, அவர் செய்த அருட்செயல், அருளிய திருப்பதிகம், பிறந்த சீர்காழிப்பதியின் சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றன. இவற்றுள்ளும் ஆளுடைய பிள்ளையார் திருத் தொகையில் வரலாற்று நிகழ்ச்சி முற்றும் கூறப்படுகின்றன. ஏனையவற்றுள், சிற்சிலவே சிறப்பிக்கப் படும், திருமும்மணிக்கோவைக்கண் ஞான சம்பந் தரின் செயல்வகை சிலவற்றை யழகுறக் கூறுவர்.

    அரிசினக் கடகரி யதுபட வுரித்த
    படர்சடைக் கடவுள் தன் திருவரு எதனால்
    பிறந்தது, கழுமல் மென்னும் கடிநக ரதுவே;
    வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
    பூங்குழல் மாதிடு போனக முண்டே;
    பெற்றது, குழகனைப் பாடிக் கோலக்காப் புக்கு
    அழகுடைச் செம்பொற் றாள் மவையே;
    தீர்த்தது, தாதமல் மருகல் சடையனைப் பாடிப்
    பேதுறு பெண்ணின் கணவனை விடமே;
    அடைத்தது, அரைசோ டிசையா வணிமறைக் காட்டுக்
    குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே;
    ஏறிற்று, அத்தியமாவும் தவிர அறத்துறை
    முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே;
    பாடிற்று, அருமறை யோத்தூர் ஆண்பனை யதனைப்
    பெருநிற மெய்தும் பெண்பனை யாவே;
    கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
    ஆவடு துறையில் பொன்னா யிரமே;
    கண்டது , உறியொடு பீலி யொருகையிற் கொள்ளும்
    பறிதலைச் சமணர் பல்கழு மிசையே;
    நீத்தது, அவிழ்ச்சுவை யேயறிந் தரனடி பரவும்
    தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே;
    நினைந்தது, அள்ளல் பழனக் கொள்ளம் பூதூர்
    இக்கரை ஒடம் அக்கரைச் செலவே; மிக்கவர்
    ஊனசம்பந்தம் அறுத்து உயக் கொள்ள வல்ல
    ஞானசம்பந்தன் இஞ் ஞாலத் திடையே,

ஞானசம்பந்தரின் செயல்களுட் சிற்சிலவற்றைத் திருவந்தாதியில்,

    "அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினை, யன்று
    உடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை; உரகவிடம்
    துடைத்தது; தோணிபுரத்துக் கிறைவன் சுடரொளிவாய்ப்
    படைத்தது தண்மையை நள்ளாற்றரசு பணித்திடவே."

என்றும், திருக்கலம்பகத்தில்,

    "பண்டமுது செய்தது உமை நங்கையருள் மேவு சிவ ஞானம்;
    பைந்தருள் நன்சிவிகை செம்பொன் அணி நீடுகிற தாளம்,
    கொண்டது....."

என்றும் ஓதுகின்றார்.

இவற்றுள் சில செய்திகளையே நம்பியாண்டார் நம்பிகள் பல விடங்களில் பல படியாகப் பாராட்டு கின்றார். இவற்றுள் முன்னணியில் நிற்பது சம்பந்தர் ஞானப்பால் உண்டதாகும். இதனை மட்டில் ஐந்தாறு இடங்களில் பாராட்டிப் பேசுகின்றார். ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையின்கண் ஞானமுண்ட திறத்தை இனிமையுற விரித்துக் கூறலுற்று,

    "பூவார் திருநுதல்மேல் பொற்கட்டி இட்டொளிரக்
    கோவாக் குதலை சிலம்பாற்ற - ஓவாது
    அழுவான் பசித்தான் என்று ஆங்கு இறைவன் காட்டத்
    தொழுவான். துயர் தீர்க்கும் தோகை - வழுவாமே
    முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
    செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
    அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
    திரளாகி முன் நின்ற செம்மல்.”

என்று பாடுகின்றார்.

உலக வாழ்வில் ஈடுபட்டு இன்ப துன்பங்களால் மலம் நீங்குதற்குரிய பக்குவமுற்று இறைவன் திருவருட்பேற்றுக்கு இலக்காவது உயிர்த்தொகை கட்கு இயல்பு. அவ்வாறின்றி, நம் சம்பந்தப்பெருமான் குழவிப் பருவத்திலேயே ஞானம் கைவரப்பெற்றது மிக மிக அரிய செயலாகும். அவ்வருமையால், பெரியாரும் அரியருமாய் விளங்கும் அவரது பெருந் தகைமை அறிந்து வழிபடுவதும் அரிதாக இருக்க, எனக்கு அது எளிதாக வந்துவிட்டது என்று மகிழ்ச்சி சிறக்கும் நம்பிகள், திருவந்தாதியில்.

    "எளிவந்தவா எழில் பூவரை கொண்மணித் தார் அழுங்கத்
    துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் - அரன்துணையாம்
    கிளிவந்த சொல்லி பொற்கிண்ணத்தில் ஞானவாமிர்தளித்த
    அளிவந்த பூங்குஞ்சி இன்சொல் சிறுக்கன்றன் ஆரருளே”

என்றும், திருச்சண்பை விருத்தத்தில்

    "கொங்கு தங்குங்குஞ்சி கூடாப்பருவத்துக் குன்றவில்லி
    பங்கு தங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்
    பொங்குவங்கப் புனல் சேர்த்த புதுமணற் புன்னையின் கீழ்ச்
    சங்கு தங்கும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே"

என்றும் பாராட்டி யுரைக்கின்றார்.

பட்டினத்தடிகள், ஞானசம்பந்தப் பெருமானது இச்செயலையே வியந்து, தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக்கோவையில்,

    "தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
    தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
    அன்னாயோ என்று அழைப்ப முன் நின்று
    ஞான போகத் தருளட்டிக் குழைத்த
    ஆனாத் திரளை யவன்வயின் அருள்,
    அந்தணன் முனிந்து தந்தார் யார் என
    அவனைக் காட்டுவன், அப்ப, வானார்
    தோடுடைய செவியன் என்றும்
    இடுடைய பெம்மான் என்றும்
    கையிற் சுட்டிக்காட்ட
    ஐய நீ வெளிப்பட்டருளினை யாங்கே”

என்று உரைக்கின்றார்.

இவ்வண்ணமே சம்பந்தர் கோலக்காவில் தாளம் பெற்ற செய்தியைப் பாராட்டி-யுரைப்பவர். அவர் திருவாயால் பாட்டிசைப்பக் கையால் தாளம் போடுவது கண்ட பரமன், அவர் கைநொந்திடு மென்று பொற்றாளம் தந்தார் என்று கூறுகின்றார். நம்பியாரூரர், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கும் உலகவர்முன் தாளமீந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்" என்று அருளியிருப்பது நாம் அனைவரும் தெரிந்த செய்தி, இவர் கூறுவதைக் காண்மின்:

    "கண்ணார் திருநுதலான் கோலக்காவிற் கரநொடியால்
    பண்ணார் தரப்பாடு சண்பையர்கோன் பாணி நொந்திடுமென்று
    எண்ணார் எழுத்தஞ்சும் இட்ட பொற்றாளங்கள் ஈயக்கண்டும்
    மண்ணார் சிலர் சண்பைநாதனை யேத்தார் வருந்துவதே,"

என்று பாடுகின்றார். முத்துச் சிவிகை பெற்ற செய்தி யும், ஆவடு துறையுள் பொன் ஆயிரம் பெற்றதும் பரவப்படுகின்றன.

திருமருகலில் கணவன் விடந்தீண்டியதால் இறந்துபடக் கண்டு வருந்திய வணிகமகள் பொருட்டு நம் சம்பந்தர் அவ் விடம் தீர்த்து அவள் வருத்தம் போக்கிய செய்தி நம்பியாண்டார் நம்பிகளால் பல விடங்களில் பாராட்டப்படுகிறது.

    "வயலார் மருகல் பதிதன்னில் வாளரவால் கடியுண்டு
    அயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த
    கயலார் கருங்கண்ணி தன் துயர் தீர்த்த கருணை வெள்ளப்
    புயலார் தருகையினான் என்னத் தோன்றும் புண்ணியமே"

என்று திருவந்தாதியும்,

    "குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிர அன்ற
    துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் துறை செய்தவன்
    திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சென்னியின்வாய்த்
    தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே”

என்று திருச்சண்பை விருத்தமும் சிறப்பித்துக் கூறுகின்றன.

திருவுலாமாலையில் இச்செய்தியை வேறொரு வகையால் விதந்து பரவுகின்றார். நம் ஞானசம்பந்தப் பெருந்தகை திருவீதி உலா வருகின்றார். இவர் நலம் கண்டு மகளிர் சிலர் கருத்திழந்து மெலிந்து தம்முட் சொல்லாடுகின்றனர். அமணரை வாதில் வென்று கழுவேற்றிய இவன் தன் மாலையை நமக்குத் தருவான் என்று நாம் கருதுவது பேதைமை என்ற கருத்துப்பட.

          " - நங்கைமீர்,
    இன்றிவன் நல்குமேல் எண் பெருங் குன்றத்தில்
    அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற
    உரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி
    நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார்
    பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
    மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்”

ஆயினர். அதுகேட்ட வேறு சிலர், அவரை மறுத்து, சம்பந்தப்பெருந்தகை இரக்கம் மிகவுடையர் என்று சாதிப்பாராய், மருகல் விடம் தீர்த்த செய்தியை எடுத்து,

          -"மற்றிவனே
    பெண்ணிரக்கம் அன்றே, பிறைநுதலீர், மாகாணத்தின்
    நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற
    ஆருயிரை மீட்டன்று அவனை அணிமருகல்
    ஊரறிய வைத்தது எனவுரைப்பார்.”

இவ்வாறே, நம் சம்பந்தப்பெருமான் திருமயிலை யில் என்பைப் பெண்ணாக்கிய அருட்செயலைத் திருவருணைக் கலம்பகமுடையார் மிக்க நயமுறக் கூறிப் பாராட்டுகின்றார். ஒத்த அன்பால் பிணிக்கப் பட்ட ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றனர். வருங்கால், அவனுக்குத் தன் கல்வியறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு வேட்கை மிகுகின்றது. நல்லாசிரியர் ஒருவர் சேய்மையில் இருப்பதை அறிகின்றான். அவர்பாற் செல்லவும் விரும்புகின்றான். கல்வி குறித்துப் பிரியக் கருதும் கருத்தைத் தன் மனைக்கிழத்திக்குத் தெரிவிக் கின்றான். அவள் சீரிய கூரிய அறிவுநலம் படைத் தவள். ஆதலால், அவள் அவனை நோக்கி,

    "ஆரும் விரும்பிய கல்விமேல் ஆசையுமக்குளதாயிடின்
    பாருள வென்பொருபாவையாய் பாடிய பாவலர் போலவே
    நீரு மருந்தமிழ் செப்பிடும் நீர்மையறிந்திவ ணேகுவீர்
    மேரு நெடுஞ்சிலையத்தனார் வீறருணாபுரி வெற்பரே" (செய்.20)

என்று கூறுபவள், தன் பிரிவாற்றாமையும், ஆற்றாது . உயிர் நீங்கிய வழி மீட்டும் அதனை வருவித்துப் பொருந்துவிக்கும் அருட்கவி வேண்டும் என்பதை வற்புறுத்தலும், ஞானசம்பந்தர் என்பைப் பெண் ணாக்கிய நலமும் தோன்ற "என்பொரு பாவையாய் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை யறிந்திவண் ஏகுவீர்'' என்று உரைக்கின்றாள்.

இனி, நம் ஞானசம்பந்தப் பெருந்தகை பாடி யருளிய திருப்பதிகம் 16000 என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிக்கின்றார்கள். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில்,

    "நகரம் கெடப்பாண்டு திண்தேர் மிசை நின்று நான்மறைகள்
    பகரங் கழல வனைப்பதினாறா யிரம்பதிகம்
    மகரம் கிளர்கடல் வையம் துயர் கெட வாய்மொழிந்த
    நிகரங் கிலிகலிக் காழிப் பிரான் என்பர் நீணிலத்தே"

என்று ஓதுகின்றார். இக்கருத்தே, திருத்தொகையில்,

          " - மொய்த்தொளிசேர்
    கொச்சைச் சதுரந்தன் கோமானைத் தான் செய்த
    பச்சைப் பதிகத் துடன் பதினாறாயிரம்பா
    வித்துப் பொருளை விளைக்க வலபெருமான் "

என்றும், திருவுலாமாலையில்,

    "பன்னு தமிழ்ப் பதினாயிரம் நற்பனுவல்
    மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
    சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் செய்என்ன
    வந்தங் கவதரித்த வள்ளல்"

என்றும் எடுத்தோதி வற்புறுத்துகின்றார்.

இப்பதிகங்களின் வகைகளையும் தம்முடைய பிரபந்தங்களில் நம்பிகள் காட்டியிருக்கின்றார். இசைக்குரிய பண்முறையே வரும் பதிகங்களைப் பதிகமென்றும், திருப்பாசுரத்தைப் பாசுரம் பல்பத்து என்றும், ஏனைச் சிறப்புடைய இயல்பமைந்த-வற்றை திருவிராகம், திருவிருக்குக்குறள், யாழ்மூரி, சக்கர மாற்று, ஈரடி முக்கால் என்றும் விரித்துரைக்கின்றார். திருவுலாமாலையில்,

          "எப்பொழுதும்
    நீக்கரிய இன்பத் திராக மிருக்குக்குறள்
    நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய
    யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
    பாழிமையால் பார்கத்தோர் தாம் உய்ய - ஊழி
    உரைப்பமரும் பல்புகழால் ஓங்க வுமைகோனைத்
    திருப்பதிகம் பாடவல்ல சேயை”.

என்று உரைப்பது காண்க.

இனி, ஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதி கத்துள் பாராட்டிய சைவப் பெருமக்கள் இவர் என்றும், அவர்களை இவ்விவ்வகையில் பாராட்டி யிருக்கின்றார் என்றும் நம்பியாண்டார் நம்பிகள் ஆராய்ந்து கூறுகின்றார். இப்பெருமக்களுள் ஞான . சம்பந்தரை நினைக்கும் போதே பாண்டிமாதேவியார் தாம் நம் மனக்கண்ணே முந்து நிற்பவர். நம்பிகளும் அம்முறையே திருத்தொகையின்கண்,

    "பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும்
    கொற்றக் கதிர்வேல் குலச்சிறையும் கொண்டாடும்
    அற்றைப் பொழுதத்து அமணரிடு வெந்தீயைப்
    பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவலான்"

என்றும், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் என்ற இவர் தம் சிறப்பை ,

    "வர்த்தமானீசர் கழல் வணங்கி வாழ்முருகன்
    பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்;
    அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்"

என்றும் உரைக்கின்றார். திருவந்தாதியில்,

    "ஏந்தும் உலகுறுவீர் எழில் நீல நக்கற்கும் இன்பப்
    பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போக மார்ப்பைக்
    காந்தும் கனலில் குளிர்படுத்துக் கடற் கூடலின்வாய்
    வேந்தின் துயர் தவிர்த்தானை யெப்போதும் விரும்புமினே"

என்று தொகுத் தோதுகின்றார்.

இங்ஙனம், ஞானசம்பந்தரால் பாராட்டப்பட்ட பெருமக்களை நம்பிகள் எடுத்தோதி வந்தாரே; அவரால் திருச்செங்காட்டாங்குடிப் பதிகத்துள் பாசுரந்தோறும் பாராட்டப்பெற்ற சிறுத்தொண் டரைப் பாடிற்றிலரே என்று நினைக்கலாம். அச் சிறுத்தொண்டற்கு நம் ஞானசம்பந்தர் ஒரு திருப் பதிகம் முழுதும் அமைத்த அமைதி நலத்தை நன்கு ஆராய்ந்து ஒரு சிறந்த கருத்தினை நாம் அறிந் தொழுகுமாறு நம்பியாண்டார் நவில்கின்றார். திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவருள் பெற வேண்டுவோர் சிறுத்தொண்டர் சிறப்பறிந்து பரவுதல் வேண்டும் என்பார்.

    "விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்
    அரும்பும் புனற்சடை யாயுண்டருள்என் றடிபணிந்த
    இரும்பின் சுடர்க்களிற் றான் சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்
    கரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே,"

என்று பரிந்தோதுகின்றார்.

சுட்டுணர்வுக்கெட்டாத முதல்வனை நம் ஞானசம்பந்தப் பெருமான் சுட்டிக்காட்டிய திறத்தை வியந்த பட்டினத்தார், "தோடுடைய செவியன் என்றும், பீடுடைய பெம்மான் என்றும் கையாற் சுட்டிக்காட்ட " என்றாரன்றோ ; அதனையே நம்பி யாண்டார் நம்பிகள் வேறொரு திறத்தால் நமக்கு . உரைப்பாராய்,

    "வாட்டுவர் தத்தம் துயரை வன்கேழலின் பின்பு சென்று
    வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
    தோட்டியல் காதன் இவன் என்று தாதைக்குச் சூழ்விசும்பில்
    காட்டிய கன்றின் கழல் திறமானவை கற்றவரே”

என்று உரைக்கின்றார்.

இனி, ஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகங் களின் பொதுக் கருத்தும் அவற்றால் மக்கட்குண்டான பயனும் சிற்சில இடங்களில் நம்பியாண்டார் நம்பிகள் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

    பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
    துறவியெனும் தோல்தோணி கண்டீர் - நிறையுலகில்
    பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
    தன்மாலை ஞானத் தமிழ்

என்பதனால், திருப்பதிகங்கள் பிறவிக்கடலை நீந்தற்குத் துணை செய்யும் என்று உணர்த்துபவர், திருக்கலம்பகத்தில்,

    "பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன்
    பிற்றைமுறை பெருநெறி யளிப்பன பல்
    பிறவியை ஒழிச்சுவன உறுதுயரழிப்பன”

என்று மீட்டும் வற்புறுத்துகின்றார்.

இத்திருப்பதிகங்கள் முற்கூறியவாறு பிறவிப் பிணி கெடுத்தற்குப் பெருந்துணையாம் என்பதை .

    "அந்தம் உந்தும் பிறவித்துயர்தீர அரனடிக்கே
    பந்த முந்துந் தமிழ் செய்த பராபரன்"

என்று சண்பை விருத்தத்தில் வலியுறுத்தி, இவை பத்திநெறியை மக்கட்கு உணர்த்தி, அதுவே சிவனருளைப் பெறுதற்கு நேரிய பெருவழியாம் என்று பல பாசுரங்களால் நமக்கு அறிவுறுத்து கின்றார்.

ஆளுடையார். திருத்தொகையில், இப்பதிகங் களைப்பற்றிக் கூறலுற்ற நம்பியாண்டார் நம்பிகள், "கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே, பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்த பிரான்'' என்று உரைத்துப் பின்னர்,

    பதிகப்பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
    மதியத் திருநுதல் பங்கன் அருள் பெற வைத்த எங்கள்
    நிதியைப் பிரமாபுரநகர் மன்னனை என்னுடைய
    கதியைக் கருதவல்லோர் அமராவதி காப்பவரே"

என்றும்,

    "தேறும் புனல் தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்
    ஊறும் அமிர்தப் பருகிட்டெழுவதோர் உட்களிப்புக்
    கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்
    நாறும் அலங்கல் தமிழாகரன் என்னும் நன்னிதியே,”

என்றும் திருச்சண்பை விருத்தத்தில்,

    "ஆறதேறுஞ் சடையானருள் மேவ அவனியர்க்கு
    வீறதேறும் தமிழால் வழி கண்டவன்”

என்றும் கூறியுள்ளார்.

இனி, ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை ஓதும்போது திருநனிபள்ளித் திருப்பதிகத் திருக் கடைக்காப்பில் "இடுபறை என்ற அத்தன் பியல் மேலிருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடுவிருள் ஆடுமெந்தை நனிபள்ளியுள்க வினை கெடுதல் ஆணை நமதே' என்றும், கோளறு பதிகத் திருக்கடைக்காப்பில், "தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் , ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்றும் அருளுவதைக் காணுந்தோறும் நமக்கு வியப்பும் இறும்பூதும் உண்டாகின்றனவன்றோ?

நனி பள்ளிக்குப் போம்போது ஞானசம்பந்தர், ''நாம் அத்தன் பியன் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பாசுரம் பத்தும் ஓதுபவர் வினைகெடுவர்; அதற்கு நமது ஆணை " யென்பது காணும்போது, ''இச்சிறுபிள்ளை தன் தந்தை தோளில் இருந்து கொண்டு சொல்லும் இறுமாப்பு என்னே'' என்றெழும் நினைவை நம் சேக்கிழார் பெருமான் உடனே நம்மைத் தெருட்டிப் பணிவிக்கின்றார். தந்தை தோள்மேல் இருந்தார் என்றது பரமன் திருவடிக் கீழ் இருந்தார் என்பதை யுணர்த்தும்; திருவடிக் கீழ் எனவே, அவர் திருமுடிமேல் பரமன் திருவடியிருப்பது பெறப்படும். படவே, அவர் மனத்தே தம் முடியில் திருவடியிருப்பது கருதி நிற்கின்றாராம்; சேக்கிழார், "மாதவம் செய்தாதை யார் வந்தெடுத்துத் தோளின் மேல் வைத்துக்கொள்ள, நாதர்கழல தம்முடிமேல் கொண்ட கருத்துடன் போந்தார் ஞான முண்டார்" (ஞானசம். பு. 113) என்றும், திருநனிபள்ளி திருப்பதிகத் திருக்கடைக் காப்பில் "ஆணை நமதே'' என்றதை வியந்து, ''நாரியோர் பாகர். வைகும் நனிபள்ளியுள்குவார்தம், பேரிடர் கெடுதற்காணை நமதேனும் பெருமை வைத்தார்” (திருஞான. பு. 115 என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு "ஆணை நமதே” என்னும் பெருமை மொழியை நன்கு கண்டு இறும்பூதெய்திய நம்பியாண்டார், திருத்தொகையில், ''முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, "அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமதென்னவலான்" என்று பாராட்டியுரைக் கின்றார்.

இங்ஙனம் அடியாரைப் பற்றும் வினைகளைக் கெடுத்தற்கும் கோள்முதலியவற்றால் எய்தும் தீமை கெடுதற்கும் ஆணையிட்டுக் கூறும் பெருமை படைத்த ஞான சம்பந்தப் பெருந்தகையாரை வழி படுவதும் சிவ வழிபாடே என்றும், அதனாற் பெறும் பயனும் சிவ போகமே என்றும் நம்பியாண்டார் நம்பி கூறுகின்றார். அப்பகுதியைத் தொடங்குவதற்கு முன் அகத்திணை நெறியில் அவரை நம்பிகள் பாடி யிருக்கும் திறம் சிறிது கூறுகின்றோம்.

ஞானசம்பந்தரைப் பாராட்டி நம்பியாண்டார் நம்பிகள் பாடிய புகழ் நூல்களில் பெரும்பான்மை யான பாட்டுகள் அகத்திணை எழிலும் விரவி யிருக்கின்றன. அவற்றை, திணையும் துறையுமாக வகுத்து ஆராய்தற்குக் காலம் இன்மையின் இரண் டொன்றே காட்ட முயல்கின்றோம்.

ஒருத்தி ஒரு தலைமகனைக் கண்டு அவன் நட்புப் பெற்றுக் களவொழுக்கம் பூண்டு ஒழுகு கின்றாள். அவள் அவனை இடையறாது கூடியிருப்ப தற்கு இயலாமையால் மேனி வேறுபடுகின்றாள். அவ்வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிறது. அதனை அவள் தோழிக்குக் குறிப்பிக்க, அவள் செவிலிக்குத் தலைவிக்கும் தலைவனுக்கும் உண்டான தொடர்பினை உரைக்கின்றாள். இது கள் வொழுக்கத்தில் அறத்தொடு நிலையென்று வழங்கும். தலைவி புனத்தே இருக்குங்கால் யானையொன்று போந்து
அச்சுறுத்துகிறது. அதுகண்டு தலைவி அலமரு கின்றாள்; அப்போது தலைமகன் போந்து அவ யானையை வெருட்டியோட்டி அவளைக் காக்கின் றான். அந்நன்றி மறவாமல் அவள் அவன்பால் அன்புற்று மெலிகின்றாள் என்ற இக் கருத்தை, அத் தோழி உரைக்கத் தொடங்கி,

    "மன்னங்கணை செந்தமிழாகரன் வெற்பில் வந்தொருவர்
    அன்னங்கள் அஞ்சன்மின் என்று, அவ்வேழத் திடை விலங்கிப்
    பொன் அங்கு அலைசாவகை எடுத்தாற்கு இவள் பூண் அழுந்தி
    இன்னந் தழும்புளவாம் பெரும்பாலும் அவ்வேந்தலுக்கே”

என்று உரைக்கின்றாள். இவ்வாறு அகனைந்திணை யொழுக்கமே பற்றி வருவன பல.

மகளைப் பேதுறுவித்தான் என நற்றாய் ஏசல் என்ற துறையில் நம்பியாண்டார் நம்பிகள் ஞான சம்பந்தப் பெருந்தகையைப் பிள்ளையென்ற நிலை யில் வைத்து அழகிய பாட்டொன்றைப் பாடுகின்றார்.

    தனமலி கமலத் திருவெனும் செல்வி
    விருப்பொடுந் திளைக்கும் வீயா இன்பத்து
    ஆடக மாடம் நீடு தென்புகலிக்
    காமரு கவினார் கவுணியர் தலைவ
    பொற்பமர் தோள் , நற்றமிழ் விரக,
    மலைமகள் புதல்வ, கலைபயில் நாவ,
    நினாது, பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு
    ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
    வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
    பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே" (கோவை. 10)

இதன்கண், "வெள்வளைவாங்கி" என்ற உடம்புநனி சுருங்கல்; "செம்பொன் கொடுத்தல்" என்றது பசலை பாய்தல். பிள்ளைகளன்றிப் பெரியோர் வெள் வளைக்கு மாறாகச் செம்பொன் தாரார் என்பதும், பேதையார்க்குச் செம்பொன்னைத் தெரிந்தவர் கொடார்; சிறு பிள்ளைகள் அப்பொன்னின் அருமை தெரியாராதலின், அவர் தான் கொடுப்பர், நீ இவற்றைச் செய்தனையாதலின், "பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கென்னார்". பிறர்க்கு என்றவிடத்து எச்சவும்மை தொக்கதாகக் கொள்ளின், எனக்கே யன்றிப் பிறர்க்கும் இது நன்கு தெரிந்துவிட்டது என்றாளாம். 'பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே' என்றதன்கண், "பிறரெல்லாம் இவ்வாறு காரணம் காட்டிப் பிள்ளையென நின்னை யேசுகின்றனர்; யான் நீ பெரியன் என்றே பேணிப் பரவுகின்றேன்; நீ நின் மார்பின் மாலையைத் தந்து என் மகள் கொண்ட பேதுறவையைத் தீர்த்தருள வேண்டும்" எனத் தாய் தார் வேண்டி நிற்கும் நிலையும் தோற்றுவிக்கும் நயம் காண்மின்.

ஞானசம்பந்தர்பால் உண்டான காதல் வேட்கையால் கண்ணுறக்கமின்றிக் கைவளை சோர்ந்து மேனி வேறுபட்டு இருக்கும் ஒருத்தியைத் தோழி , நெருங்கி எத்துணை வேறுபாடு எய்தினும் இவ்வாறு கைவளை சோர நிற்றல் நன்றன்று என்று
கூற, அவட்கு விடையிறுக்கும் அத்தலைவி.

    “ஊரும் பசும்புரவித் தேரொளித்த தொளிவிசும்பில்
    கூரும் இருளொடு கோழிகண்துஞ்சா கொடுவினையேற்
    ஆரும் உணர்த்தினர், ஞானசம்பந்தன் அம் தாமரையின்
    தாரும் தருகிலன் எங்ஙனம்யான் சங்கு தாங்குவதே " (கோவை24)

என்று கூறுகின்றாள். இதன்கண் இரவு முழுதும் அவள் கண்ணுறக்கமின்றி யிருந்த குறிப்பை, தேர் ஒளித்தது, இருள் கூர்ந்தது, கோழி கூவிற்று என அந்திமாலையும், நடுவியாமமும் விடியற்காலமும் அக்கால நிகழ்ச்சி வாயிலாக உணர்த்துமாற்றால் தோற்றுவிக்கின்றாள். என்னோடு இருக்கும் தோழியாகிய நீ நன்கு உறங்கினை; என் கலக்கத்தை அறிந்திலை யென்பாள், ''ஆரும் உணர்ந்திலர்' எனமுன்னிலைப் புறமொழியாகப் புகல்கின்றாள். இனி, இதனால் வேறு ஒரு கருத்தும் குறிக்கின்றாள், என் கைவளை சோர்வது கண்டு நெருங்கியுரைக்கும் நீ, அச்சோர்வுக்கு ஏது வினையுணர்ந்து ஞான சம்பந்தன் பால் சென்று, தார் பெற்றுவர முயல் கின்றிலை யென்றற்கு, "ஆரும் உணர்ந்திலர்" என் கின்றாள். மேலும், இதனால், தாயர் முதலாயினோர் இவட்குற்ற வேறுபாட்டினை நன்கு ஓராது வெறியயர்தலும் கட்டுக் காண்பதும் பிறவும் வீணே செய்கின்றனர் என்பதும் பெறப்படும், உங்கள் உணர் வின்மையைக் கண்டு, அந்த ஞானசம்பந்தனாகிலும், வந்து கூடுதல் நினையானாயினும், தன் மாலை யாயினும் தருகின்றானோ எனின் அது தானும் இல்லை; அதனால் யான் சோர்ந்து மெலியாது ஆற்றியிருப்பது எவ்வாறு முடியும் என்பாள். "எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே " என்கின்றாள்.

தோழியின் துணை பெற்றுத் தலைவியொடு கூடி யொழுகும் தலைமகனைச் சேட் படுக்கலுற்ற தோழி, அவனை, "பகற்போது மறைந்தது; இங்கு , நில்லற்க'' என்று கூறுபவள், ஞான சம்பந்தப் பிள்ளையார் சிவபரம்பொருளின் திருமுன் நின்று அருள் பெறும் திறத்தை அழகு திகழக் கூறுகின்றாள்:

    "சிறுபால் கலித்த விளிகுரல் கிண்கிணி
    சேவடி புல்லிச் சிறுகுரல் பயிற்றி
    அழுதுண் செவ்வாய் அருவி தூங்கத்
    தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
    சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
    நற்றமிழ் விரகன் பற்ற லர்போல
    இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று
    பரிதியும் குடகடற் பாய்ந் தனன்
    கருதி நிற்பது பிழைகங்குல் இப்புனத்தே” (கோவை. 19)

இதன்கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் பாதத்திற் கட்டிய கிண்கிணி சிறு குரல் மிழற்ற. திருவாயில் அமுதூறு நின்று திருப்பதிகம் பாட, திருக்கை அதற் கேற்பத் தாளம் போட, தம்மை மறந்து சிவனருளில் தோய்ந்து நிற்றலின் திருவடி அடி பெயர்த்துச் சிறு கூத்தாடத் தோன்றும் இன்பக் காட்சி நம் கண் முன் தோன்றுவது காண்மின்.

இவருடைய பாட்டுக்களில் அகப்பொருட்டுறை யில் இதுகாறும் எப்புலவராலும் காட்டப்படாத புதுப்புதுத் துறைகளும் கருத்துக்களும் பல்கியிருக் கின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டுவது வேண்டா கூறலாம். இவர் பாட்டுக்களை மட்டில் தனியே எடுத்து ஆராய்ந்து காண விரும்பு வோர்க்கு அவை பொருளாம்.

இனி, நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருமானைத் தனித்த முறையில் எடுத்தோதி நமக்கு அறிவுறுத்துவனவற்றைச் சிறிது கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.

முதற்கண், ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருநாமத்தை ஓதுவதே வேண்டுவ தென்கின்றார். ஒருவன் பெற விரும்பும் பேறுகள் அனைத்தையும் பெறுதற்கு அதுவே வழியென்பார்,

    "உறவும் பொருளும் ஒண்போகமும் கல்வியும் கல்வியுற்ற
    துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்
    புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்
    நறவும் பொழில்எழில் காழியர்கோன் திருநாமங்களே”

என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில் இக் கருத்தைச் சிறிது மாற்றி,

    ''எனவே இடர்கலும் இன்பமே எய்தும்
    நனவே அரனருளை நாடும் - புனல்மேய
    செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
    கொங்கமலத் தண்காழிக் கோ"

என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். ஆகவே ஞான சம்பந்தர் என்ற திருப்பெயர் ஓதினார்க்கு உயர்நலம் பெறுவிக்கும் உறுதியுடைய தென்பது வற்புறுத்தினா ராயிற்று.

இனி, ஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடியை அனைவரும் பரவிப் பணியவேண்டும் என்பார் அவற்றின் பெருமையைப் பல விடங்களில் பாராட்டிக் கூறுகின்றார். நினைவார் நினைவில் எழுந்தருளி இன்பத்தேன் பெருகுவது அவர் திருவடியின் மாண்பு என்பார்,

    "என்றும் அடியவர் உள்ளத் திருப்பன், இவ்வுலகோர்
    நன்று மலர்கொடு தூவித் துதிப்பன், நல்ல சங்கத்து
    ஒன்றும் புலவர்கள் யாப்புக் குரியன், ஒண்கலியைப்
    பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே"

என்று திருமும்மணிக் கோவையிலும்,

    "கவிக்குத் தகுவன், கண்ணுக்கினியன், கேட்கில் இன்பம்
    செவிக்குத் தகுவன், சிந்தைக் குரியன், பைந்தரள
    நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில் தொறும்
    குவிக்கத் திரைபரக்கும் கொச்சை நாதன் குரைகழலே"

என்று திருவந்தாதியிலும் பாராட்டி யிருக்கின்றனர். இவ்விரண்டு பாட்டுக்களிலும் ஞானசம்பந்தர் திருவடி சிந்தித்தற் குரியனவாம் என்று வற்புறுத்து கின்றாரன்றோ? சிந்திப்பதால் உண்டாகும் பயனே ஞானப்பேறு என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் திருப்பாசுரத்துக்கு அவர் பேருரை விரித்து அதன் முடிவில், அப்பேருரையினைத் தாம் எழுதுதற்குத் துணை செய்தது எந்தை ஞான சம்பந்தப் பெருந் தகையின் திருவடி ஞானமே என்பார், 'வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத்தைக், குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேனல்லேன்; சிறியேன் அறிவுக்கு அவர் தாம் திருப்பாதம் தந்த , நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேன்ன பால்" என்று ஓதுகின்றார். ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடிப்பேறு ஞானப்பேறே என யாப்புறுத்தற்கு இதன்கண், அவர்தம் திருப்பாதம் தந்த நெறியென்று சேக்கிழார் பெருமான் கூறு கின்றார். சிவப்பிரகாச சுவாமிகளும் இத்திருவடிப் பேறு வீடு பேறே என்பார். ''பூவான்மலிமணி நீர்ப்பொய்கைக் கரையினியல், பாவான்மலி ஞானப் பாலுண்டு, நாவான், மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் தண்டை , வெறித் தண் கமலமே வீடு" என்று ஓதியிருத்தலை நாம் நன்கு அறிகின்றோம்.

ஞானசம்பந்தர் திருவடி பணிவார் பெறும் பயன் ஞானமும் வீடும் என மேலே காட்டிய பெரு மக்கள் வழங்கிய நல்லுரையால் தெளிந்தோமா யினும், நம்பியாண்டார் கூறுவது காண்போம். அவரும் திருவடிப்பேறு சிவபோகப் பேறே என்பார்.

    "பெறுவது நிச்சயம், அஞ்சல்நெஞ்சே, பிரமாபுரத்து
    மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துவதால்
    வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த
    பொறியுறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்னுலகே

என்று அழுத்தமும் திருத்தமும் பொருந்தக் கூறு கின்றார். சிவபோகம் பெறுதல் எளிதன்றே; திருஞான சம்பந்தர் திருவடி வழிபாடு அதனைத் தருமென மிக எளிதாகக் கூறுகின்றீரே யெனின், "எளிது எளிதே" என வற்புறுத்துவாராய், பிறிதோரிடத்தில்,

    "முத்தன வெண்ணகையார் மயல் மாற்றி முறைவழுவாது
    எத்தனை காலம் நின் றேத்தும் அவரினும் என்பணிந்த
    பித்தனை எங்கள் பிரானை அணைவது எளிதுகண்டீர்,
    அத்தனை ஞானசம்பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே”

என்று உரைக்கின்றார். இதனைக் கேட்டதும், நம்மனோர் மனத்தில், "அஃது எவ்வாறு இயலும்; ஞானசம்பந்தர்க்கு அடியோம் என்பதனால் சிவபோகம் பேறு எய்தும் என்பது எங்ஙனம் அமையும்?'' என்றெல்லாம் எண்ணம் எழுகிறது. அதற்கு நம்பியாண்டார் நம்பி நல்ல காரணம் கூறுவார்.

    "சுரபுரத்தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள் தங்கள்
    பரபுரத்தார் தம்துயர்கண்டருளும் பரமன்மன்னும்
    அரபுரத்தானடி எய்துவன் என்பது அவனடி சேர்
    சிரபுரத்தான் அடியார் அடியான் எனும் திண்ண்ன வே”

என்று கூறுகின்றார். இவ்வாறு எடுத்து மொழிந்தவர். இதற்குத் தக்க எடுத்துக் காட்டும் ஓதுகின்றார். எடுத்துக் காட்டும் அளவை வகைகளுள் ஒன்று.

அது,

    "காரங் கணைபொழில் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்
    சீரங் கணைநல் பெருமணந் தன்னில் சிவபுரத்து
    வாரங் கணைகொங்கை மா தொடும்புக்குறும் போது வந்தார்
    ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ் வரும்பதமே"

என்பது.

இதனைக் கேட்குமவர் நெஞ்சில் தாமும் ஞானசம்பந்தர் திருவடி பரவி அப்பேரின்ப வாழ்வு பெறுதற்கு முயலவேண்டும் என்ற வேட்கை கொள்வர், நினைத்தலும் செய்வர். அந்நினைவு நெடிது செல்லாது இடையற்றுப் போதலும் உண்டு. அப்போது, தம்மை , நினையவொட்டாது தடுப்பது வினையென்னும் உணர்வு தோன்றி அவர் உள்ளத்தை அலைக்கும். அதனால் அவர் மனம் கலங்குவர். அக்கலக்கமறிந்தே, நம்பியாண்டார் நம்பிகள், "உங்கள் முயற்சியை முன்னை வினைப்பயன் போந்து இடையூறு செய்து கொடுப்பதாக எண்ணுகின்றீர்கள்; ஞான சம்பந்தன் திருவடி வழிபாடு அவ்வினைப் பகையைச் சிதைக்கும்; நீவிர் கவலுதல் வேண்டா '' என்பாராய்,

    "நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி
    பனிமதியணிந்த பொழில்சூழ்
    பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
    புனிதகுணன் எந்தம் இறைவன்
    பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு
    பரசமய வென்றியதன்
    சலமலி தருங்கமல சரண் நினைவன் என்றானது
    தகுவினைகள் போன்றும் வகையே"

என்று ஓதி வினைப்பகையைக் கெடுத்தற்கு விரகு கூறித் தெருட்டுகின்றார்.

இவ்வாறு, திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடி நினைந்து வழிபடும் நெறியில் நம்மை அறிய வுறுத்திக் கூட்டுவிக்கும் இச்சான்றோர் இவ்வகை யால் அடியராயினர் பெருமை இது எனப் பல பாசுரங்களின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். ஒன்று காட்டுதும்.

    "மேனாட் டமரர்தொழ விருப்பாரும் வினைப்பயன்கள்
    தாநாட்ட பருநரகில் தளர்வாரும் தமிழர் தங்கள்
    கோனாட்டருகர் குழாம் வென்ற கொச்சையர் கோன் கமலப்
    பூநாட்டடி பணிந்தாரும் அல்லாத புலையருமே”

எனபது காண்க. இதன்கண் அடிபணியும் பெரியோர் பேரின்ப வாழ்வில் இனிதிருப்பரென்பதும், பணியாதார் நரகில் தளர்வரென்பதும் கூறி, பணியாதவரைப் புலையரென்று இழித்துரைப்பதும் காண்க.

இந்நிலையில் திருமாலும் அயனும் சிவபரம் பொருளின் திருவடியும் திருமுடியும் முறையே காண முயன்று அலமந்த செய்தியை நினைந்து, அவர் தாமும், நம் ஞானசம்பந்தர் திருவருளை நாடி யிருப்பின், அவர்கட்கு அவர் அவற்றைக் காட்டி யிருப்பாரென்பார்,

    "நிலமேறிய மருப்பின் திருமாலும் நிலம் படைத்த
    குலமேறிய மலர்க் கோகனகத் தயனும் கொழிக்கும்
    சலமேறிய முடிதான் கண்டிலர் தந்தை காண அன்று
    நலமேறிய புகழ்ச்சம்பந்தன் காட்டிய நாதனையே "

என்று கூறுகின்றார்.

இவ்வாறு மாலும் அயனும் காண்பதற்கரிய பரமனைத் தாம் எளிதிற்கண்டு, அதனோடமையாது தந்தைக்கும் காட்டியருளிய அருளாளரான ஞான சம்பந்தப் பெருந்தகையைத் தாம் எளிதில் பற்றிப் பரவுதற்கு நேர்ந்த நேர் பாட்டினைத் தாமே வியந்து,

    "செப்பிய என்ன தவமுயன்றேன் நல்ல செந்தமிழால்
    ஒப்புடை மாலைத் தமிழாகரனை உணர்வுடையோர்
    கற்புடை வாய்மொழி யேத்தும்படி கதறிட்டிவர
    மற்படும் தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே"

என்று பாடி மகிழ்கின்றார். இம்மகிழ்ச்சி மிகுதியால், இனி ஞான சம்பந்தரை, யன்றிப் பிறரைப் பாடுதற்கு என் மனம் செல்லாது; ஆனைமேல் அம்பாரி கட்டிச் செல்லும் அரிய செல்வம் சிறந்த வாழ்வு தானே வந்தமைவதாயினும் அதனை வேண்டேன் என்று கூறுவாராய்,

    உகட்டித்து மோட்டு வராலினம் மோதி முலையுரிஞ்ச
    அகட்டிற் சொரிபால் தடநிறை கொச்சை வயத்தாசை
    தகட்டில் திகழ்மணிப் பூண்டமி ழாகரன் றன்னையல்லால்
    பகட்டிற் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே"

என்று கூறுகிறார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தர்பால் திண்ணிய அன்பராகுமிவர், இப்பாட்டின் கண் ஒருவரை யென்றது, சிவனடியாரல்லாத பிறர் ஒருவரையாகும் எனக்கொள்ளல் வேண்டும்; என்னை, திருநாவுக் கரசரைத் திருவேகாதசமாலை பாடிப் பரவியிருக் கின்றாராகலின். அல்லதூஉம் அவர் திருஞான சம்பந்தரொடு கூடியிருந்து படிக்காசு பெற்ற செய்தியை விதந்து, இவ்விரு பெருமக்களும் கூடி யிருந்த கூட்டத்தின் பயனே இன்றும் சைவவுலகு நிலை பெற்றிருத்தற்கு ஏதுவாயிற்றென்பார்,

    பாடிய செந்தமிழாற் பழங்காசு பரிசில் பெற்ற
    நீடிய சீர்த்திரு ஞானசம்பந்த னிறை புகழான்
    ஏடியல்பூந் திருநாவுக் கரசோ டெழில் மிழலைக்
    கூடிய கூட்டத்தினா லுளதாய்த்திக் குவலயமே"

என்று ஓதுகின்றார்.
-------------------

10. வினையுணர்வும் ஞானசம்பந்தரும் [#]

வினைத்தொடர்புள்ள சொற்கள் இந்நாளில் எல்லாருடைய பேச்சிலும் எல்லாக் காலத்தும் காணப்படுகின்றன. கற்றவர் கல்லாதவர், செல்வர் வறியர், இளையர் முதியர், ஆடவர் மகளிர் ஆகிய யாவரும் இன்பம் துன்பம் என்ற இருவகைக் காலத்திலும் இவ்வினையைப் பற்றிய பேச்சுக்களை வழங்குகின்றனர். இன்பம் துன்பம் என்ற இரண்டின் நுகர்ச்சிக்குக் காரணம் நுகர்வோரது வினையே என்ற உணர்வு நன்கு வேரூன்றியிருக்கிறது. துன்பமும் ஒருவனைக்கண்டு ஆறுதல் கூறும் வேறொருவனும் "இது முன்னை வினையின் பயன்" என்று மொழிவது இயல்பாக இருக்கிறது.
-----
[#] இது கரந்தைத் தமிழ்ச்சங்க இருபத்தெட்டாம் ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவாகும்.

தமிழ் நூல்களிலும் இவ்விணையுணர்வு நன்கு விளங்கித் தோன்றுகிறது. மிகப் பழையதாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றும் திரைப் பாட்டுவரையில் எல்லாப்பாட்டுக்களிலும் உரைகளிலும் வினை பற்றிய சொல்லும் சொற்றொடரும் பயின்று வருகின்றன. இந்நூல்களுள், வினைத்தொடர்பான மொழிகள், எல்லாவற்றிலும் விடத் தேவா ரத்தில் மாத்திரம் மிகுதியாகவும், தேவாரப் பெருமக்களுள் ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்களில் மிகப் பெரிதும் இடம்பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்கள் சுமார் 4200 உள்ளன; அவற்றுள், சுமார் 3600 திருப்பாட்டுக்களில் இவ்வினையுணர்வு பயின்று வருகின்றது.

இங்ஙனம், இவரது திருப்பாட்டுமட்டில் வினைத்தொடர்பான சொற்கள் இவர் போலும் பெரு மக்களின் அருட்பாடல்களில் அத்துணைப்பயில வழங்காமையின், இது பற்றிய பேச்சு , இவர் காலத்து ஓங்கிநின்றதாகல் வேண்டும். தேவாரத்துக்கு முன்னிருந்த நூல்களிலும், இத் துணைப் பெருவழக்குக் காணப்பட்டிலது. முன்னைய நூல்கள், இலக்கணம், இலக்கியம், சமயநூல் எனப் பகுக்கப்படும். இவற்றுள் இலக்கியங் களும் சமயநூல்களும் பிரிப்பின்றி ஒரு தன்மை யாகவே அமைந்திருக்கின்றன. நீதிநூல்களோ இடை இடையே சமயக் கருத்தும் கொண்டு நிலவுகின்றன.

இந்திய நாட்டு நூல் வரலாறு காண்பவர் வேதங் களே மிகப் பழைமை வாய்ந்தவை யென்கின்றனர். அவற்றில் மிகச் சிறிதாகவே வினையுணர்வு காணப் படுகிறது என்றும், வேத காலத்துக்குப் பின்னர் தான், இவ்வுணர்வு நாட்டில் பயில வழங்கிவருகிறது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவருட் சிலர், இவ்வுணர்வு வேதகாலத்துக்கு முற்பட்ட தென்றும் புத்த சமண சமயங்கள் நாட்டில் பரவத் தொடங்கிய பின்பே, இவ்வுணர்வு மிகுதியும் பயில்வ தாயிற்றென்றும் மொழிகின்றனர். நம் தண்டமிழ் நாட்டிலும், தொல்காப்பியம் முதல் தேவாரம் தோன்றிய காலம் வரையில், வினையுணர்வு மிக்க பயிற்சியின்றி யிருந்தது. ஞானசம்பந்தர் காலத்திற் றான் அஃதாவது இன்றைக்குச் சற்றேறக்குறைய 130 ஆண்டுகட்கு முன்பு தான், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வினையுணர்வையே அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவையாதலின், அவற்றின் தொடர்புடைய நூல்களை விடுத்து, ஏனையவற்றை நோக்கின், அவை தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் எனக் காணப்படும்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பாகுபாட்டதாகும். இதன்கண், எழுத்ததிகாரம், எழுத்தும். அது சொல்லின் கண் இடம்பெற்றுத் தொடர்புவுறுதலும் கூறுவது; அதனால், அதன்பால் வினையியல்பு கூறும் பான்மை இன்றாம். சொல்லதிகாரம் வினை யியல்பைக் கூறுகிறது. இது, பொருளின் புடை பெயர்ச்சியாகவும் வினையென்று சுட்டி, ''வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும்'', "காலந்தாமே , முன்றென மொழிப்” என்பனவாய நூற்பாக்களால் விளக்கிக் கூறுகின்றது. பொருளதிகாரம், ஆண்மகன் ஒருவன், தன் ஆண்மை துணையாகக் கொண்டு செய்யும் பொருண்முயற்சியினை வினையென்று காட்டி, அச்செய்கை நிகழ்ச்சிகளையும் 'வினை' யென்றே வழங்குகின்றது. "வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருகாலை, இடைச்சுரமருங்கிற்றவிர்தல் இல்லை , உள்ளம் போலவுற்றுழியுதவும், புள்ளியற் கலிமா வுடைமையான'' என வருதல் காண்க. பிற்காலச் சமய நூல்கள் வழங்கும் பொருளிலும் ஆசிரியர் தொல்காப்பியனார், இவ் வினையென்னும் சொல்லை, "வினையின் நீங்கி விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்' என்ற நூற்பாவில் வழங்கியுள்ளார்.

சங்கவிலக்கியங்களுள், பதினெண் கீழ்க்கணக்கு களுள் தொகுக்கப்பட்ட சில வொழிய, ஏனையவும், தொகை நூல்களும் அகம், புறம் என இருவகை யாகும். அவற்றுட் புறப்பொருள் வழியாகிய புறநானூறு முதலியன வினையுணர்வைக் கூறு கின்றன. வினை, நல்வினையும் தீவினையும் என இருவகைத்தாய் முறையே இன்பமும் துன்பமும் பயக்குமென்பதனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர். ஆகவே, இன்பம் துன்பமும் பயக்குமென்ப தனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர் ஆகவே, இன்பம் பயக்கும் நல்வினையே மக்கள் விரும்பும் மாண்புடையதாகலின், அறிஞர், நல்வினையைச் செய்க என்று விதிப்பதும், தீவினையைச் செய்யற்க என விலக்குவதும் செய்வர். "கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று, நீர்வழிப் படூஉம் புணை போலாருயிர், முறைவழிப் படூஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம் 192) எனவும், "வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை ” (புறம் 367) எனவும் வருதல் காண்க . மேலும், இப்பெருமக்கள் பலரும் நலம் பயக்கும். நல்வினையையே விதந்து கூறியிருத்தலின், வினை யுணர்வு நல்லது செய்தற்கே சான்றோர்களால் பண்டைக் காலத்தில் மக்கட்கு வற்புறுத்தப் பட்டதென்பது தெரிகிறது. 'நல்லது செய்தலாற்றீரா யினும், அல்லது செய்தல் ஓம்புமின்' (புறம் 195) எனவும், "நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக" (ஐங் 9) எனவும் வருதல் காண்க. நல்வினை செய்தவர் இம்மையிற் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் பெறுவர் என நல்வினையின் நலமே குறித்து. "பெரும்பெயர் நும்முன், ஈண்டிச்செய் நல்வினை யாண்டுச் சென்றுணீயர், உயர்ந்தோருலகத்துப் பெயர்ந்தனன்'' (புறம். 174 ) என மாறோகத்து நப்பசலையாரும். "மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே வானோர், அரும்பெற லுலகத்தான்றவர், விதுப்புறு விருப்பொடு விரிந்தெதிர் கொளற்கே" (புறம். 213) எனப் புல்லாற்றூர் எயிற்றியனாரும் பிறரும் அறிவுறுத்தி யிருக்கின்றனர். அகப்பொரு நூல்களும், இவ்வாறே , நல்வினை இம்மையில் இசையும் மறுமையில் துறக்கமும் பயக்குமெனக் கூறுகின்றன. 'வினை விளையச் செல்வம் விளைவது போல்” (திணைமா. 150-5 என வருவதும், பிறவும் காண்க.

இருமையும் பயக்கும் நல்வினை செய்தற்கு நல்லாற்றில் ஈட்டும் பொருளும், அதனைச் செய்தற் குரிய முயற்சியும் சிறந்து நிற்றலின், அவற்றைக் குறித்து ஆண்மக்கள் தம் வாழ்க்கைத் துணைவியரைப் பிரிந்தேகுதல் நலம் என்றும், அவர் செலவு வினை வயிற் செல்லும் செலவு என்றும் சான்றோர் விரியக் கூறியுள்ளனர். "வினையே ஆடவர்க் குயிரே' (குறுந். 135), "சேறும் நாம் எனச் சொல்லச் சேயிழை , நன்றெனப் புரிந்தோய் நன்று செய்தனையே, செயல்படுமனத்தர் செய்பொருட்டு அகல்வராடவர் அதுவதன் பண்பே '' (நற். 24), 'ஈதலும் துய்த்த லும் இல்லோர்க் கில்லெனச், செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு, அம்மா வரிவையும் வருமோ, எம்மை யுய்த்தியோ வுரைத்திசினெஞ்சே" (குறுந். 63) என வருவன இதற்குப் போதிய சான்றாகும்.

இனி, ஆசிரியர் காவட்டனார் என்பவர், ''வசையும் நிற்கும் இசையும் நிற்கும். அதனால், வசை நீக்கி யிசைவேண்டியும், நசைவேண்டாது நன்று மொழிந்தும்” வாழ்தல் வேண்டும் (புறம் 359) என அந்துவன் கீரன் என்று தலைவற்கும், ஆசிரியர் குடபுலவியனார், "செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும். ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த, நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன், தகுதி கேளின் மிகுதியாள்" (புறம். 18) எனப் பாண்டியன் நெடுஞ்செழியற்கும் அறிவுறுத்தியனவும் பிறவும், "அந்தோ வினையே" என்று அழுங்கி மயங்காது செய்வினையைச் சிறக்க அச்சமின்றிச் செய்யவேண்டும் என்பதையே வலி யுறுத்தி விளக்குகின்றன. ஓரொருகால், ''நன்றி விளைவும் தீ தொடும் வரும்" (நற். 188) எனினும், அத்தது கண்டு அஞ்சாது வினை செய்தல் வேண்டும் ஒருவினையைச் செய்யுமிடத்து, இடும்பையும் இடுக்கணும் வந்து தீது செய்யுமாயினும், "வினையே யாவர்க்குயிர்'', ''வினைக் குறை தீர்ந்தாரி றீர்ந்தன்றுலகு", "சுடச்சுடரும் பொன் போல் ஒளி விடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவற்கு" "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்றெல்லாம் சான்றோர் கூறிய பொருளுரைகள், அவற்றிற் கஞ்சு தலும், வினையில் மடங்குதலும் கூடா என்பதனையே வற்புறுத்துகின்றன.

இக்கூறியவாற்றால், வினையெனச் சான்றோர் எடுத்துக் கூறியது யாவரும் மடியின்றிச் செய்தற்குரிய இம்மையில் இசையும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் நல்வினையே யென்றும், அதனால், நலம் பயக்கும் நல்வினையே பண்டைச் சான்றோரால் நல்வினை , நன்று ஆள்வினை, வினையெனப் பல்லாற் நானும் விதந்து கூறப்பட்டதென்றும் அறிகின்றோம். "யாம் செய் தொல்வினைக் கெவன்பேதுற்றனை" (நற். 88) என்றாற் போல்வன , வினை செய்யுமிடத்து, எதிர்பாராமல் வரும் இடர்கட்கு உள்ளம் உடை யாமல் ஊக்கம் கோடற்கெழுந்தவை என்றும், இடுக்கண் வருங்கால் நகுக' என்றாற்போல்வன , "இன்பமும் இடும்பையும் உணர்வும் பிரிவும், நண் பகலமையமும் இரவும்போல, வேறுவேறியலவாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை" (அகம் 327) எனவுணர்ந்து, இவற்றைப் பொருள் செய்யாது , செய்வினையைக் கடைபோக ஆற்றுவது குறித்துப் பிறந்த அறவுரையென்றும், ''துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையில்வழி'' என்றாற்போல்வன , உயிரின் வழி வினை நிகழ் தலுண்டேயன்றி, வினையின் வழி உயிர் இயங்குவ தில்லை என்றும் காட்டக் காண்கின்றோம். இதுவே தேவார காலத்திற்கு முன்னிருந்த சான்றோர் கொண்டிருந்த வினையுணர்வாகும்.

இதற்கிடையே, "காமஞ் சான்ற கடைக்கோட் காலை" மக்களொடு துவன்றிய கிழவனும் கிழத்தியும் சிறந்தது. பயிற்றல் வேண்டும் என்ற பண்டைய முறை மாறி, "குழவியிடத்தே” துறவு விரும்பி, "இன்னா தம்மவுலகம், இனிய காண்க விதன் இயல்புணர்ந் தோரே” என்றும், "ஓடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே" என்றும் வந்த உரை களால், உலக வாழ்வில் மக்கட்கு உவர்ப்பும், செய்யும் வினையாவும் துன்பமுடிவின் என்ற முடியும் மக்கள் கருத்தில் இடம் பெறத் தொடங்கின. முயற்சியுடையார்க்குத் தேறுதல் சொல்லி, ஊக்கம் கொளுத்தும் கருத்தாற் பிறந்த வினையுணர்வுகள், வினைக்கண் மனம் மடிந்து சோம்பித் திரிவார்க்கு அரணாகத் தொடங்கின. வினையே உயிர்கட்கு முதல் என்றும், வினைவழியே உயிர் இயங்குதற்குரிய தென்றும் மக்கள் பேசத் தொடங்கினர். வினைவழிப் பிறக்கும் இன்பமும் துன்பத்திற்கே ஏதுவென்றும், துன்பமே உயிர் உடலொடு கூடிப் பெறக் கடவ பயன் என்றும் சில சான்றோர் தெருட்டத் தொடங்கினர். இந் நிலையில், தமிழ் நாட்டிற்குப் புதிய வாய் வந்த சமண புத்த சமயங்களும் துணை செய்யத் தொடங்கின. யாவரும் எப்போதும், எச்செயலைச் செய்தற்கும், ''அந்தோ வினையே'' என்று அழுங்கி ஊக்கம் குன்றுவாராயினர்.

ஒருவன் தன் ஆண்மையால் முயன்று பெறக் கூடிய நல்லுண்டி, நல்லுடை, நல்லுறையுள் ஆகிய இவையாவும் முன்னை வினைப்பயனே; ''பண்டு செய்வினையலால் பரவு தெய்வ மொன், றுண் டெனில் தான் பயன் உதவ வல்லதோ?'' என்பன போன்ற கருத்துக்கள் எழுந்து, நாட்டில் ஆண்டவன் அருட்டிறத்தையும், அவனை வழிபடுவதன் நலத்தை யும் அசட்டை செய்யுமாறு தூண்டின. இக்காலமே நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலமாகும்; தன் உயிரறிவுக் குள்ள சிற்றுரிமையை நெகிழ்த்து, வினைக்கு அடிமை யாக்கும் சிறுமைக்காலம்; நலமும் தீங்கும், இன்பமும் துன்பமும் உயிர் தன் உரிமையறிவால் ஆண்டவன் திருவருளால் பெறுதல் கூடும் என்னும் உண்மை நெறியை மறைத்து நின்ற காலமாகும்.

ஆகவே, இக்காலம், நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலம், இற்றைக்குச் சுமார் சற்றேறக் குறைய 1300 யாண்டுகட்கு முற்பட்ட காலமாகும். இக்காலத்தில், வினையுணர்வுக்குத் தலைமையும், ஆண்டவன் திருவருட் சிறப்பிற்குக் கீழ்மையும் மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கும் புதுக் கொள்கை களும், புதுச் சமய நெறிகளும் கற்பித்து வந்தன. அதனால், நம் ஆளுடைய பிள்ளையார், வினை களையும், அவை பயக்கும் பயனையும், வினைத் தொடர்பைக் கெடுக்கும் பரமனது முதன்மையையும், பிறவற்றையும் விளக்கியருளும் கடன்மையுடையரா னார். அவரது அருட்பாடல்கள் பலவும் வினையின் தொடர்பறும் முறைமையை யுணர்த்தும் நோக்கமே பெரிதும் உடையவாயின.

வினைகள் யாவும் பண்டைவினை , நிகழ்வினை (செய்வினை), எதிர்காலவினை யென மூவகையாகும். அவையாவும் பரமன் திருவருள்வழி நிற்பார்முன் வலியழிந்து, தொடர்பற்றுக் கெடும் என்பது ஆளுடைய பிள்ளையார் மக்கட்கு அறிவுறுத்திய வினையுணர்வாகும். "தொல்லை வல்வினை தீர்ப்பர் சுடலை வெண்பொடி யணிசுவண்டர்'' (திருத் தெங்கூர்), "மெய்த்தன்னுறும் வினைதீர் வகை தொழுமின்" (ஆலந்துறை), "வெய்யவினை நெறிகள் செல்வந்தணையும் மேல்வினைகள் வீட்டிலுறுவீர்'' (மாகறல்) என்பன போல வரும் திருமொழிகள் வினைவகையினையும், அவற்றின் வலியின்மையை யும் உணர்த்துவனவாகும்.

வினைகளே உயிர்கள் நுகரும் இன்பதுன்பங் கட்கு ஏது வாகலின், ஆண்டவன் வேண்டப்படான் என்று கூறிய சமயக் கணக்கர் பலர் அக்காலத் திருந்தனர் என முன்பே கூறினோம்; அவர்களைத் தெருட்டுவார் போலச் சிலபல வுரைகள் பிள்ளையார் அருளியுள்ளார்.

    "நல்குரவும் இன்பமும் நலங்களவையாகி
    வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிடமென்பர்,
    மல்குமடி யார்கள் படியார விசைபாடிச்
    செல்வமறை யோருறை திருப்புகலியாமே”

என்றும்,

    "துன்பானைத் துன்பம் துடைத் தருளாக்கிய
    இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
    அன்பானை யணிபொழிற் காழிநகர் மேய
    நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே”

என்றும், இவ்வாறு பலவும் வருவன உள. வினைகள் அறிவில் பொருள்களாகலின், இவை தம்பயனைக் கொண்டு வினை முதலை நுகர்விக்கும் திறமுடைய அல்லவாகலின், அது செய்தற்குரிய அறிவுடைப் பொருள் ஆண்டவனேயென்றும், அதனால், அவனன்றி வினைமுதல் வினைப்பயனை நுகர்தல் கூடாமை கருதி , வினைப் பயன்களைக் கூட்டலும் பிரித்தலும் வல்ல அவனையே நல்குரவும் செல்வமும், துன்பமும் இன்பமுமாக உபசரித்துக் கூறியும், அவனுக்கு முதன்மையும் வினைகட்குக் கீழ்மையும் காட்டியும் நம் ஆளுடைய பிள்ளையார் தெருட்டியருளுகின்றார்.

வினைகள் தம் பயனை வினைமுதல் நுகருமாறு கூட்டும் அறிவுடையவல்ல வாயினும், அவ்வினை முதலைப் பற்றி விடாது தொடர்ந்து நின்ற, அவ்வுயிர் எத்துணைப்பிறவி யெடுக்கினும், பிறப்புத் தோறும் அதன்கட் கிடந்து தொடர்தல் குறித்து அவைகளை ''அருவினை'' யென விசேடித்தல் நம் நாட்டுச் சமயக்கணக்கர் மரபு. நம் ஆளுடைய பிள்ளையாரும், வினைகளை "அருவினை', யென்று விசேடிப்பாரா யினும், அவற்றின் அருமையினைச் சிதர்க்கும், தலைமை ஆண்டவற்குண்டென வலியுறுத்துவதை விடுவதிலர்.

    "பணிந்தவர் அருவினை பற்றுறுத் தருள்செயத்
    துணிந்தவன் தோலொடுநூல் துதை மார்பினில்
    பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
    பணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே"

என்பதும் பிறவுமாகிய திருப்பாட்டுக்கள் இவ் வுண்மையை நிலை நிறுவுகின்றன.

இனி, உயிர்களைப்பற்றி நிற்கும் வினைகளின் தொடர்பு கெடுதற்கு ஆண்டவனை வழிபடும் செய்கையே உரிய செய்கையாகும் என்பதைப் பல திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும், உள்ளு றுத்தும் ஞானசம்பந்தப் பிள்ளையார் தெருட்டி யருளுகின்றார். வெளிப்படையாகத் தெருட்டுதலைக் காட்டும் பாசுரங்கள் மிகவாய்ப் பல்கி யாவரும் காணக்கிடத்தலின், அவற்றை விலக்கி உள்ளுறுத் துரைக்கும் பாசுரங்கள் சிலவாய்ச் சிலரே காணத் தக்கவாய் இருத்தலின், அவற்றுள் ஒன்றைக் கூறுகின்றோம்.

நம் ஆளுடைய பிள்ளையார் சீகாழிக்கருகி லுள்ள திருக்கோலக்கா என்னும் திருப்பதிக்குச் சென்று, தம் மெல்லிய கைகளால் தாளம் போட்டு ''மடையில் வாளைபாய்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளிய செய்தி தமிழ்நாடு நன்கறிந்ததாகும். ஆயினும், இப்பதிகத்துள் உயிரறிவு ஆண்டவனைப் பாடிப் பரவுதலாம் கலங்கி அருண்மணங்கமழ்ந்து, வினைப் பிணிப்புத் தளர்ந்து, அறியாமை நீங்கிப் பேரின்ப நுகர்ச்சிக் குரிமை யெய்தும் திறத்தை உள்ளுறுத்துரைக்கின்றார்.

    "மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
    உடையும் கொண்ட உருவம் என்கொலோ"

என்பது முதற்பாசுரம். இதில், அடியார்கள் பரமானது அருள் நினைந்து பாடிப்பரவித் திளைத்தலால், அவர் தம் உயிரறிவு கலங்கி அருண் மணம் கமழுகின்றதென்பதனை, "மடையில் வாளை பாய, மாதரார் குடைதலால் நெய்யொடு குங்குமம் நிறைந்துநறுமணம் கமழும் பொய்கை" என்பதனால் குறித்தருளுகின்றனர்.

அருள் நினைந்து பரவிப்பாடியாடும் அடியார் உள்ளம் அவன் அருண்மணமே கமழ்தற்குரிய அவனது அருளை, அருள் நிலையை அடுத்த பாசுரத்தில்,
"பெண்டாம் பாகமாகப் பிறைச் சென்னிக் கொண்டான் கோலக்காவு கோயிலாக் கண்டான் பாதம் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை யுலக முய்யவே”
என்று அருளுகின்றார். பெண்ணென்பது திருவருள், பெண்ணைப் பாகங் கொண்டதோடு பிறையைச் சென்னியிற் கொண்டதும் அருளே என்பதனைப் பிறிதோரிடத்தில், "முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி, முடியுடையமரர்கள் அடிபணிந்தேத்தப், பின்னிய சடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாள னார் பேணிய கோயில்" "என்றும், பெண்ணைப் பாகம் கொண்டதும் உயிர்கட்கு அருள் செய்தற்கே என்பதை, ''ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச், சேணின்றவர்க் கின்னம் சிந்தை செய் வல்லான், பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணும் கடல்நாகைக் காரோணத்தானே" என்புழியும் விளக்கியருளுகின்றார்.

இத்தகைய அருள்வள்ளல், தன்னை விரும்பிப் பாடியவழி , அடியார் வினைப்பிணிப்புப் பறையச் செய்யும் எளிமையுடையன் என்பதனை,

    "பூணற் பொறிகொள் அரவப் புன்சடை
    கோணற் பிறையன் குழகன் கோலக்கா
    மாணப் பாடி மறை வல்லானையே
    பேணப் பறையும் பிணிக ளானவே"

என்று கூறியருளுகின்றார். உயிர்களைப் பிணித்து நிற்றலின், வினைகளை ஈண்டு, 'பிணிகளானவே'' என்கின்றார். ''பாடுவாரிசைப் பல்பொருட்பயன் உகந்தன் பால், கூடுவார் துணைக் கொண்டதும் பற்றறப் பற்றித் , தேடுவார் பொருளானவன்" (தேவூர்) எனப் பிறிதோரிடத்து வெளிப்படையாகக் குறித் தருளுகின்றார்.

இங்ஙனம் பிணித்துக் கொண்டு நிற்கும் வினை களைத் தகர்க்கும் முறையினை அடுத்த பாசுரத்தில் மிக வருமையாகக் குறிக்கின்றார். பரமன் கையில் ஏந்தும் மழுப்படையின் வெம்மையாலும், மறி மானின் முழக்கத்தாலும் உயிரறிவைத் தழுவிப் பிணித்து நிற்கும் வினைகட்கு முதற்கண் தளர்ச்சி யெய்துகின்றதென்பார்,

    "தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்,
    மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்
    குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
    இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே"

என்று அருளுகின்றார். வினைப்பிணிப்பை விரைய நீக்கியவழியெய்தும் கேடுகருதி, பைய நீக்குவராதலின், அதுகுறித்து, அவனை, "ஏத்தி வாழ்மின்'' என அறிவுறுத்துகின்றார். பைய நீக்குவதே அவரது பான்மை யென்பதனைப் பிறிதோரிடத்தும், "செய்ய மேனி வெளிய பொடிப்பூசுவர், சேரும் அடியார் மேல், [#] மெய்ய நின்ற பெருமான்'' (புகலூர்) என மொழிந்தருளுகின்றார். ஏத்துமிடத்தும் இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மின் என்கின்றார். "துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி, மறக்குமா றிலாதவென்னைமையல் செய்து மண்ணின் மேல், பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டிருக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே" என்ற திருப்பாட்டிலும், இழுக்கிய வழி , பிறக்குமாறு காட்டுதலும், இழுக்காவழி, பிறப்பு விட்டு இறக்குமாறு காட்டுதலும் உண்மையின், இழுக்குகின்ற தென்னை' என்று வற்புறுத்துதல் காண்க.
-------
[#] அடியார் மேல் நின்றவினை பையப் பாற்றுவர் என இயையும்.

இவ்வாறு, தழுவிட்டுத் தளர்ச்சி யெய்திய வினை, நீங்கற்குரிய பாகம் பெறுவதற்கு உரிய முயற்சி, அவனைவிடாது பயிலும் பயிற்சியே யாகும் என்பார்,

    "மயிலார் சாயல் மாதொர் பாகமா
    எயிலார் சாய் எரித்த எந்தை தான்
    குயிலார் சோலைக் கோலக் காவையே
    பயிலா நிற்கப் பாவம் பறையுமே”

என்று மொழிந்தருளுகின்றார். குயில் கூடிப்பாடி மகிழும் சோலை கூறவே, கோலக்காவில், அடியார் பலரும் சேர விருந்து அவன் திருவருளைப் பாடுதல் பெற்றாம். அடியாரொடு பயிலுதல் வேண்டும். அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவார் "உரை தளர்ந்துடலார் நடுங்காமுனம், நரை விடையுடை யானிடம் நல்லமே, பரவுமின் பணிமின் பணிவா ரொடே, விரவுமின் விரவாரை விடுமினே'' என நாவரசப்பெருமானும், ''மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்விக்கும், சிறப்பிலார்தம் திறத்துச் சேர்வை - அறப்பித்துப், பத்த ரினத்தனாய்ப் பரன் நினைவினாலுணரும், மெய்த்தவரை மேவாவினை" என மெய்கண்ட தேவ நாயனாரும் தெருட்டி யருளுதலால் இவ்வுண்மையை அறிகின்றோம்.

இத்தகைய பயிற்சியால் நீங்குதற்குரிய பக்குவம் பெற்று வரும் வினைகள், பின்னர், அவன் திருவடி ஞானத்தால் வெடிபட்டு வீற்று வீற்றோடிவிடும்; ஆதலால், அத்திருவடியை அடைந்து வாழ்மின் என அடுத்த பாசுரத்தில், நீங்கற்குரிய வாய் வரும் வினை கள் அறவே நீங்கும் முறையைத் தெரிவிக்கின்றார்.

    "வெடிகொள் வினையா வீட்ட வேண்டுவீர்,
    கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
    கொடி கொள் விழவார் கோலக் காவுளெம்
    அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே "

என்பது பாசுரம். இதன்கண் வெடிகொளல் என்பது சிதர்த்தொழிதல்; "கடிகாவில் கால்துற்றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும் இனமயில் போல், கேளிர் பிரிந்தார் அலறுபவே'' (களவழி 40) என்பது னால் அறிக. மெல்ல நீங்கிவரும் வினைகள் மீட்டும் முன்னைப் பயிற்சியத்தால் மீளத் தோன்றா வண்ணம் கொடுக்க வேண்டியிருத்தலால், "வினையை வீட்ட வேண்டுவீர்" என விளித்து, "அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே" என்று அருளுகின்றார். இக்கருத்தையே, திருமாகறற்பதிகத்திலும்,

    "வெய்யவினை நெறிகள் செல் வந்தணையும்
    மேல்வினைகள் வீட்டலுறுவீர்,
    மைகொள்விரி கானல்மது வார்கழனி
    மாகறலுளான் எழில்தார்
    கையகரி கால் அரையின் மேலதுரி
    தோலுடைய மேனியழகார்
    ஐயனடி சேர்பவரை யஞ்சியடையா
    வினைகள் அகலுமிகவே."

என்று அறிவுறுத்துகின்றார். மேல்வினைகளை வீட்டிய வழி, நின்ற வினையும் பற்றுக் கோடின்றிக் கெடும் என்றற்கு,

    "நிழலார் சோலை நீல வண்டினம்
    குழலார் பண்செய் கோலக் காவுளான்
    கழலால் மொய்த்த பாதம் கைகளால்
    தொழலார் பக்கல் துயர மில்லையே”

என்று பாடியருள்கின்றார். பாதம் நினைந்து தொழுமிடத்து, அதன் அழலொளி வினையிருள் எய்தா வகைக் கெடுத்தலின், அடியார்க்குத் துயர மில்லையென்பார் , "பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரமில்லையே" என்றார். அழகாய் கழலான் அடிநாளும் கழலாதே விடலின்றித் , தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே" (நெய்த்தானம்) எனப் பிறாண்டும் இதனையே தெருட்டுவர்.

நிழல் மிக்க சோலையின், வண்டினம் தேனுண்டு பண்பாடும் எனவே, அவன் திருவடி நீழலில் பெரும் போகம் துய்க்கும் மகிழ்வால், அடியார்கள் அவன் திருப்புகழ் பாடுதல் பெறப்படும். நாவரசரும், பரமன் திருவடி செந்தேன் பொழியும் என்பதனை, "சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிவன" என்றே மொழிந்தருளுகின்றார்.

இவ்வாறு, வினையியல்பும், அது பரமன் வழிபாட்டால் நீங்குமாறும், நம் ஆளுடைய அடிகள் வெளிப்படையாகவும், உள்ளுறுத்தும் தெரிவித் தருளிய போழ்தும், சிலர்பலர், அவ்வினையியல்பை யுணர்ந்தும் அயர்ந்திருந்தனர். அவர்க்கு நல்லறிவு கொளுத்துவார் திருநீலகண்டத் திருப்பதிகத்தில் அவர்தம் கொள்கையை மறுத்துப் பரமனை வழிபாடு புரியுமாறு நன்கு தெருட்டுகின்றார்.

    "அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லு மஃதறிவீர்,
    உய்வினை நா டாதிருப்பதும் உந்தமக் கூனமன்றே
    கைவினை செய் தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்"

என்பது அப்பாசுரம். இதன்கண், வினைமேற்பழி யேற்றி, தாம் நுகரும் பயன்யாவும் முன்வினையால் வந்தன என்பாரை நோக்கி, "அவ்வினைக் கிவ்வினை யாம் என்று சொல்லும் அதனை மட்டில் அறிந் திருக்கின்றீர்களே, அவ்வறிவால், அவ்வினையைக் கெடுத்தற்குரிய நெறியும் காண்டல் கூடும் என்பதை அறியா திருப்பது உமக்குக் குற்றமாகுமே" என்பார், "உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே” யென்றார். கொடுத்தற்குரிய அந்நெறியும் வேறன்று; ஈதே என்றற்கு, "கைவினை செய்து எம்பிரான் கழல் ஏத்துதும்" என்றும், "அதுதவிர யாம் வேறு செய்தற்குரிய நெறியில்லோம்; ஏனெனில், நாம் அவ்வாண்டவனுக்கு அடிமை" என்பதனை வற் புறுத்த நினைத்து, "நாம் அடியோம்'' என்றும், அச்செயலால் நாம் தூய சத்துப் பொருளாதலின், அசத்தாகும் செய்வினைகள் வந்து சேர்வது இல்லையாம்” என்பார், "செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா" என்றும், இதற்குச் சான்று "திருநீல கண்டமே" என்றும் தெருட்டியருளுகின்றார். ''சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்" என வள்ளுவப் பெருந் தகையும் வழங்கியிருக்கின்றார்.

இதுகாறும் கூறியவாற்றல், வினையுணர்வின் பயன் பரமன் திருவடியைப் பரவித் தொழுவதே யன்றிப் பிறிதில்லை யெனத் திருஞானசம்பந்த சுவாமிகள் தெருட்டியருளுகின்றார் என்பதாம்.

''பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் - நிறையுலகின்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்"
-----------------------

11. பட்டினத்துப் பிள்ளையார்

சைவத்திருமுறை பன்னிரண்டனுள் பதினோ ராந் திருமுறையிற் காணப்படும் நூலாசிரியன்மார் களான சான்றோர்களுள் பட்டினத்துப்பிள்ளை யாரும் ஒருவராவர். இவர் பாடியனவாகக் கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு வேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது என ஐந்து நூல்கள் பதினோராந் திருமுறையில் உள்ளன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் தோன்றி வளர்ந்து வாழ்ந்தவர்; இவர், பிற்காலத்தே துறவு பூண்டபின் சான்றோர்களால் பட்டினத்துப்பிள்ளையா ரென்று வழங்கப்படுவாராயினர் (திருவிடை. 30). இவர், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சைவ வணிகர் குடியில் கடல் வாணிகம் செய்து மிக்க செல்வம் பெற்ற செல்வரொருவருக்கு மகனாராவர். திருவெண்காடருடைய தந்தை பெயர் சிவநேசர் என்றும் தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் கூறுவர்.

திருவெண்காடர், உரிய காலத்தில் திருமணம் . செய்து கொண்டு, கடல் வாணிகம் செய்து, பெருஞ் செல்வராய் விளங்கினார். அவர்க்கு மருதவாண னென்றொரு மகன் பிறந்து, பதினாறாண்டளவும் இருந்து, பின் இறந்து போனான். அதனால் கவலை மிகக் கொண்ட திருவெண்காடர், திருவிடை மருதூரிலிருந்து வறுமை மிக்கு வருந்தி வந்த ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவை விலைக்கு வாங்கி மருதவாணனென்றே பெயரிட்டு வளர்த்து வந்தார். அவனும் அவருடைய உண்மை மகனாகவே வளர்ந்து சிறந்து கடல் வாணிகம் செய்து பெருஞ் செல்வம் ஈட்டித் தந்து, காதற்ற ஊசி யொன்றையும், 'காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்றெழுதிய ஓலை நறுக்கொன்றையும் கொடுத்து விட்டு வெளிச் சென்று மறைந்து போனான். அதுகண்ட திருவெண்காட ருள்ளத்தில் துறவு பிறந்தது. அந்நாளில் அவரிடம் தலைமைக் கணக்க ராய்ச் சேந்தனார் என்னும் சான்றோ ரொருவர் இருந்தார். வெண்காடர் தமது பெருஞ் செல்வத்தைப் பொது மக்கட்கு வழங்கி விடுமாறு சேந்தனாரைப் பணித்துக் கையில் ஓடும் அரையில் கோவணமும் கொண்டு வெளியேறினார். மருதவாணன் பிரிந்த சின்னாட்களில் வெண்காடருடைய மனைவியாரும் காலமாயினர். வெண்காடருடைய தாய்மட்டில் உயிரோடிருந்ததனால், அவர்க்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிட்டு, சிவபெருமான் எழுந் தருளும் திருப்பதிகட்குச் சென்று பரவிவழிபடும் செயலை அவர் மேற்கொண்டார். வீடுதோறும் சென்று ஓட்டில் உணவிரந் துண்டனர். அவருடைய உறவினர், வேந்தனைக் கொண்டும் வேறு தக்கோரைக் கொண்டும் அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர்; சேந்தனாரைச் சிறையிடுவித்தனர்; திருவெண்காடருக்கும் நஞ்சு கலந்த உணவளித்துக் கொல்ல முயன்றனர்; ஒன்றாலும் திருவெண் காட்ருடைய உள்ளம் மாறவேயில்லை.

திருவெண்காடர், திருவிடைமருதூரில் சின் னாள் தங்கி இடைமரு திறைவனை வழிபட்டுக் கொண்டு வந்தார். அந்நாளில் அவருடைய தாயார் இறந்தனர்; அவர்க்குரிய இறுதிக் கடன்களைச் செவ்வே ஆற்றிவிட்டு மீளவும் திருவிடைமருதூர் சென்று சேர்ந்தார். அங்கே யிருக்கும்போது அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோவையைப் பாடி னார். பின்பு அவர் சீர்காழி, தில்லை , காஞ்சிமாநகர், காளத்தி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு வடநாடு சென்றார்.

வட நாட்டில் பத்திராசலப் பகுதியில் மாகாளம் என்னுமோர் ஊரை யடைந்து, ஒரு நாள் இரவு அங்கேயிருந்த பாழ்ங்கோயிலொன்றில் நிட்டை கூடியிருந்தார். அந்நாளில் அப்பகுதியைப் பத்திரகிரி யென்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய அரண்மனையில் களவு புரிந்த கள்வர் சிலர், திருவெண்காட ரிருந்த கோயிலுக்கு வந்து, தாம் திருடி வந்த அணிகலன்களுள் பதக்கமொன்றை யெடுத்து, அங்கிருந்த கழுத்திலிட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர் பட்டினத்துப்பிள்ளை யாரைக் கண்டு கள்வரெனக் கருதிக் கைக்கொண்டு சென்று கழுவேற்றத் துணிந்தனர். கழுமரத்தைப் பிள்ளையார் நோக்கினர். உடனே அஃது எரிந்து சாம்பராயிற்று. அதுகண்டு வியந்த காவலர் வேந்த னுக்குத் தெரிவித்ததும், பத்திரகிரி விரைந்தோடிவந்து பிள்ளையாரைக் கண்டு துறவு பூண்டு அவர்க்கு மாணவராய் அவர் நிழல் போல் தொடர்ந்து வரலாம் னார். இருவரும் திருவிடைமருதூரடைந்து இறை வனை வழிபட்டு வந்தனர். வருகையில் பத்திர கிரியாரை நாயொன்று சுற்றிக் கொண்டு திரிந்தது.

திருவிடைமருதூரில், ஒருநாள், பசியுற்று வருந்திய ஒருவர் பட்டினத்துப்பிள்ளையாரைக் கண்டு உணவு வேண்டி நிற்க, அவர் பத்திரகிரி யாரைக் காட்டி, அந்தச் சமுசாரியிடம் செல்க' என்றார். அது கேட்டதும், பத்திரகிரியார், தம்பால் இருந்த ஓட்டையெடுத்து, இதுவும் இந்த நாயுமன்றோ என்னைச் சமுசாரியாக்கின' என்று வருந்தி நாய்மேல் எறிந்தார். அது நாயின் மண்டையில் படவே நாய் இறந்து போயிற்று. சின்னாட்குப் பின் பத்திரகிரியும் இறைவன் திருவடியடைந்தார்.

முடிவில், பட்டினத்து அடிகள் திருவொற்றி யூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள், கடற்கரையில் உள்ள நீர்நிலையில் ஆடை யொலிக்கும் ஏகாலிச்சிறுவர் விளையாடுவது கண்டார். அவரோடு தாமும் விளையாடலுற்று, அவர்கள் தம்மை ஓரிடத்தில் புதைத்தால் தாம் வேறோரிடத்தில் தோன்றிக் காட்சியளித்து இன்புறுத்தினார். இவ்வகையில் அவர்கள் தம்மை ஆழத்தில் புதைக்குமாறு செய்து, இறுதியில் அவர் காட்சி வழங்காது சிவலிங்கமாக மாறினார் என்பர்.

பிள்ளையார் சீர்காழியில் தங்கியபோது திருக்கழுமல மும்மணிக்கோவையும், காஞ்சி மாநகரில் திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், திருவொற்றியூரில் திருவொற்றியூர் ஒருபாவொரு பதும், தில்லையில் கோயில் நான்மணி மாலையும் பாடியருளினார்.

பிற்காலத்தே சுமார் இருநூறு இருநூற்றைம்பது ஆண்டு கட்கு முன்பு தோன்றிய துறவியொருவர் பட்டினத்துப் பிள்ளையென்ற பெயரால் நிலவினர். அவரும் சில பாட்டுக்களைப் பாடினர். பிற்காலத் தார் அவரையும் திருவெண்காடான பட்டினத்துப் பிள்ளையென்றே கொண்டு அவர் பாடல்களையும் பிள்ளையார் பாடலாகக் கருதிப் பேசலாயினர். உண்மை யாராய்ச்சி, இருவரையும் வேறாக்கி, இருவர் பாடல்களையும் வேறுபடுத்திக் காட்டிவிட்டது.

சிவனை வழிபடும் சைவர்களுக்கு வேதம், சிவாகமம், புராணம் முதலியன சமய நூல்களாகும். வேத நான்கும் இறைவன் திறமே மொழியும்; மொழியுங்கால் அவன் பெரியதிற் பெரியன் என்றும் சிறியதிற் சிறியன் என்றும் மொழியும்; (கோயில் 12). சிவாகமங்களுக்குச் சித்தாந்த மென்பதும் பெயர் ராகலின் அவற்றைச் சைவசித்தாந்த மென்றும், அவற்றை இறைவனே உபதேசித் தருளினன் என்றும் சைவர் கூறுவர்; இக் கருத்தையே பட்டினத்துப் பிள்ளையாரும், 'கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர்வாய' (கழுமல , 13) என்றும், வேதம், மந்திரம், வேள்வி, இசை முதலியவற்றையும், ஞானசிவாகம் வகைக் கலைகளையும் ஒழுக்க நெறிகளையும், பத்தி நெறிகளையும் விளக்குவன கழுமல். 22) என்றும் கூறினர்.

இத்தத்துவ ஆராய்ச்சி நெறியால் தன்னை யறிவதும், அதனால் தலைவனான சிவனையறிவதும் வேண்டும் என்பர்; "தன்னை யறியத் தலைப்படும் தலைமகன்'' என்றும் சான்றோர் கூறுவர். அத் துறையில் சென்று தற்காண்டல் முயற்சியில் ஈடுபட்ட பிள்ளையார், உடலை, மயிர், தோல், புண், குருதி, எலும்பு, எலும்பிடையுள்ள மூளை விழுது, அதனுள் ஒழுகும் வழும்பு, புழு, மலம், நரம்பு, பிணி எனப் பகுத்துக்கண்டு, "இன்னது யானென் றறியேன் என்னை, எங்குந்தேடினன் யாதிலும் காணேன்" (திருவிடை. 13) என வுரைப்பர். உடற் கூற்றாராய்ச்சி யையும் தெரிந்து கொண்டு தெரியாதது காண்டல் வகையில் மயிர் தோல் முதலிய புறப்பொருளினின்றும் அகப்பொருளை நாடிக் காணும் முறை இவர் பால் அமைந்திருப்பதும், தசையைப் புண்ணெனத் திருவள்ளுவர் கூறியது கொண்டு, தாமும் புண்ணெனக் குறிப்பதும் குறிக்கத்தக்கனவாகும்.

இவ்வண்ணம் திருவருள் வாழ்வும் உலகியற் காட்சியும் இனிது பெற்று இறைவனைச் சிந்தையிற் கண்டு விளங்கும் பிள்ளையார், ஏனையோரைக் கண்டு மனமிரங்கி, 'எம்மனோர்கள் இறைவனாகிய கனியை) இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பச் சிலர் இதின் வாராது, மனத்தைப் பாழாக்கி, பொய்யும் பாவமும் கொடுமையும் துன்பமும் பெருக்கி, ''மரணம் பழுத்து நரகிடைவீழ்ந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது, இமைப்பிற்கழியும் இயற்கையோ ராய்'' (திருவிடை 10) உள்ளனர் என இரங்கிக்
கூறுகின்றார்.

இனி, இவர்க்கு மாறாகக் கடுந்தவம் மேற் கொண்டு உடலை வருத்தும் பிறரையும் காண் கின்றார். அவர்கள் மனைவி மக்களைத் துறந்து காடு மலைகளையடைந்து மழையென்றும் வெயிலென்றும் பணியென்றும் பாராது நீர் பலகால் மூழ்கி, நிலத்திற் கிடந்து சடை புனைந்து , உடை துறந்து உண்ணா நோன்பு கொண்டும், நாயும் கிழங்கும், காற்றுதிர் சருகும் உண்டும் இயல்பாகவே தனர்தற்குரிய யாக்கையைத் தளர்வித்து "அம்மை முத்தியடைவதற் காகத், தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்" (திருவிடை 19). இவ்வாறன்றி, இல்லிருந்து நல்லன நுகர்ந்து, கொள்வன கொண்டு கொடுப்பன கொடுத்துப் பூசுவது பூசி, புனைவன புனைந்து "ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து, மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து. இவ்வகை" யிருந்தும், திருவைந்தெழுத்தை மறவாது சிந்தையைச் சிவன்பால் சேர்த்தியிருப்பார்க்கும் கடுந்தவம் செய்வோர் பெறும் பேரின்பம் இனிது எய்தும் என்று கூறி, இதனை விளக்குவாராய், "வல்லாவொருவன் கைம்முயன்றெறியினும், மாட்டா வொருவன் வாளா எறியினும், நிலத்தின் வழா அக் கல்லே போல, நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே” (திருவிடை 19) என்று கூறுவர். பிறிதோ ரிடத்தில், இவ்வுலகம் நின்னுடையது. இதன் கண் நிகழும் நன்மை தீமைகள் யாவும் நின்னுடைய வே;
ஆதலால், இதன் கண் வாழும் யான்.

    "பத்தி யென்பதோர் பாடு மின்றிச்
    சுத்தன் ஆயினும் தோன்றாக் கடையே, னின்னை
    இறைஞ்சில னாயினும் ஏத்தில னாயினும்
    வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினும்
    கருதி யிருப்பன் கண்டாய்” (திருவிடை 28)

என்று கூறுவதும், தாம் இறைவன் திருவருள் வழி நிற்றலால், தம்செயல் யாவையும் இறைவன் தன் செயலாய் ஏன்று கொள்ள வேண்டுமெனவும், தன்னை நினைத்தற்குரிய நெறியில் நினைக்குமாறு செய்ய வேண்டுமெனவும் வேண்டுவராய் 'மனம் மருண்டு புன்மையினினைத்துப் புலன் வழிப்படரினும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின். நினைக்குமோ நினைக்கப் பெறுதல் அனைத் தொன்றும் நீயே யருளல் வேண்டும்" (கோயில். 32) என்று கூறுவதும் பிறவும் அவர் சீவன் முத்தராய் வாழ்ந்த குறிப்பைப் புலப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்பினையுடையார்க்கு இறை வன் தொண்டராய்த் தொண்டு படுவதில் பெரு விருப்பும் இயற்கையாக வந்து அமைவனவாம். பெருவிருப்பத்தை "நின் சீரடியார் தம் சீரடியார்க்கு, அடிமை பூண்டு நெடுநாட்பழகி முடலை யாக்கை யொடு புடைபட்டொழுகி அவர் கால் தலை யேவல் என் நாய்த்தலையேற்றுக் கண்டது காணினல்லது ஒன்று உண்டோ மற்றெனக்குள்ளது பிறிதே'' (திருவிடை 7) என்பதனாலும், பெருமிதத்தை, ''அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யா மிண்டர் மிண்டித்திரிவார். எனக்கு என் இனி நான் அவன் தன், தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே" (கோயில் 38) என்பதனாலும் வெளிப்படுத்துகின்றார்.

இப்பெற்றியோர்க்கு எதன்பாலும் விருப்பு வெறுப்புக் கிடையாது. அவர்கள் துறக்க வாழ்வும் நரக வாழ்வும், பிறர் கண்டு தம்மை நல்லரெனினும் தீயரெனினும், செல்வ வாழ்வும் வறுமை வாழ்வும் குன்றா இளமையே எய்தினும் இன்றே இறக்கலுறி னும் எல்லாம் ஒன்றாய்க் கருதி, “வேண்டலு மிலனே வெறுத்தலுமிலனே" (கோயில் 36 என்று இருப்பர்; ''பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச் சென்றிரவேன் ஒருவரை யாதொன்றுமே” (திருவிடை 3) என்ற துணிவுடனே ஒழுகுவர்.

திருவெண்காடரான பிள்ளையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடி முதல்வராய் விளங்கினவர் என்றதற்கேற்ப, அவருள்ளம் கடலிற் கலம் அமைத்துச் செலுத்தும் துறையில் நன்கு பயின்றிருந்தது. அதனால் உடம்பைக்கலமாகவும், தீயொழுக்கம், பொய்ம்மை பிணி இடும்பை முதலிய வற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருப்பையைக் கடற்றுறை நகராகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கூம்பாகவும் உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்வதும் கோயில் 16), பிறிதோரிடத்தில் உலகைக் கடலாகவும், உடம்பைக் கலமாகவும், தோலைப் பலகையாகவும், எலும்பை ஆணியாகவும், நரம்பைக் கயிறாகவும், முதுகெலும்பைக் கூம்பாகவும், காம் முதலிய குற்றங்களை நிறையாகவும், நெடுநீர் என்னும் குற்றத்தை நாங்குர நாணாகவும், மடியை நங்குரமாகவும் மனத்தைப் பாயாகவும் ஆசையைக் காற்றாகவும் தான் முதலிய குணங்களைத் தீவுகளாக வும் உரைப்பதும் (கழுமல 16), வேறோரிடத்தில், வளியும் பித்து முதலியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசிவெகுளி முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடலைப் பாம்பாகவும், தசை யெலும்புகளைத் திடலாகவும், உடம்பைக் கடலாகவும், துப்புரவைச் சுழிகளாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும், ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும், ஒருமை யுணர்வைக் கலத்தையியக்கும் பொறியாகவும், காமத்தைப் பாராகவும், சுருங்காவுணர்ச்சியைத் துடுப்பாகவும் (ஒற்றி 8) உரைப்பதும் இவர்பால் பெருகக் காணப்படுகின்றன.

இவர் காலத்தே கடலிற் செல்வோர் வட மீனைத் திசை விளக்காக மேற்கொண்டிருந்தமையை 'தூமச் சோதிச்சுடர்க் குற் நிறுத்தி' (ஒற்றி 8) என்றும், பொறிகள் அமைத்து வங்கத்தைச் செலுத்தின மையை, 'மன்னிய வொருமைப் பொறியினை முறுக்கி' (ஒற்றி 8) என்றும், 'இருளுறு பவ்வத் தெந்திரங்கடா அய், துன்று திரைப்பரப்பிற் குன்று பார்த் தியங்கியும்” (கோயில் 20) என்றும் வருவன வற்புறுத்துகின்றன. அந்நாளில் மக்கட்குத் திருமணம் செய்யும் வகையில் பெற்றோரே முற்பட்டு நின்றனர். மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து மணஞ் செய்து வைப்பது மகளைப் பெற்றோர் கடனாகும்; இதனை "தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக் கிழத்தி" (இடைமரு 7) என்பதனாலறியலாம். அத்திருமணக் காலத்தில் வந்து கூடும் செல்வர் மணமக்கட்கு மொழி யெழுதுவதாகிய வழக்கம் அடிகள் காலத்தே தோன்றி விட்டது. "திருமணம் புணர்ந்த ஞான்று... திருமணப் பந்தருள் அமரர் முன் புகுந்தறுகு சாத்தி நின், தமர் பெயரெழுதிய வரி நெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்” கோயில் 4) என்பது அவ்வழக்கினை எடுத்துக்காட்டு கிறது. வருவாயுள் ஆறிலொன்று அரசர்க்கு இறுக்க வேண்டிய முறை அடிகள் காலத்து மாறிவிட்ட தென்பது, "அரசு கொள்கடமை யாறிலொன் றென்னும் புரைதீர் முறைமை புதுக்கினை” (கழுமல 25) என்ற அடிகள் காட்டுகின்றன.

பட்டினத்தார் காலத்தே அவர்க்கு முன்னோர் சிலருடைய வரலாறுகளும் பல இனிய பழமொழி களும் மக்களிடை பயில வழங்கியிருந்தன. புத்த ராகிய சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்டதும் (இடைமரு25), திருஞான சம்பந்தர் ஞானப் பாலுண்டு தோடுடைய செவிய னென்றும், பீடுடைய பெம்மான் என்றும் பாடியதும் கழுமல ), திருநாவுக்கரசரும் நம்பியாரூரரும் வித்தகப் பாடல் பாடியதும் (திருவிடை 28), பெருந்துறைப்பிள்ளை யாகிய திருவாதவூரரது பேரன்புநெறியும் (திருவிட 28), பெருஞ் செல்வத்தை அவமதித்துப் பேரந்த சிவவாக்கியர் சிறப்பும், வரகுணதேவரின் வான்புகழ் வரலாறும் பிறவும் பிள்ளையாரால் விதந்து கூறப்படுகின்றன. இவருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் "வித்தகப் பாடல் முத்திறத்தடியர்'' எனவும், திருவாதவூரரைத் "திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளை'' எனவும், சிவவாக்கியரைச் 'சித்தமார் சிவவாக்கிய தேவர்' எனவும், வரகுணனை, 'பெரிய அன்பின் வரகுணதேவர்' எனவும் குறித் துரைப்பது வரலாற்றுண்மை பொதிந்த கட்டுரை யாகும்.

அந்நாளில் கற்றுவல்ல புலவர்க்கு அறிவா ராய்ச்சி வகையில் இன்பந்தந்தவை. ஏழிசைச்சூழல் போல் இனிய நுட்பம் பொருந்திய அகத்துறைப் பாட்டுக்களாகும். அத்துறையில் பிள்ளையார் பல பாட்டுக்களைப் பாடி வழங்கியுள்ளார். அவை நான்மணிமாலை மும்மணிக்கோவைகளில் உள்ள வற்றினும் மிகுதியாகத் திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் உள்ளன. அவற்றுள் "துணையொத்த கோவை" (73) எனவரும் பாட்டுத் திருக்கோவையார் கருத்தைத் தன்கட் கொண்டு விளங்குவது.

பிள்ளையாரால் இறைவனுக்குரிய மலைக் ளென , இமயம், கொல்லி , சிராமலை, விந்தம், மந்தரம், இந்திரம், நீலம், வெள்ளை , பரங்குன்றம், மகேந்திரம், வெண்குன்றம், செங்குன்றம், நெற்குன்றம், நெடுங் குன்றம், கழுக்குன்றம், முதுகுன்றம் (579) முதலியன குறிப்பிடுகின்றன. சிவனுக்குரிய ஊர்களென குற்றாலம், நெய்த்தானம், துருத்தி, அப்பர், வேள்விக் குடி, தோணிபுரம், பழனம், ஆரூர் , இடைமருது, திருச்சோற்றுத்துறை, நியமம், புகலூர், புறம்பயம், பூவணம், திருவண்காடு, பாச்சில், அதிகை, ஆவடுதுறை, நல்லம், நல்லூர், கடம்பூர், கடம்பந் துறை, புன்கூர், பாராய்த்துறை, எதிர்கொள்பாடி, அண்ணாமலை, வல்லம், தமாற்பேறு, பாசூர், அழுந்தூர், பெரும்பேறு, ஒற்றியூர், கச்சியேகம்பம், திருவோத்தூர், திருவாமாத்தூர், புலிவலம், வில்வலம், திருப்பனங்காடு, கொச்சை, மாகறல், காவை, கச்சூர், திருக்காரிகரை , திருவான்மியூர், திருவூறல், திருப் போந்தை, முக்கோணம், திருவாலங்காடு முதலியன குறித்தோதப்படுகின்றன. இவற்றுள் சேரக் கூறற் பாலவாகிய தில்லையையும் காளத்தியையும் தனியே நிறுத்தி, "நடனம்பிரான் உகந் துய்யக் கொண்டா னென்று நன்மறையோர், உடன் வந்து மூவா யிரவரிறைஞ்சி நிறைந்த உண்மைக், கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம் காலத்தியாம், இடம் எம்பிரான் கச்சியேகம்பமே” (4) என்று சிறப்பித்துக் கூறுகின்றார். கயிலை யெழுந்தருளுமிடமும் தில்லை நடம்புரியுமிடமுமாயினும், 'கயிலை புல்லென விசும்பு வறிதாக" இறைவன் தில்லையில் நடம் புரிதலால் (கோயில். 32) தில்லையாத் தனித்தும், கயிலைமலை யெனப்படும் (A.R. 160 of 1922) சிறப்புடைமையின் திருக்காளத்தியைத் தில்லை யொடு சார்த்தியும் கூறினார் போலும்.

இனி, அவர் வழங்கும் பழமொழிகளைக் காண்டல் வேண்டும். பொற்குன்றம் சேர்ந்த காக்கை யும் பொன்னாம் என்பதும், இரத குளிகையால் செம்பும் பொன்னாம் என்பதும், கருடதியானிக்குக் கண்ணே மருந்து என்பதும், இரவி முன் இருள் நில்லாது என்பதும் பழமொழிகள்; இவற்றை ''ஏர்தரும் பொற் கிரிசேர் கருங்கொடியும், பொன்னிறமா மெனச் சொன்ன தொன்மொழியும், ஏதமில் நிறைமதிச் சீதளநிலவால், ஆருமெய்யுருப்பம் தீருமென்பதும், மொழிதரு மிரத குளிகை தற் சேர்ந்த காளிமச் சீருண நீளியற்காக, மாமெனக் கூறும் தோமறுமொழியும், கருட தியானம் மருடபவந்தோர், நோக்கினில் தவிரும் தீக்கடுவென்றலும், ஆயிரங் கிரணத் தலர் கதிர் முன்னம் பாயிருள் கெடுமெனப் பகர் பழமொழியும், அங்கண்மா ஞாலத் தெங்கணு மொப்ப இயலும்" கழுமல . 19) என்பர். கற்பசுவைக் கறப்பவரில்லை , எட்டிக் கனிக்கு ஏணியிடார், அரிசி வேண்டி உமி குற்றுவாரில்லை, வெறுங் களருழுது விதை விதையார் கழுமல். 22), தானே விழுவார் மேல் பார மேற்றலாகாது திருவிடை 5, முகம் பாகம் பண்டமும் பாகம் திருவேகம்ப. 15) என்பன முதலிய பழமொழிகளும் பிள்ளையார் பாட்டில் காணப்படுகின்றன.

பட்டினத்துப்பிள்ளையார் பெருஞ்செல் வத்தைத் துறந்த அருந்துறவியென்பதோடு முத்தமிழ்ப் புலமை பெற்ற வித்தகரென்பதை அவருடைய பாட்டுக்களே காட்டுகின்றன. மக்களுயிர் ஒவ்வொரு கணமும் இறக்கும் நிலையில் இருந்து கொண்டே சிற்றின்பம் விழைந்து விற்கிறதென்பது கண்டு, "நஞ்சு சூழ்பகுவாய் வெஞ்சினமாசுணம். தன் முதன் முருக்க நென்முதற் சூழ்ந்த, நீர்ச்சிறுபாம்புதன் வாய்க்கெதிர் வந்த, தேரையை வவ்வியாங்கு யான்முன், கருவிடை வந்த வொருநாள் தொடங்கி மறவாமறலி முன் பிறழ்பேழ்வாய். அயிற்றலையன்ன எயிற்றிடைக் கிடந்து" (கோயில் 8) வருந்துகிறேன் என்பது, மக்களைப் போலப் பிறந்திறந்துழலும் வானவர் முதலிய சிறு தெய்வ வழிபாட்டை இகழ்ந்து விலக்கக் கருதிய பிள்ளையார் வழிபடும் மக்களை பார்த்து, "புறவார்பசும்புற் கறவாக்கற்பசு, வாயிடைச்செருகித் தூயநீருதவி, அருஞ்சுவைப்பால் கொளப் பெருஞ் சுரைவருடும் பேதையர்" (கழுமல . 22) என்பது முதலிய உவமைகளை எடுத்தோதுவதும் பேரருட் பெருங்கடலாக இறைவன் இருப்ப, அவன் அருட்பேற்றுக்கிலக்காகாத மக்கள் செயலுக்கு இறைவன்பால் குற்றமில்லையென்பது விளக்க , ''முறியாப்புழுக்கல் முப்பழங்கலந்த, அறுசுவை யடிசிலட்டினி திருப்பப், புசியாதொருவன் பசியால் வருந்துதல், அயினியின் குற்றமன்று வெயிலில் வைத்து, ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டிருப்ப, மடா அவொரு வன் விடா அவேட்கை, தெண்ணீர்க்குற்றமன்று கண்ணகன்று, தேன்துளிசிதறிப் பூந்துணர்துறுமி, வாலுகங்கிடந்த சோலைகிடப்ப, வெள்ளிட வெயிலிற் புள்ளிவியர் பொடிப்ப, அடிபெயர்த்திடுவா னொருவன், நெடிதுவருந்துதல் நிழல் தீங்கன்றே" (திருவிடை. 16) என்பதும் பிறவும் அவரது புலமை வளத்தின் பொற்பை விளக்குவனவாம்.

சிவபெருமான் இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவாராத முழுமுதற் பொருள் ! "குறி குணம் கடந்தவன், உறைபொருள் எங்கணும் நிறை பரி பூரணம், அந்தமாதி முந்தையே தவிர்த்த அனாதி முத்தன், அளவையின் அடங்காது ஒளிர் சுகம்'' கழுமல . 28); சராசாராமனைத்தும் அவனிடையே தோன்றி அவனிடையே யடங்கும் கோயில் 24), எல்லாம் தன்னிடைத் தோன்றித் தன்னிடையே ஒடுங்கினும், சிவபெருமான் தான் பிறிதொன்றில் தோன்றாது வேறாய் நிற்பன் திருவிடை மும். 22; ஒற்றி .4); வேறாய் இருப்பினும், "ஏழுலகாகி எண்வகை மூர்த்தியோடு ஊழிதோ றூழி எண்ணிறந் தோங்கி, (ஒற்றி.1) எவ்வகைப் பொருளினும் ஒன்றாய் அவ்வப் பொருளாகவும் இருப்பான். ஒன்றாக இருப்பவன் வேறாய் நிற்பது, ஒன்றோடொன்றொவ்வாது வேறு பட்ட உயிர்கள் தத் தம் எல்லையில் இனிது ஒழுகப் பண்ணுதற்கு என்பாராய், "ஒவ்வாப் பன்மையுன் மற்றவர் ஒழுக்கம் மன்னிய... விரவியும் வேறாய் நின்றனை" ஒற்றி 4) என்று விளக்குகின்றார். இப்பரம் பொருள் இங்ஙனம் உலகுயிர்களோடு ஒன்றாயும், வேறாயும் இருக்குமாயினும், மூலமும் நடுவும் முடிவும் இன்றிக் காலங் கடந்து நிற்கும் கடவுள் என்று எடுத்து,

    "உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத்
    துளக்கற நிமிர்ந்த சோதித் தணிச்சுடர்
    எறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா
    துறப்பினின் றெழுதரு முள்ளத் தோசை
    வைத்த நாவின் வழிமறித் தகத்தே
    தித்தித் தூறுந் தெய்வத் தேறல்
    துண்டத் துளையிற் பண்டைவழி யன்றி
    அறிவி னாறும் நறிய நாற்றம்
    ஏனைய தன்மையும் எய்தாது எவற்றையுந்
    தானே யாகி நின்ற தத்துவன்" (இடை மருது. 22)

என்று உயிர்களின் அறிகருவிகம் கெட்டாமல் அகத்தே அவ்வப் புலப்பொருளாய்க் காட்சியளிக்கும் என விளங்கியுரைப்பர்.

இவ்வாறு உலக முழுதும் எல்லாம் தானேயாய் நிற்கும் கடவுளாகிய சிவபரம் பொருட்குச் சமயங்கள் பலவும் உரியன என்று கூறுவது சைவத்தின் தனிச் சிறப்பாகும். "அன்றென்றும் ஆ மென்றும் ஆறு சமயங்கள், ஒன்றோடொன் றொவ்வா துரைத்தாலும் என்றும், ஒரு தனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்" (இடைமருது. 17) எனவும், 'திருவமர் மாலொடு திசைமுகனென்றும், உளனேயென்றும் இலனேயென்றும், தளரானென்றும் தளர்வோனென் றும், ஆதியென்றும் அசோகின னென்றும், போதியிற் பொலிந்த புராண னென்றும், இன்னவை முதலாத் தாமறி யளவையின், மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப், பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி, அணங்கிய அவ்வவர்க் கவ்வவையாகி யடையப் பற்றிய பளிங்கு போலும், ஒற்றி மாநகருடைய கோவே' (ஒற்றி. 2) எனவும் கூறிச் சமய வேற்று மையைக் களைவதில் பிள்ளையார் சிறந்து நிற்பர். உடம்பை மரக்கலமாகவும், வினைகளைச் சரக்காகவும் உலக வாழ்வைக் கடலாகவும் உருவகம் செய்யும் பிறிதோரிடத்தே, அடிகள் பல் வகைச் சமயங்களையும் கடற்றுறைகளாக, எடுத்துக் கூறுவது (கழுமல். 16) சமய வேற்றுமையில் ஒருமை காண முயலும் அடிகளது மனப்பான்மைத் தெரிவிக்கிறது.

இனி, சைவ புராணங்கள் சிவபெருமான் மாதொரு பாகனாய்க் கங்கையும் திங்களும் தாங்கிய சடைமுடியும், நெற்றி விழியும் நீலகண்டமும் எடுத்த பாதமும் தடுத்த கங்கையும் புலி யதளாடையும், சூலப் படையும் மழுப்படையும், ஆனேற னூர்தியும் ஆனேற்றுக் கொடியும் பிறவு முடையனாய்த் தோன்றும் தோற்றத்தை எடுத்தோதி, புர மெரித்ததும், தக்கன் வேள்வி தகர்த்ததும் , அயன் றலையைக் கொய்ததும், காமனைப் பொடித்ததும், காலனைக் காய்ந்ததும், பிறவும் விரித்துக் கூறுவனவாகும். இவற்றை யெல்லாம் பிள்ளையார் பல திருப் பாட்டுக்களில் விரித்தும் தொகுத்தும் அழகொழுகப் பாடியுள்ளார். மேலும், சிவபெருமான், திங்களைச் சூடுதல் ஆனேறு ஏறுதல் முதலிய செயல்களின் கருத்து இது வென்பாராய்.

    'தூமதி சடைமிசைக் சூடுதல் தூநெறி
    யாமதி யானென வமைத்த வாறே
    அறனுரு வாகிய ஆனே தேறுதல்
    இறைவன் யானென இயற்று மாறே
    அதுவவள் அவனென நின்றமை யார்க்கும்
    பொதுநிலை யானென வுணர்த்திய பொருளே
    முக்கண னென்பது முத்தீ வேள்வியில்
    தொக்க தென்னிடை யென்பதோர் சுருக்கே
    வேத மான்மறி யேந்துதல் மற்றதன்
    நாதம் நானென நவிற்று மாறே
    மூவிலை யொருதாட் சூல மேந்துதல்
    மூவரும் யானென மொழிந்த வாறே
    எண்வகை மூர்த்தி யென்பதிவ் வுலகினில்
    உண்மை யானென வுணர்த்திய வாறே' (ஒற்றி . 6)

என மொழிந்தருளுகின்றார்.

இனி, சிவநெறி பேணும் சைவர்களுக்குத் திருநீறும் திருவைந் தெழுத்தும் திருவக்கமணி மாலையும் சாதனங்களாகக் கூறுவர். இவற்றைப் பொருளெனக் கொள்ளாதார்க்குப் பிறவியினின்றும் வீடு பேறு கிடையா தென்பர். இதனை, பிறவி நோய், ''மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர் கொண்ட, நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம், தேறும் பொருளென் றுணராத மாயச் செருக்கினர்க்கே ' (கழுமல . 21) என்றும், பெருவேந்த ராயினும், 'நன்னீறு நுதற் கிலரேல், என்றும் அரசும் முரசும் பொலியா இரு நிலத்தே' (திருவேகம்ப திருவந். 30) என்றும், 'காணீர் கதி யொன்றும் கல்லீ ரெழுத்தஞ்சும்' (திருவிடை. 12) என்றும் சிறப்பித் தோதுகின்றார்.

இச் சாதனங்களைப் பொருளாகக் கொண் டவர் சிவபெருமானை அகத்தும் புறத்தும் வழிபடும் இயல்பினராவர். புற வழிபாடு திருக் கோயிலில் இருக்கும் இறைவன் திருவுருவைச் சிவனெனவே தேறி நிறைந்த அன்புடனே நீராட்டிப் பூவிட்டு அருச்சிப்ப தாகும். நெஞ்சத்தில் திருவைந் தெழுத்தை நினைந்து அதன் வாயிலாக உள்ளத்தாமரையில் சிவனைக் கண்டு இன்புறுவதாகும் (கழுமல். 22).

புற வழிபாட்டை , 'பத்தியாகிப் பணைத்த மெய்யன்பொடு, நொச்சியாயினும், கரந்தையாயினும் பச்சிலையிட்டுப் பரவுந் தொண்டர்' (இடைமருது. 19) என்றும், 'போதும் பெறாவிடில் பச்சிலை யுண்டு புன லுண் டெங்கும், ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே ' (கழுமல (12) என்றும் எடுத்தோதுவர். இவ் வழிபாட்டின் உறுப்பாக இறைவன் புகழ் கேட்பதும், காலை மாலைகளில் திருக்கோயில் வலம் வருவதும் திருக்கோயில் திருப்பணி செய்வதும் கோயில். 24) கூறப்படுகின்றன. அகவழிபாட்டின் கண் காமம் வெகுளி முதலிய குற்றங்களைப் நோக்கி, ஐம் பொறி களையும் ஒடுக்கி , அன்பும் அருளும் வாய்மையும் மேற்கொண்டு சிந்தைக்கண் சிவபெருமானை எழுந்தருள்வித்து வழிபடுவதாகும். இதனைப் பாழறையைப் பள்ளியறை யாக்கும் செயல் மேல் வைத்தும் கழுமல . 4), பாற்கடல் கடைந்து அமுதம் பெறும் செயல் மேல் வைத்தும் (கழுமல, 13) உருவகவணி நலம் திகழச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார்.

உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறடைதற்குரிய பக்குவமெய்துங்கால் சிவபெருமான் குருவாய் வந்து அருள் ஞானம் வழங்குவனென்றும் ஞானத்தால் பீடு கைகூடு மென்றும் சித்தாந்தமாகிய சைவாகமங்கள் கூறும். அதனை நம் பட்டினத்தார், 'மேற்படும் இதயப் பாற் கடல் நடுவுள், பரம்பரை தவறா வரம் பெறு குரவன், மருளற விரங்கி யருளிய குறி யெனும், நிந்தையில் கனக மந்தரம் நிறுவி, மாணறி வென்னும் தூணிடைப் பிணித்த, நேசமென்னும் வாசுகி கொளுவி , மதித்த லென்னும் மதித்தலை யுஞற்றிய, பேரா வின்பச் சீரானந்தப் பெறலரு மமுதம் திறனொடும் பெற்று, ஞானவாய் கொண்டு மோனமா யுண்டு, பிறப்பிறப்பென்னு மறப் பெரும் பயத்தால், பன்னாட்பட்ட வின்னாங்ககற்றி, என்னையுந் தன்னையும் மறந்திட், டின் மேல் டெய்துதற் பொருட்டே ' (கழுமல். 13) என்று கூறுகின்றார். இவ்வாறு திருவருள் ஞானத்தைக் குரவன் அருளப் பெற்ற வழி , மனத்திடைப் படிந்து கிடக்கும் இருள் நீங்கும்; உள்ளம் தெளிவுறும்; அத் தெளிவின்கண் இன்பம் பெருகும்; அது வழியே இதுகாறும் கண்டறியாத மகிழ்ச்சி மேலிடும்; இறைவன் பால் அயராத அன்பு தோன்றும் கழுமல். 6) என்று விளக்குகின்றார். மருள் எனவும் இருள் எனவும் இங்கே குறிக்கப் பெறுவன ஆணவம் கன்மம் மாயை என்று கூறப்படும்; அவற்றை, 'பேரிக - லாணவக் காரிருள்' எனவும், 'மின்றொடர் ) வல்வினை வன்றொடர்' எனவும், 'மாயைமா மாயை யாய் பேய்' (கழுமல. 13) எனவும் வகுத்துரைப்பர்.

இவ் வண்ணம் உணர்த்தப்படும் சிவ ஞானம் கைவரப் பெற்றவர், யாது குறித்தும் எவர்க்கும் அஞ்சுதலின்றி, மனைவி மக்கள் முதலிய சுற்றத் தொடர்பும் செல்வமும் பிறவும் பொருளென நினையாது திருவருளே நினைந்து இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் எண் வகைச் சித்தியும் தாமே வந்தபோதும் அவற்றை மறுத் தொதுக்கிக் கீளும் கோவணமும் உடுத்து ஒடொன்றைக் கையிலேந்தி இரந்துண்பதும், தரையில் படுத்துறங்குவதும் சால்பு குன்றாராய், மன்னுயிரனைத்தையும் மகவெனக் கருதி ஒக்கப்பார்க்கும் உயர் நிலைத் தொண்டராய் விளங்குவர்; அவர் வாழ்வின் முன் உலகியலிற் பெருஞ் செல்வம் பெற்று வாழும் பெரு வாழ்வு குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளயச் சலதியும்' (இடைமருது. 7) போல ஒவ்வா இயல்பின தாம். இச் சான்றோர். தாம் பெற்று மகிழும் அருள் ஞானத்தால், தம்மை யுணர்ந்து, தம்மை யடிமை யாகவுடைய தலைவனாகிய சிவனை யுணர்ந்து ஏனை எல்லோரையும் இனி துணரும் சிவ ஞானச் செல்வராவர். 'தெய்வத் திருவருள் கை வந்து கிடைத்தலின், மாயப் படலங் கீறித் தூய, ஞான நாட்டம் பெற்ற பின் யானும், நின் பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும், என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன், நின்னிலை யனைத்தையுங் கண்டேன்' திருவிடை. 13) என்று தாமும் அச் சிவ ஞானக் காட்சி பெற்ற சிறப்பைப் பட்டினத்தார் எடுத்துரைக்கின்றார்.

பட்டினத்தார் திருவருள் நாட்டம் பெறு முன்பெல்லாம் இறைவனை வேண்டுமிடத்து, 'பேதையேன் பாசத் தீவினை யகற்றித் திருவருட் செல்வம் பெருகுமாறுதவி அளித்தருள்' (கழுமல. 19) என வேண்டினர். அக் காலத்துக் 'கல்லா மனத்துப் புல்லறிவு தொடர' இல்லன் உள்ளனவாயும் உள்ளது காணப்படாமலும் காட்சி யளித்தன; 'திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும் யாவையும் பொய்யெனத் தோன்றின; சிவ பரம் பொருளே மெய்யெனத் தோன்றக் கண்டார். அதனை 'ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய, சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித் , தவிராது தடவினர் தமக்குச், சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே' கழுமல.10) என்று விளக்குகின்றார்.

இறுதியில் அவர் ஞான நெறியில் முதிர்ந்து திருவருட் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த காலையில், திருவொற்றியூர் இறைவனை நோக்கி, 'சேர்விடம் இன்னதெனத் திறப்படநாடி யடைதற்கு அரியவனே, நாடற்குரிய வாயில் எல்லாவற்றாலும் நாடினேன்; இனிச் செய்வதொன்று மறியேன்' என்று செயலற் றொழிகின்றார். அப்போது அவர், பெற்ற தாய் சேய்மையிலிருப்பினும் அழுத குழவி பாலுண்பது இயற்கை; அவ் வியல்பு தானும் அறியாது எண்ணில் ஊழி பிறவியின் மயங்கி' வாய்தல் (வாயில்) அறியாது மயங்கினேன்; கண்ணிலாக் குருடர்கண் பெற்றாங்கு நின் திருவருள் நாட்டம் பெற்றேன்; என்னை இப் பிறவியிற் 'கட்டிய நீயே அவிழ்க்கினல்லது, எட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்' என் கருவி கரணங்களாக விளங்குவ எல்லாம், ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி யல்லது சார்வு மற்று, இல்லை (ஒற்றி .9) என்று உரைத் தருளுகின்றார்.

திருவெண்காடர் பெருஞ் செல்வப் பெரு வாழ்வு வாழ்ந்தவராகையால், அதன் பயனாக உலகியலில் செல்வ வாழ்க்கையின் இயல்பைத் தெளிவாக எடுத் தோதுகின்றார். 'வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது, தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது, உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி, அவிழடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி, ஆரா வுண்டி யயின்றனராகி' பெரியோரைப் பேணாமை, சிற்றினச் சேர்க்கை, பிறன் மனை நயத்தல், பொருட் பெண்டிர் முயக்கம் முதலியன செய்து, நச்சி வந்த நல்கூர் மாந்தர்க்கு அக மலர்ந் தீவார் போல முகமலர்ந்து, இனிது மொழிந்தாங் குதவுதலின்றி, நாளும் நாளும் நாள் பல குறித்து அவரை வருத்துதலும், இம்மை மறுமை யில்லை யென நாத்திகம் பேசுதலும், செல்வத்தையே பெரியார் விரும்பித் தன்னையே வியந்து கொள்வதும் (திருவிடை 7) பெருஞ் செல்வ வாழ்வின் இயல்பு என இயம்புகின்றார். இவ்வாறே மகளிர் நலம் பாராட்டித் திரியும் மாக்கள் செயலையும் கோயில் . 15 ) எடுத்தோதி யிழிக்கின்றார்.

செல்வ வாழ்வு பெறுவோர் அதற்காக முயலும் பல்வேறு முயற்சிகளையும் நிரல்படக் கோத் துரைப்பதில் பிள்ளையார் நிகரின்றிப் பிறங்கு கின்றார். நிலத்தை உழுதுவிதை விதைத்துக் கார் வருமென்று விண்பார்த்திருப்பதும், கிளைஞர்களைப் பிரிந்து பொருள் வயிற் சேறலும், போருடற்றுவதும், கடலில் ஏந்திரம் கடாவிற் குன்று பார்த்து வங்கம் செலுத்துவதும், வேந்தர்க்குச் சோற்றுக் கடன் பூண்பதும், வேறு பல தொழிலில் முயல்வதும், வாட் போர் செய்வதும், அறியாதார்க்கு அறிவு கொளுத்துவதும், சொற் போர் செய்வதும், பாக்கள் புனைவதும், சொற்பொழிவு செய்வதும் கோயில். 20) மக்கள் செயல்களாகும் இவ்வாறு ஈட்டப் பட்ட செல்வம் நிலையின்றிக் கெடுவதையும் நன்கு கண்டு, 'கண்டன மறையும் உண்டன மலமாம், பூசின மாசாம் புணர்ந்தன பிரியும், நிறைந்தன குறையும் உயர்ந்த பணியும், பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும், ஒன்றொன்றொருவழி நில்லா' என்றும், செல்வம் கல்வி கொடை படை குலம் முதலிய வற்றால் உயர்ந்தவர்களும் இறந்தொழியக் கண்டு, 'செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர், கல்வியிற் சிறந்தோர் கடுந்திறன் மிகுந்தோர், கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தி னுயர்ந்தோர் நலத்தினின் வந்தோர், எனையர் எக்குலத்தினர் இறந்தோர் அனையவர், பேரும் நின்றில்' (கோயில். 28) என்றும் உரைக்கின்றார்.

துறவு வாழ்வு முதிர முதிரப் பிள்ளையார்க்கு உலகியலின் பல் வகைக் கூறுகளையும் பகுத்து ஆராயும் ஆராய்ச்சி மிகுவதாயிற்று. யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலை யாமை முதலிய நிலையாமைகளை ஏனைத் துறவி களைப் போலவே கூறுகின்றாராயினும், மக்க ளுடைய செயல் வகைகளைத் தொகுத்து வகுத்தும் ஆராய்ந்த முதன்மை நம் பட்டினத்தாருக்கே உரியது. இளமை, மூப்பு, இறப்பு என்றவற்றின் விரைந்த வரவை யெடுத்தோதி, இவற்றையுடைய உடல் வாழ்வைக் கருதி மக்கள், செய்தன சிலவே செய்யா நிற்பன சிலவே' எனவும், 'அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே, ஒன்றினும் படாதன சிலவே' எனவும், இவற்றை ஒன்றொன்றாக நோக்கினும், ஒன்றாகச் சேரத் தொகுத்து நோக்கினும், உண்மை தெளிதல் மனத்திற்கு இயலுவதில்லை யாதலால், 'மனத்தின் செய்கை மற்றிதுவே' (கோயில். 32) எனவும் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இவ்வாறே உயிர்கள் பலவாய்த் தம்முள் பல் வேறு வகையால் ஒன்றினொன்று ஒவ்வாத வேற்றுமை கொண்டு நிலவுவதை 'யாக்கையி லியங்கும் மன்னுயிர், உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும், திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும், வெவ்வேறாகி வினையொடும் பிரியாது, ஒவ்வாப் பன்மை ' (ஒற்றி 4) என ஆராய்ந்து வகுத்துக் காட்டுவர்.

இவ்வாறு பொருள்களின் குணஞ் செயல் களைப் பகுத்துணர்த் துரைக்கும் பண்புடைப் புலமை சிறந்த பிள்ளையார், தத்துவ ஆராய்ச்சியில் தலைப்பட்டு மனத்தின் இயல்பும், அஃது இறைவன் வழிபாட்டில் அமைய வேண்டிய அமைதியும் கண்டு, ஓரிடத்தில் அழகுறக் கூறுகின்றார். பிறப்பு இறப்புக் களால் உயிர்கள் எய்தும் துன்பத்தை இறைவனொரு வனே அறிவன் ; பிறப்பற வேண்டின் இறைவனைப் பற்றியல்லது அது கைகூடாது; இறைவனைப் பற்றி நிற்றற்கு ஒன்றை வேண்டுதலும் வெறுத்தலும் ஆகிய இரு செயலும் உள்ளத்தின்கண் உண்டாதல் வேண்டும்; உள்ளமோ ஐம்புலன் வழி நின்று, தானல்லாத தொன்றைத் தானென நினையும் தன்மையதாகும். இது கொண்டு இறைவனை நினைப்பது எங்ஙனம் அமையும்? என்றோர் ஐயத்தை யெழுப்பி, எவ்வகையாலும், 'இறைவ, கருப்பம் கடத்தல் யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு நினைத்தல் யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு நெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும்' (திருவிடை 4) என்று இறைவனை வேண்டியமைகின்றார்.

இவ்வாறு உவமைவகையான் மட்டுமன்றிக் கற்பனை வகையிலும் இவரது புலமை தலை சிறந்து விளங்குகிறது. திருவிடைமருதூரில் இவர் இருந்து வருகையில் அதன் இயற்கையழகு முற்றும் நன்கு கண்டிருந்தார். அதனால் அவ்வூரையும் அதனைச் சூழும் காவிரியாற்றையும் அழகுறப்புனைந்து கூறுகின்றார். "சந்தன சரள சண்பக வகுள , நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது, நவமணி முகிழ்த்த புது வெயிலெறிப்ப, எண்ணருங் கோடியிருடி கணங் கட்குப், புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த , திருவிடைமருது" (13) என்றும், தெருக்களின் சிறப்பை, "எழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க, அடித்துத் தட்டி எழுப்புவபோல், நுண்டுகிற்பதாகை கொண்டு கொண்டு கைப்பத், துயிலினீங்கிப் பயிலும் வீதித் திருமருது'' (25) என்றும் புனைந்து கூறுவர். சீகாழிப்பதி ஊழிக்காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் தோணிபோல் மிதந்த செய்தியைக் குறிப்பிட்டு, அது, ''காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த காழி' (19) எனவும், வேதம் போலும் கோபுரங்களும் சிவாகமம் போலும் மணிமேடைகளும், இந்திரன் போலும் எந்திரவாவிகளும் "எங்கணும் நிறைந்த வெங்குரு" (22) எனவும், தண்ணீர்ப் பந்தரும் அன்ன சத்திரங்களும் ஆடரங்குகளும் கலைபயில் கழகங்களும் மலர் மன்றங்களும் மணிநெடு வீதியுங்கொண்டு, "பூமக ளுறையுளாரமென விளங்கும், பெரும் புகழ்க் காழி'' (28) எனவும், செந்தளிரும் மதுமலரும் காய்த் திரளும் செங்கனியும் தாங்கி நிற்கும் மாமரத்தை, வயிரமும் நீலமும் மரகதமும் மாணிக்கமுமாகிய மணிகள் "கிடைத்த சீர் வணிகரிற் படைத்த மாந்தருவும்” (16) எனவும் அரமியத்தைப் புன்னைப் பொழி லெனவும் செய் குன்றைக் கொன்றைக் காவெனவும் மயங்கி மொய்த்த வண்டினத்தின் கரு நிறத்தால் இரவு வந்ததென மயங்கி ஆடவரும் மகளிரும் கூடியின் புறு வர் (கழுமல . 28) எனவும் கூறுகின்றார். திருவேகம்ப முடையார் திருவந்தாதியில் காஞ்சிமா நகரையும் அதனைச் சூழ்ந்த கச்சி நாட்டையும் பாராட்டி அந்நாட்டின் நீர் நில வளங்களைச் சிறப்புற எடுத்தோதுவர்; தேன் முரல விளங்கும் தடம் பொழிலும் (3) வன்மையிற் குன்றா மதிலும் (10) தடங் கமலம் பூங்குடை கொள்ளும் புனல் வயலும் (51) பிறவும் கொண்ட காஞ்சிமா நகர், அமராவதிக்கு நேராம் (86) என்று வியந்துரைப்பார். இவ்வாறே திருவொற்றியூர், "இரு நில மடந்தைக்கு முகமெனப் பொலிந்த ஒற்றிமா நகர்" (ஒற்றி என்பது முதலாகப் பல இனிய சொற்றொடர்களால் சிறப்பித் துரைக்கின்றார்.

இனி, பட்டினத்தடிகளுடைய பாட்டினைப் படிக்குங்கால் பண்டை நூல்களின் கருத்துக்களும் சொற்களும் படிப்போருள்ளத்திற் றோன்றி அவ ருடைய பரந்த கல்வி நலத்தைப் புலப்படுத்துகின்றன. ''எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக் , குறிப்பொடுபடாது வெறித்த புன் சொல்லே, யாயினும் பயந்த தஞ் சேயவர் சொலு மொழி, குழலினும் யாழினு மழகிதா மது போல்" (கழுமல . 28) என்ற இது, "யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவாற் புதல்வர் தம் மழலை' (புறம். 92) என்ற புறப்பாட்டையும், "குழலினிது யாழினிது என்ப தம் மக்கள், மழலைச் சொற்கேளாதவர்” (குறள்) என்ற திருக்குறளையும், "நெடுநீ ரென்னப்படுநெடு நாணில், தங்கிய மடியெனும் நங்குரம் சேர்த்தி” (கழுமல.16) என்பது "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடு நீரார் காமக் கலன்" (குறள்) என்னும் திருக்குறளையும், "அடியொன்று பாதல் மேழிற்கு மப்புறம் பட்டது இப்பால் முடியொன்று இவ் வண்டங்களெல்லாங் கடந்தது'' (கோயில் . ) என்பது "பாதாள மேழினுங் கீழ்ச் சொற்கழிவு பாத மலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே" திருவெம்) என்ற திருவாசகத்தையும், ''அறிவும் சிந்தையும் ... சுவை யொளியூ றோசை நாற்றந் தோற்றம், என்றிவை முதலா விளங்குவவெல்லாம் ஒன்ற நின்னடிக்கே ஒருங்குடன் வைத்து, நின்றனன் தமியேன்" (ஒற்றி.9) என்பது, "எண்ண மே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கணே வைத்து, மண்ணின் மேலடியேன் வாழ்கிலேன் கண்டாய்'' (வாழா) என்ற திருவாசகத்தையும் நினைப்பிக் கின்றன. இவ்வாறே ''நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்” கோயில். 8) எனத் தொடங்கும் பகுதி திருஞானசம்பந்தருடைய , "செடி கொள் நோயாக்கை யம் பாம்பின் வாய்த் தேரை'' (திருவாரூர்) என்ற திருப்பாட்டை நினைப்பிக்கின்றது.

இனி, புலன்களைந்தனையும் அடக்க வேண்டு மெனவுரைத்த பண்டைச் சான்றோர்கள், அவற்றால் உண்டாகும் கேட்டினை நம் பட்டினத்தடிகளைப் போல் எடுத்துக்காட்டி வற்புறுத்தியோர் எவரும் மில்லை . இதனை, "அழுக்குடைப் புலன் வழி இழுக்கத்தி னொழுகி, வளைவாய்த் தூண்டிலி னுள்ளிரை விழுங்கும் பன் மீன் போலவும் (சுவை) மின்னும் விளக்கத்து விட்டில் போலவும் (ஒளி) ஆசையாம் பரிசத்தி யானை போலவும் (ஊறு) ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் ஒசை), வீசிய மணத்தின் வண்டு போலவும் (நாற்றம்) உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை" கோயில் 28) என வருவதனாலறியலாம்.

இறைவனுடைய ஆணைக்கு ''விரையாக் கலியெனும் ஆணை" (கோயில் 4) என்று பெயர் கூறுவர்; இது திருமாணிகுழி, திருப்புறம்பயம் கல்வெட்டுக்களிலும் காணப் படுவது. தில்லைவாழ் அந்தணர்கள், சிவபெருமான் நடனம் உகந்து உலகுயிர்கள் உய்யுமாறு அதனை மேற்கொண்டா னென்ற காரணத்தால் தில்லையில் நிறைந்திருக் கின்றன (திருவேகம்ப 47) ரென்றும், அதனால் அவர்கள் தில்லைக் கூத்தப் பெருமானை "வாழ் வாகவும் தங்கள் வைப்பாகவும்" (கோயில் 34) வணங்குகின்றார்கள் என்றும் இயம்புகின்றார். அவ்வந்தணர்கள் தில்லைப் பெருமானை இன்றும் தங்கட்கு வாழ்வாகவும் வைப்பாகவும் கருதி வழிபடு கின்றனரென்பது அறிந்து இன்புறத் தகுவதொன்று.

திருவேகம்ப முடையார் திருவந்தாதியின் இறுதியில் தாம் பாடிய அந்தாதியின் செய்யுட் டொகை நூறு என்று கூறுவாராய், "தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாடி வைத்தார் பரவித் தொழுதா மவர் பாதங்களே'' என்றும், இதற்கு அவையடக்காக, "போதம் பொருளாற் பொலியாத புன்சொற் பனுவல் களும், வேதம் பொலியும் பொருளாமெனக் கொள்வர் மெய்த் தொண்டரே'' (100) என்றும் கூறுவர். இவ்வாறு தொகை கூறுவதும் அவையடக்கத்தை நூலின் இறுதியிலுரைப்பதும் ஆகிய செயல் வகைகள், இவர்க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்த சேரமான் பெருமாளிடத்தும் காணப் படுதலின், இவை அக்காலத்து வழக்கம் போலும் என எண்ணவேண்டியிருக்கிறது.

இவர் காலத்தில் இவர் பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் தில்லையிலிருந்து திருத்தொண்டு பல புரிந்து. திருவிசைப்பா திருப் பல்லாண்டுகளைப் பாடி இறைவன் திருவடி யடைந்தனர். பத்திரகிரியார் புலம்பல் எனப்படும் பாட்டுக்கள் பல பத்திரகிரியார் பேரால் வழங்குகின்றன.

இறைவன் ஆணைக்கு விரையாக் கலியென்று பெயரென்பது முதன் முதலில் பட்டினத்துப் பிள்ளை யாரால் குறிக்கப்படுகிறது. பின்பு இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் திருமாணிகுழி, திரு வதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் வழங்குவதாயிற்று. இக் கல் வெட்டுக்கள் வேந்தன் ஆணையைத் திருவாணை யெனவும் கோயிலார் ஆணையை விரையாக் கலியாணை யெனவும் இவ்வாணை பிழைத்தாரை முறையே ஊர்ச்சபையாரும் அடியார்களான ஆண்டார்களும் முறை செய்வரெனவும் திருமாணி குழிக் கல்வெட்டொன்றால் (S.I.I. Vol. VII. 785) அறிகின்றோம். திருப்புறம்பயத்தில் "விரையாக் கலிப்பெருந்தெரு" (Rajendra 1) என்றொரு தெருவுண்டென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 153 of 1932) கூறுகிறது. திருவிரையாக் கலி திருக்கண்ணப்ப தேவர் ஸ்ரீ பாதம் (S.I.I. Vol. VIII. 319) எனத் திருவதிகைக் கல்வெட்டுக் குலோத் II) கூறுகிறது. உத்தம சோழன் கல்வெட்டொன்று விரையாக் கலி யென்றும் நிறைகோலைக் குறிக்கிறது திருப்புறம் பயம்.

திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும் இவர் முத்திறத்தடியர் என்றது கொண்டு பிற்காலக் கல்வெட்டுக்கள் "முத்திறத்தார்" (S.I.I. Vol. No. 225 ) என்றும், திருப்புறம் பயம் கல்வெட்டொன்று. "முத்திரத் தடியர்” (343 of 1927) என்றும் கூறுகின்றன.
-----------

12. திருப்பாசுரப் பேருரை விளக்கம்


    கடவுள் வாழ்த்து
    செம்பொ னம்பலத் தெம்பெரு முதல்வன்
    விருப்பார் மலரடி பரவுதும்
    திருப்பா சுரப்பொருள் தேர்தற் பொருட்டே .

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பாசுரம்
    "வாழ்க அந்தணர் வானவ ரானினம்,
    வீழ்க தண்புனல், வேந்தனு மோங்குக,
    ஆழ்க தீய, தெல்லா மரனாமமே
    சூழ்க, வையக மும்துயர் தீர்க்கவே"

என்பது பாசுரம். இஃது என்நுதலிற்றோ எனின், திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்து நின்ற தென்னவன் தெரிந்துய்தற் பொருட்டு,

    "உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் ,
    நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்"

உணர்த்துதல் நுதலிற்று. அஃதாவது வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிவிலக்குகளால் நுவலப்படும் ஒழுக்க நெறியே உலகியலில் ஒழுகுவார்க்கும் உரித் தென்றும், அந்நூல்களுள் உணர்த்தப்பெறும் பல் வகை நெறிகளுள் உண்மை நெறியாவது சிவநெறி யென்றும் கூறியவாறாம். நூல், ஆகமங்கள். வேதம் பொது; ஆகமம் சிறப்பு. பொதுவும் சிறப்புமாகிய இந் நூல்கள் விதித்தன செய்தும் விலக்கியன் வொழித்தும் வாழ்வது உலகியல் என்பார், ''உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது'' என்றார். இவ்வொழுக்கத்தால் பெறப்படும் அறமுதல் நாற்பொருளையும் செவ்வே யறிந்து உறுதியெய்துவார்க்கு, அவரவர் தகுதிக் கேற்பப் பற்பல நெறிள் கூறப்படுதலின், அவற்றுள் உண்மைநெறியறிந்து ஒழுகும் முன்னைத் தவ முடையார் பொருட்டு, "நிலவு மெய்ந்நெறி சிவ நெறியது'' என்றும் கூறியருளினார். என்பது, என்று உண்மையறிந்த பெருமக்களால் சிறப்பித்துக் கூறப் படுவது என்றவாறு.

இத் திருப்பாசுரத்துக்குப் பேருரை வகுப்பான் ஒக்க ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் இப்பாசுரத்தின் கருத்து ஈதென்பார், ''உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்" என்று அருளிச்செய்தது கொண்டு இத்துணையும்
கூறப்படுவதாயிற்று.

இதுகாறும் கூறியதற்கியைய, ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், "வேதம் சிவாகமம் என இரு பகுதிப்பட்டது மூன்று வருணத்திற்கும் உரிமை யாதலும் நான்கு வருணத்திற்கும் உரிமையாதலும் பற்றி என நீலகண்ட பாடியத்திற் கூறப்பட்டது. 'வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநூல் அநாதியமலன் தருநூலிரண்டும் ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம், நீதியினாலும் கர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீண்மறையின் னொழிபொருள் வேதாந்தத், தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவகாமங்கள் சித்தாந்தமாகும்' (சிவ. சித். 8:15) எனவும், 'உலகியல் வேத நூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்' எனவும் கூறுபவாகலின் அங்ஙனம் தூலாருத்தி முறைமை பற்றிக் கூறுதலின் இருபகுதிப்பட்டது என யாம் கோடும்" என்று அறிவுறுத்தருளியிருப்பது காண்க.

இப்பாசுரத்தின் பொருள்

அந்தணர் வானவர் ஆனினம் வாழ்க - அறவோரும் தேவரும் ஆனினங்களும் இனிது வாழ்க; தண்புனல் வீழ்க - தண்ணிய மழை பொய்யாது காலந்தோறும் பொழிக; வேந்தனும் ஓங்குக - வேந்தனான பாண்டியனும் சிவஞான சிவவொழுக் கங்களால் மேம்படுக; தீயது ஆழ்க - தீமையினை யுடைத்தாகிய சமயம் ஒழிக; எல்லாம் அரன் நாமமே சூழ்க - எல்லா உயிர்களும் சிவபெருமான் திருப் பெயராகிய திருவைந்தெழுத்தினையே ஓதிச் சிறப்புறுக; வையகமும் துயர் தீர்க - நிலத்தே வாழும் மக்கள் இருமையினும் துன்பமின்றி வாழ்க என்றவாறு.

வேறு வேறு இனமாதல் பற்றித் தொகை கொடாது அந்தணர் தேவர் ஆனினம் என்றெண்ணி "வாழ்க" என்றார். காலந்தோறும் தப்பாது பெய்தா லன்றித் தட்பம் உண்டாகாமையின், "தண்புனல் வீழ்க'' என்றார். வேந்தனை "ஓங்குக" என்றதனால், அவன் ஓங்குதற்குரிய சிவநெறிக்கண் நில்லாமை யுணர்த்தியவாறாம். புறச்சமயம் என்றால், அயற் சமய மென்றாதல் கூறாது, அந்நெறி யொழுகுவாரது தீமை குறித்து, "தீயது" என்றார். எல்லா மென்றது, அத் தீநெறிக்கண் இன்றி அதனின் வேறாய நெறிநின்ற உயிர்களை யுளப்படுத்து நின்றது. திருவைந்தெழுத்துச் சிவபரம்பொருளை யுணர்த்துவதாதலின், அதனை "அரன் நாமம்" என்றும், சூழ்தல் நினைத்தலாதலின், நினைத்தும் ஓதியும் வாழ்க என்றற்கு "சூழ்க" என்றும் கூறினார். ஏகாரம், தேற்றம். வேந்தனும் வையகமும் என்புழி உம்மை எச்சப் பொருள். இனி, வேந்தனும் என்பதனைப் பிரித்து, வையகமும் என்பதனோடு இயைத்து, வேந்தனும் ஓங்குக வையகமும் துயர் தீர்க என்று நிறுத்திப் பொருள் கூறுவாருமுண்டு. ஆயினும், அவ்வாறு பொருள்கோடல் மரபன்மையின் ஈண்டுக் கிடந்தவாறே கொள்ளப்பட்டது.

சேக்கிழார் சுவாமிகள் அருளிய பேருரை :

இனி, இத்திருப்பாசுரத்துக்குப் பேருரை விரிக்க லுற்ற ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், முதற்கண், "வாழ்க அந்தணர்,” என்று தொடங்கும் திருப்பாசு ரத்துக்குப் பொருள் கூறுவார்,

    "அந்தணர் தேவரா னினங்கள் வாழ்கஎன்
    றிந்தமெய்ம் மொழிப்பய னுலக மின்புறச்
    சந்தவேள் விகண் முதல் சங்கரர்க் குமுன்
    வந்தவர்ச் சனை வழி பாடு மன்னவாம்"

என்று உரைத்தருளுகின்றார்.

உரை : அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்க என்ற இந்த மெய்ம்மொழிப் பயன் - அறவோர்களும் தேவர்களும் பசுக்கூட்டங்களும் வாழ்க என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த இந்த மெய்ம்மை சேர்ந்த திருமொழியின் பயன் யாது எனின்; உலகம் இன்புற - உலகில் உள்ள உயிர்கட்கு இன்பம் மிகவும்; சங்கரர்க்கு - சிவபெருமான் பொருட்டு ; சந்த வேள்விகள் முதல் - மறையோதிச் செய்யும் வேள்வி முதலாக முன்வந்த - முன்னை நாள் தொட்டு நடைபெற்றுவந்த; அர்ச்சனை வழிபாடு மன்னவாம் - மலரிட்டு அருச்சித்தலும் பிறவுமாகிய வழிபாடுகள் நிலைபெற நிகழவுமாம்
எ-று.

என்றது, ஆளுடைய பிள்ளையார் தாம் அருளிச் செய்த திருப்பாசுரத்தின் கண், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்றது, உலகம் இன்புறுதற்கும் தொன்றுதொட்டுச் சிவபரம் பொருட்கு நடைபெற்று வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் நிலைபெற்று நிகழ்தற்குமாம் என்று உரைத்தவாறாம்.

அந்தணர், அறவோர்; அவர் முற்றத்துறந்த முனிவராவர். திருவள்ளுவனாரும் அந்தணரென விதந்தோதப்படுபவர் இவரே யென்றற்கு “அந்தண ரென்போர் அறவோர்," என்று தெளிவித்துள்ளார். உலகில் மக்களை அனாதியே பிணித்து நிற்கும் மல கன்மக் கட்டுக்களை அறுத்தற்குத் துணையாக வந்த உடல் , கருவி, உலகு முதலியவற்றை நன்கு பயன்படுத்திக் கோடற்குரிய அறமுதல் நான்கினை யும் அவற்றிற்குரிய நன்னெறியினையும் உணர்த்தியும் ஒழுகியும் காட்டும் பேரருளாளராதலின் அவ்வருணி லையைச் சுட்டி "அந்தணர்,'' என்றார். அவரால் உலகம் பெறும் பயன் அவர் தாம் பெற்ற பயனே; அஃதாவது சிற்றின்பத் தொடக்ககன்று பேரின்பப் பெருவாழ்வில் திளைத்தாடுவது; அதுபற்றியே ஆசிரியர் - 'உலகம் இன்புற' என்றார். எனவே, அந்தணர் வாழ்க என்றது உலகம் இன்புறுதற் பொருட்டு என்ற வாறாயிற்று. இன்புறுதல், இன்பம் மிகுதல்; 'பார்மட்டும் இன்புறூஉம் இன்சொல வர்க்கு' (குறள். 94. பரி. உரை) என்றாற்போல.

செய்யப்படும் வேள்வியையேற்றுச் செய்வாரை அதன் பயனைத் தலைப்படுவிக்கும் தலைமை யுடைமையின் 'தேவர் வாழ்க' என்றார் என்றும், மறைமொழி கேட்டு மகிழ்ந்து போந்து வேள்வியில் நல்கப்படும் அவியுண்டு சிறப்பவராதலின், அவ் வேள்வியைச் "சந்த வேள்வி ,” யென்று சிறப்பித்தும் கூறினார். சந்தம், மறையோசை; வடசொற் சிதைவு. தேவர் பொருட்டுச் செய்யப்படும் வேள்விகளால் மழைவளம் பெருகுமென்பதனை அடுத்த பாட்டிற் கூறுதலால், வேத வேள்வி நிலை பெறுவது குறித்துப் பிள்ளையார் தேவர் வாழ்க என்றார் என்று ஆசிரியர் உரைக்கின்றார். பிறாண்டும் 'வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி, என வேத வேள்வி நிலைபெறுவதையே குறிக்கொண்டும் அதனால் விளைவது குறைவற்ற இன்பவாழ்வென்பார் பிள்ளையார். "மாதவர்களன்ன மறையாளர்கள் வளர்த்த மலிவேள்வியதனால், ஏதமதிலாதவகை இன்பமமர்கின்ற எழில் வீழிநகரே,'' (திருவீழி 5) என்றும் ஓதுவது காண்க. இனி சமண சமயச் செல்வாக்கு மிகுதியால் நாட்டில் வேத வேள்வி நிலைபேறின்றிக் கெட்டிருந்தமையின் அது நிலை பெறவேண்டிச் "சந்தவேள்விகள் மன்ன'' என்றா ரென்பதூஉமாம். ஆவடுதுறையில் இறைவன் அருளிய பொற்கிழியினைப் பிள்ளையார் தம் தந்தையார்க்குக் கொடுத்தபோது, ''ஆதிமாமறை விதியினாலாறு சூழ்வேணி, நாதனாரை முன் னாகவே புரியநல்வேள்வி, தீது நீங்க நீர் செய்யவுந் திருக்கழுமலத்து, வேத வேதியரனைவரும் செய்யவும் மிகுமால்,'' (திருஞான . 429) என்று உரைப்பதும்[#] இக்கருத்துக்களை வலியுறுத்துவது காணலாம்.
---
    [#] "அந்தணர் வேள்வியும் அருமறைத் துழவியும்
    செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
    பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
    மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே." (திருமழபா. கொல்லி. 3)
என்ற திருவாக்கு ஆளுடைய பிள்ளையாரின் குறிக்கோள்கள் இவை யென்பதுணர நிற்றல் காண்க.
----

சங்கரர் - சிவபெருமான். சங்கரன் - எவ் வுயிர்க்கும் சுகத்தைச் செய்பவன். சிவபரம் பொருட்குச் செய்யப்படும் திருப்பணிகளுள் தொன்றுதொட்டு வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் சிறந்தவையாதலின், 'முன்வந்த அருச்சனை வழிபாடு" என்றார். பிள்ளையார் இக் கருத்தினைப் பல பதிகங்களில் "இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்”, “பத்தி மலர் தூவ முத்தியாகுமே," "கரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம்" என்பன முதலிய பல திருவாக்குக்களால் எடுத்தோதுதலைக் காணலாம்.

திருமுழுக்குக்கு வேண்டும் நெய்யும் பாலும் தயிரும் முதலிய வைந்தும் தருவதுடன் அருச்சனைக் குரிய திருநீறும் தருவதால் 'அருச்சனை வழிபாடு மன்ன ஆனினங்கள் வாழ்க' என்று பிள்ளையார் அருளிச்செய்தாரென்றார்; "ஆனஞ்சாடும் முடி யானும் ஐயாறுடையடிகளே'' என்று பிறாண்டும் பிள்ளையார் கூறுவதுடன், அருச்சனை வழி பாட்டிற்கு வேண்டியவற்றுள் பலவற்றை நல்கும் பண்பு பற்றி, ஆவினையே பரமனாக உபசரித்து, "மணியே, ஆனே சிவனே அழுந்தையவர் எம்மானே யென மாமடம் மன்னினையே" (அழுந்தூர் 4) என்று உரைத்தருளுவது காண்க.

இதுகாறும் கூறியவாற்றால் பிள்ளையார் பாசுரத்தே 'அந்தணர் வாழ்க' என்றது உலகம் இன்புறுதற்கும், 'வானவர் வாழ்க' என்றது சந்த வேள்விகள் முதலியன மன்னுதற்கும், 'ஆனினம் வாழ்க' என்றது அருச்சனை வழிபாடு மன்னுதற்கும் என்றும் தெரித்துரைத்தவாறாம். அந்தணரைப் பிரித்துத் தேவரை ஆனினத்தோடு கூட்டி "மன்ன வாம்" எனப் பொதுமுடிபுகுந்து உரை வழங்கியது, அத்தேவரனைவரும் ஆனினத்தின் அங்கத்தே யடங்கியிருத்தல் பற்றியென வுணர்க. "துங்கவமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத, அங்க மனைத்தும் தாமுடைய வல்லவோ நல்லா னினங்கள்'' (சண்டே . 19) என ஆசிரியர் தாமே உரைத்திருப்பது காண்க.

இனி நிறுத்த முறையாலே, ஆளுடைய பிள்ளையார், "வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ," என்று மொழிந்தருளிய பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

    "வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
    நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்;
    ஆளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
    மூளு மற்றிவை காக்கு முறைமையால்."

உரை : வீழ்புனலாவது - மழை காலந்தோறும் பொய்யாது பொழிவது ; வேள்வி நற்பயன் - வேள்விகளால் உண்டாகும் நல்ல பயனாதலாலும்; நாளும் - நாடோறும்;. அர்ச்சனை - சிவபெருமா னுக்கு நடைபெறும் அருச்சனை வழிபாட்டுக்கு; நல் உறுப்பு ஆதலால் - சிறந்த பொருளாதலாலுமாம்; ஆளும் மன்னனை வாழ்த்தியது – நாட்டையாள் கின்ற வேந்தனை ஓங்குக என வாழ்த்தியருளியது; அர்ச்சனை மூளும் - அருச்சனை வழிபாடுகள் மிகுதற்கும்; இவை காக்கும் - அவை குன்றாதபடி காத்தற்கும் உரிய; முறைமையால் - முறைமையினை யுடையனாதலால், (எ - று).

''வீழ்த தண்புனல்'' என்று பிள்ளையார் அருளிய மெய்ம்மொழி விசும்பினின்று விழும் மழை யென்னும் பொருட்டென்பார், "வீழ்புனலாவது" என்றார். வீழ்க தண்புனல் என்று வாழ்த்தியருளவே மழை காலந்தவறாது பெய்யும் பெருமை பெறுவ தாயிற்றென்றற்குத் தொகை வாய்பாட்டால் "வீழ்புனலாவது" என்றாராயிற் றென்க. வீழ்புனல் வினைத்தொகை. இவ்வாறு மழையுளதாவது வேள்வியால் விளையும் நற்பயனென்றற்கு, "வேள்வி நற்பயன்" என்றார். பிள்ளையாரும், "அம்பரமாகி யழலுமிழ் புகையினா குதியான் மழை பொழியும், உம்பர்களேத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளியதுவே" (ஓமமாம். 2) என்று ஓதியருளுதல் காண்க, வேள்வியின் நற்பயனாய் நல்ல நீர் திருநீராட்டுக்கும் பூசனைப் பொருள்களைத் தூய்மை செய்தற்கும் பயன்படும் சிறப்புடைமை பற்றி, "அர்ச்சனை நல்லுறுப்'பென்றார். நீரை உறுப் பென்றதனால் ஏனைப்பூவணி, ஓப்பனை, புகையீடு, பராவல் முதலிய வழிபாடுகள் பலவும் இஃதில்வழிச் சிறவாமை பெற்றாம்; பெறவே, "வீழ்க தண்புனல்” என்ற மெய்ம்மொழி, வேள்வியால் விளையும் நற்பயன் மழை என்பதும், இறைவனை அருச்சித்து வழிபடுதற்கு இன்றியமையாதது என்பதும் உணர்த்தி நிற்றல் பெற்றாம். எல்லாவுயிர்கட்கும் இன்பம் செய்தல் பற்றி "நற்பயன்" என்றும், இன்றியமையாமை யினை வற்புறுத்தற்கு "நல்லுறுப்பு' என்றும் ஆசிரியர் சிறப்பித்தாரென வறிக.
இனி, பிள்ளையார் 'வேந்தனும் ஓங்குக" என்ற மெய்ம்மொழிக்குப் பொருள் கூறுவார், "ஆளும் மன்னனை வாழ்த்தியது" என்றார். பாண்டி நாட்டிற் பாண்டி வேந்தன் கேட்ப இத்திருப்பாசுரம் பிள்ளையாரால் திருவாய்மலர்ந்தருளப் பெறுதலின் பாண்டி நாட்டை யாளும் பாண்டி வேந்தன் ஓங்குக என்று தெரித்தோதிற்றிலராதலின், ஆசிரியர், "ஆளும் மன்னனை" எனத் தெரித்தோதினார். இருவழியும் பாண்டிநாடு எடுத்தோதப்-படாமையின், இடத்தா னும் காலத்தானும் பாண்டி வேந்தன் மேற்றாயினும், பொதுநிலையில் எல்லா நிலத்தும் எக்காலத்தும் நிலவும் வேந்தர்க்கும் அமைந்து மெய்ம்மையொளி திகழ நிற்பது உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

இதுகாறுந் தான் நின்றொழுகிய அல்வழியின் நீங்கிச் சைவமாகிய நல்வழியில் நிற்கின்றானாகலின், பாண்டி வேந்தன் நெடிது ஓங்கவே அருச்சனை வழிபாடுகள் நிலைபெற நடக்குமென்றும், நிலைபெறு மென்னாது "மூளும்” என்றதனால், உலகமெங்கும் அவ்வழிபாடு பரவி நிலைபெறுமென்றும் கூறினா ரென வறிக. இவற்றின் நிலைபேறு அரசனது காவல் முறைமைக்கண் தங்குகின்ற தென்பார், ''இவை காக்கும் முறைமையால்" என்றார்.

வேள்வியால் தண்மழையும், - மழையால் அருச்சனை வழிபாடும் நிலவுமென்பதும், எனவே வேள்வியும் அருச்சனையும் நிலை பெறுமாறு காத்தல் அரசுமுறையென்பதும், அம்முறையினைக் குறை வின்றிச் செய்யும் வேந்தன் வாழ்தல் வேண்டும் மென்பதும் பிள்ளையார் உரைத்தருளிய மெய்ம் மொழியின் கருத்தாதல் அறிகின்றாம் , மற்று, அசை நிலை. வேள்வியும் மழையும் காரணமும் காரியமும் மாய் நின்று, அருச்சனையாகிய பயனை முடித் தமைதலின் "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது" என்று எடுத்துரைத்தாரென வறிக.

இனி, நிறுத்த முறையே, "ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க" என்ற பாசுரப் பகுதிகட்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

    "ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
    வீழ்க வென்றது வேறெல்லா மரன் பெயர்
    சூழ்க வென்றது சொல்லுயிர் யாவையும்
    வாழியஞ் செழுத் தோதி வளர்கவே."

உரை :- ஆழ்க தீயது ஒன்று ஓதிற்று - ஆழ்க தீயது எனப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளியது; அயல் நெறி வீழ்க என்றது - சைவத்துக்கு அயலதாகிய தீநெறி வீழ்க என்பது குறித்து நின்றது; வேறு எல்லாம் - அதனின் வேறாகிய நெறிக்கண் நிற்கும் உயிர்களெல்லாம்; அரன் பெயர் சூழ்க என்றது - சிவபரம்பொருளின் திருப்பெயராகிய திரு வைந்தெழுத்தை எண்ணுக என்று ஓதியருளியது; தொல்லுயிர் யாவையும் - அனாதி நித்தியமாகிய உயிரனைத்தும்; அஞ்செழுத்து ஓதி - அத்திருவைந் தெழுத்தையோதி; வளர்க - சிவனருட் செல்வர் களாய் வளர்ந்தோங்குவார்களாக எ - று.

“ஆழ்க தீயது" என்று பிள்ளையார் அருளிச் செய்த பாசுரப் பகுதிக்குப் பொருள் இஃதென்பார், "ஆழ்க தீயதென்றோதிற்று அயல்நெறி வீழ்க என்றது, என்றார். எனவே, தீயதென்றது அயல் நெறியை யென்பதும், அஃதாவது சைவத்துக்கு அயலதாய்க் கிளைத்திருந்த புறச்சமயநெறி யென்பதும் பெற்றாம். ஆழ்க தீயதென்பதிலுள்ள ஆழ்க என்றது, எஞ் ஞான்றும் கிளைக்காதவாறு புதைந்து கெடுக என்னும் பொருண்மைத்து என்பார். "வீழ்க என்றது'' என்றார். ஆழ்ந்து நோக்கிச் செல்வதொன்றினை வீழ்க்கும் என்பது செந்தமிழ் வழக்காதல்பற்றி வீழ்க என்று பொருளுரைத்தாரென வறிக.

"கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும் மே” (புற.109) என்று பிறரும் வழங்கியிருத்தல் காண்க. வீழ்க என்ற பொருளுரை ஆற்றலால் மேலெழாமையை வற்புறுத்தல் உணரப்படும். இவ்வேறுபாடு காட்டற் கன்றே, ஆசிரியர், "வீழ்க தண்புனல்” என்ற திரு மொழிக்கு "வீழ்புனலாவது " என வேறு வாய் பாட்டால் பொருளுரைப்பாராயினதூஉமென வறிக.

"எல்லாம் அரன் நாமமே சூழ்க" என்றது, சைவ சமயத்தின் வளர்ச்சி குறித்து நிற்றலின், தீயதென்பது அதற்கு அயலதாகிய சமயத்தைக் குறித்து நிற்பது இனிது பெறப்படுதலின், அதனையெடுத்தோதாது, "அயல்நெறி” என்று உரைத்தொழிந்தார். இனி, அஃது அரன் நாமத்தைச் சூழாது சைவத்துக்கு மாறாய வற்றைச் சூழ்ந்து, அதற்கிடனாகிய வைதிக நெறியை யிகழும் தீமையுடைமையின், "தீயது'' என்றார்; ''வைதிகத்தின் வழி யொழுகாதவர், கைதவம் முடைக் காரமண்தேரர்" (ஆல். 2) என்றும், "மண்ணில் மறையோர் மருவு வைதிகமும்” (வீழி.6) என்றதனால் வைதிக மின்னதென்றும் பிள்ளையார் ஓதுதல் காண்க. அரன் நாமத்தைச் சூழாது பிறவற்றை யவர்கள் சூழ்ந்தன ரென்றற்கு, "குண்டமணராகி யொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்து, தெண்டிசையுமில்லதொரு தெய்வ முளதென்பர்'' (வீழி.10) என்று ஓதுதலாலறியலாம். சைவம் வேத நெறிப்பட்டதென்பது, ஆசிரியர், "விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப்பயனாம் சைவமும் போல்" (சண்டே . 9) என்றும், 'வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்க" (ஞானசம். 1) என்றும் உரைப்பது காண்க. இனி, பிள்ளையாரால் காணப்பட்ட சமணர் பலரையும் "பொல்லா மனசமணர்" (கொடுங், 10) என்றும், ''நீதியறியாதார் அமண்கையர்" (புள் . ஆல. 10) என்றும், "கோது சாற்றித் திரிவார மண்குண்டர்" (சோற்று. 10) என்றும், "வெஞ்சொல் தஞ்சொல்லாக்கி நின்ற வேடமிலாச் சமணும்" (நெடுங்களம். 10) என்றும், ''பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்'' (வீழிமிழலை 10) என்றும் ஓதுதலின், அவர் மேற்கொண்டொழுகிய நெறியினைப் பிள்ளையார், "தீயது" என்றாரென்றலு மொன்று.

இனி, எல்லாம் எனப் பிள்ளையார் அருளிய திருமொழிக்குப் பொருள் கூறுவார் ஆசிரியர், ''வேறெல்லாம்" என்று உரைக்கின்றார். எல்லாம் என்றது சமண சமய மொழிந்த ஏனையெல்லாச் சமயங்களையும் எஞ்சாமல் தழுவி நிற்பது பெறப் படும். அவற்றைப் பிற எல்லாம் என்னாது வேறெல் லாம் என்று சிறப்பித்ததனால், சமண சமயத்தின் வேறாய், சைவத்திற் பிறவாய் நிற்கும் பல்வகைச் சமயங்களும் குறித்தவாறு உணரப்படும். சைவத்தைப் போல் வேத நெறியைத் தழுவி நெறியினும் முடிபிலும் வேறுபடும் பிற சமயங்கள், வேதநெறியினை அறவே மேற்கொள்ளாத சமண்சமயத்திற்கு வேறாதலின், இவ்வாறு தெரித்தோதல் வேண்டிற்று. எவ்வாற் நானும் இயைபில்ல தனையே வேறு என்ற சொல்லாற் சுட்ட வேண்டுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தால், அப்பூதியடிகள் தாம் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கு இட்ட பெயரைக் கண்டு நாவரசர், 'நும் பேர் எழுதாதே, வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய காரணம் என் கொல்" என்றார்க்கு, வேறு என்ற சொல்லாற்றலால் மிக வெகுண்ட அப்பூதியார், "மன்னவன் சூழ்ச்சி திருத் தொண்டின் உறைப்பாலே, வென்றவர் தம் திருப் பேரோ வேறொரு பேர்,'' என்று உரைப்பதனால் இனிது விளங்கும். தீயது எனப் பிள்ளையார் பொதுவாய்க் கூறினாரேனும், வேதவழக்கொடு படாத வேறு சமயம் பலவும் அதனால் அடக்கிக் கொள்ளப்படும். வேதத்தை ஓரொருகால் மேற் கொள்வதும் ஓரொருகால் கொள்ளாதொழிவதும் உடைய தார்க்கிகரும் பிள்ளையாரால் ஒரோவழி மறுக்கவும் படுகின்றனர்; தருக்கமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல், "இடுக்கண் வருமொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்" (கோளிலி . 10) என்று ஓதுவது காண்க.

"அரன் நாமமே சூழ்க' என்ற மெய்ம்மொழியில் நாமம் என்றது "நமச்சிவாய'' என்பதனை. இத் திருவைந்தெழுத்தினையே பரமனுக்குத் திருநாமம் என்பது. பிள்ளையார் தாமே, "நாதன் நாமம் நமச்சிவாயவே' (பொது. நமச்.1) என்றும், திருநாவுக் கரசர், "எந்தையார் திருநாமம் நமச்சிவாய" என்றும் ஓதியிருத்தலால் இனிதுணரப்படும். சூழ்தல், நினைத் தல். உயிர்கள் யாவும் உணருந்தன்மையுடையவை யாதலின், அவை தம் முணர்வின்கண் உணர்ந்து ஓதியுய்தற்குத் துணையாவது அத்திருநாமமே யென்பார், ''அரன் நாமமே சூழ்க'' என்றார். பிறாண்டும், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது'' என்று பிள்ளையார் ஓதுவது காண்க. இப்பொருண்மொழி, உயிர்கள் உய்தி பெறுதற்பொருட்டு வழங்கியதொரு பேரருள் நெறியாதலை வற்புறுத்துவார், ஆசிரியர், இதற்கு உரை கூறலுற்றுத் "தொல்லுயிர்யாவையும் வாழி அஞ்செழுத்தோதி வளர்கவே" என்றார். தாம் அறிவுறுக்கும் மெய்ந்நெறிச் செம்பொருளாகிய இதனையறிந்து கடைப்பிடித்தற்குரிய உயிர்கள் அனாதி நித்தியமாதல் பற்றித் "தொல்லுயிர்" என்றும், அவ்வுயிர்வகை பலவும் அடங்க, "யாவையும்'' என்றும், இத்திருநாமம் நெஞ்சில் நிலவாதவழி, வாயாற் பிற பொருளில் மொழிகளைப் பேசிப் பிறப் பிறப்புக்களை எய்துவித்துக் கொள்பவாகலின், நெஞ்சின் செயலு மகப்பட, "ஓதி யென்றும் கூறினா ரென வுணர்க.

வாயால் ஓதுந்திறம் நெஞ்சம் சூழ்தலானாம் என்பது பற்றி இவ்வாறோதின ரென்றலுமொன்று. ''துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும், நெஞ்சம் நைந்து நினைமின்'' என்றோதிய பிள்ளையார், காதலாகி என்ற திருப்பாட்டில் 'ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது' என்று ஓதுதலாலும், சிவஞான போதத்து ஒன்பதாம் சூத்திரத்தில் "விதியெண்ணும் அஞ்செழுத்தே'' என்று ஒதிய மெய்கண்டதேவர், தாம் உரைத்தருளிய பொழிப்பின்கண் "விதிப்படி உச்சரிக்க" என்றே யுரைத்தலாலும், ஓதுதல் என்ற தொழில் நெஞ்சின் நினைத்தற்றொழிலும் அகப் படுத்து நிற்றல் துணியப்படும். இக்கருத்தே, ஈண்டுப் பிள்ளையார் "சூழ்க” என்றதற்கு ஆசிரியர், "ஓதி வளர்க" என்றுரைத்த உரையின்கண்ணும் விளங்கி நிற்றல் தெளியப் படும். வாழி, அசைநிலை. ஆயினும் அஃது ஈண்டு, ஆசிரியர்க்கு அத்திருவைந்தெழுத்தின் பால் உள்ள ஆராவன்பினை வெளிப்படுத்தி, அதனால் உயிர்கள் பெறக் கடவதோர் ஆக்கத்தினை உணர்த்தி நிற்கிறது. திருவைந்தெழுத்தை ஓதினோர் தாம் அரனுக்கு அடிமையென்றுணர்ந்து அத் திருவைந்தெழுத்தாலமைந்த அவன் திருமேனியை இதயத்தே எழுந்தருளவித்தருச்-சித்தும் குண்டலியில் ஒமித்தும் புருவநடுவே கண்டு தியானித்தும் சிவ போகப் பேரின்பத்தே திளைத்தாடிச் சிறப்பரென்பது சான்றோர் முடி பொருளாதலின் 'ஓதுக" என்றே யொழியாது "ஓதி வளர்க" என்று ஆசிரியர் உரைத் தருளுவாராயினரென வுணர்க.

இனி, அயல் நெறியின் நீங்கிச் சிவத்தைச் சாரும் உயிர்சார்தற் கேதுவாகிய சிவஞானம் விளங்கிய வழியும், பண்டைப் பயிற்சியால் அந்நெறியினை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றையே நோக்கித் துயருறுமாதலின், அது நீக்குதற்கு ஓதியுய்க என்பார், "ஓதி வளர்க" என்றாரென்றுமாம்.

    "சொன்ன வையகமுந் துயர் தீர்க்கவே
    என்னு நீர்மை யிகபரத் தில் துயர்
    மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
    முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்”

இனி, நிறுத்தமுறையானே பிள்ளையார் மொழிந்தருளிய "வையகமுந்துயர் தீர்க்கவே" என்ற பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் பேருரை வகுக்கின்றார்.

உரை :- சொன்ன - மேலே திருவாய் மலர்ந் தருளிய "வாழ்க அந்தணர்" என்றற் றொடக்கத்துத் திருப்பாசுரத்து ; வையகமும் துயர் தீர்க்கவே என்னும் நீர்மை - வையகமும் துயர் தீர்க்கவே என்ற மெய்ம் மொழியின் கருத்து ; இகபரத்தில் - இம்மை மறுமை களில்; துயர்மன்னிவாழ் உலகத்தவர் - துன்பம் மிகுந்து வாழும் இவ்வுலகத்து மக்கள்; மாற்றிட - அத்துன்பங்களைப் போக்கி இன்பமெய்துவித்துக் கொள்ளற் பொருட்டு ; முன்னர் - முதற் பாசுரத்தி லேயே; ஞானசம்பந்தர் மொழிந்தனர் - எல்லாம் அரன் நாமமே சூழ்க அதனால் வையகமெல்லாம் துயர் நீங்கி வாழ்க என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் மொழிந்தருளினார் (எ - று)

உரை பெருகி நீட்டித்தலின், கடைப்பிடியும் இயைபும் தோன்ற, "சொன்னவையகமும் துயர் தீர்கவே,'' என்றார். "அரன் நாமமே சூழ்க," என்ற திருவுள்ளத்தால் , வையகமும் வாழ்த்தப் பெறும் அருமைப்பாடு நினைந்து "சொன்ன,'' எனச் சிறப்பித்தாரென்றலு-மொன்று. அயல்நெறி நின்றார் வீழ்க என்னாது, அந்நெறியே வீழ்க என்ற அருட்குறிப்பு, அரன் நாமமே சூழ்ந்து வாழும் மக்களேயன்றி ஏனையோர் வாழும் நிலவுலகுக்கும் சென்று, ஆங்கு வாழ்வார் தாமும் துன்பம் நீங்கி இன்பமெய்தி வாழ்க என்று கருதுதல் தெரிந்து, நமக்கு அறிவுறுத்துவார் ஆசிரியர், துயர்மன்னிவாழ் உலகத்தவர் அத்துயர் மாற்றி வாழ்தல் வேண்டி, "வையகமும் துயர் தீர்கவே,'' என்று அருளினார் என்று தெரிக்கின்றார்.

இனி, ''வையகமும்,'' என்ற சொல், ஆகு பெயரால் ஆண்டு வாழும் மக்களையே குறித்து நிற்கிற தென்பார், ''உலகத்தவர்,'' என்றும், இன்புறுக என்னாது "துயர்தீர்கவே,'' என்றதனால், உலகத்தவர் இருமையிலும் துன்பமே நுகர்கின்றனரென்றும், உரைத்தருளுகின்றார். இம்மை மறுமையென்ற இருவகை வாழ்விலும் உலகத்தவர் துன்பம்மிக்கு வாழ்வதால், அவர் துன்பம் நீங்கியுய்தல் வேண்டும் மென்ற திருவுள்ளத்தால் "துயர் தீர்க,'' எனப் பிள்ளையார் அருளிச் செய்தாராயிற்று. துயர் தீர்தலாவது, அத்துன்பம் எய்தியவழி, அதற்குப் - பரிதலும் பிறவும் செய்யாது அது தம்மைப்பற்றி நிற்கும் வினை மாசு கழுவவந்த மாண் பொருள் எனக்கொண்டு, துன்பம் பயக்கும் பிறவினைகளைச் செய்யாது தம்மைக் காத்துக்கொண்டொழுகலாம். அதனால், துயரொழிந்து உயிர்கட்குத் துன்பமின்றாம் என்பார், 'மாற்றிட'' என்றார். மாற்றுதலாவது, "இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன், னொன்னார் விழையும் சிறப்பு'' (குறள். 630) என்றாற்போல, துன்புறுப்ப வந்தவினையை வினை மாசு கழுவவந்ததாக மாறி நினைத்தல்.

இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் நுகரும் இன்பங்கள் நிலைபேறின்றிக் கழிந்து மேலும் பிறப் பிறப்புக்கட்கு ஏதுவாகிய வினைகளை விளைவித்துத் துன்புறுத்தலின், "இகபரத்தில் துயர் மன்னிவாழ் உலகத்தவர்" என்றார். மறுமைக்கண் நுகரும் இன்பத் துன்பங்கட்கு நிலைக்களன் மண்ணுலகமேயாதல் பற்றி, ''துயர் மன்னிவாழ் + உலகத்தவர்" என்றார். மன்னுதல், மிகுதல்.

இவ்வாறு துயரிலே கிடந்து வருந்தும் உயிர்கள் அதனின் நீங்கியுய்தல் வேண்டுமென்ற அருளுள்ளத் தால் இவ்வுலகத்தவர் நினைக்கப்பட்டமையின், துயர்க்கேதுவாகிய வினைகளின் நீங்கி, இறைவன் திருவடியை வழிபட்டு வினையின் நீங்கி இன்புறுவர் என்பது கருதி, முதற்பாசுரத்தேயே பிள்ளையார் இதனை மொழிந்தருளினாரென்பார், ''முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்,'' என்றார். ஞான சம்பந்தமுடையராதலால், ஞானத்தால் சிவபரம் பொருளின் திருவருணெறி நின்றாரேயன்றி, நில்லாரும் பின்னர்த் தெளிந்து நிற்பர் என்னும் திருக்குறிப்போடு "முன்னர் மொழிந்தனர்" என்ப தொரு நயம் தோன்ற நிற்றல் காண்க. வினை நீக்கத் துக்கு இறைவன் திருவடி வழிபாடே ஏற்ற சாதனமாவதென்பார் பிள்ளையார்,

    "அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
    உய்வினை நாடா திருப்பது நுந்தமக் கூனமன்றே
    கைவினை செய் தெம்பி ரான்கழ லேத்துதும் நாமடியோம்
    செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

என்றும்,

    ''பண்டு செய்த வல்லினை பற்றறக் கெடும்வகை
    உண்மக் குரைப்பனான் ஒல்லை நீ ரெழும்பினோ." (கோடிகா.)

என்றும்,

    "துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
    தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்,
    அக்கணிந் தரைமிசை ஆறணிந்த சென்னிமேல்,
    கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே." (3)

என்றும் பல படக் கூறித் தெருட்டுவது காண்க.
------------------

13.சேரமான் பெருமாள் பிரபந்தங்கள் [§]

சேரமான் பெருமாள் அருளிய பிரபந்தங்களைப் பற்றிச் சில கூறுதற்குமுன் அவர் வரலாற்றைப் பற்றிச் சிறிது கூறுவது முறையாகும். திருத்தொண்டர் புராணம் ஒரு பெரிய யாறு போல்வது. அவ்வாறு கயிலை மலையில் தோன்றி மண்ணிடையே பல நாயன்மார்களுடைய வரலாறு களாகப் பிரிந்து சென்று சிவ பரம்பொருளின் திருவருட் கடலில் சென்று சேர்கிறது. இதன் தோற்றுவாய் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறாகும். இவ்வரலாறு திருமலையில் தோன்றித் தில்லை வாழந்தணர் புராணம் முதலாக வெள்ளானைச் சருக்க மீறாகப் பல ஆறுகளாகப் பிரிந்து சைவ வுலகில் பாய்ந்து சைவப் பயிரை விளைவித்துச் சென்று திருவருட் கடலையடைவதைக் காண்கின்றோம். இவற்றுள் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற இருவர் புராணங்களாகிய யாறுகள் பெரியனவாகும். இவை தம்முள் கூடியும் பிரிந்தும் செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்கின்றன.
---
[§] திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீன மஹா சந்நிதானத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு மூலநதியாய்ப் படர்ந்து ஏயர் கோன் கலிக்காமர், சேரமான் பெருமாள் என்ற இருவர் வரலாறுகளுடன் கலந்து ஓடித் திருக்கயிலாயத் தையே அடைகிறது. கிழக்கே கடற்கரையில் தோன்றிய ஸ்ரீ சுந்தரர் வரலாறாகிய யாறு, மேற்கே சேர நாட்டில் தோன்றிய சேரமான் பெருமாள் வரலாறாகிய யாறு கிழக்கே ஓடிவந்து திருவாரூரில் தன்னோடு கலக்கக் கலந்து பாண்டி நாடெல்லாம் பாய்ந்து, சோழ நாட்டிற்கே திரும்பப் போந்து, மேற்கே சேர நாட்டிற்குச் சென்று, மீட்டும் திருவாரூருக்கு வந்து, பின்னரும் அம்மேலை நாட்டிற்கே சென்று, சிவனருட் கடலில் கலந்து ஒன்றுபடுகிறது. இவ்யாறுகளின் வரவும், இவை கொணரும் வளங்களும் நம் தமிழ்நாட்டிற்கு வழங்கிய நலத்திற்கும் அதனால் சைவ மக்கள் பெற்றுள்ள மேம்பாட்டிற்கும் அளவு காண்பது முடியாத செயலாகும்.

சேரமான் பெருமாள் இற்றைக்குச் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகட்கு முன் நம் நாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த அரசர் பெருந்தகையாகும். இவர் பெயர் பெருமாள் கோதையென்பது. சிவ வழிபாட்டில் இவர் இளமை முதலே ஊன்றிய உறுதி படைத்தவர்; செங்கோற் பொறையன் என்னும் சேர வேந்தனுக்குப் பின் சேரநாட்டிற்கு முடியுடை மன்னரானவர்; சிவபெருமான் அன்பராகிய பாணபத்திரர் பொருட்டுத் திருமுகம் விடுக்கப் பெற்றவர்; சிவபெருமான் திருவருள் காட்டத் திருவாரூரையடைந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி களைக் கண்டு அவரோடு பிரியா நட்புற்றவர். இந்நட்பின் பெருமை மிக்க சிறப்பானது. இதனைப் பின்னர்க் கூறுகின்றாம். இவர், சுந்தரமூர்த்திகளைத் தம் சேர நாட்டிற்கு அழைத்துச் சென்று பல நாள் தம்மோடு இருத்தி அவர்க்குப் பணி செய்யும் பேறு பெற்றவர்; மறுபடியும் அச் சுந்தரமூர்த்திகள் தாமே தம் நாட்டிற்கு வந்து பரமன் விடுத்த வெள்ளானை மீது கயிலைக்குச் செல்வதுணர்ந்து, அவர் யானைக்கு முன் தம் குதிரை மீதேறிக் காவல் புரிந்து செல்லும் கழிநலம் பெற்றார் ; கயிலையையடைந்து சிவ பெருமான் திருமுன் தாம் பாடிச் சென்ற திருவுலாப் புறத்தை அரங்கேற்றிச் சிவகணங்கட்குத் தலைவராம் செம்மை நிலை எய்தியவராவர்.

இனி, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் மூன் றாகும். அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன. இவற்றுள் பொன்வண்ணத் தந்தாதி, தில்லையில் பாடி நடராசப் பெருமான் திருப்படிக் கீழ் அரங்கேற்றம் செய்யப்பெற்றது ; திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்திகள் கேட்க அரங்கேற்றம் செய்யப் பெற்றது ; திருக்கயிலாய . ஞானவுலா திருக்கயிலாயத்தே சிவபரம்பொருளின் திருமுன் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இவற்றின் நலம் காண்பதற்கு முன், நாம் இவற்றைச் செய்த ஆசிரியராகிய சேரமான் பெருமாளின் மனப் பான்மையைத் தெரிந்துகொள்வது நலமாகும். சான்றோர் செய்த நூல் நலம் காணப்புகுவோர் முதற்கண் அந்நூலைச் செய்த அச்சான்றோர் மனப் பான்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பெரியோர் கூறுவர்.

நூலாசிரியன் மனப்பான்மையை யுணர்தற்கு இருவகைக் கருவிகள் உண்டு. அவை அகக்கருவி, புறக்கருவி என்பன. அகக் கருவி அவர் செய்த நூலும், புறக்கருவி அவர் வரலாறுமாகும். நம் நாட்டுச் சான்றோர்களுள் பலருடைய மனக்கோளையறி தற்குப் புறக்கருவி போதிய அளவு கிடைப்பதில்லை. அகக்கருவியே பெரும்பாலும் கிடைப்பது. அதனால், நாம் அச் சான்றோர்களின் மனப்பான்மைகளுள் ஒரு பகுதியே காண முடிகிறது. மிகச் சிலர்க்கே இரு கருவிகளும் அமைந்திருக்கின்றன. அச் சிலருள் நம் சேரமான் பெருமாள் அருட்கருத்தை இருவகைக் கருவிகளையும் கொண்டு காண்பது இயல்கிறது.

புறக்கருவியாகிய இவரது வரலாறு தெய்வக் கவிநலம் சிறந்த சான்றோரால் செப்பமாக நமக்கு வழங்கப்பட்டுளது. சேக்கிழார் பெருமான் இவர் வரலாற்றைச் சேரமான் பெருமாள் நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம் என்ற இரண்டு பகுதிகளில் தெய்வமணக்கும் செய்யுட்களால் தீவிதாகச் செப்பியிருக்கின்றார். அச் செய்யுட்கள் நம் கருத்தை மிக விரைவில் ஈர்த்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்தவையாதலின், நாம் மிக்க விழிப்போடு சென்று அவற்றின் வாயிலாகச் சேரமான் பெரு மாளின் திருவுள்ளக் கிடையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இன்றேல், அத் தெய்வக் கவிகளின் தீஞ்சுவை நம் கருத்தை விழுங்கிக் கொள்ளும். சேரமான் பெருமாள் அரசராதற்கு முன் திரு வஞ்சைக்களத்தில் சிவபரம்பொருட்குத் தொண்டு புரியும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அக் காலத்தே அவர் உலகியல்பும் அரசியல்பும் ஆராய்ந்து தெளிந்து சிவத்தொண்டிலேயே உறைத்து நிற்கின் றார். அவர் இதனைச் சேக்கிழார் பெருமான், ''உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என வுணர்வார்" என்று கூறுகின்றார். இவ்வணர்வு நெஞ்சிலேயே நின்றொழியாது செயலின்கண்ணும் உருக்கொண்டு விளங்குகின்றது. நாடோறும் இவர், "புலரியெழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணீற் றினும் மூழ்கி", "திருப்பாட்டும் ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப் பணிந்து ஒழுகுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. மேலும், இவர், செங்கோற் பொறையன் இறந்ததும் அரசுரிமை யெய்தியபோது, அமைச்சர் வந்து அரசேற்க வேண்டுங்கால், அரசின் மேல் விருப்பம் வையாது, "இன்பம் பெருகும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவர் மொழிந்தார்" என்று நினைந்து நிற்கின்றார். அமைச்சர் அரசுமுறை சிவ வழிபாட்டிற்கு இடையூறாகாது என்று பல படியாகக் கூறக்கேட்டு, "அன்பு நிலை வழுவாமை அரசு புரக்கும் அருள் உண்டேல்'', இறைவனை இடை பெற்றிடுவேன் என்று சொல்லி ஆண்டவனை வேண்டி, யாரும் யாவும் கழறுவன அறியும் அறிவு வன்மை பெற்றுக் கழறிற் றறிவாராவது இவருடைய திருத் தொண்டின் உறைப்பை நன்கு வற்புறுத்து வதைக் காண்கின்றோம். இவ்வாறு இறைவன் திருவருட் குறிப்பால் அரசு முறை ஏற்கும் இவரது மனப்பண்பு, சிவநெறிக்கண் ஊன்றி நிற்கும் ஒப்புயர் வற்ற மெய்யுணர்வினை நமக்குக் காட்டுகிறது. இவரும் பின்பு தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில், "தனக்குன்றம்மா வையம் சங்கரன்தன் அருள் அன்றிப் பெற்றால், மனக்கென்றும் நெஞ்சிற் கடையா நினைவன்" (43) என்றும், "நானிலம் ஆளினும், நான்மறை சேர்மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே' (98) என்றும் தம் மனக்கோளை விளங்க வுரைக்கின்றார்.

இவர் அரங்கேற்று உலா வரும் போது உடல் முழுதும் உவர் மண்ணூறி வெண்ணீறு சண்ணித்தாற் போல் ஒரு வண்ணான் தோன்றக்கண்டு, "உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்" என்று நினைந்து அவனுடைய காலில் வீழ்ந்து வணங்கு வதும், அவன் மனம் மருண்டு, "அடியேன் அடி வண்ணான் என்று அஞ்சி நடுங்கி நின்றபோது, ''அடியேன் அடிச்சேரன்'' என்று மொழிந்து, "திருநீற்று வார வேடம் நினைப்பித்தீர்' என்று அவனை இனிது செல்ல விடுத்தலும், இவர்க்குச் சிவ பரம்பொருளின் மேல் இருந்த உண்மையன்பினை, அடியார் வழிபாட்டால் தெரிய விளக்குகின்றன. திருநீற்று வார வேடத்தில் இவர்க்கு இருக்கும் பேரன்பினை, அத்திருவந்தாதியில்,

    ''வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம் வைகற்கு வைகல்
    பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்ற கில்லேன்; பொடிபூசிவந்துன்
    அருகொன்றி நிற்க அருளுகண்டாய்; அழல்வாய் அரவம்
    வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல் வைத்த வேதியனே" (21)

என்று குறிக்கின்றார்.

இவர் அரசு கட்டிலேறி அரசுபுரிந்து வருங்கால், இவர் மனம் சிவ வழிபாட்டில் சிறிதும் திரியவே இல்லை . தாம் தம் மனம், சொல், செய்கை என்ற மூன்றையும் சிவ வழிபாட்டில் ஒன்றுவித்து, - நாளும் சிவபெருமான் திருவடிச் சிலம்போசை தமது சிவ பூசைக்கண் தம் திருச்செவியாரக் கேட்டுச் சிறந்து வருகின்றார். இவர் எண்ணமெல்லாம் சிவபெருமான் திருவடியிலேயே ஒன்றி நிற்கின்றன. இவற்றைச் சேக்கிழார் பெருமான், நன்கு கண்டு, நம் சேரமானுடைய அறிவு முற்றும், 'நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம் பலத்துள், ஆடுங் கழலே எனத் தெளிந்த அறிவு' என்றே அறிவிக்கின்றார். நம் சேரமானும் தம் திருவந்தாதியில், இதுவே தம் கருத்து என்பாராய், "நெஞ்சமே எரியாடி எம்மான், கடல் தாயின் நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே" (13) என்றும், "முனியே முருகலர் கொன்றையினாய், என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களைகண் மற்றென்றும் இல்லேன்'' (40) என்றும் கூறுகின்றார். இவ்வண்ணமே, நம்பியாரூரரை நினைப்பிக்கும் கருத்தால், பரமன் தன் திருவடிச் சிலம்போசையை ஒருநாள் இவர்க்குக் காட்டத் தாழ்த்தபோது, இவர், "அடியேன் என்னோட பிழைத்தது'' என்று உரைப்பவர், "ஆசையுடம்பால் மற்றினி வேறு அடையும் இன்பம் யாது" என்று கூறுகின்றார்.

சிவ வழிபாடு புரியும் தமக்குச் செங்கோலரசு தந்து, திருவடிச் சிலம்போசை காட்டிப் பரமன் அருள் செய்வது தம் திருத்தொண்டில் வழாதிருத் தற்கே என்ற கருத்து இவர் கருத்தில் நிலவிய வண்ணம் இருக்கிறது. பாணபத்திரர் திருமுகப் பாசுரம் பெற்று வந்து காட்டக் கண்டு அளவிலா இன்பத்தில் திளைத்த இவர் தம் அரசியற் பண்டாரத்தைத் தந்து, அரசுரிமையினையும் உடன் தருகின்றார். பாணபத்திரர் அமைதி கூர்ந்து, "அரசே, அரசு கோடற்க ஆணையில்லை" என்று உரைக் கின்றார். இவர் உடனே, தாம் அரசேற்றது பரமன் திருவருட் குறிப்புக் கொண்டேயாதலின், அதனை ஈவதும் அக்குறிப்பினாலன்றிக் கூடாதே; தாம் செய்தது தவறாயிற்றே என்று நினைந்து அஞ்சி அடங்குவார், "இறைவராணை மறுப்பதற்கு அஞ்சி பிசைந்தார்'' என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். இச் செயலால் சேரமான் கருத்தில் ஒரு நல்லுணர்வு பிறந்தமை புலனாகிறது. தன்னை நினைந்து வழிபடுபவர்க்கு ஆண்டவன் வேண்டுவன வற்றைத் தந்தும் உணர்த்தியும் வழுவாவாறு திருத்திப் பணி கொள்கின்றான் என்பதைத் தெளிகின்றார். ''அரசு ஆணையில்லை '' என்ற பாணபத்திரர் விடை, உமக்கு அரசு நல்கிய இறைவன் அதனை நெகிழ்த்துப் பிறர்க்குக் கொடுத்துவிட ஆணையிடவில்லை என்று இவரைத் தெருட்டுகிறது. இவர் தெளிந்து அமை கின்றார். இதனைக் குறிப்பாக இவர் தம் திருவந்தாதியில், "தாமே அருள் செய்து கொள்வர் தம் பல்பணியே" (9) என்றும், "தாழ்சடையான் வஞ்சம் கடிந்து திருத்திவைத்தான் பெருவாகையே'' (11) என்றும், "புண்ணிய சூலத்தெம்மான், திருந்திய போது அவன் தானே களையும் நம் தீவினையே" (17) என்றும் இயம்புகின்றார்.

இனி, வண்ணான் தோற்றத்தைக் கண்டு அடியார் வேடம் எனக் கருதியதில் இருந்தே இவர்க்கு அடியார் பால் இருந்த அன்பின் மிகுதி நன்கு தெரிகிறது; ஆயினும் நம்பியாரூரர் பொருட்டுப் பரமன் சிலம்போசை தாழ்த்தது தெரிந்ததும், பரமன் அடியவர்பால் கொள்ளும் அன்பின் திறம் பெரிதும் விளங்கிவிடுகிறது. அப்போது இவர், நம்பியாரூரரைத் தாமும் கண்டு பணியவேண்டுமென்று வேட்கை கொள்கின்றார், "என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை யிருந்தவாறு " என்று வியப்புண்டா கிறது. அதனால் அடியார் இணக்கம் தமக்குப் பேரின்பம் தரும் என்பது தெளிவாகிறது. அது குறித்துத் திருவாரூர் நோக்கி வருபவர் தில்லையம்பதி வந்து, சிவபரம்பொருளைக் கண்டு பேரின் பெய்து கின்றார். அங்கே தங்கியிருக்கையில் தமது நினைவு செயல் சொல் முழுதும் சிவ பரம்பொருளிடத்தே ஒன்றி நிற்பது உணர்ந்து பொன்வண்ணத் தந்தாதியைப் பாடியருளி அரங்கேற்றுகின்றார். அதன்கண் தம் கருவி கரணங்கள் சிவமயமாதலை உணர்ந்து, எடுத்து எடுப்பிலேயே, "தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கு, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ் வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்று புகலுகின்றார். மேலும், தாம் நம்பியாரூரர் என்னும் பெருந் தொண்டரைக் காண வந்திருக்கும் நினைவு நூன்முடிவில் எழ, அவர் காட்சி தமக்குச் சிவபோகத்தைத் தரும் என்று இவர் துணிகின்றார். அத்துணிவை,

    "மாயன் நன் மாமணிகண்டன் வளர்சடை யாற்கடிமை
    ஆயின் தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே,
    காய்சின யானை வளரும் கனக மலையருகே
    போயின காக்கையு மன்றே படைத்ததப் பொன்வண்ணமே" (100)

என்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வந்தாதியின்கண் இவர், தாம் இவ்வந்தாதி யைப் பாடிய காரணம், தம் கருவி காரணங்களைச் சிவத்தொண்டில் ஈடுபடுத்துதல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண் டினை யேற்றும் பரமனுடைய அருமை நிலை, அம்மையப்பனாய் எழுந்தருளும் திறம் , அட்ட மூர்த்தியாய் அமைத்தல், அகப்பொருட்டுறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல்கள், இனிய காட்சிகள் எனப் பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காண்டற்கு முயல்வோமாயின், இச் சொற்பொழிவு மிக நீட்டிக்கு மாதலின், வகைக்கொன்று காட்டி மேற்செல்கின்றேன்.

இவ்வந்தாதி பாடிய காரணம் கூறுவார், ஏனையோர் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாது இருபது பாட்டுகள் பாடிப் பின்பு கூறலுறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றை யுரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன் சொற்களே என்றும், அவற்றை ஏற்றல் வேண்டும் என்றும் உரைப்பார்,

    "தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்,
    ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்; உரைத் தாருரைத்த
    கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார்; கடல் நஞ்சயன்றாய்;
    கொள்ளிய அல்ல கண்டாய் புன்சொ லாயினும் கொண்டருளே"

என்கின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக்கொள் வோர் பாடாதொழியலாமே என எழும் வினாவிற்கு விடை கூறுவார் போல், "அமரர் குழாம் நின்னைப் பொருள் மொழிகளால் போற்றிப் பரவக்கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடி யேனும் பாடலுற்றேன்; மதி தோன்றி நிலவு பொழியும் மிடத்து மின்மினியும் ஒளிவிரிகிறதன்றோ '' என்பார்,

    "அருளால் வருநெஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம்
    பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்களைப் புணர்க்கலுற்றேன்;
    இருள் ஆ சறஎழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
    வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே"

என்று விளம்புகின்றார். இவ்வாறு பாடிச் செல்பவர் எண்பது பாட்டுகட்கு மேல் பாடிவிடுகின்றார். மேலே பாடுமிடத்துச் சிறிது சோர்வு தோன்றுகிறது.
அப்போது, அவர்,

    "மானிலத் தோர்கட்குத் தேவ ரனைய அத் தேவரெலாம்
    ஆனலத் தால் தொழும் அஞ்சடை யீச னவன் பெருமை
    தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்;
    பாநலத் தால்கவி யாம் எங்ஙனே இனிப் பாடுவதே" (89)

என்று பாடுகின்றார்.

அவர் தம் கருவி கரணங்களைத் தொண்டில் ஈடுபடுத்தும் திறம் நம்மனோரை அத்தொண்டில் ஈடுபடச் செய்யும் அறவுரையாக இருக்கிறது.

    "சிந்தனை செய்ய மனம் அமைத் தேன்செப்ப நாவமைத்தேன்,
    வந்தனை செய்யத் தலையமைத் தேன்தொழக் கையமைத்தேன்,
    பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் யரும்பவைத்தேன்
    வெந்தவெண் ணீறணி யீசற் கிவையான் விதித்தனவே” (93)

இவ்வகையில் நம்மை நோக்கி,

    ''கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின் கண்கள்
    தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம்
    ஆறுமின் வேட்கை யறுமின் அவலம் இவைநெறியா
    ஏறுமின் வானத் திருமின் விருந்தாம் இமையவர்க்கே" (70)

என்று இசைக்கின்றார்.

உடல் வாழ்வின் உயர்வின்மையைப் பலவகை யால் தெளிவிக்கின்றார்.

இவ்வகையில், ஏனைப் பெரியோர்களைப் போலத்தான் இவரும் பல பாட்டுக்களில் விரித் தோதுகின்றார். உடல் வாழ்வு நீடித்ததன்று; பலவகை யாலும் தேய்ந்து தேய்ந்து இறுவது என்பார்.

    "வேண்டிய நாட்களில் பாதியும் கங்குல் மிக அவற்றுள்,
    ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலது மூப்பு
    ஆண்டின் அச்சம் வெகுளி அவாஅழுக்காறு இங்ஙனே
    மாண்டன்; சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே" (99)

என்று கூறுகின்றார். ஏனையோர், "வேத நூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்'' என வய தொல்லையை நூறாகக் கூற, இவர், அதனைக் குறியாது, "வேண்டிய நாட்கள்'' என்பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளங்கக் காட்டுகிறது.

இனி, உடல் வாழ்வின் புன்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெருவாழ்வின்கண் ஆர்வ முண்டாவது இயற்கையே. அதனைப் பெறுதற்கு இறைவனை வழிபடுவதன்றிப் பிறிதில்லை . அவ்வழிபாட்டின் திறம் கூறலுற்ற நம் சேரமான் பெருமாள்,

    "பணிபதம்; பாடிசை, ஆடிசையாக; பனிமலரால்
    அணி; பதங்கன் பற்கொள் அப்பனை; அத்தவற்கே அடிமை
    துணி; பதம் காமுறு; தோலொடு நீறு உடல் தூர்த்து நல்ல
    தணிபதம் காட்டிடும்; சஞ்சல நீஎன் தனி நெஞ்சமே (10)

என்றும்,

    "நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகமலர்,
    அஞ்செங் காதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து
    தம்சொல் மலரால் அணிய வல்லோர்"

என்றும், தொழுதல், பணிதல், நினைதல், அருச் சித்தல் முதலியவற்றின் நலம் கூறுதலுற்று,

    "உலகா ளுறுவீர் தொழுமின்; விண்ணாள்வீர் பணிமின்; நித்தம்
    பலகா முறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றலுற்றீர்
    நலகா மலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும்
    அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே" (14)

என்றும் விரியக் கூறுகின்றார். இந்நெறிக்கண் இவர் கூறுவன பலவாதலின் இம்மட்டில் அமைகின்றோம்.

இவ்வாறு நாம் தொண்டு புரிந்தவழி அதனை யேற்று நிற்கும் பரமனுடைய அருமையை இனிது ஒதுகின்றார். அடியார் ஏத்துவதைப் பரமன் மிக விரும்புபவன் என்பார், ''ஏத்துக் கொலாம் இவர் ஆதரிக்கின்றது" (7) என்று கூறுவதை நோக்க, பரமன் மிக எளியன் என்று நாம் கருதலாம். ஆனால், அதனை மாற்றி, அப்பரமன் மிக அரியவர்; அவர் தம்மை நினைப்பவர் நெஞ்சினும் கண்ணினும் நிலவுகின்றார்; ஆயினும் அவர் தன்மை நம்ம னோர்க்கு உணர்வது என்பார், 'திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தினுள்ளும் திரிதரினும், அரிதவர் தன்மை அறிவிப்பது" (9) என்று அறிவிக் கின்றார். மேலும் அவ்வருமைப் பாட்டிற்குச் சான்று கூறுவார், அப்பரமன் அட்டமூர்த்தியாய் நிற்பவர் என்று அருளுகின்றார். "அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிருடம்பு ஆகிய சோதி" (15) என்றும், "பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஓங்கு, ஓதம் உடுக்கை உயர்வான் முடி , விசும்பே உடம்பு, வேதம் முகம், திசை தோள்மிகு பன்மொழி கீதம்" (19) என்றும், இவரது இந்நிலையையுணர்ந்து பரவுபவர் சிவ லோகம் பெறுவர் என்று கூறலுற்று, "தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம், சிவனே முழுதும் [#]என்பார் சிவலோகம் பெறுவர்” (5) என்றும் உரைக்கின்றார். ( [#]என்பார் - என்று நினைந்து வழிபடுபவர்.)

இப் பரமனே மும்மூர்த்திகளாயும் அம்மையப்ப னாயும் விளங்குகின்றார் என்பதை,

    "வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்னெழிலார்
    காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
    பேரொண் பதி, நிறம் தார் இவர் ஊர்திவெவ்
    வேறென்பரால் பாரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.” (95)

என்றும்,

    "வலந்தான் கழல் இடம் பாடகம்; பாம்பு வலம் இடமே
    கலந்தான்; வலம்நீறு இடம்சாந்து ; எரிவலம் பந்து இடம்; என்பு
    அலந்தார் வலம் இடம் ஆடகம்; வேல்வலம் ஆழியிடம்;
    சலம் தாழ் சடைவலம் தண்ணங் குடில் இடம் சங்கரற்கே. (65)

என்றும் கூறியருளுகின்றார். பிற நலங்களைப் பின்னர்க் காண்குதும்.

இனி இப்பரமன் அடியார்க்கு அருளும் திறத்தை, "உற்றடியார் உலகாள ஓர் ஊனும் உறங்கு மின்றிப், பெற்றமதாவ தொன்றேனும் பிரான்" (34) என்றும், "கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்தம் உள்ளவளாகத் துறுகின்ற உத்தமன்" (78) என்றும்,

    "சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்
    சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம்
    வந்திக்கில் வந்தென்னை மால் செய்யும் வானோர் வணங்க நின்ற
    அந்திக்கண் ணாடியினான் அடியார்களுக் காவனவே" (83)

என்றும் எடுத்தோதுகின்றார்.

இவ்வியல்பினனாதலின், இப்பரமன்பால் பகைப்பொருள் அனைத்தும் பகை நீங்கி ஒன்றி நின்று நிலவுவதொன்றே அவனது பரமாந்தன்மையை உணர்த்துகின்ற தென்பார்,
"ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியுமை வாயரவும்
ஓர்க்கின்ற யோரும் உமையும், உருவு மருவும், வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும், பகலும் இரவு மெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்கு உடனாகிக் கலந்தனவே" (50)

என்றும், இவ்வடிவத்தே உலகு முழுதும் ஒன்றி நிற்கிறதென்றற்கு,

    "இருளார் மிடற்றல், இராப்பகல் தன்னால், இரைமரையால்
    பொருளால் கமழ்கொன்றை யால் முல்லை புற்றர வாடுதலால்
    தெருளார் மதிவிசும்பால் பெளவம் தெண்புனல் தாங்குதலால்
    அருளால் பலபல வண்ண மு மால் அரன் ஆயினனே" (57)

என்று இசைத்தருளுகின்றார். இவ்வியல்பால், "ஈசனோ டாயினும் ஆசையறுமின்' என்ற கொள்கை மிக்க துறவிகளும் இவர்பால் தீரா வேட்கையரா கின்றனர் என்பார், ''தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, அடங்கிய வேட்கை
அரன்பால் இலர்" (64) என்று அறிவிக்கின்றார்.

இவ்வகைக் கருத்துக்கள் நிரம்பிய இப் பொன் வண்ணத் தந்தாதியைத் தில்லையில் அரங்கேற்றி உள்ளம் சிறந்த இவர், திருவாரூர் சென்று நம்பி யாரூரரைக் கண்டு அவர் நட்புற்று உள்ளம் சிறக்கின்றார்.

சேரமான் திருவாரூரையடைந்து நம்பி யாரூரைக் கண்டபோது, ஆராக் காதலுற்ற அவர் அடித்தாமரையில் முதற்கண் வீழ்ந்து வணங்கு கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் "சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்" என்றும், "முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து வரவேற்றனர் என்றும் கூறுகின்றார். இவர் இருவர்க்கும் உண்டான நட்பின் நலத்தை சேக்கிழார் பெருமான் நிரம்ப எடுத்து இயம்பு கின்றார். இருவரும் ஒருவரையொருவர் பணிந்து தழுவிக்கொள்ளும் செயலை,

    "முன்புபணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே
    அன்பு பெருகத் தழுவவிரைந்து அவரும் ஆர்வத் தொடுதழுவ
    இன்பவெள்ளத் திடைநின்றும் ஏற மாட்டா தலைவன்போல்
    என்பும் உருக உயிரொன்றி உடம்பு மொன்றாம் என இசைந்தார்"

என்றும், "ஒருவர் ஒருவரிற் கலந்த உணர்வால் இன்ப மொழியுரைத்து மகிழ்ந்தார் என்றும் கூறுகின்றார். இவ்வாறே பின்பு நம்பியாரூரர் இறுதியில் சேர நாட்டிற்குச் சென்று சேரமானைக் கண்டபோதும், இருவரும் பணிந்த செயலை, "சேரர் பெருமான் எதிர் சென்று, தலை நாட்கமலப் போதனைய சரணம் பணியத் தாவல் பல, கலைநாட்டமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்" என்றும், "சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனுமிவர்கள், தந்தமணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய், முந்த எழுங் காதலின் தொழுது " தழுவிக் கொண்டன ரென்றும், "ஒருவர் ஒருவரிற் கலந்து குறைபாடின்றி உயர் காதல் இருவர்" என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு நம்பியாரூரருடன் உயர் காதல் நண்பராகிய சேரமான் அவருடன் திருவாரூர்ப் பரமனைக் கண்டு பணிந்து வழிபட்டு அவர் பேரில் தாம் பாடிய திரு மும்மணிக்கோவையை, அந் நம்பியார் இனிது கேட்க அரங்கேற்றம் செய்கின்றார். அக்காலத்தே அதன் நன்மை இனிது விளங்க நம்பியாரூரரை அரசர் கேட்பித்தார் என்று கூறும் சேக்கிழார், "திரு மும்மணிக் கோவை நாவலூர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்" என்றே கூறுகின்றார்.

இப்போது, நாம், இத்திரு மும்மணிக்கோவை யின் நலம் சிறிது காணலாம். இதன்கண் முப்பது திருப்பாட்டுக்கள் உண்டு. இவை யாவும் அகப் பொருள் துறையிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியிலும் ஐம்பது பாட்டுக்கள் இவ்வகத் துறையே பொருளாகக் கொண்டுள்ளன. இவ்வகத் துறையில், அகனைந்திணைக்குரியன சிலவும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும். திருவந்தாதியில் வருவன பலவும் அகனைந்திணை யல்லாதவை யாதலின், அவற்றை முதற்கண் சிறிது காண்போம்.

ஒருத்தி சிவபெருமானைக் கண்டு அவன்பால் கருத்திழந்து, உடல் மெலிந்து வளைசோர்ந்து வருந்து கின்றாள். அவள் தோழி போந்து ''நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பதால் பிறர் இகழும் பழியுண்டாகும்; நம் பெண்மைக்குரிய சிறப்பும் போம்" என்று கழறிக் கூறுகின்றாள்;

    "பாதம் புவனி , சுடர்நயனம், பவனம் உயிர்ப்பு, ஓங்கு
    ஓதம் உடுக்கை , உயர்வான் முடி , விசும் பேஉடம்பு,
    வேதம் முகம், திசை தோள், மிகு பன்மொழி கீதம், என்ன
    போதம்; இவற்கோ மணிநிறம் தோற்பது? பூங்கொடியே"

என்று உரைக்கின்றாள். தன்னால் பழியாவதும், பெண்மை நலம் போவதும் ஆகூழும் போகூழுமாம் என்ற கருத்தை எடுத்தோதி,

    "ஆவன யாரே யழிக்கவல் லார் அமை யாவுலகில்
    போவன யாரே பொதியாகிற் பார்புரம் மூன்றெரித்த
    தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
    தீவினை யேன் இழந் தேன்கலை யோடு செறிவளையே" (84)

என்று விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவள் நெஞ்சையலைப்ப, இரவில் சிறிது கண்ண யர்ந்து கனவு காண்கின்றாள். அக்கனவில் பரமன் பலி வேண்டிவரத், தான் பலியிட்டு மேனி வேறுபடுவதாகவும், தாயார் தடுப்பதாகவும், தன்னைப் பரமன் அப்போது வாவென அழைப்பதாகவும் கண்டு கண் விழித்து வருந்துகின்றாள். இச் செயலைச் சேரமான்,

    "ஈசனைக் காண பலிகொடு செல்ல, எற்றே இவளோர்
    பேயனைக் காமுறு பிச்சி கொலாம்' என்று பேதையர்முன்
    தாய்எனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன்
    வாஎனைப் புல்ல என் றான் இமை விண்டன் வாட்கண்களே"

என்று பாடிக் காட்டுகின்றார்.

இங்ஙனம் கனாக்கண்டு வருந்தும் இவள் மெலிவு கண்ட அன்னை மிகவும் மனம் நொந்து, மகளைப் பார்த்து,

    "செப்பன் கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்;
    மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கவைத் தான்மனத்துக்கு
    ஒப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்த மும் அமைத்தான்
    அப்பனை, அம்மனை ! நீஎன் பெறாதுநின்று ஆர்க்கின்றதே"

என்று சொல்லி அவலிக்கின்றாள். இம்மகள் பின்பு தன் தோழியை நோக்கிப் பரமன் பால் தூதுவிடக் கருதி, “தோழி, நீ பரமனிடம் சென்று என் மனநிலை மொழிந்து அவன் கூறும் மொழி கேட்டு வருதல் வேண்டும்'', என்பாள்.

    "ஒது அவன் நாமம், உரை அவன் பல்குணம், உன்னைவிட்டேன்,
    போது அவன் பின்னே , பொருந்து அவன் வாழ்க்கை திருந்தச் சென்று,
    மாதவ மாகிடு , மாதவன் மாவளர் புன்சடையான்
    யாதவன் சொன்னான் அது கொண் டொழியினி ஆரணங்கே ” (54)

என்று மொழிந்து விடுகின்றாள்.

இஃது இங்ஙனமாக, மகளிர் இருவர் ஒரு சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள். ஒருத்தி, "இறைவன் முதற்கண் செற்றது காமனையே" என் கின்றாள்; மற்றவள் ''காலனையே முதற்கண் செற்றார்'' என்று கலாய்க்கின்றாள். அவர்க்கு நடுவாக நின்ற ஒருத்தி நேரே பரமனையடைந்து உண்மை துணிய முயன்று, அவன் ஒன்றும் உரையாமை கண்டு உரைப்பாள்,

    "காமனை முன் செற்ற தென்னாள் அவள், இவள் காலன் என்னும்
    தாமதன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்;
    நாம்முனம் செற்றதன்று யாரைஎன் றேற்கு இரு வர்க்குமஞ்சி
    ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே” (45)

என்றுரைத்து மகிழ்கின்றாள். இப்படியே, பரமனுக்குப் பலியிடச் சென்ற பெண்ணொருத்தி நிகழ்த்திய சொல்லாட்டினை நம் சேரமான்,

    "அந்தண ராம் இவர் ஆரூர் உறைவதென் றேன், அதுவே,
    சந்தணை தோளி! என்றார்; தலையாய சல்வர் என்றேன்;
    பந்தனை கையாய்! அதுவுமுண் டென்றார்; உமை அறியக்
    கொந்தணை தாரீர்! உரைமின்என் றேன்; துடி கொட்டினரே” (46)

என்று இன்புறப் பாடி நம்மை மகிழ்விக்கின்றார். இத்திருவந்தாதிக்கண் இத்தகைய பாட்டுக்கள் பலவுள்ளன.

இனி, திருவாரூர் மும்மணிக் கோவைக்கண் வரும் முப்பது திருப்பாட்டுக்களும் அகனைத் திணைக்குரிய பாட்டுக்களாகவே உள்ளன. களவு வழியொழுகிக் கற்புக்கடம் பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில் தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், தான் கார்ப்பருவ வரவில் வருவதாகக் கூறித் தலைமகனைத் தேற்றிச் செல்கின்றான். அவளும் அவன் தெளித்த சொல் தேறியிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை மட்டில் வருத்தாமல் இல்லை. அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை . அதனால் தோழி, தலைவி ஆற்றாளாவள் என்று எண்ணி,

    "கண்ணார் நுதலெந்தை காமரு கண்டம் என இருண்ட
    விண்ணால் உருமொடு மேலது, கீழது கொண்டல் விண்ட
    மண்ணார் மலைமேல் இளமயி லாள்மட மான் அனைய
    பெண்ணா மிவள் இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே"

என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு தலைமகன் போந்து கூடி இன்புறுகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகை யோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது தோழி முதலாயினார் வாயில் மறுக்க, ஆற்றாமையே வாயி லாக வந்தடைகின்றான். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து,

    "பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல் இருண்ட
    மையார் தடங்கண் மடந்தையர் கேட்கின் பொல் லாது, வந்துன்
    கையால் அடிதொடல், செல்லஎற் புல்லல், கலைஅலையல்;
    ஐயா, இவை நன்கு கற்றாய்; பெரிதும் அழகிய வே" (21)

என்று உரைக்கின்றாள். பரத்தையை உயர்த்துக் கூறும் கருத்தால், அவர்களை "பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல இருண்டமையார் பூணாது பொய்யன்பு பூண்டு பரவினும் பரமன் அருள் புரிவது போல, பொய்யே ஒழுகினும் அம்மகளிர் நின்னையேற்பர்; யாம் ஏலேம்; அவர் பாலே செல்க என்பது கருத்து. "கற்பு வழிப்பட்டவள் பரத்தையேத்தினும் உள்ளத்தூடல் உண்டு' என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவி தலைவனைப் புலந்து பரத்தையரை உயர்த்திக் கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக் கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, " பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும் தலைவன் எனக்கே உரியனாவான்; எப்படியெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும், தாமரை ஒன்று உளதாகிய வழி, அக்குளம் தாமரைக்குளம் என்றே உரைக்கப்படும்'', என்ற கருத்துத் தோன்றத் தன் தோழியை நோக்கி, பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப,

    "திறமலி இன்மொழிச் செந்துவர் வாயினை ! எங்கையர்க்கே
    மறமலி வேலோன் அருளுக; வார்சடை யான்கடவூர்த்
    துறைமலி ஆம்பல் பல்லா யிரத்துத் தமியே எழினும்
    நறைமலி தாமரை தன்னதன் றோசெல்லும் நற்கயமேது" (24)

என்று நவிலுகின்றாள்.

இத்திரு மும்மணிக்கோவைக்கண் வரும் திருப் பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூற்களில் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன. நிற்கின்றன.

    "மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
    சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
    ஈனில் இழைக்க வேண்டி ஆனா
    அன்பு பொறைகூர மேன்மேல் முயங்கிக்
    கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்”

என்ற இம் மும்மணிக்கோவைப் பாட்டுக் குறுந்தொகையில் வரும்.

    "உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்,
    சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்
    தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
    நாறா வெண்பூக் கொழுதும்" (85)

என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே, ''பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும் மூதூர் நத்தமும், பரன் முரம்பதரும் அல்லது படுமழை, வரன்முறையறியா வல்வெயிற் கானத்து" (16) என்பது அகநானூற்றையும், "புலமையிற் சாயல் பூங்குழல் மடந்தை, மனைமலி செல்வம் மகிழாளாகி, ஏதிலொருவன் காதலனாக" என்பது நற்றிணையை யும் பிற பிறவற்றையும் நினைப்பிக்கின்றன.

இன்ன நலம் சான்ற திருமும்மணிக் கோவையைப் பாடி, ''நன்மை விளங்க'', நம்பி யாரூரரைக் கேட்பித்த சேரமான் அவருடன் பல தலங்களையும் காணச் செல்கின்றார். செல்பவர் திருமறைக் காட்டில், நம்பியாரூரர் "யாழைப் பழித்து" என்னும் திருப்பதிகம் பாட, நம் சேரமான் திருவந்தாதியில், மறைக்காட்டீசனைப் பாடியுள்ள, "துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும் செல்லப் பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும் பிணி கூர்ந்து, அயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும் அந்தோ இங்ஙனே, மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்ட வாணுதலே” (37) என்ற திருப்பாட்டை மோதுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், "அருட்சேரர், சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத்தெழுந்தார்'' என்று பாடுகின்றார்.

பின்னர் இவர் நம்பியாரூரருடன் மதுரைக்குச் சென்று மதுரைச் சொக்கேசனைக் கண்டு பரவு மிடத்து, தமக்கு அப்பரமன் விடுத்த திருமுகப் பாசுரத்தால் செய்த திருவருளை வியந்து, "அடி யேனைப் பொருளாக அளித்த திருமுகம் கருணை, முடிவேது என்றறிந்திலேன்'' என்று சொல்லி மொழிதடுமாறி மனங்குழைகின்றார். இவ்வாறு நம்பியாரூரர் தோழமை பெற்றுச் சிறக்கும் சேர வேந்தர் அவருடனே திருவாரூர்க்கே திரும்ப வந்து சின்னாளிருந்து, அவரையும் உடனழைத்துக் கொண்டு தம் சேர நாட்டிற்குச் செல்கின்றார். வழியில் திருவையாற்றுக்குச் செல்லாவகையில் காவிரி பெருகக் கண்டு நம்பியாரூரரை வேண்ட, அவர் திருப்பதிகம் பாடியதும் காவிரியில் வழி யுண்டாகிறது. அதுகண்டு வியந்த வேந்தர் நம்பி யாரூரரை அடிபணிந்து போற்றுகின்றார். நம்பியாரூரர் இறைவன் சேரமானுக்குத் திருமுகம் விடுத்தும், திருச்சிலம்போசை காட்டியும் சிறப்பிக்கும் திறத்தை நன்கறிந்தவராதலின், காவிரி வழிவிட்டதும் அவர் பொருட்டே என்பது உணர்ந்து, அவரடியில் தாம் வீழ்ந்து வணங்குகின்றார். இதனை "நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச், செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமாள் எதிர் வணங்கி, உம்பரநாதர் உமக்களித்ததன்றோ '' என்று உரைத்து மகிழ்ந்தாரென்று சேக்கிழார் பெருமான் செப்புகின்றார்.

இவ்வாறு ஐயாறப்பன் திருக்காட்சி பெற்றுச் சிறப்பெய்திய இருவரும் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு சென்று, சேரநாடு அடைந்து அந்நாட்டவர் எதிர்கொள்ளச் சேரவேந்தர் திருமனையை அடைகின்றனர். அங்கே பின்னர் அவருடன் தங்கிய நம்பியாரூரர், திருவாரூரில், வேந்தருடன் கூடி, நிலைச்செண்டு வீசல், பரிச் செண்டு வீசல், தகர்ப் பாய்ச்சல் காண்டல், கோழிப் போர் பார்த்தல் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றது போல,

    "செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
    வண்டாடு மலர்வாரி மருவிய நீர் விளையாட்டும்
    தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர்"

முதலியன கண்டு மகிழ்கின்றார். பின்பு நம்பியாரூரர் சேரமான் பால் விடைபெற்றுத் திருவாரூர்க்குப் புறப்படுங்கால், அவ்வேந்தர் பெருமான், "இன்று மது பிரிவாற்றேன், என் செய்வேன்'' என்று சொல்ல, நம்பியாரூரர், பண்டு சிவனருளியதுபோல், 'ஒன்றும் நீர் வருந்தாதே உமது பதியின்கண் இருந்து, அன்றினார் முனை முருக்கி அரசாளும்" என்று மொழிகின்றார். அக்காலத்து, அவர் தமக்கு அரசியலின்பால் பற்றின்மையும், அதனைப் புரிவது ஆண்டவன் திருவருள் வழி நிற்பதென்று கருதியிருந்த மையும் புலப்பட, "பாரோடு விசும்பாட்சி எனக் குமது பாதமலர்'' என்று சொல்லி, "தேரூரும் , நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள, நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன்" என்று மொழிகின்றார்.

திருவாரூர்க்குச் சென்ற நம்பியாரூரர், பின்னை யும் சேரமானை நினைந்து கொண்டு சேர நாட்டு மகோதைக்கு வருகின்றார். சேரமான் அவரை எதிரேற்று எல்லையிலா மகிழ்ச்சி மிகுகின்றார். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?'' நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் போந்து தங்கிச் சிவபரம் பொருளின் திருமுன் நின்று திருப்பதிகம் பாடிச் சிறக்கின்றார். அங்கே இறைவன் விடுத் தருளிய வெள்ளானையேறிக் கயிலாயம் சொல்லத் தொடங்குவார் மகோதையில் இருந்த "உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணைவரை'' மனத்தில் நினைக்கின்றார். அதனையுணர்வால் உணர்ந்த சேரமான் தம்மருகு நின்ற குதிரை யொன்றின் செவியில் திருவைந்தெழுத்தையோத, அஃது அவரையேற்றிக் கொண்டு நம்பியாரூரர் ஏறி விண்வழிச் செல்லும் வெள்ளானையை யடைந்து வலம் வந்து அதற்கு முன்னே செல்கின்றது. அப்போது தான், நம்பியாரூரர்

    "தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே
    நானென பாடல், அந்தோ, நாயினேனைப் பொருட்படுத்து
    வான்எனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை யுத்தமனே "

என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளு கின்றார்.

திருக்கயிலையை இருவரும் அடைகின்றனர். சேர வேந்தர் மட்டில் வாயிலில் காவலரால் தடையுண்டு நிற்கின்றனர். பரமன் திருமுன் சென்று, கன்று பிரிந்த தன் தாயினையடைந்தது போல் அன்பு பெருகி வழிபட்டு முடிவில், "நீரணி வேணிய, நின் மலர்க் கழல்சாரச் சென்று சேரலன் திருமணி வாயிலில் புறத்தினன்" என்று விண்ணப்பிக்கின்றார். பரமன் வருவிக்கச் சென்ற சேரமான் பெருமாள், சிறிது சேய்த்தாகவே நின்று திருவடி பணிந்து நிற்கின்றார். அவரைக் கருணை நிறைந்த நோக்குடன், முறுவலித்து, இறைவன், "இங்கு தாம் அழையாமை நீ எய்தியது என்னை ?'' என்று வினவியருள், அரசர் பெருமான் மிக்க மதி நுட்பமமைந்த மொழிகளால், "அடியனேன் ஆரூரர். கழல் போற்றிப் புரசையானை முன் சேவித்த வந்தனன்; பொழியும் நின் கருணைத் தெண்திரைசெய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்'' என்று செப்புகின்றார். அது கேட்கும் இறைவன் புன்னகை பூப்ப, சேரமான் மீட்டும் வணங்கி, ''பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய், மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய், உனை அன்பால் திருவுலாப் புறம்பாடி னேன் ; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்" என்று வேண்டி நிற்கின்றார். இறைவன் இசைகின்றான்; இவரும் அத் திருவுலாப் புறத்தை இறைவன் திருமுன் ஓதுகின்றார்.

திருக்கயிலாய ஞானவுலா ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதன் குறிப்பை நோக்கின், தமிழ் இலக்கியத் தொகையுட் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத் தொன்மையும் முதன்மையும் வாய்ந்ததென்பது அணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் உலா நூல் ஒன்று இருந்ததாகத் துணிதற்குச் சான்று கிடைத்தியது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் இலக்கணங்களும் பெரும் பாலும் இவ்வுலா நூலிற்குக் காலத்தால் பிற்பட்டனவாகவே இருக்கின்றன.

பரமன் செவ்விய கோலமணிந்து தேவர் பலரும் பல சிறப்புடைய பணிகளைச் செய்ய, அவர் வேண்டுகோட்கிசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகவுள்ள மகளிர் பலர் கண்டு நயக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள் நோக்கம் செய்து இறைவன் உலா வந்தமைகின்றான் என்பதே இதன் பிண்டித்த பொருளாகும். இதனைச் சிறிது விளக்கிக் காட்டுவோம்.

    "திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்று அங்கு
    அருமால் உற அழலாய் நின்ற - பெருமான் ;
    பிறவாதே தோன்றினான், காணாதே காண்பான்
    துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
    ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்,
    ஊழால் உயராதே ஓங்கினான் , - சூழ் ஒளிநூல்
    ஓதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான்
    யாதும் அணுகாது அணுகியான் - ஆதி
    அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
    அரனாய் அழிப்பவனும் தானே - பானாய
    தேவர் அறியாத தோற்றத்தன், தேவரைத்தான்
    மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே,
    எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
    அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் - எவ்வுருவும்
    தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
    ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்."

இப்பெருமான் சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, "எங்கட்குக் காட்சியருள்" என்று இரந்து கேட்கின்றனர். பரமன் அவ்வேண்டு கோட்கு இசைந்தருள், அவனையும் இறைவியையும் தேவர்களும் தேவமங்கையரும் நன்கு ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய இறையவர் தமக் குரிய முறைப்படி சூழ்கின்றனர். முன் செல்வோர் முன்செல்ல, அருகு செல்வோர் அருகு செல்ல, திருவுலா புறப்பாடாகின்றது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாகக் குணங்கள் ஈறாகப் பலவும் வந்து

    இமையோர் பெருமானே போற்றி, எழில்சேர்
    உமையான் மணவாளா போற்றி, எமையாளும்
    தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
    ஈசனே எந்தாய் இறைபோற்றி, தூய சீர்ச்
    சங்கரனே போற்றி, சடாமகுடத் தாய்போற்றி
    பொங்கரவா பொன்னங் கழல் போற்றி, அங்கொருநாள்
    ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
    பாசுபதம் ஈந்த பதம்போற்றி, தூய
    மலைமேலாய் போற்றி, மயானத்தாய் வானோர்
    தலைமேலாய் போற்றி தாள் போற்றி, நிலைபோற்றி

எனப் போற்றிப் பூமாரி பொழிய, பெருமான் உலா வருகின்றான். வீதியில் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மையும் செவ்வே புனைந்து கொண்டு, பரமனைத் தம் கண்களாரக் கண்டு அறிவு சோர்ந்து அலமரல் எய்துகின்றனர். அவருள், "பேதைப் பருவம் பிழையா தாள், நன்றாகத் தாலி கழுத்தணிந்து, சந்தனத்தால் மெய்ப் பூசி, நீல அறுவை விரித்துடுத்து, புனையப் பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள். அவளை நோக்கி, "இப் பாவைக்கு, தந்தை யார்?' என்று ஒருத்தி வினவ, "இதற்குத் தந்தை ஈசன் எரியாடி" என்கின்றாள். இவள் பரமன் உலாவரக் கண்டதும், தன் பருவத்துக்கு ஏலாத காமக் குறிப்பு எய்துகிறாள்.

"பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத் தாள் ஒருத்தி, தோழியருடன் கூட மணலில் காம னுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக் கின்றாள். அவ்வுருவில் காமன் வடிவு முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால், பரமன் வீதியுலா வந்து விடுகின்றான். அவள்,

    "தானமா,
    நன்றறிவார் சொன்ன நலம்தோற்று, நாண் தோற்று,
    நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
    கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலையோட
    நெய்விண்ட பூங்குழலாள், நின்றொழி” கின்றாள்.

"மங்கை இடம் கடவா மாண்பினாள்" ஒருத்தி, தன் பொற்கூட்டில் வைத்து வளர்க்கும் பூவைப் புள்ளோடு பேசி, அது சொல்லும் சொல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்-கின்றாள். வீதியில் பரமன் உலா வரவே, அவனுடைய சடாமகுடம் அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியால் உள்ளம் கசிந்து கருத்திழந்து, அப்பரமனது,
    தார் நோக்கும், தன் தாரும் நோக்கும்; அவனுடைய
    ஏர்நோக்கும் தன்னது எழில் நோக்கும்; பேரருளான்
    தோள் நோக்கும் தன் தோளும் நோக்கும்; அவன் மார்பில்
    நீள் நோக்கம் வைத்து நெடி துயிர்த்து நான் நோக்காது
    உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
    வெள்ளத் திடைய ழுந்தி வெய்துயிர்த்தாள்.

இவட்குப் பின் மடந்தை யொருத்தி பரமன் அழகில் ஈடுபடுகின்றாள். அவளைத் தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்." என்று சேரமான் பெருமாள் சிறப்பிக் கின்றார். இவள் தோழியருடன் யாழிசைத்துப் பரமனது "மடல் வண்ணம்" பாடி மகிழ்கின்றாள். அக்காலை இறைவன் பவனிவரக் காண்கின்றாள். எண்ணம் அவன்பால் இமைகிறது.

"தன்னுருவம் பூங்கொன்றைத்தார் கொள்ளத்தான் கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள்.”

பிறிதோரிடத்தே அரிவையொருத்தி, வீணை யைப் பண்ணிப் பரமன்மேல் தமிழ் பாடத் தொடங்கு கின்றாள். அக்காலையில் இறைவன் விடைமேல் காட்சி தருகின்றான். அவள் கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி,
    "பொன்னனையீர்,
    இன்றன்றே காண்பது எழில் நலம், கொள்ளேனேல்,
    நன்றன்றே பெண்மை நமக்கு"

என்று மொழிந்து கொண்டு சென்று பெருவேட்கை தலைக் கொள்கின்றாள்; மேனி மெலிகின்றாள்; வளை நெகிழ்ந்தோடுகிறது; உடையும் சேர்கிறது. அதனால்,

    அங்கை வளை தொழுது காத்தாள், கலை காவாள்
    நங்கை இவளும் நலம் தோற்றாள்.

வேறொருத்தி, அரிவைப் பருவம் உடையவள். அவள் தன் ஆய மகளிருடன் கவராடிக் கொண்டிருக் கின்றாள். அப்போது சிவபெருமான் உலா வரு கின்றான். அவன் சடைமுடி அவட்குத் தெரிகிறது. அவன்பால் அவட்குக் காதல் வேட்கை பெருகு கின்றது. அவள்,

    தேவாதி தேவன் சிவனாயின் தேன் கொன்றைப்
    பூவார் அலங்கல் அருளாது போவானேல்
    கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கை சோர்ந்து
    வண்டார் பூங்கோதை வளம் தோற்றாள்”

இறுதியாகப் பேரிளம் பெண்ணொருத்தி உலாவரும் பரமனைக் காண்கின்றாள். அவளைப் பற்றிக் கூறும் சேரமான் பெருமாள்,

    ''பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்,
    பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின் மேல்
    கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே உள் என்று - பண்டையோர்
    கட்டுரையை மேம்படுத்தான்"

என்று பாராட்டுகின்றாள். இவள், தோழியரும் பணிப் பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வன செய்து சிறப்பிக்க,

    "கண் அவனையல்லாது காணா செவி அவனது
    எண்ணருஞ் சீரல்லது இசை கேளா- அண்ணல்
    கழலடியல்லது கைதொழா அஃதான்று
    அழலங்கைக் கொண்டான் மாட் டன்பு"

என்று ஓர் எழிலுடைய வெண்பாவை விரித்துரைக் கின்றாள். அப்போது பரமன் அமரர்குழாம் தற்சூழ மாடமறுகில் உலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மிகுந்து மனம் கரைந்து மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள்.

இவ்வாறு பரமன் உலாவந்த வீதிகளில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

    "பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
    பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி
    மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
    செஞ்சடையான் போந்த தெரு"

என்று பெருமாள் வியந்தோதுகின்றார்.

இங்கே கூறிய மகளிர் எழுவருள் முதல் அறுவர், இவ்வுலகிற் காணப்படும் அறுவகை உயிர்கள் என்றும், பேரிளம் பெண் கடவுளரும் முனிவரான உயிரென்றும், இவ்வுலகங்களில் இறைவன் தன் ஐவகைத் தொழில் செய்து நிலவும் நிகழ்ச்சி கண்டு
இவ்வுயிர்கள் எய்தும் மன நிலையே இவ்வுலா வகையாகக் கூறப்படுகிறதன்று சான்றோர் கூறுப. இதனை விரிக்கிற் பெருகும்.

இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் பல அந்தாதியினும் மும்மணிக் கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண் பாடிய வெண் பாவையே, அந்தாதியில்,

    "சொல்லாதன கொழுநா, வல்ல சோதியுட் சோதிதன் பேர்
    செல்லாச் செவிமரம், தேறித் தொழாத கைமண், திணிந்த
    கல்லாம் நினையாமனம், வணங்காத் தலையும் பொறையாம்
    அல்லா அவயவந் தானும் மனிதர்க்கு அசேதனமே"

என்று கூறியுள்ளார். இவ்வாறு பல ஒப்பு நோக்கிய வழிக் காணலாம்.

இனி, இச்சேரமான் இறைவனை இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பலவாகும். பரமன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமாதேவியார் அக்கங்கையின் கீழ் உறைவிடம் பெற்றிருப்பதோ என்று நகையாடுவார்போல,

    இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்டேந்தல் பின்போய்
    அமையா நெறிச்சென்று ஓர் ஆழ்ந்த கலைமகளாய் அணைந்தே
    எமையாளுடையான் தலைமகளா அங்கிருப்ப, என்னே,
    உமையாள் அவள் கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே

என்று உரைக்கின்றார். பரமன் சடைதீப்போல இருப்பதும், அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவதும் கண்டு

    எரிகின்ற தீயொத் துள்சடை ஈசற்கு அத்தீக்கிமையோர்
    சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல்; அப்புனலில்
    சரிகின்ற திங்கள் ஏர்தோணி யொக்கின்றது, அத் தோணியுய்ப்பான்
    தெரிகின்ற திண்கழை போன்றுளதால் அத் திறல் அரவே

என்று இன்பக் காட்சி காண்கின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்ப வுரையாடி நம்மை மகிழ்வுறுத்துகின்றார். பாம்பு நெருப்புயிர்க்கும் என்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகுமென்றும், பரமன் தீண்டலால் கலை நிறைந்து மண்ணையும் விண்ணை யும் விளக்குமென்றும் இவ்வாறு பிறை இறைவன் முடிமேல் இருந்தும் இன்பமும் துன்பமும் எய்துகிற தென்றும் கூறுவார்,

    அரவம் உயிர்ப்ப அழலும், அம் கங்கை வளாய்க்குளிரும்,
    குரவங் குழலுமையூடற்கு நைந்துருகும் அடைந்தோர்
    பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான் அவை விளக்கம்
    விரவும் இடர் இன்பம் எம் இறைசூடிய வெண்பிறையே

என்று விளம்புகின்றார், இறுதியாக, இவர் இறை வனும் தேவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தையொத் திருப்பதைக் காட்டுவது மிக்க இறும் பூது பயப்ப தாகும்.

    "பாடிய வண்டுறை கொன்றையினான் படப்பாம்புயிர்ப்ப
    ஒடிய தீயால் உருகிய திங்களின் ஊறல் ஒத்தது
    ஆடிய நீறு; அது கங்கையும் தெண்ணீர் யமுனையுமே
    கூடிய கோப்பொத்ததால் உமைபாகம் எம்கொற்றவற்கே"

என்பது அப்பாட்டு. (இதன் கருத்தை 1943ம் ஆண்டு கல்கியென்னும் வெளியீட்டன் தீபாவளி மலரில் வெளியான திரிவேணி சங்கமப் படத்தையும் ஒப்பு நோக்கின் இதன் உண்மைத் தோற்றம் நன்கு தெளி வுறுத்தும். இவ்வாறு இங்கிதத் துறையில் இவை போலும் பல பாட்டுக்களை இவர் பாடியுள்ளார். இவை இன்பச் சுவையேயன்றி இவருடை மனக் காட்சியின் விரியும் விளங்க வுணர்த்துகின்றன.

இனி இவர் பாடிய கருத்துக்கள் பலவற்றைப் பல பெரும்புலவர்கள் மேற்கொண்டு தாம் பாடியவற்றுள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்த புலவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் பெரும் புலவர் என்பது உலகறிந்த செய்தி. அவர் நம் சேரமானுக்குக் காலத்தால் பிற்பட்டவர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர், இவர் பாடிய, ''பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஓங்கு ஒதம் உடுக்கை, உயர்வான் முடி விசும்பே யுடம்பு, வேதம் முகம், திசை தோள், மிகு பன்மொழி கீதம்” (யொன். 19) என்ற பாட்டின் கருத்தை, நற்றிணைக்குத் தாம் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்தில்,

    "மாநிலம் சேவடி யாகத் தூநீர்
    வளைநரல் பௌவம் உடுக்கை யாக
    விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
    பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
    இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
    வேத முதல்வன் என்பது
    தீதற விளங்கிய திகிரி யோனே”

என்று உரைத்திருக்கின்றார்.

இதன் (நற்றிணைப் பாட்டின்) உரைகாரரான பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்கள், "ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்ற மையின் வடமொழிச் செய்யுள் நோக்கிக் கூறலா யிற்று' என்று குறிக்கின்றார். இதனையும், "சுடர் நயனம்” என்ற சேரமான் திருமொழியும் வைத்து நோக்கின், இந்நற்றிணைப் பாட்டில் வரும் "பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக'' என்னும் அடி "படர்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக" என நிற்றல் வேண்டும் என்றும், அது முறையே, "ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற மூன்றும் கண்களாக" என்னும் பொருள் தருவதாம் என்றும், எனவே திகிரியோன் என்பது ஆணையுடையோன் என்றும் நாம் உணரலாம். அய்யரவர்கள் வடமொழிச் செய்யுளை நோக்கி, இத்திருமுறையை நோக்காது போயினர் போலும்.

இவ்வாறே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவரும் இவர் பிரபந்தங்களிலிருந்து சில கருத்துக் களைத் தம் காவியத்தின் கண் மேற்கொண்டு கையாண்டுள்ளார். மகளுற்ற வேறுபாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், சேரவேந்தர்,

    அடிக்கண்ணி கை தொழுவார்க் ககல் ஞாலம் கொடுத்தடிநாய்
    வடிக்கண்ணி நின்னைத் தொழ வளைகொண்டனை; வண்டுண் கொன்றைக்
    கடிக்கண்ணியாய்! ஏமக்கோரூர் இரண்டகம் காட்டினையால்
    கொடிக்கண்ணி மேல் நல்ல சொல்லேறுயர்த்த குணக்குன்றமே

என்று கூறுகின்றார். ஒரு செயலே செய்த இருவருள் ஒருவர்க்கொரு வகையும் மற்றையோர்க்கு மற்றொரு வகையும் செய்து ஓரூர் இரண்டகம் காட்டினை என்ற கருத்தைத் திருத்தக்க தேவர் , சுரமஞ்சரி சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து

    "கிழவனாய்ப் பாடிவந்தென் கீழ்ச்சிறை யிருப்பக் கண்டென் ,
    எழுதிய பாவை நோக்கி இமையவித் திருப்பக் கண்டேன்
    ஒழிக இக் காமம் ஒரூர் இரண்டஃகம் ஆயிற் றொன்றாங்கு
    அழுதகண் ணீர்கள் மைந்தன் ஆவிபோழ்ந் திட்ட வன்றே

என்று அமைத்துக் கொண்டிருத்தலைக் காண்மின்.

இம்மட்டோ! "இல்லாரை யெல்லாரும் எள்ளு வர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண்வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்பால் தான் காணப்படுகிறது. அவர், ஆதியுலாவின்கண்,
அரிவைப் பருவத்தாளின் ஒப்பனை கூறுமிடத்து,

    "இல்லாரை எல்லாம் எள்குவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு என்னும் - சொல்லாலே
    அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
    மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்
    இடையிடையே உள்ளுருகக் கண்டாள்"

என்று கூறுகின்றார். இதனைக் காணும் புலவர் எவர்க்குத் தான் வியப்புண்டாகாது போகும்! திருத்தக்க தேவர் இதனைக் கண்டதும் பெருவியப் புற்று, தாம் செய்த காவியத்தே இக்கருத்திலேயே வைத்து அமைத்துக் கொள்கின்றார். சீவகன் நகர வீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்துகொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்க தேவர்.

    "செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்து நீர் மாந்தர் போல
    அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்;
    நல்கூர்ந்தார்க் கிலை சுற்றம் என்று நுண் நுகப்ப நைய
    ஒல்கிப்போய் மாடஞ் சேர்ந்த ஒருதடங் குடங்கைக் கண்ணார்"

என்று கருத்தும் இடமும் ஒப்புக்கொண்டிருத்தலை நன்கு காணலாம்.

இதனால், நம் சேரமான், பாணபத்திரர், நம்பியாரூரர் முதலாயினார்க்குப் பெருஞ் செல்வம் வழங்கியது போல, புலவர் பலர்க்கும் கற்பனைச் செல்வமும் கலைச் செல்வமும் வழங்கியிருப்பது அவர் பெருந்தகைமைக்கு ஏற்ற சான்று பகர்கிறது. இவ்வாறு, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் “ஆயுந் தோறும் தோறும் இன்பம் தரும்" அறிவு நிலைய மாதல் தெளியப்படும்.

இச்சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்” என்றலின், இவர் பொன்வண்ணத்தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில், மூப்புப் பருவம் எய்துகின்ற வயதினராய் இருத்தலைக் காண்கின் றோம். இவ்வாறு இவர் பாடியவற்றை ஆராயின், பல அரிய பொருள்களைக் காண்டற்கு இடம் இருக்கிறது. இவர் பாடிய அகப் பாட்டுக்களில் அமைந்திருக்கும் உள்ளுறை நலம், உவம நலம் முதலிய பலவும் பேரின்பம் தருவனவாகும். அவை ஒரு புறமிருக்கச் சேரநாட்டுச் செண்டு விளையாட்டும் சிறு சோற்றுச் சிறப்பும் சீரிய ஆராய்ச்சிக்கு உரியதாகும். இவற்றை எழுதத் தொடங்கின் இது வரம்பின்றிப் பெருகு மென்றஞ்சி இம்மட்டில் நிறுத்திக் கொள்கின்றேன்.
---------------

14. திருவானைக்காவில் சோழர் திருப்பணிகள்

சோழர் என்ற பெயரைக் காணும்போது சங்க காலச் சோழரா, இடைக்காலச் சோழரா என்ற கேள்வி தமிழும் வரலாறும் பயின்றோர் உள்ளத்தில் எழும். சங்க காலம் என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை நிலவிய காலமாகும். அக் காலத்தில் தமிழகம் சோழ பாண்டிய சேரநாடு என்று மூன்றாகப் பிரிந்து மூன்று தமிழ் வேந்தர் குடியினரால் ஆளப் பெற்று வந்தது. அந்நாளைய சோழரைச் சங்க காலச் சோழர் என்பர்; அவர்களைப் பற்றி அறிதற்குதவும் தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருவகைப் பட்டுப் பதினெட்டாகவுள்ளனவாகும். இடைக் காலச் சோழர் பல்லவர் காலத்துக்குப் பின் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர். இவர்களை விசயாலயன் வழி வந்த சோழ வேந்தர் என்பது வழக்கம். இவர்களையும், இவர்கட்கு முன்னே விளங்கிய பல்லவர்களையும் அறிதற்கு உதவுவன கி.பி. 1880 முதல் இன்றுவரை சுமார் 100 ஆண்டு களாகப் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடுமாகவுள்ளன. இதுவரை சுமார் 25000 படிகள் கிடைத்துள்ளவெனினும், அன்புடைய மக்கள் அறிய வெளிவந்துள்ளவை சுமார் 5000 ஆகும்.

சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் வட வெல்லையாகக் கூறப்படும் வடவேங்கடத்தில் திருமாலுக்குக் கோயில் கிடையாது. இப்போது கோயிலுள்ள இடத்தில் புல்லி என்னும் வேந்தன் இருந்தான். அவனது ஆட்சி வேங்கடமலையடியில் சித்தூர் மாவட்டத்தின் மேலைப் பகுதியில் பரவி யிருந்தது. அப்பகுதியை ஆங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் புலிநாடு என்று குறிக்கின்றன.

அதுபோல, காவிரியின் ஆற்றிடைக் குறை யாகிய திருவரங்கத்தில் திருமாலுக்கோ சிவனுக்கோ திருக்கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறவில்லை. எனினும், சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த இளங்கோவடிகள் காலத்தில் வேங்கடத் திலும் திருவரங்கத்திலும் திருமாலுக்குக் கோயில்கள் தோன்றிவிட்டன.

    வீங்குநீர் அருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னும் கோடி யுடுத்து விளங்கு விற்பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போல
    பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறத் தாமரைக் கையி னேந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்றும், இவ்வாறே திருவரங்கத்தில் திருமாலுக்குக் கோயில் தோன்றி அவர் கிடந்தவண்ணம் காட்சி யளிப்பதை,

    நீலமேக நெடும்பொற் குன்றத்துப்
    பால்விரிந் தகலாது படிந்தது போல
    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
    பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
    விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
    திருவமர் மார்பன் கிடந்த வண்ண மும்”

என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்நாளில் வேங்கடக் கோட்டத்தில் திருக் காளத்தியும் திருவரங்கத்தில் திருவானைக்காவுப் இருந்ததில்லையோ எனின், இருந்திருக்கலாம். எடுத் துரைப்பதற்கேற்ற இயைபு வரலாற்று நிகழ்ச்சியில் இல்லாமையால், சமயக் காழ்ப்பிலாச் சான்றோ ராகிய இளங்கோவடிகள் கூறாமல் விட்டிருக்கலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விளங்கிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருக்காளத்தி திருவானைக்கா இரண்டையும் சிறப்பித்து இனிய இசைப் பாட்டுக்களால் சிறப்பித்திருக்கின்றார்கள்; இவ்வகையில் திருவானைக்கா மிக்க தொன்மை வாய்ந்து, புலவர் பாடும் புகழ்பெற்றது என்பது நன்கு மனங்கொள்ளற்-பாற்று.

திருவானைக்காவை இந்து அறநிலையத்தவரும் கல்வெட்டுத் துறையினரும் சம்புகேசுரம் என்றே குறிக்கின்றார்களே எனின், இது இடையிலே தோன்றிய மாற்றம். இடைக்காலச் சோழ பாண்டியர் ஆட்சி வீழ்ந்ததும், விசய நகர வேந்தரது ஆட்சி தமிழகத்தில் பரந்த இடம் பெற்றது ; முன்னைய ஆட்சியில் ஊர்தொறும் தோன்றித் திருக்கோயில் களைக் கண்காணித்து வந்த திருவுண்ணாழிகை யுடையார், மாகேசுரக் கண்காணிகள், ஊர் மகா சபையினர் மறைந்தனர். கோயில் பூசைத் திருப்பணிக் கெனச் சோழ பாண்டிய மன்னர் நிறுவியிருந்த சிவ வேதியர், பண்டு தொட்டு நிலவிய தமிழ்ப் பெயர்களை வடமொழிப்படுத்தும் புதிய புதிய கதைகளைத் தொடுத்தும் தொன்மை வரலாற்றை மறைக்கும் செயலை மேற்கொண்டனர். தமிழரல் லாத விசய நகர வேந்தரது ஆட்சி அதற்கு இடையூறு செய்யவில்லை; அடுத்து வந்த ஆட்சிகளும் அவ் வியல்பினவேயாக இருந்தமையின், வடமொழிப் படுத்தும் செயல் வெற்றி கண்டது. வழிபாடுகளும் செயல்வகைகளும் வடமொழியிலேயே சமைக்கப் பெற்றன. இன்னோரன்ன மாறுதல்களால் திரு வானைக்கா என்ற பெயர் பொதுமக்களிடையிலும், சம்புகேசுரம் என்ற பெயர் கற்றோர் சிலரிடையிலும் வழங்குகின்றன.

திருக்கோயில்கள், பல்லவர் காலத்தில் கருங் கற்களால் அமையும் திருப்பணிச் சிறப்புப் பெற்று, வழி வழி வந்த வேந்தர்களாலும் செல்வர்களாலும் கற்றளிகளாக உருக் கொண்டன. பண்டைய வேந்தர் ஆட்சிகளில் திருமாலுக்குக் கோயிலைச் சிவன் கோயிற்குள்ளேயே அமைத்திருந்தமையின், தனிக் கோயில்கள் அருகியே இருந்தன. திருமால் கோயிலைத் தன்னகத்தே கொள்ளாத சிவன் கோயிலுக்குச் சிறப்பில்லை; சிவாகமங்கள் அவ்வாறே விதிக்கின்றன. இச்சிவன் கோயில்கள் பலவும் அமைப்பிலும் வழிபாட்டிலும் பிற நிகழ்ச்சிகளிலும் சிவாகமங்களின் நெறியில் அமைந்தன என்பதைப் பல்லவர் காலக் குறிப்பேடுகளாலும், சேக்கிழார் முதலியோருடைய நூல்களாலும் அறிகின்றோம். எனினும், கிடைத்துள்ள பல்லாயிரம் கல்வெட்டுக் களில் ஒன்றிலேனும் இன்ன கோயில் இன்ன சிவாகமப் படி அமைந்தது என்ற குறிப்பே காணப் படவில்லை. அவ்வக் கோயில்களிற் பணிபுரியும் சிவவேதியர், காரணம், காமிகம், வாதுளம் எனச் சிவாகமங்களைக் கூறுகின்றனரேயன்றி அவற்றைக் காட்டென்றால் காட்டுவார் இல்லை.

இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன் தோன்றிய அறிஞர் சிலர் வகுத்தளித்த செயல்முறை களை (பத்ததிகளை) ஆகம முறையாகக் கொண்டு சிவவேதியர் தம் கோயிற் பணிகளை (கிரியைகளைச் செய்து வருகின்றனர். உண்மையை ஆராய்ந்த போது, கழிந்த நூற்றாண்டுகளில் வைதிக வேதாந்திகள் "சிவாகமங்கள் பிரமாணமாகா" எனவும் "ஆகம் வழியொழுகுவோர் மூடர்'' எனவும் பழித்தும் இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வந்தமையாலும், அவர் கூட்டம் தொகை மிகுதியும் செல்வாக்கும் பெற்றிருந்தமையாலும் சிவவேதியர் தம்முடைய சிவாகமங்களைக் கைசோரவிட்டனர் என்பது தெரிந்தது. இந்நாளில் கிடைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் கூறுவன வொழிய யோகபாதம் கூறுவன அறவே இல்லை எனலாம். கிரியா பாதம் கூறுவனவற்றுள் பல அவரவரால் காலப்போக்கில் பொருந்தாதனவும் வேண்டாதனவும் எழுதிச் சேர்க்கப்பட்டுப் போலிகளாய் ஒழிந்தன.

இனி, இக்கோயில்களில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகர வேந்தர், நாயக்க மன்னர் காலங்களில் நாட்பூசனைக்கும் திருப்பணிக்கும் எனப் பல நிவந்தங்கள் (Endowments) அமைந் துள்ளன. கருவறை சீர் செய்தல், மண்டபங்கள் அமைத்தல், கோபுரத்திருப்பணி, புறமதில் திருப்பணி, திருவாபரண முதலியன செய்தளித்தல் முதலிய திருப்பணிகள் மிகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. கோப் பெருஞ்சிங்கன் முதலிய காடவ குலத்தவர் செய்துவைத்துள்ள திருவாபரணக் கல்வெட்டுக்கள் அழகிய பாட்டுருவில் படிப்பவர் மனம் மகிழத்தக்க வகையில் உள்ளன. ஈங்கு எடுத்துக் கொள்ளப்படுவது திருவானைக்காவில் சோழ வேந்தர் செய்த திருப்பணியாகும்.

சங்க காலச் சோழ வேந்தருள் ஒருவன் சோழன் செங்கணான். இடைக் காலச் சோழர் காலச் செப்பேடுகள், பெருநற்கிள்ளி, கரிகாலன் முதலிய வேந்தர் வழியினன் இச் செங்கணான் என்று கூறுகின்றன. கழுமலப் போரில் சேரமானை வென்று அகப்படுத்திச் சான்றோரான பொய்கையார் பாடிய களவழி என்ற நூலை வியந்து சேரனை விடுவித்தான் என்று கலிங்கத்துப் பரணியால் அறிகின்றோம். இவ்வேந்தர் பெருமானுக்கு நல்லடி என்றொரு மகனுண்டெனச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

திருவானைக்காவில் நாவல் மரத்தின் அடியில் விளங்கிய சிவபெருமானுக்கு முதன் முதலில் திருக்கோயிலெடுத்தவன் சோழன் கோச் செங் கணான் என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இவ் வேந்தனை நம்பியாரூரர், "தென்னவனாய் உல காண்ட செங்கணார்" என்று சிறப்பிக்க, இவ் வர லாற்றைச் சிறிது விரித்த நம்பியாண்டார் நம்பிகள்,

    "மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
    தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர் செய்து
    சைவத் துருவெய்தி வந்து தரணி நீடாலயங்கள்
    செய்வித்தவன் திருக்கோச்செங்க ணான் என்னும் செம்பியனே"

என்று பாடிப் பரவியுள்ளனர்.

சுந்தரமூர்த்திகள், இச்செங்கணான், பிறப்பாற் சோழனானதொருபுறம் நிற்க, "தமிழ்கூறும் நல்லுல கத்தை"த் தென்னவனாகவும், சேரலனாகவும் ஆண்டமை புலப்பட, "தென்னவனாய் உலகாண்ட" என்று கூறுகின்றார். இதற்கொப்ப, இவன் கட்டிய சிவன் கோயில்கள், பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்துள்ளன. சேர நாட்டில் இவன் திருப்பெயரமைந்த தொன்மைச் சிறப்புடையவர்கள் இருப்பதே தக்க சான்று பகர்கிறது. 'தரணியில் நீடு ஆலயங்கள் பல செய்வித்தவன்'' என நம்பி யாண்டார் உரைப்பதும், திருமங்கை மன்னனார் தமது பெரிய திருமொழியில், "இருக்கிலங்கு திரு மொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது" செய்தான் என்று விளம்புவதும் உண்மை யொளி பரப்புகின்றன.

செங்கணான் திருவானைக்காவில் சிவன் இருந்த வெண்ணாவல் மரத்தில் சிலந்தியாய் இருந்து மறுபிறப்பில் சோழனாய்த் தோன்றினான் என்றொரு வரலாறு உண்டு. இதனைத் திருநாவுக்கரசர்,

    "சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற்பந்தர் செய்து
    உலந்து அவன் இறந்தபோது கோச்செங் கணானுமாகக்
    கலந்த நீர்க்காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
    குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே"

என்று தெரிவிக்கின்றார். இச்செய்தி, திருவானைக் காக் கோயிற் கல்வெட்டொன்றில் ஒரு தோப்புக்குப் பெயராய் "உள்ளூர் புதுப்புடை விளாகத்துச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத் தோப்பு” (கல். தொ. 4, 426) என்று போற்றிய மக்களின் சமய வுணர்வின் சால்பை விளக்கி நிற்கிறது.

செங்கணான் திருவானைக்காவில் தொடங்கிய கோயில் திருப்பணி செங்கல்லாலும் மரத்தாலும் ஆகியிருத்தல் வேண்டும். அதன் அமைப்பு தென் னார்க்காடு மாவட்டத்துத் திருமுட்டம் சிவன் கோயில் போன்றிருக்கலாம் என் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இப்போதுள்ள கற்றளியில் காணப் படும் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது முதற் பராந்தகனுடைய 40- ஆம் ஆண்டுக் கல்வெட்டு எனத் தெரிகிறது. இதற்கு முன்னைவாய்ப் படி எடுக்கப் பட்டவை என எவையும் காணப்படாமையால் இப்போதுள்ள கோயில் கி.பி. 907க்கு முன்னே கட்டிய தென்று தெரிய நிற்கிறது.

இடைக் காலச் சோழ வேந்தருள் ஆதித்தன் மகனாகிய முதற் பராந்தகனது. 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று இக்கோயிலில் உள்ளது; எனினும் அது குறையாகவும் சிதைந்தும் உளது; அதன்கண் ஆனைக்காவுடைய சிவபெருமான் மகாதேவ படாரர் என்று பெயர் குறிக்கப்படுகின்றார். தோன்று தலும் இறத்தலும் இல்லாதவர் என்ற பொருள் தரும் இச்சொல் இடைக்காலத்தில் சிவனுக்கு வழங்கியதில் வியப்பில்லை. இளங்கோவடிகளும் திருமுறையாசிரி யர்களும் சிவனைப் பிறப்பும் இறப்பும் இலாப் பெருமையன் எனப் பாராட்டியுள்ளனர். இவ் வேந்தன் கி.பி. 907-இல் சோழ அரசு கட்டிலேறிய வன். இங்குள்ள கல்வெட்டு, 40 - ஆம் ஆண்டையதாத லால், இது கி.பி. 947- இல் பிறந்தமை தெளிவாம்.

இப்பராந்தகனுக்குப் பின் வந்த சோழருள் முதல் இராசராசன், முதல் இராசேந்திரன் முதலில் யோர் மிக்க சிறப்பு வாய்ந்தவரா இருக்கவும் அவர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலிற் காணப்படவில்லை. இவ்வாறே பின்வந்த சோழர் காலத் திருப்பணிகளும் நிவந்தங்களும் இக்கோயிற் கல்வெட்டுக்களில் இடம் பெறவில்லை . 1917 ஆண்டில் கல்வெட்டுத் துறையினர் சிறு கல்வெட்டுக் களைப் படி எடுத்துள்ளனர். அவை அத்துறை யினரிடமே புதைந்து கிடக்கின்றன. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் இக் கல்வெட்டுக்கள் வெளிவர முயல்வார்களானால் நன்று. வெளிப் படுத்தும் செயலை இடித்துரைத்து வற்புறுத்தினா லன்றி வெளியிடும் பணியை இந்தியப் பேரரசு மேற்கொள்வதாகத் தோன்றவில்லை.

முதற் குலோத்துங்கனது ஆட்சி 40- ஆம் ஆண்டில் வில்லவரையன் என்னும் தலைவன்
ஆனைக்காவுடைய பெருமானுக்குக் காளையூர்தி யொன்றைச் செய்து வைத்து, திருப்பணிக்காக நிலங்கள் சில விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்தான். (தொகுதி II எண். 76)

இரண்டாம் குலோத்துங்கன் மகனான இரண்டாம் இராசராசன் கி.பி. 1146 - இல் அரசனா னான். "தந்தையில்லோர்க்குத் தந்தையாகியும் தாயில்லோர்க்குத் தாயாகியும் மைந்தரில்லோர்க்கு மைந்தராகியும் மன்னுயிர்கட்கு உயிராகியும்'' நாட்டவர் வியந்து போற்ற வாழ்ந்தான் என இவனுடைய மெய்க் கீர்த்தி விளம்புகிறது. "மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வரராசா ராசன்" என்று தக்கயாகப் பரணி இவ்வேந்தனைப் புகழ்கின்றது.

இவ்வேந்தன் கி.பி. 1146- இல் அரசு கட்டிலேறி னான் என்பர். நான்கு ஆண்டுக்குப் பின் கி.பி. 1150 - இல் இவனது கல்வெட்டொன்று இத் திருவானைக்காக் கோயிலில் உளது. அதன்கண், அரையன் சுந்தனான வாணகோப்பாடி சேரமான் என்ற செல்வன் பூசைத் திருப்பணிக்காக ஊரவர் பால் நிலம் வாங்கிக் கோயிற்குக் கொடுத்தான். (27/1937-38)

மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1178 - இல் சோழ வேந்தராயினான். தன்னொடு மாறுபட்ட பாண்டிய சேரரை வென்று மேம்பட்டமை பற்றி இவன் திரிபுவன வீரதேவன் என்ற சிறப்பெய்தினான்.

    "அறந்தரு திருவாலவாயில் அமர்ந்தவர்க்குத் தன் பேரால்
    சிறந்த பெருந்திருவீதியும் திருநாளும் கண்டருளிப்
    பொருப்பு நெடுஞ்சிலையால் முப் புரமெரித்த சொக்கர்க்குத்
    திருப்பவனி கண்டருளித் திருவீதியில் சேவித்துத்
    தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலை * எனப் பொன் வேய்ந்து"
    (* என - என்று கண்டோர் வியந்து புகழுமாறு)

என வரும் குடுமியான் மலைக் கல்வெட்டு, இவ்வேந்தர் பெருமானுடைய திருப்பணியார் வத்தைப் புலப்படுத்துகிறது. மேலும், சுந்தர மூர்த்தி களைச் சிவபெருமான், தோழனாகக் கொண்டது போல, இக்குலோத்துங்கனையும் திருவாரூர் இறைவன், "நம் தோழன்" எனச் சிறப்பித்தார் என்று திருவாரூர்க் கல்வெட்டொன்றால் அறிகின்றோம்.

சிவநெறிச் செம்மலாகிய இச்சோழ வேந்தன் கல்வெட்டுக்கள் சில திருவானைக் காத்திருக் கோயிலில் இருப்பது வியத்தகு செய்தியன்று.

இவனது 18-ம் ஆட்சியாண்டில் இராசராச தேவன் பொன்பரப்பினான வாண-கோவரையனும், சீயன் உடைய பிள்ளையான அளங்க நாடாள் வானும் தம்முள் வேறுபாடு நீங்கி ஒருவர்க்கொருவர் துணையாவதாக ஆணைக்காவுடைய அண்ணல் திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டனர். (483/1908)

இதற்கு அடுத்த ஆண்டில் மேலே கண்ட அரசியல் தலைவனான சீயன் உடைய பிள்ளையோடு தொண்டன் சேமனான இராசராச மூவரையன் துணையாவதாக உடன்பாடு செய்து கொண்டான். (480/1908)

இம் மூன்றாம் குலோத்துங்கனுக்குக் "கோனே ரின்மை கொண்டான்' என்ற சிறப்புப் பெயரும் உண்டாதலால், திருவானைக்காவில் காணப்படும் இவனது 21-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், மதுரை யும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி என்பதோடு கோனேரின்மை கொண்டான் குலோத்துங்க சோழ தேவர் எனக் குறிக்கின்றன. கோனேரின்மை கொண்டான் என்ற சிறப்புப் பாண்டியர்களுக்கே சொல்லப்படுவது.

இவ்வேந்தனுடைய தலைமையதிகாரிகளில் மீனவன் மூவேந்த வேளான் முன்னிற்க, திருவா னைக்கா திருக்கோயிலில் இருந்து தொண்டைமான் வேண்டி விண்ணப்பிக்க, பழுவூரான இராசேந்திர சோழ நல்லூரில் சில நிலங்களையும் ஏனாதி மங்கலத்தில் சில நிலங்களையும் தொகுத்துக் குலோத்துங்க சோழன் பழுவூர் என்று பெயரிட்டுப் பழுவூருடையான் நக்கன் அறவன் என்பானுக்கு "ஜன்மக் கணியாகத் தருகின்றனர். மற்ற மூன்று கல்வெட்டுக்களில் இந்த ஏற்பாட்டின் சார்பாக வரி வகைகள் முறை செய்யப்படுகின்றன. (38-41/1937-38)

இச்சோழ வேந்தனுக்குப் பின் அரசு கட்டி லேறியவன் மூன்றாம் இராசராசன். இவன் கி.பி. 1216- இல் இளவரசாயவன். இவன் காலத்தில் திரு வானைக்காவில் பல கல்வெட்டுக்கள் தோன்றியுள்ளன.

இவனுடைய 20-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் திருவானைக்காவை , பாண்டி குலாசனி வளநாட்டு பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று சங்ககாலப் புல்லாற்றூர்; இது பில்லாறு எனவும் கல்வெட்டுக் களில் வழங்கும்) காரிசாத்தன் குறையிற் காணியுடை ஓடமுடையாரில், பொல்லாதான் செல்வனான பொன்னி மழநாடாள்வான், உடையான் நெஞ் சுண்டியான நெற்குப்ப அரையன், குன்றன் சீகயிலாய முடையானான திருவரங்க நாடாள்வான் என்ற மூவரும் கோயில் ஆதிசண்டேசுரக் கன்மிகளுக்கு (தருமகருத்தர்களுக்கு நிலம் விற்று விலைப்பிரமான இசைவுத் தீட்டு நல்குவதைத் தெரிவிக்கிறது.

இவ்வாறே 22- ஆம் ஆண்டுக் கல்வெட்டில், காரி சாத்தன் குறையில் காணியுடைய ஓடமுடை யாரில் கூத்தன் குன்றனான கீழாற்றூர் அரையன், இவன் தம்பி ஆரம்பூண்டான், இவன் தம்பி தாழி, விடங்கன் உடையனான மழநாட்டு விழுப்பரைய நாடாள்வான், இவன் தம்பி திருவரங்கன், பேராயிரமுடையான் ஆகியோர் கோயிற்கு நிலம் விற்று விலைப் பிரமாண ஓலையெழுதித் தருகின்றார்கள்.

24- ஆம் ஆண்டுக் கல்வெட்டில் போகைய தண்டல் நாயகர் ஆணைப்படி இருவர், கோயிற்கு நிலம் விற்று "திரவியச் செலவு கையீடு” தருகின் றார்கள். (13 - 4/1937-38)

29 - ஆம் ஆண்டிற் பிறந்த கல்வெட்டொன்று பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்றுத் துறையூருடை யான் அரையன் நித்த கல்வியாணனான பாண்டி ராசன், திருவானைக்காவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேசுர தேவர் கன்மிகட்கு தங்களுடையதும் தங்கள் மாதாக்களதுமான நிலத்தை அவர் (மாதா) இறந்துபட்டமையின் தன்மதானமாகக் கொடுப் பதைக் கூறுகிறது. (337/8) வேறே இரண்டு கல் வெட்டுக்களில் பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று இசனைக் குறையூரவரும், அவ்வூர் கழனி வாயிலுடை யான் அனுமனமுடையானும் அவன் தம்பி நம்பியும், திருவானைக்கா கோயிற்கு நிலம் தருகின்றார்கள். (338- 9/8)

இனி, காலம் புலப்படாதபடி இவ்வேந்த னுடைய கல்வெட்டுக்கள் சில இக்கோயிலில் உள்ளன. அவற்றிலும் ஆனைக்காவுடைய பெருமான் கன்மிகட்கு நிலம் விற்ற செய்தியே காணப்படுகிறது.

இவ்விடைக் காலச் சோழராட்சியின் வீழ்ச்சிக் காலத்து இறுதியில் இருந்தவன் மூன்றாம் இராசேந் திரன்; 1246-இல் இளவரசனாகி, அப்பொழுதே அரசினை ஏற்று நடத்தினான். இவனைச் "சமஸ்த ஜகதேக வீரன்" என்றும் "இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகா ராசாதிராச நரபதி' என்றும் மெய்க் கீர்த்திகள் புகழ்கின்றன. இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் திருவானைக்காத் திருக்கோயிலுக்கு அரையன் நித்திய கல்லியாணனான துறையூர் பாண்டியராயன் நிலம் தருகிறான் (29/1937-38)

ஆறாம் ஆண்டில் திருவானைக்காவுடைய அண்ணல் கோயிற்கெனத் திருநந்தவனம் அமைக்கப் படுகிறது. (4841908) அதே ஆண்டில் சிங்கண்ண தண்ட நாயகர் திருவானைக்காத் திருக்கோயிலில் சித்த வீச்சரத்தைக் கட்டி அதன் பூசைத் திருப்பணிக் கெனப் பாச்சில் கூற்றத்துத் திருவெள்ளறையில் சில நிலங்களைக் கொடுக்கின்றார். (73/1937-38)

இங்ஙனம் சங்க காலச் சோழனான செங்க ணான் முதல் இடைக்காலச் சோழர் பலரும் திரு வானைக்காவுடைய பெருமானுக்கு அரிய திருப்பணி புரிந்த திறத்தை ஒருவாறு கண்டோம். இப்பெரு மக்கலின் திருப்பணி நலங்களை அறிந்து கோடற் கேற்பப் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையும் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனரே யொழியப் பொது மக்கள் இனிதின் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடச் சுணங்குகின்றனர். இந்தியப் பேரரசு இவ்வகையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின் நம் தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறும் சிறப்பும் நாடறிய விளங்கியிருக்கும். கோயில் வரலாற்றிலும் தமிழினத்தின் சமுதாய வளர்ச்சி வரலாற்றிலும் தெளிந்த அறிவுடைய நன்மக்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியற் பேரவைக்கு அனுப்பாத பெருங் குறையே, இன்று நாம் நமது வீழ்ச்சிக்குரிய காரணத்தை நினைந்து பார்க்க இயலாமைக்குரிய தடைகளுள் ஒன்றாகும். கல்வெட்டுத் துறையினர் தமது பணியைத் தொடங்கிச் சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன; நாம் அரசியல் உரிமை பெற்றுச் சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நாம் நமது பழமையும் புதுமையும் கலந்த வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து செம்மை செய்து கொள்ளும் திறமின்றி, யிருப்பது, நினைக்கும் போது மனத்துக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறதா? எண்ணுமின்.
---------------

15. குமரகுருபரர் நல்கும் சமயவாழ்வு [#]

தமிழ்ப் பெருமக்களே!

நாட்டின் நலத்தை நினைப்பதிலே நம் எண்ணம் ஊன்றி நிற்கிறது. ஏன் ? நாட்டின் பெருமை நமக்கும் பெருமையைத் தருகிறது. ஆதலின், பொது வாகத் தமிழ்நாடு என்பதை விட்டுச் சிறப்பாக இங்குத் தென்பாண்டி நாட்டைச் சற்று உற்று நோக்குவோம்.
---
[#] 12 - 8 - 50 நெல்லையில் ஆற்றிய விரிவுரை. வித்துவான் அ. நவநீத கிருட்டின் பிள்ளையவர்கள் கேட்டெழுதியது.

தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் பாண்டி நாட்டின் பழம் பெருமையைத் திறம்படப் பாராட்டினார். "நார்மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும், பார்மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு' என்பது அவர் தம் திருவாக்கு. தொன்மைப் புகழ் பூண்டது பாண்டிய நாடு' என்று போற்றினார். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநர், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர் எல்லோரும் ஒருங்கே முதன் முதல் தோன்றிய நிலம் தென்பாண்டி நாடேயெனத் தெளிவுறப் பேசுகின்றனர்.

இத்தகைய தொன்மைத் தென்பாண்டி நாட்டின்கண் மிகப் பழமை வாய்ந்ததாய்த் திகழும் தெய்வமலை பொதியிலாகும். சிவன் வீற்றிருக்கும் கயிலையும், செந்தமிழ் முனிவன் தங்கும் பொதி யிலும் ஒத்த பெருமை யுடையன. கலையின் வடிவான பெருமுனிவன் அகத்தியன் நிலைபெற்று வாழும் நீடிய பெருமையுடையது இத் தென்பாண்டி நன்னாடு. இங்கே தமிழ்ச் சுவையளிக்கும் தண் பொருநையாறு பொய்யாத நீர் வளத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஆற்று வளம் நாட்டிற்கு ஏற்றத்தை நல்கும். சோழ நாட்டைக் காவிரி நாடென்றே போற்றுவர். தென்பாண்டி நாட்டைத் தண்பொருநை நன்னொடு என்னலாம்.

கி.பி. 12- ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டை யாண்ட இராசேந்திரன் கங்கையாறு வரையில் படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் தனது புலிக்கொடியை நாட்டினான். 'கங்கைகொண்ட புவிகாவலன்' என்று போற்றும் பெருமையுற்றான்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலே தென்பாண்டி நாட்டில் தண்பொருநைக் கரையில் தோன்றிய குமரகுருபரர் கங்கை வரையிலும் தம்மை எதிர்த்த கவிஞரையெல்லாம் சொல்லாற்றலால் வென்று, காசிமன்னனையும் தன்னடிப்படுத்தினார்.

    "மண்கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னரும் என்
    பண்கண்டளவில் பணியச் செய்வாய்"

என்று கங்கைக்கரையில் நின்று முழங்கினார்.

கங்கைகொண்ட புவி காவலனாகிய சோழ வேந்தன் இமயத்தில் பொறித்த புலிக்குறி இன்று உண்டோ ? இன்றோ ? அறியோம். ஆனால், கங்கை கொண்ட கவி காவலராய குமரகுருபரர் காசியில் அமைத்த குமாரசாமிமடம் இன்றும் நின்று தமிழின் பெருமை பேசுகிறது ; சைவத்தின் தெய்வ மாண்பைத் தெரிக்கிறது; குமரகுருபரரின் பேராற்றலைக் கூறுகிறது.

ஒரு நாட்டுக்குப் பெருமை அந்நாட்டில் தோன்றிய சான்றோரால் ஆகும். திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் குறிப்பிடப் புகுந்த சேக்கிழார் பெருமான்,

    "மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி
    அறந்தருநாவுக்கரசு மாலால சுந்தரரும்
    பிறந்தருள் உளதானா னம்மளவோ பேருலகில்
    சிறந்த திரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு”

என்று வியந்து போற்றினார். 'நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்தருளும் பெருமையுற்றது திருமுனைப் பாடி நாடு', என்று பாராட்டினார்.

நம் தென்பாண்டி நன்னாடோ குமரகுருபரரும், சிவஞான முனிவரரும் திருவவதாரம் செய்த பெருமையுடையதாகும். இருவரும் சைவத் தெய்வக் கவிஞர் பெருமக்கள். பிற்காலத்தில் குமரகுருபரரைப் போன்று கொழிதமிழ்ப் பாடல் பாடினார் எவருமிலர். அவர் வாக்கே தெய்வ வாக்கு என்று சொல்லத்தகும். அவரைப் போன்று பிற்காலத்தில் சிவஞான முனிவரே உரைவல்ல பெரியாராக விளங்கினார். அவர்தம் உரைபோன்று உரை வரைந்தார் பிற்காலத்து எவருமிலர். ஆகவே இவ்விரு பெரும் புலவர்களும் முறையே பாட்டாலும் உரையாலும் தமிழுலகுக்கு நிகரற்ற பணியாற்றினர்.

குமரகுருபரர் தோன்றிய காலத்தில்தான் மேனாட்டவரும் நம் நாட்டில் புகத் தலைப்பட்டனர். தென்பாண்டி நாட்டில் தான் முதன் முதலில் கிறித்தவ மதத்தைப் பரப்ப முற்பட்டனர். இத்தாலிய நாட்டினின்று நம் நாடு போந்த வீரமாமுனிவர் (Fr. Joseph Beski) கிறித்தவம் பரவச் சீரிய பணியாற்றத் தொடங்கிய காலம். இவர், நம் குமரகுருபர அடிகளாரிடம் மாணவராக இருந்து தமிழ் பயின்றார் என்றும் கூறுப.

இவர் காலத்தில் தென்பாண்டி நாட்டின் ஊர்தோறும் பெருங்கோயில்கள் எழுந்தன. பிற்காலப் பாண்டியர் பல சிவன் கோவில்களை ஆங்காங்குத் தோற்றுவித்தனர். திருப்புடைமருதூர், அத்தியான நல்லூர், அரிகேசரி நல்லூர் முதலிய இடங்களில் லெல்லாம் திருக்கோயில்கள் தோன்றின. அப்போது திருநெல்வேலியை ஆண்ட மன்னன், 'வென்று மண் கொண்ட பூதலவீர வீரமார்த்தாண்ட மாற வர்மன்' எனப்படுவான். இவன் தன் பெயரால் நெல்லைத் திருக்கோவிலில் 'வீரமார்த்தாண்ட மண்டபம்' என்றொரு மண்டபத்தை நிறுவினான். சோபான மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். அதுவே இன்று சோமவார மண்டபம் என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் நெல்லைத் திருக்கோவிலில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பெற்றன என்று கல்வெட்டொன்று சொல்கின்றது.

இவன் காலத்தில் நெல்லையில் சமயப் பணி யாற்றும் திருமடங்கள் இரண்டு சிறப்புறத் திகழ்ந்தன. தெற்குத் தேர்த்தெருவில் சேக்கிழார் மடமும், வடக்குத் தேர்த்தெருவில் மெய்கண்டார் மடமும் விளங்கின. சேக்கிழார் மடத்தில் இருந்து பயின்றவரே மெய்கண்டார் மடத்துக்குத் தலைவராய் வருதற்குத் தகுதி பெறுவர். அத்தலைவரின் தீக்கைப் பெயர் 'சத்தியஞான தரிசினி' என்பதாகும். சத்தியஞான தரிசினி யென்பது மெய்கண்டாரைக் குறிக்கும் திருப்பெயரே. இச்செய்தியை நெல்லைக் கோவில்
கல்வெட்டொன்று சுட்டுகின்றது.

இங்ஙனம் மன்னரும் செல்வரும் கோவில் களையும் மடங்களையும் நிறுவி, அவற்றின் வாயிலாகச் சமயப்பணியும் கலைப்பணியும் ஆற்றி வந்தனர். கோவில்களில் மக்கட்குச் சமய ஞானம் நல்கும் வியாக்கியான மண்டபங்கள் விளங்கின. ஆதலின், தென்பாண்டி நாட்டில் மக்கள் பால் மனமொழி மெய்மூன்றினும் சைவமணம் கமழ்ந்த காலம் அது. இத்தகைய நலங்கள் நிறைந்த காலத்தில் தான் ஞானசூரியனைப் போலக் குமரகுருபரர் திருவவதாரம் செய்தருளினார். பிறந்த குழந்தை அழுகிறது; ஆனால் ஓசையில்லை . ஐந்தாண்டு வரைக்கும் ஊமையாகவே யிருந்து செந்தில் கந்தவேள் கருணையால் வாய் திறந்து பேசலுற்றார். வாயினைத் திறக்கும்போதே 'முருகா எனத் திறந்தார். முருகன் திருவருளால் திருவாய் திறக்கப்பெற்ற குமரகுருபரர், முருகன் மீது மனமுருகிப் பாமாலை தொடுத்தார். முதன் முதல் அவர் பாடியது 'கந்தர் கலிவெண்பா ' என்னும் செந்தமிழ்ச் சிறுநூலாகும். ஐந்தாண்டுப் பருவத்தில் அருங்கவிதை பாடினார் என்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?

சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தர் மூன் றாண்டுப் பருவத்தில் முத்தமிழ்ப் பாடல் இசைக்க வில்லையா? இரண்டாண்டுப் பருவத்தில் மெய் கண்டார் திரண்ட சித்தாந்த உண்மைகள் பொதிந்த சிவஞான போதத்தைச் செப்பவில்லையா? அகத்தியர் அருள் வரத்தால் உதித்தருளிய சிவஞான முனிவர் ஐந்தாம் ஆண்டில் செந்தமிழ்ப் பாடல் பாடவில்லையா? இன்றும் பர்மாவிலே நாலாண்டுக் குழந்தையொன்று பெருங் கணக்குகளையெல்லாம் சொல்லியவுடனே விடை பகர்கின்றதே! இவை யெல்லாம் அரிதில் வாய்க்கப் பெற்ற திறங்கள். முந்தை நல்வினைப் பயனால் முன்னவன் தந்தருளிய அருட்டிறமாகும்.

நக்கீரன் நல்கிய திருமுருகாற்றுப் படைக்குக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் பொருள் காணலாம். அரிய சித்தாந்த உண்மைகள் நிறைந்த தத்துவநூல் கந்தர் கலிவெண்பா. சைவாகமங்களில் அத்துவப் பிரகரணத்தில் பேசப்படும் அத்துவாப் பகுதிகள் மிகமிக அருமை வாய்ந்தன ; எளிதில் எட்டமுடியாதன . அத்துவாக்களைப் பற்றி யறிவது, கந்தபுராணம் அட்டகாசப் படலத்திற்கு உரை காண்பது போலத்தான். சிறந்த சித்தாந்த வல்லாரும் அத்துவாக்களைப் பற்றிக் கேட்டால் சொல்ல அறியார். அத்தகைய அத்துவாக்களின் இயல்பைத் தெளிவுறத் தம் கந்தர் கலிவெண்பாவில் குமர குருபரர் கூறுகிறார். தெய்வத் திருவருள் கைவந்த மையின் அங்ஙனம் எடுத்துக்காட்டும் ஆற்றல் பெற்றனர்.

குமரகுருபரர், திருமுருகனைக் கண்களால் தரிசித்தார். அவனது திருக்கோலத்தை இனிய பாட்டால் தந்தார்.

யான் எனது என்பது அற்ற இடமே அவனது திருவடி , மோன பரமானந்தம் - முடி , ஞானம் - திருவுரு, இச்சை செயல் அறிவு - கண்கள், அருள் - செங்கை, இருநிலமே சந்நிதி, இங்ஙனமாக விளங்கும் தனிச் சுடர் என்று கண்டு கூறினார். தம்மைப் பேசுவித்த செயல் முருகனுக்கு அத்துணைப் பெருஞ்செயலன்று. ஆதலின் அதற்கு நன்றி செலுத்தல் முறைமையன்று என்று கருதிய கவிஞர், அவன் பால் வேண்டும் விண்ணப்பத்தைப் பாருங்கள்!

    "ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்
    தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
    கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு
    அடியேற்கு முன்னின் றருள்”,

குமரகுருபரர் தம் காலத்துச் சமய நிலை, மொழிநிலை, ஆட்சி நிலை இவைகளையெல்லாம் அறிவிக்கும் நோக்குடன் அழகிய பாக்களைத் தம் நூல்களில் இடையிடையே தந்துள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு பாட்டைக் காண்போம்.

ஆங்கிலேயர் நம் நாட்டில் புகத் தலைப் பட்டார்கள். புறச் சமயக் கொள்கைகளை மக்கள் உள்ளத்தில் புகட்டினர். மதுரையில் தோன்றிய சிவாகமங்களும் செந்தமிழ் இலக்கியங்களும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கீழ்நாடு, மேல் நாட்டினர் ஆட்சிக்குட்பட்டுவிடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்தது. களப்பிரர் என்னும் கலிப்பகைஞர் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முயன்ற னர். மறச்செயல்கள் நாட்டில் தாண்டவமாடத் தலைப்பட்டன. தமிழ் மன்னரின் அரசியலும் பெருங் குடியும் அழியத் தழைப்பட்டன. தமிழ் மன்னர் மூவருள் தலைசிறந்து விளங்கிய பாண்டியர், சோழருக்கொப்பாவர் என்று உணராதாரும் ஓத முற்பட்டனர். இத்தகைய கேடுகள் எல்லாம் தமிழ்நாட்டைச் சூழாவண்ணம் பாண்டிமகளாகத் தோன்றி அங்கயற்கண்ணி அரியாசனம் அமர்ந்து, மதுரைப்பதி தழையத் தழையுங்கொடியாய்த் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார்.

    முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ் நூல்பாழ் போகாமே
    முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மே லாகாமே
    அதிரப் பொருது கலிப்பகை ஞன்றமிழ் நீர்நா டாளாமே
    அகிலத் துயிர்க ளயர்த்து மறங்கடை நீணீர் தோயாமே
    சிதைவுற் றாசிய னற்றரு மங்குடி போய்மாய் வாகாமே
    செழியர்க் கபயரு மொப்பென நின்றுணர் ராதா ரோதாமே
    மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி தாலோ தாலேலோ
    மலயத் துவசன் வளர்த்த பசுங்கிளி தாலோ தாலேலோ

கருவிலே திருவருள் வாய்த்த குமரகுருபரர், சமயஞானியாய் - தத்துவஞானியாய் - இலக்கிய ஞானியாய் - முற்றும் துறந்த முனிபுங்கவராய்த் திகழ்ந்து தெய்வத் தமிழ் மணம் கமழும் சைவத் திருக்கொடியைக் காசிமாநகரில் சென்று நாட்டிச் சிவனருள் பரப்பிய பெருமையை என்னென்பது!
------------------

16. உமாபதி தேவரான ஞானசிவ தேவர்

இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகட்கு முன் நம் தமிழ் நாட்டில் சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் நாடு காவல் புரிந்து வந்தனர். சோழநாட்டில் கோவிராச கேசரிவர்மனான இரண்டாம் இராசாதி ராசன் ஆட்சிபுரிந்து வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் திருநெல்வேலியில் குலசேகர பாண்டியனும் இருந்து வந்தனர். சோழ பாண்டியர்கள் தம்முட் பூசலின்றி இனிதிருந்தமையின், நாட்டில் இன்பவாழ்வு நிலவிற்று.

அந்நாளில் ஈழநாட்டில் வாழ்ந்த ஈழ வேந்தர்கள் மிக்க செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் பால் பொருளும் படையும் பெருகியிருந்தன. அதனால் அவர்கட்கு நல்ல புகழும் உண்டாகி யிருந்தது. ஈழ வேந்தரது படைப்பெருக்கம் "இடம் சிறிது" என்னும் நினைவை எழுப்பிப் பிற நாடுகளை வென்று அடிப்படுத்த வேண்டுமென்ற தமிழ் வேந்தியல் அவாவையோ, கடல் வாணிகத்தைத் தமக்கே உரிமையாக்கிப் பிறர் கலம் கடலிற் செல்லலாகாதெனத் தடுக்கும் சேரலர் செருக்கையோ அவர்கள் உள்ளத்தில் எழுப்பவில்லை. அதனால், அவர்கள் தம்மை யடைந்தார்க்கு உதவி புரியும் அந்த அளவில் அமைந்தொழுகினர்.

தொண்டை நாட்டில் மேலைப்பகுதிக்குப் பல்குன்றக்கோட்டம் என்ற பெயர் நிலவிற்று. தொண்டை நாடு முற்றும் சோழ வேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்த தெனினும் இப்பகுதியில் படைவீடு என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு சம்புவ ராயர் என்னும் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் சோழ வேந்தர்கட்கு அவ்வப்போது வேண்டும் படைத்துணை செய்வர். இராசாதிராசன் காலத்தில் படைவீட்டிலிருந்து ஆட்சி செய்த சம்புவராயன் எதிரிலி சோழன் சம்புவராயன் எனப்படுவன்.

பாண்டிய நாட்டு மதுரையில் பராக்கிரம் பாண்டியன் இருந்து வருகையில் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரன் பாண்டி நாடு முழுதிற்கும் தானே தனிவேந்தாக வேண்டு மென்ற ஆசை கொண்டான். அவனுக்குரிய நண்பர்கள், பாண்டிநாடு ஒரு வேந்தனாட்சியில் நிலவுமாயின் அதன் ஆக்கம் பெருகுமெனச் சொல்லி அவனை ஊக்கினர். குலசேகரன் படையும் பொருளும் பெருக்கினான். அவனுடைய மனக் குறிப்புப் பராக்கிரமனுக்குத் தெரிந்தது. தன்னையும் தனது ஆட்சியையும் காத்துக்கொள்ளும் முயற்சியில் அவன் ஈடுபட்டு ஈழவேந்தன் பராக்கிரம பாகுவைப் படைத்துணை புரியுமாறு வேண்டினான்.

ஈழ வேந்தன்பால் இலங்காபுரித் தண்டநாயகன் என்றொரு தானைத்தலைவன் இருந்தான். பெரு வலியும் ஆழ்ந்த சூழ்ச்சியும் அத் தண்டநாயகன்பால் இருந்தன. மறப்புகழ் வேட்கையே அவனது வடிவம். பராக்கிரமன் விடுத்த வேண்டுகோளைக் கண்டதும் தண்ட நாயகற்கு உள்ளம் பூரித்தது. ஈழ நாட்டின் மறப்புகழைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தற்கு நல்லதோர் வாய்ப்பு உண்டானதாக எண்ணினான். பண்டைச் சோழ வேந்தரும் பாண்டி மன்னரும் ஈழநாட்டில் தங்கள் புகழொளியைப் பரப்பியிருப்பது அவனுள்ளத்தே பொறாமையுணர்வைத் தோற்றுவித் திருந்தது. இதனால் அவன் பராக்கிரமனுக்கு ஈழப்படை சென்று துணை புரிவது தக்கதே என்று ஈழவந்தனான பராக்கிரமபாகுவுக்கு எடுத்துரைத்தான். தொடக்கத்தில் பராக்கிரமபாகுவுக்குப் பராக்கிரம் பாண்டியன் விடுத்த வேண்டுகோளை ஏற்றற்கு உள்ளம் செல்லவில்லை. மேற்கே கேரள வேணாட்டு வேந்தர்களும் வடக்கே சோழவேந்தரும் பொருளாலும் படையாலும் சிறப்புற்று விளங்க அவர்கள் . துணையை நாடாது தன்னை நாடியது ஈழ வேந்தனுக்கு உண்மையிலேயே ஐயத்தை எழுப்பிற்று. இவ்வகையில் பராக்கிரமபாகு தன் துணைவரையும் ஏனைத் தானைத் தலைவர்களையும் ஆராய்ந்து இலங்காபுரித் தண்டநாயகன் தலைமையிலேயே பெரும் படையொன்றைச் செலுத்தத் துணிந்து அதற்கு ஆவனவற்றைச் செய்யுமாறு பணித்தான்.

பராக்கிரமன் ஈழவேந்தன் துணை நாடுவதையும், ஈழவேந்தன் துணை புரிதற்கு உடன்படுவதையும் திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் தெரிந்து கொண்டான். ஈழப்படை வந்து சேருவதற்கு முன்பே, பெரும்படை யொன்று கொண்டு சென்ற மதுரையை முற்றிப் பராக்கிரமன் காவலையழித்தான்; பராக்கிரமனுடைய படை குலசேகரன் படைக்கு ஆற்றாது சிதறிக் கெட்டது. தானைத் தலைவரும் போர் மறவரும் மூலைக்கொருவராய் ஓடிவிட்டனர். பராக்கிரமனும் அப்போரில் குலசேகரனாற் கொலையுண்டான்; அவனுடைய மனைவி மக்களும் குலசேகரன் வாட்கு இரையாயினர். உரிமை மகளிருள் சிலர் உயிர்தப்பி மலைநாட்டிற் புகுந்து மறைந்து வாழ்ந்துவந்தனர். அவரிடையே பராக்கிரமனுடைய புதல்வர்களுள் கடைசி மகனான வீர பாண்டியன் மறைவாக மலைநாட்டில் இருந்து வரலானான். இப்போரின் விளைவாகக் குலசேகரன் எண்ணம் நிறைவேறியது. பாண்டி நாடு இவனது ஒருகுடைக்கீழ் வந்தது. திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் மதுரை நகர்க்கண் பாண்டியரது அரசு கட்டிலேறி முடிவேந்தனாய் விளங்கலுற்றான்.

இந்நிலையில் இலங்காபுரித் தண்டநாயன் தலைமையில் புறப்பட்டுவந்த ஈழப்படை இராமேச்சுரக் கரையில் வந்து இறங்கியது. பராக்கிரமன் கொலையுண்டதும் குலசேகரன் மதுரையிலிருந்து அரசியல் நடத்துவதும் கண்ட தண்டநாயகன் மனம் சினத்தீயால் வெதும்பிப் புகைந்தது. கண்களில் தீப்பொறிகள் பறந்தன. இராமேச்சுரத்துக் கடற் கரையில் காவல் புரிந்திருந்த குறுநிலத் தலைவனை வெருட்டித் துரத்தினான். அதனைத் தனக்கு அடிப் படுத்திப் பாண்டிக்கரையில் இருந்த குந்திக்குளம் என்ற ஊரையும் கைப்பற்றிக் கொண்டான். குந்திக்குளம் குந்துகளம் என்றும் காணப்படுகிறது. இப்போது அது சமரங்கபுரத்துக்கண்மையில் கும்பிகுளம் என்று பெயர் கொண்டு விளங்குகிறது.

இலங்காபுரித் தண்டநாயகன் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றுவதுகண்ட குலசேகரன், சுந்தரபாண்டியன் என்ற தலைவன் ஒருவரோடு படையொன்றை விடுத்து ஈழப்படையை ஈடழிக்க முயன்றான். பாண்டிப் படை வலியிழந்த பறந்தோடிவிட்டது; சுந்தரபாண்டியன் தோல்வியுற்றான். பின்னர்ப் பாண்டியராசன் என்பவர் தலைமையில் ஒரு பெரும் படை சென்றது. அது கண்டதும் தண்டநாயகன் தானை சீறியெழுந்து சினப்போர் புரிந்து பாண்டிய ராசனைப் புறந்தந்தோடச் செய்தது; அப்போரில் குலசேகரனுக்கு நெருங்கிய துணைவனாய் விளங்கிய ஆளவந்தான் என்னும் தானைத்தலைவன் போர்ப் புண்பட்டு மாய்ந்தான். குலசேகரன் உள்ளத்தில் அசைவு பிறந்தது. இலங்காபுரித் தண்டநாயனுக்குப் பாண்டிய நாட்டில் இடமும் வலியும் கிடைத்தன; எண்ணியவாறு போர்ப்புகமும் எய்துவதாயிற்று.

"பராக்கிரமனைத் தொலைக்கப் புகுந்து பராக்கிரமபாகுவின் பகையுண்டாக்கிக் கொண்டோம்; இனி இதனைக் கூடாதொழியின், பாண்டியர் குடியால் தமிழ்நாட்டிற்குட் பிற நாட்டினர் புகுந்து அரசு நிறுவினர் என்ற பெரும் பழியுண்டாமே" எனக் குலசேகரன் நினைத்தான். நாட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பராக்கிரமனுடைய தானை மறவர்களைத் தேடித் திரட்டினான். அந்நாளில் கொங்கு நாட்டில் குலசேகரனுக்கு மாமன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தமையின் அவனுடைய படைகளையும் சேர்த்தான். பாண்டிப் படையும் கொங்கப் படையும் சேர்ந்துவரத் தானே அப்படையை முன்னின்று நடத்தி இலங்காபுரித் தண்ட நாயகனுடன் போர் தொடுத்தான்.

பராக்கிரமன் படை மறவர் உள்ளன்போடு போர் செய்யவில்லை; கொங்கப்படை அத்துணைப் படைப்பயிற்சியின்றி யிருந்தது. படையினது தொகை பெருகியிருந்ததே-யன்றி வலி பெருகவில்லை . ஈழப் படையில் கிளர்ச்சியும் மறமும் படை தொடுப்பும் கண்டவளவிலேயே குலசேகரன் படை வலிதளர்ந்து சிதையலுற்றது. பராக்கிரமனுடைய படைமறவருட் சிலர் ஈழப்படையுடன் கலந்து இலங்காபுரித் தண்டநாயகனுக்கே துணை செய்தனர். முதலில் குலசேகரன் தோற்றான். மதுரைநகர் தண்டநாயகன் கைக்கு வந்தது. அவன் மறச் சான்றோர்களை மலைநாட்டுக்குச் செலுத்திப் பராக்கிரமன் மகன் வீரபாண்டியனைத் தேடிக் கொணர்ந்து அவனையே பாண்டி வேந்தனாக்கினான்.

குலசேகரனோடு நடத்திய போரில் கீழை மங்கலம், மேலைமங்கலம் என்ற சிலவூர்கள் தண்டநாயகன் வசமானபோது அவற்றிற்குக் கண்டதேவமழவராயன் என்பவனைத் தலை வனாக்கினான்; தொண்டி, திருவேகம்பம் முதலிய பகுதிகட்கு மழவ சக்கரவர்த்தி யென்பவனைத் தலைவனாக்கினான். இவ்வாறே புறத்தே பாண்டி நாட்டவர்க்குச் சிறப்புச் செய்யினும் அந்த நாட்டு மக்கட்கு அத் தண்டநாயகன் மிக்க துன்பம் செய்தான். ஊர்களைச் சூறையாடினன்; வயல்களில் தீ வைத்தனன்; உயிர்க்கொலை பல புரிந்தனன். இதனால், அத் தலைவர்கள் தண்டநாயகன் காட்டும் அன்பில் ஐயமுற்றனர்; செய்யும் சிறப்பில் நம்பிக்கை இழந்தனர்.

இது நிற்க, படையிழந்து பரிபவப்பட்டோடிய குலசேகரன் தென்பாண்டி நாட்டுட் புகுந்து பெரும் படை யொன்றைத் திரட்டிக் கொண்டு வந்தான். அவன் வரவுகண்ட மழவராயனும் மழவசக்கரவர்த்தி யும் குலசேகரனோடு கூடிக் கொண்டு மதுரையை முற்றுவாராயினர். அதனால் பேரச்சம் கொண்ட வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடிவிட்டான். தண்டநாயகனும் கடற்கரைப் பகுதிக்கோடி ஈழ வேந்தனைப்படை யொன்றைத் துணையாகச் செலுத்துமாறு வேண்டிக் கொண்டான். வேண்டிய வாறே ஈழநாட்டினின்றும் வந்த பெரும் புதுப் படையுடன் கூடி இலங்காபுரித் தண்டநாயகன் குலசேகரனை மறுபடியும் பொருது வென்று வெருட்டிவிட்டு வீரபாண்டியனுக்கு மதுரையில் முடிசூட்டி வெற்றிவிழா நடத்தினான். பின் பொரு கால் குலசேகரன் சீவில்லிப்புத்தூரருகே ஈழப்படை யொடு பொருது தோற்றுத் திருநெல்வேலிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தான்.

பன்முறை முயன்று வெற்றி பெறாமை ஒருபுறம் வருத்த, மற்றொருபுறம் தன் செயல்களால் ஏதில் ஈழப்படைக்குத் தமிழ் நாட்டில் ஏற்றமும் இடமும் உண்டானது குலசேகரனுக்குப் பெருவருத்தத்தைச் செய்தது. அந்நாளில் சேர நாட்டரசரினும் சோழ வேந்தரே உலகு புகழும் போர்ப்புகழ் எய்தியிருந்தனர். அவர்களால் தான் தமிழகத்தில் தனிப் புகழும் கெடாது நிலைபெற்றுவந்தது. குலசேகரன் அதனை எண்ணினான். இராசகேசரிவன்மனான இரண்டாம் இராசாதிராசன்பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவனுக்கு நன்கு எடுத்து இசைத்தான்.

இரண்டாம் இராசாதிராசன் வேண்டும் அளவு தனிப் பெரும்படை யொன்றைக் குலசேகரனுக்குத் துணைபுரியுமாறு அனுப்பியிருந்தான். அப்படைக்குத் தலைவனாக எதிரில் சோழச் சம்புவராயன் மகனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன் என்பான் சென்றான். சோழர் படையின் தென்றிசைச் செலவு கண்ட மாத்திரை பாண்டியப் படை உடைந்தோடிற்று; பராக்கிரமன் மகன் வீரபாண்டியனும் முன்போல் ஓடிவிட்டான். சிங்களப்படை சிதறுண்டு போயிற்று. குலசேகரன் மதுரைக்குரியவனானான். இதனையறிந்த பராக்கிரம். பாகு மறுபடியும் இலங்காபுரித் தண்டநாயகனையும் சயதர தண்டநாயகனையும் இரு பெரும் படைகட்குத் தலைவராக்கித் தமிழ் நாட்டிற்குட் செலுத்தினான். ஈழப்படையும் குலசேகரன் தூசிப்படையும், தொண்டி, பாசிப்பட்டினம் என்ற இடங்களிற் கைகலந்து பொருந்தன. அவற்றுள் ஈழப்படையே வெற்றி பெற்றது. அதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த மறவர்களும் பிறரும் ஈழப்படைத் தலைவர்கட்கஞ்சி அவர்வழி நிற்பாராயினர். அவர்கட்குத் தலைவர் னான மாளவ சக்கரவர்த்தி யென்னும் ஒருவனுக்குப் பொன்னும் பொருளும் தந்து தமக்குத் துணையிருக்கு மாறு மனத்தைத் திரித்துக் கொண்டனர். அவரது படையும் வடக்கு நோக்கி முன்னேறுவதாயிற்று. திருச்சிராப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ஆலம் பாக்கத்தில் வாழ்ந்த சிவப் பிராமணர் சிலர் ஈழப்படை வடக்கு நோக்கி வருவது கேட்டஞ்சி ஊரை விட்டு ஓடத் தலைப்பட்டனர்.

பின்னர்ச் சென்ற சோழர் பெரும்படையுடன் பாண்டிப் படையும் கொங்கு நாட்டுத் தலைவர் விடுத்த கொங்குப்படையும் வந்து சேர்ந்தன. முப்பெரும் படையும் கடல் பெயர்ந்து செல்வது போல நம்பிப் பல்லவராயன் தலைமையில் செல்லலுற்றன. ஈழப்படை வடக்கே காளப்பேர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரைச் சூழ இருக்கும் பகுதிக்கு எயிற்கோட்டம் என்பது பெயர். கங்கை பாயும் நாடாகிய கௌட தேசத்திலிருந்து சிவாச்சாரியார் பலர் தென்னாட்டிற்கு வந்து மடங்கள் நிறுவி, மக்களுக்குச் சிவதன்மங்களை சிவாகம நெறிகளை அறிவுறுத்தி வந்தனர். தீக்கை முறைகளை முதற்கண் உண்டாக்கினவர்கள் அவர்களே. கள சூரி வேந்தரும் மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் பிறரும் இம்மடங்கள் புரிந்த சிவப்பணியின் பொருட்டு ஊர்களும் விளை நிலங்களும் பொருளும் தந்து சிறப்பித்தனர். அவர்கள் நிறுவிய மடங்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நாடுகளில் ஆங்காங்கு இருந்து சமயத் தொண்டு புரிந்தன. மக்கட்குச் சமயக் கல்வி கற்பித்தலும், மருத்துவச்சாலை நிறுவி உடற் குண்டாகும் நோய்களைப் போக்குவதும், காணார் கேளார் அனாதைச் சிறுவர்கள் ஆகியோரைத் தொகுத்து ஆதரித்து அறிவு நல்குவதும் இம்மடங்கள் செய்த சிறந்த பணிகள். இதனால் நாடாளும் வேந்தர் இம் மடங்களின் தலைவர் பால் ஞானவுரை கேட்டு மாணவரானது பெருஞ் சிறப்பெனக் கருதினர்; மாணவரான வேந்தர் சிலர் தம்மை மாணவரென் னாது புதல்வரெனவே கூறிக்கொண்டனர். சமயம் சிசேடம் நிருமாணம் எனப்படும் மூவகைத் தீக்கைகளையும் வேந்தர்கள் பெற்றனர். கள் சூரி கணபதி வேந்தன் தான் பெற்ற தீக்கை காரணமாகத் தன்னைத் தீக்கா குரவர்க்குப் புதல்வனாகவே கூறிக்கொண்டான். பெருவேந்தர்களை அடி யொற்றிக் குறுநிலத் தலைவர்களும் இவ்வாறு சிவதீக்கை பெற்ற "ஞானப் புதல்வர்களாய்'' விளங்கினர். சிவதீக்கை செய்து சிவதன்மங்களை அருளிய சிவாச்சாரியர் பலர் வேந்தர்கட்கு "ராஜ குரு" வாக இருந்தனர். சிவாச்சாரியர்களைச் சிவமென்றே கருதி வழிபட்டனர். இராசாதிராசன் காலத்தில் திருவொற்றியூரில் பெரியதோர் சைவமடம் இருந்தது. அதற்குத் தலைவர் சதுரானை பண்டிதர் ; அதனால் அது சதுரானை பண்டிதர் மடம் என்று பெயர் பெற்றது. அதன்கண் சிவாகமங்கள் மக்கட்கு உரைக்கப்பெற்றன. மடத்து ஆசிரியர் திருக்கோயில்களில் வியாகரணம் முதலிய கல்வி நெறிகளைக் கற்பித்தனர். இது கற்பிக்கும் மண்டபத்துக் வியாகரண தான மண்டபம் என்றும் பெயர். அம்மண்டபத்தில் திருவிழாக்காலங்களில் சதுரானை பண்டிதர் மடத்துச் சான்றோர், அங்கு வந்து கூடும் மக்களைத் தொகுத்துச் சமயச் சொற்பொழிவுகள் செய்தனர். அச் சொற்பொழிவு கட்கு நாடாளும் வேந்தரும் வந்திருப்பர். பங்குனி உத்திரவிழாவொன்றில் திருவொற்றியூரில் இராசாதி ராசன் வந்திருந்து கேட்க, சதுரானை மடத்து வாகீச பண்டிதர் என்பவர் ஆளுடைய நம்பிகளின் வரலாற்றைச் சொற்பொழிவு செய்தாரென அக் கோயில் கல்வெட்டொன்று கூறுகின்றது. இவ்வாறு நாட்டில் ஆங்காங்கு மக்கட்குச் சமயவறிவும் சமய வொழுக்கமும் மடத்துத் தலைவர்களால் கற்பிக்கப் பெற்று வந்தமை நாட்டு வரலாற்றைப் பயில்வோர் இல்லாமையால் மறைந்து போயிற்று. மடங்கட்கு அளவிறந்த பொருளும் தங்கட்குரிய அறத்துக்குப் புறம்பான தொழில்களும் உண்டாகவே, மடத் தலைவர்கள் ஏனைப் பெரிய பெரிய இல்லற மிராசுதார்களைப் போலத் துறவற மிராசுதார்களாய் விட்டனர்.

அந்நாளில் உமாபதி தேவரென்னும் சான்றோர் காஞ்சி நகர்க்குத் தெற்கில் ஏழெட்டுக்கல் தொலைவி லிருக்கும் மாகறல் என்னுமிடத்தில் மடம் ஒன்று நிறுவி மக்கட்குச் சிவதன்மங்களையும் சிவ ஞானத்தையும் அறிவுறுத்தி வந்தார். சிவஞானச் செம்பொருளை வரையாது வழங்கியது பற்றி அவரை ஞானசிவதேவரென்றும் மக்கள் பாராட்டிப் பரவினர். அப் பகுதிக்குத் தலைவனாகிய எதிரிலி சோழச் சம்புவராயன் அவர்பால் தீக்கை பெற்று அவர்க்கு ஞானப்புதல்வனானான். அவர் இனிதிருந்து தம்முடைய சமயப் பணிகளை நன்கனம் ஆற்றுதற் பொருட்டுப் பொன்னும் பொருளும் மிகுதியும் நல்கினான். அவர் செய்யும் வழிபாட்டு முறைகளில் சம்புவராயன் உள்ளத்தில் மிக நம்பிக்கை யிருந்தது. அவர் எண்ணுவது எண்ணியவாறே நிகழுமென எண்ணினான். எத்தகைய அரசியல் நிகழ்ச்சிக்கும் அவருடைய அறவுரையும் அறிவுரை யும் அவனுக்கு வேண்டியிருந்தன.

இந்நிலையில், சோழவேந்தன் பணிமேற் கொண்டு தன் மகன் பல்லவராயன், பாண்டியன் குலசேகரன் பொருட்டுச் சோழர் படைத் தலைவர் னாய்ச் சென்றிருப்பதும், போகும் ஈழப்படையை எதிர்த்து நிகழ்வதும், தொடக்கத்தில் பாண்டிப்படை ஈழப்படைக்குத் தோற்றதும் பின்பு கொங்குநாட்டுத் தானை வந்து சோழர் படையுடன் கூடிப் பாண்டிப் படைக்குத் துணையாய்ப் போர்த்தொடுத்திருப்பதும் எதிரிலிசோழன் கேள்வியுற்றான். ஈழப்படைத் தலைவர்கள் தாம் வென்ற பகுதிகளில் மக்களைக் கொன்றும், ஊர்களைத் தீக்கிரையாக்கியும் கோயில் களைச் சூறையாடியும் கொடும்பாடு செய்வது சம்புவராயனுக்குத் தெரிந்தன. ஈழர்கள் செய்யும் கொடுஞ்செயல்களைக் கேட்குந்தோறும் சம்பவ ராயன் உள்ளத்தில் கலக்கம் தோன்றுவதாயிற்று. பாண்டிநாட்டு வடவெல்லைநோக்கி முன்னேறி வரும் ஈழப்படை சோழநாட்டிற்கும் புகுமோ என்றோ ரெண்ணம் தோன்றி அவன் மனத்தை அலைப்பதாயிற்று. இரவு பகல் கண்ணுறக்கம் இலனானான் எதிரிலிசோழச் சம்புவராயன்.

ஒருநாள் தன் மனக்கவலையை ஞான குருவாகிய ஞான சிவதேவரிடம் தெரிவிக்கக் கருதிப் படைவீட்டினின்றும் புறப்பட்டு எழிற்கோட்டத்து ஆற்பாக்கத்திற்குச் சென்றான். சம்புவராயனது வரவறிந்த ஞானசிவதேவர் அவனை அன்புகனிய வரவேற்று நல்வாழ்த்து வழங்கினார். வேந்தன் அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கி, அரசியல் உலகில் பாண்டி நாட்டுத் தலைவர்கட்கும் ஈழ நாட்டுத் தலைவர்கட்கும் இடையே போர் நிகழும் செய்திகளை விரிவாக எடுத்து மொழிந்தான்; முடிவில் தன் மனக்கவலையைத் தெரிவித்து, "இது எங்ஙனேயாமோ என்று விசாரம் தோன்றி வருத்துகிறதென்று முறையிட்டான்.

அது கேட்டதும் ஞானசிவதேவர் சம்புவராயன் உள்ளத்தில் நிகழும் அலமரலைப் போக்குவது குறித்து, அவர் பயின்றுள்ள புராண இதிகாசங்களில் கண்ட நிகழ்ச்சிகள் பல எடுத்தோதி ஆறுதல் மொழிந்து, திருவருளியக்கத்தின் சிறப்பையும், அதனையுணர்ந்து அதன்வழி நிற்பார்க்கு "இடும்பையும் இடுக்கணும் பரிவும் துன்பமும் கடும்பகற்பட்ட பனிபோல் மறைந்தொழியும்" என்ற திறத்தையும் சைவாகமங்கள் சைவத் திருமுறைகள் வாயிலாக எடுத்தோதித் தெருட்டினார். அவ்வுரைகளால் ஒருவாறு தெளிவுற்றானாயினும், ஞானாசிரி யரை மறுபடியும் வணங்கி, "ஈழப்படையாகிறது சாலவும் பாபகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில் ஸ்ரீமகா தேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டரத்துக்கும் அடங்க விரோத முண்டாகும்; இதற்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச் சனங்களால் எல்லாப் படியாலும் அவர்கள் அபிஷ்டம் அதம் பண்ணியருள வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டான்.

ஞான சிவதேவர் சம்புவராயனுடைய உள் வேட்கை தெரிய விளங்கியதும், தானும் மனம் தெரிந்து, "ஈழப்படையாகிறது, சாலாபாஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிராமேஷ்வரத்தில் தேர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜைமுட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீ பண்டாரமெல்லாம் கைக்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணு கிறோம்'' என்று சொல்லி இரண்டு நாட்குப்பின் சாம்புவராயன் முன்பிலே "அகோர சுபூஜை” யைத் தொடங்கினார். சம்புவராயனும் அந்தப் "பூஜை"யைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்து போர்க்களத்தில் செயற்குரிய அரசியற் செயல்முறைகளைச் செய்து கொண்டிருந் தான். ஆற்பாக்கத்தில் ஞானசிவதேவரது "அகோரசு பூஜுை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.

இதற்கிடையே, பாண்டி நாட்டில் சோழ பாண்டியர் படையும் ஈழப்படையும் கடும் போர் புரிந்தன. ஈழப்படைத் தலைவர்கள் தொண்டி, தேனிப்பட்டினம், மானாமதுரை, நெட்டூர், சீவில்லி புத்தூர், வேலங்குடி, திருப்புத்தூர், விக்கிரமங்கலம் முதலிய இடங்களில் பாண்டிப்படையை வென்றும் வெருட்டியும் மேன்மையுற்றார்கள் : ஆயினும் நாட்டின் பல இடங்களிலும் சோழர் படையால் அலைப்புண்டு திரிந்தமையின் ஈழப்படை நாளடை வில் வலிகுன்றத் தலைப்பட்டது. இடையிடையே இருந்த உள்நாட்டுத் தலைவர்களின் ஆதரவைப் பொருள் கொடுத்து விலைக்கு வாங்கித் திரித்தது னால் ஈழத்தலைவர் பால் பொருட்குறைவும் உண்டாயிற்று. ஈழ நாட்டு மறவர் நாட்டு மக்கள் பால் அன்பின்றித் துன்பமே மிகச் செய்தமையால் மக்கட்கு அவர்கள் பால் வெறுப்பும் பகைமையும் இயல்பாகவே உண்டாய்விட்டன.

ஒற்றர்கள் வாயிலாக ஈழப்படைக் குளதாகிய குறைபாட்டினையுணர்ந்த சோழர் படைத்தலைவர் வேறொரு படையினைத் துணை செய்யவிடுமாறு சோழவேந்தனை வேண்டினர். வேண்டியவாறே பெரும்படை யொன்று விரைந்து வந்து சேர்ந்தது. சோழர் பெரும்படை புதிது வந்தணைந்த பெரும் படையுடன் ஈழப்படையை எதிர்நின்று தாக்கி அதனை ஈடழிக்கலுற்றது. மறத்தீக் கிளர்ந்தெழப் பொரும் தமிழ்ப் படைமுன் ஈழப்படை எதிர் நிற்கலாற்றாது உடைந்தோடலுற்றது. ஈழப்படைக்குத் துணை செய்த பாண்டித்தலைவர் சிலர் இருந்தவிடம் தெரியாதவாறு ஓடி ஒளிந்தனர். ஈழப்படை இதுகாறும் பெற்றுப் போந்த வெற்றியெல்லாம் பகற்கனவாய் மறைந்தழிந்தன.

இவ்வாறு நாடோறும் தமிழ்ப்படையை வெற்றிசிறந்து மிகுவது கண்ட குறுநிலத் தலைவர். பலரும் சோழர்படையில் பக்கம் நின்று துணை செய்வாராயினர். ஈழப்படைத் தலைவர்களான இலங்காபுரித்தண்ட நாயகனும் சயதர தண்ட நாயகனும் அவர்கட்குத் துணையாக வந்த தானைத் தலைவர்களும் இனி, இங்கே போர்புரிந்து வெற்றி பெறுவதென்பது இயலாது எனத் தெரிந்து தம் ஈழநாட்டிற்கு ஓடிவிட்டனர். பாண்டியன் குல சேகரனுடைய ஆட்சி நிலைபேறு கொண்டது.

இவ்வெற்றி நலத்தால் சோழவேந்தனான இராசாதிராசனது புகழ் பெருகிற்று. பாண்டி நாட்டு மக்கள் சோழவேந்தன் படை மறவரைப் பாராட்டி வாழ்ந்தனர் படைத் தலைவனான பல்லவராயன், சோழர்படைக்கு எய்திய வெற்றி நலத்தையும் வேந்தன் புகழ்ப்பெருக்கத்தையும் தன் தந்தைக்குத் திருமுகமெழுதித் தெரிவித்தான். எதிரில் சோழன் இன்பக்கடலில் மூழ்கினான். தமிழ்ப்படை பெற்ற வெற்றிக்கு ஞானசிவ தேவரது "அகோர சுபூஜை" காரணம் என எதிரிலி. சோழச் சம்புவராயன் எண்ணினான்; நேரே ஞானசிவர்பால் சென்றான்.

சம்புவராயன் வந்து சேருமுன் ஞானசிவ தேவருக்குச் செய்தி தெரிந்துவிட்டது. அவருக்கும் மகிழ்ச்சி மிகுந்தது. இறைவன் திருவருள் தான் இவ்வெற்றியை நல்கிற்றென அவரும் எண்ணி அத்திருவருளை வாழ்த்தினார். சம்புவராயனுக்கு ஞானசிவ தேவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் உண்டாயின. ஞானசிவ தேவருடைய திருவடிகளில் பன்முறையும் வீழ்ந்து வணங்கிப் பரவினான். முடிவில், அவரைக் கைதொழுது, "தேவர் செய்த அதிருஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது; இதற்குத் தேவர் ஸ்ரீபாத பூஜையாக நான் தருவதை ஏற்றருள வேண்டும்,'' என்று இறைஞ்சினான். ஞானசிவ தேவர், சம்புவராயனை நோக்கி, "நீர் நமக்கு ஏதேனும் முன்பு குறைவாகச் செய்ததுண்டோ ? ஒன்றும் இல்லை ; எல்லாம் உம்முடையனவாக இருக்கின்றதே'' என்றார். “தேவர் பாத பூஜையாக இப்போது : ஏதேனும் தரவேண்டும் என்று என் உள்ளம் விரும்பு கின்றது" என்று சம்புவராயன் வற்புறுத்தவும் ஞானாசிரியர், "அவஸ்யம் ஏதேனும் தரவேண்டும் மென்றிருந்தால் ஆற்பாக்கமாகிற இந்த ஊரைச் செம்பினும் கல்லினும் வெட்டித் தருவது” என்று தெரிவித்தார்.

பின்னர்ச் சம்புவராயன், சோழவேந்தனது ஆணை பெற்று அவனது ஐந்தாமாண்டு நிகழ்ச்சி யாக, "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து நன்செய் புன்செய் அகப்பட விளை நிலம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோலும் நத்தமும் குட்டமும் கிணறும் மேனோக்கின மரமும் அகப்பட நாற்பாற் கெல்லை யுட்பட்ட நிலம் வெள்ளவாரிபணைக்கூலி தறிவிறை தட்டார்ப் பாட்டம் அந்தா ராயம் உட்பட ஆயமெல்லாம்கப்பட்ட ஏகபோகமாக இறையிலி யாகக் கொடதேசத்துத் தக்ஷிணராடத்துக் கங்கோஜி சவர்ண கோத்திர மகாமகேஸ்வர ஸ்ருதி ஸ்மிருதி சிந்தே காரநவஸ்யதன் மாஸ்தை உமாபதி தேவரான ஞானசிவ தேவர்க்கு நீர்வார்த்துக் கொடுத்துச் சூரிய சந்திரார்களுள்ள தனையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழச் சம்புவராயனேன்,'' என்று கல்வெட்டுமாறு பணித்தான். இஃது ஆற்பாக்கத்துச் சிவன் கோயில் தென்சுவரில் இன்றும் யாவரும் காணக் காட்சி யளித்துக் கொண்டுள்ளது.
--------

This file was last updated on 08 March 2019.
Feel free to send the corrections to the .